Friday, December 23, 2005

ஓணானும் ராமாயணமும்


பொதுவாக நிறைய பேருக்கு ஓணான் அடிப்பது ஒரு சிறந்த பொழுது போக்கு. அட பாவிங்களா! ஒரு உயிர கொடுமை படுத்துறது உங்களுக்கெல்லாம் ஒரு பொழுது போக்கா? அப்படீங்கறீங்களா?. இந்த கேள்வி இந்த ஓணானுக்கும் தோன்றியது. இந்த கேள்வியோட, நம்ம கதைல வர்ற ஓணான் இப்போ கடவுள் ராமரை பார்க்க போகுது. ராமருக்கும் ஓணானுக்கும் என்ன சம்பந்தம்!! ராமருக்கும் இதே சந்தேகம் வந்தது. நாம ஓணானிடமே கேட்கலாம்.

ராமர்: என்ன ஓணானே! அதிசயமாக இருக்கிறது! என்னை காண வந்திருக்கிறாய்!

ஓணான்: அது ஒன்னும் இல்ல! சாமி. இந்த பயலுவ தொல்ல தாங்க முடியல சாமி. நிம்மதியா தெருவுல நடக்க கூட விடமாட்டேங்கிறானுவ. எங்கள பாத்துட்டாலே கல்ல தூக்கிகிட்டு கெளம்பிருறானுங்க. ஓடி ஓடி ஓய்ச்சி போய்ட்டோம் சாமி. அதான் ஒங்கள பாத்து ஒரு நியாயம் கேட்டுட்டு போலாம்னு வந்தேன்.

ராமர்: அடடா! என்ன கொடுமை இது! பூலோகத்தில் மானிடர்கள் இப்படி எல்லாமா கொடுமை செய்கிறார்கள்.

ஓணான்: மரத்துல நிம்மதியா தூங்கிகிட்டு இருந்தாலும் தொல்ல பண்ணுறானுங்க! காலார ஒரு வாக்கிங் போனாலும் தொல்ல பண்ணுறானுங்க! நிம்மதியா பொண்டாட்டிக்கிட்ட கொஞ்சிக்கிட்டு இருந்தாலும், வெவஸ்தை இல்லாம அப்பவும் தொல்ல பண்ணுறானுங்க! வெறுத்துப்போயி தான் ஒங்க கிட்ட வந்தேன் சாமி!

ராமர்: தொல்லை! தொல்லை! என்கிறாயே! அப்படி என்ன பண்ணுகிறார்கள்

ஓணான்: வெளக்க வேற செய்யணுமா! சாமி! நேத்து அப்படி தான், பக்கத்து காட்டுல என் மச்சினன பாத்துட்டு வரலாம்னு மரத்தவுட்டு இறங்கினேன். பக்கத்து வீட்டு கொரங்கு நா எறங்குறத பாத்துட்டு. அவ்வளவு தான் சாமி! எல்லா பயலுவலும் சேர்ந்து்க்கிட்டு ஊர்ல கெடக்குற மொத்த கல்லையும் அள்ளி அடிக்கறானுவ. அவ்வளவு கல்லையும் வச்சா, ஒரு வீடே கட்டலாம் சாமி! உயிர கைல புடிச்சிக்கிட்டு ஓடி போயி மரத்துல ஏறுனா, சுத்தி நின்னு அடிக்கிறானுவ.நல்ல வேள சாமி, ஒரு பயலுக்கும் குறி பார்த்து அடிக்க தெரியல. இல்லன்னா, எங்க இனத்தையே காலி பண்ணியிருப்பானுங்க.

ராமர்: அடப் பாவமே!

ஓணான்: இருங்க! இன்னும் முடியலை. அதுல ஒரு எரும அடிச்ச கல்லு எம்மேல பட்டு நான் கீழே விழ, மறுபடியும் அந்த காட்டு கும்பல் என்ன தொரத்த ஆரம்பிச்சது. பக்கத்துல இருக்கற பன மரத்துல ஏறிட்டேன்.ஒரு பயலுவலுக்கும் பன ஏற தெரியாது, நிம்மதியா இருக்கலாம்னு பாத்தா, பெரிய பெரிய கல்ல எடுத்து பன மரத்து தூர்ல டங்கு டங்குன்னு அடிக்கிறானுவ. மரமே ஆடி போச்சு. நான் பயத்துல பல்ல கடிச்சிக்கிட்டு அவ்வளவு உச்சில இருந்து சர்க்கஸ் காரன் மாதிரி குதிச்சேன். தரைல வந்து விழுந்து சுதாரிக்கறதுக்குள்ள, ஒருத்தன் மண்டைல போட்டுட்டான்.

ராமர்: அப்புறம் என்னவாயிற்று?

ஓணான்: அப்புறம் சாமி! எல்லோரும் ஏதோ புலிய வேட்டையாடி புடிச்ச மாதிரி ஆடிக்கிட்டானுங்க. அப்புறம் தான் கொடுமையே ஆரம்பிச்சுது சாமி! அல்கொய்தா கைல மாட்டுன அமெரிக்க காரன் மாதிரி தான் என்னோட நெலமை. என்ன இழுத்துக்கிட்டு ஊருக்குள்ள போனானுங்க. ஒரு எரும அவனோட தாத்தா பொடி தடைல இருந்து மூக்கு பொடி எடுத்து வந்தது.

ராமர்: மூக்கு பொடியா அது என்ன?

ஓணான்: ஓ அதுவா! அது இந்த மனுச பயலுவ சர் சர்னு மூக்குக்குள்ள ஒரு பொடிய போட்டு உறிஞ்சறானுங்க. கருமம்! சும்மா கிர்றுண்ணு மண்டைல ஏறுது. மனுச பய மூக்கு தாங்கும். இந்த குட்டி மூக்கு தாங்குமா. பொடிய எடுத்துட்டு வந்து என்னோட மூக்குல ஒரு எரும போட, எனக்கு கிறு கிறுத்து போச்சி. நான் சும்மா ராட்டினம் மாதிரி சுத்த, மனசாட்சியே இல்லாம, எல்லா கொரங்கும் சிரிக்குதுங்க. இப்படி பல கொடுமைகள் சாமி! அப்புறம் விட்டுட்டானுவ. ரெண்டு நாளா எந்திரிக்க முடியல.

ராமர்: உன்னை மட்டும் தான் இப்படி கொடுமை செய்கிறார்களா?. இல்லை எல்லோரையுமா?

ஓணான்: ஓணான் என்று பேப்பர்ல எழுதினா, அந்த பேப்பரையும் கல்ல தூக்கி எறிவானுங்க, இவனுங்க. போன வாரம், என்னோட மாச்சான் அப்படித்தான் சாமி. ரொம்ப அப்பாவி சாமி! அவனோட சைட்ட பாக்க கெளம்பி இருக்கிறான். பாவி பயலுவ! சத்தமே இல்லாம அவன் பின்னாடியே போய் கழுத்துல சுருக்க மாட்டிட்டானுவ. தெரு தெருவா இழுத்துட்டு போயி, ஒடம்பெல்லாம் ஒரே காயம். இப்போ தான் தேறிருக்கான்.

ராமர்: சரி! அதற்கு என்னை எதற்க்கு பார்க்க வந்தாய்?. உனக்கு வேறு கடவுளே கிடைக்க வில்லையா?.

ஓணான்: பொறுங்க சாமி! மேட்டர் இல்லாமலா ஒங்கல பார்க்க வருவேன். இவ்வளவு கொடுமைக்கும் இந்த பயலுவ ஒரு நியாயம் வேற வச்சிருக்கானுவ. என்னன்னு கேக்கறீயலா.
ஒங்க பொண்டாட்டிய எவனோ தூக்கிட்டு போய்ட்டனாம, இலங்கைல இருந்து. அப்போ நீங்க வாணர படைகளோட சிலோனுக்கு பாலம் போட்டீங்கலாம். அந்த நேரத்தில், தாகமா இருந்த ஒங்களுக்கு அணில் இளநீர் கொடுத்ததாம். ஒடனே! நீங்க அத பாசமா எடுத்து முதுகுல ஒங்க விரல வச்சி தடவி கொடுத்தீங்களாம். அது அதோட முதுகுல மூனு கோடாக விழுந்ததாம்.

ராமர்: கதை நன்றாக தானே இருக்கிறது! அதற்கு என்ன ஓணானே?

ஓணான்: அதுவரைக்கும் கத நல்லாத்தான் இருக்கு. அப்புறம் தான் ஏதோ ஒரு மூதேவி எங்க மேல இருக்கற எரிச்சல்ல, ஒரு கதைய சேர்த்துடுச்சி. அணில் இளநீர் கொடுத்திச்சா. நாங்கல்லாம் ஒன் அடிச்சி குடுத்தோமாம். :-( இப்படி ஒரு கதைய கேட்டு தான் இந்த பயலுவ "நம்ம சாமிக்கே ஒன் அடிச்சி கொடுத்திட்டுடா" ன்னு எங்கள ஓட ஓட வெறட்டுதானுவ. ஏன்! சாமி ! அப்படி நாங்க எப்போ செஞ்சோம். எங்க பாட்டுக்கு செவனேன்னு போய்ட்டு இருக்கோம்.

ராமர்: கேட்க வருத்தமாக தான் இருக்கிறது. வால்மீகி, கம்பரும் எழுதிய ராமாயணத்தில் இவை எல்லாம் இல்லையே. சரி! நான் என்ன செய்ய வேண்டும்.

ஓணான்: அப்படியே எங்க முதுகுலயும் மூனு கோடு போட்டு விட்டுடுங்க. நாங்களும் பொழச்சுப்போம்லா.

ராமர்: அப்படியெல்லாம் உடனே செய்ய முடியாது ஓணானே. அது இயற்கைக்கு புறம்பானது. பரிணாம வளர்ச்சியினால், உன் முதுகிலும் கோடு வரும். அப்போது நீ நிம்மதியாக இருக்கலாம்.

ஓணான்: எப்போ சாமி அது நடக்கும்!

ராமர்: இன்னும் சில கோடி வருடங்கள் ஆகலாம்.

ஓணான்: அட போங்க சாமி! இந்த வெளாட்டு தான வேணாங்கிறது. பக்கத்து வீட்டு டி.வில ஒரு நாள் பார்த்தேன். அமெரிக்காவுல ஓணான எடுத்து கொஞ்சல்லாம் செய்றாங்க. செல்ல பிராணியா வேற வளக்கறாங்கலாமே. அப்படியே சிலோனுக்கு போட்ட பாலம் மாதிரி, சின்னதா அமெரிக்காவுக்கும் ஒரு பாலம் போட்டு கொடுத்திடுங்க. அகதியா ஓடி போயாவது பொழச்சுக்கறோம்.

ராமர்: நன்றாய் சொன்னாய் போ! ஈரானில் இருந்து குழாய் போட்டலே, அமெரிக்காகாரன் தீவிரவாதம் என்கிறான். என்னை, அமெரிக்கவுக்கே பாலம் கட்ட சொல்கிறாய். அப்புறம் மூன்றாம் உலகப்போர் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆகி விடும். ஆள விடப்பா!

எங்கிகுந்தோ பறந்து வந்த கல், ஓணானின் மண்டையை தாக்குகிறது. "வந்துட்டாய்யா அந்த சிவா!" ஓட ஆரம்பிக்கிறது ஓணான்.

Saturday, December 17, 2005

வேலை கிடைச்சிடுச்சி

'பற்களின் வெண்மைக்கு பூபால் பல்பொடி
பூப்போன்ற பற்களுக்கு பூபால் பல்பொடி
ஒய்யாங்குடி, பாட்டக்கரை, சாத்தான்குளத்தில்
விற்பனையில் முதலிடம் பூபால் பல்பொடி'


இப்படி எங்க ஊரு தேட்டருல அடிக்கடி ஒரு விளம்பரம் ஓடும். ஒரு நாள் அப்படி தான் படம் பார்த்துட்டு வீட்டுக்கு வந்தா, அப்பா 'ஏல! பூபால் கம்பெனில ஒனக்கு வேல கெடச்சிருக்கு. நாளைல இருந்து போவணும்" அப்படிங்கறாங்க. அடடா! நம்ம திரைல பாத்த கம்பெனில நமக்கு வேலையா. ஒரே சந்தோசம். தூக்கமே வரல.

அப்போ நான் அஞ்சாப்பு படிச்சிட்டு, லீவுல வீட்ல இருந்தேன் :-). வெயில்ல புள்ள காடு காடா சுத்தி கருத்து போயிர கூடாதுன்னு இப்படி ஒரு வேலை ஏற்பாடு. இங்கே கருத்து போறதுக்கு ஒன்னும் இல்லன்னாலும், நானும் காக்காவும் ஒரே ஜாதி என்றாலும், ஒரு பழமொழி சொல்லுவாங்கல்லா. அதான்.

கம்பனிக்கு போறதுக்கு முன்னாடி பல்பொடி பற்றி ஒரு ப்ளாஷ் பேக். என்னோட சின்ன வயசுல சாம்பல் (உமிக்கரி) தான் பல்பொடி. காலைல எந்திருச்சோம்னா, வீட்டு பின்னாடி ஒரு டால்டா டின்ல உமிக்கரி தொங்கிகிட்டு இருக்கும். ஒரு கை நிறைய அப்படியே அள்ளி வாயில போட்டு சவச்சி வாய கொப்பளிச்சா, பல் வெளக்கின மாதிரி. பல்பொடி முடிஞ்சி போச்சின்னா, டின்ன தூக்கிக்கிட்டு பக்கத்து ஊரு மணிநகருல போய் யாரு வீட்லயாவது 'யக்கா! பல்பொடி இருக்குமா' ன்னு கேட்டா, "அடுப்புக்குள்ள கெடக்கு. அள்ளிட்டு போப்பு" அப்படின்னு நெல் அவிக்கும் பெரிய அடுப்ப காட்டுவாவ. மணிநகர்ல எல்லோருக்கும் நெல் அவிக்கிற தொழில். "பாத்துப்பு! தணலா கெடக்கு. அப்படியே அள்ளி வாயில போட்டுறாத. வாயி வெந்துரும்". அடுப்பு அண்டா சைசுக்கு இருக்கும். ஒரு நீளமான கரண்டிய வச்சி டின்ன நெறப்பிக்கிட்டு வந்து சேருவோம்.

நான் கண்ணால பல்பொடிய பார்த்தது, மூனாங்கிளாஸ் படிக்கும் போது தான். எம்.ஜி.ஆர் படம் போட்டு பல்பொடி ஒன்னு பள்ளிக் கூடத்துல ஓசில கொடுப்பாவ. செம டேஸ்ட். அதும் வீட்டுக்கு வந்து சேர்வதற்க்குள் காலியா போய்விடும். மொத்த பாக்கெட்டையும் வர வர தின்னே தித்துடுறது.

இப்படி பட்ட நிலமைல, பல்பொடி கம்பெனில வேலைன்னா சும்மாவா. ஆயிரம் கனவுகளோடு பல்பொடி கம்பெனிக்கு எங்க ஊரு பசங்க ஒரு அஞ்சு பேரு கெளம்பினோம். மொதளாளி எல்லோரையும் வரவேற்று வேலை நெளிவு சுழிவுகளை பற்றி சொல்லி கொடுத்தார். எனக்கு கொடுக்கப் பட்ட முதல் வேலை "ஏல! அந்த ரூமுக்குள்ள கெடக்கற பல்பொடிய இந்த மெஷின்ல அள்ளி வந்து கொட்டுல". நானும் அண்ணாச்சி காட்டுன ரூமுக்குள்ள போய் பாத்துட்டு "யண்ணே! அங்க பல்பொடி ஏதும் இல்லண்ணே. உமிக்கரி தான் கெடக்கு" என்றேன். "அதாம்ல பல்பொடி. கொண்டு வந்து கொட்டுல" என்றார் சூப்பர்வைசர் அண்ணன். அடப்பாவிங்களா! இங்கேயும் அதானா. பல்பொடி திங்கலாம்னு வந்த நாக்கு செத்து போச்சி.

என்னோட வேலை. பல்பொடி :-) ய கலக்குற மெஷுன்ல கொண்டு வந்து கொட்டணும். மெஷின் பல்பொடியோட ரோஸ் கலர் சாயம், கொஞ்சம் சாக்கரீன் (அப்போ தான சுவையா வரும்) கலக்கும். அதை அள்ளி வெயில்ல காய வைக்கணும். இப்போ சுவையான, மணமான பூபால் பல்பொடி தயார். அப்புறம் அதை அள்ளி, ஒரு பொடி டப்பா சைசுல அளந்து சின்ன சின்ன பாக்கெட்ல அடைச்சி ஒட்டணும். அப்புறம் சின்ன பாக்கெட் எல்லாத்தையும் சேர்த்து ஒரு பெரிய பண்டலா மாற்றுவோம். வாரம் அஞ்சு ரூவா சம்பளம். ரெண்டு வாரம் வேலைக்கு போனேன். மொத்தம் பத்து ரூவா கெடைச்சது. அப்படியே அம்மா கைல கொடுத்தாச்சி. மொத சம்பளம் இல்லையா.


அப்புறம் ஊர்ல ஒணான் கூட்டம் பெருகி போச்சுன்னாங்க. ஊர் மக்கள் கஷ்டத்த பார்க்க முடியாம, வேலைய விட்டுட்டேன்.

Sunday, December 11, 2005

கல்யாணமாம் கல்யாணம் -3 (கடைசி)

(சும்மா ஆரம்பிச்சி, இந்த பதிவு இழு இழுன்னு இழுத்துக்கிட்டு போயிடுச்சி. மன்னிக்கனும். இந்த பதிவுல முடிச்சிடறேன்.) . பாகம்-1 பாகம்-2

அடுத்த நாள். கல்யாண நாள். காலையிலேயே பொண்ணுவீட்டுக்கு கிளம்ப ஆரம்பித்தோம். அதே ஜீப். மாப்பிள்ளை காரில் ஏறப்போன அண்ணன் முருகேசை "ஏல! எங்கள மாத்திரம் ஆத்துல தள்ளி விட்டுட்டு நீ சொகுசா போலாம்ணு பாக்றியா! ஜீப்ல எங்க கூட வால" அப்படின்னு துரை மாமா, மாப்பிள்ளையையும் எங்க கூட ஏத்திவிட வண்டி கிளம்பியது. போக போக வழியில் இருக்கும் சாமிக்கெல்லாம் தேங்காய் உடைத்துக் கொண்டே வண்டி கிளம்பியது.


பொண்ணு வீட்ல எங்களுக்கெல்லாம் வேலை இருக்காது. நாங்க சும்மா தாமிரபரணி ஆத்துல போய் காக்கா நீச்சல் அடிக்கிறது, மீன் புடிக்கிறது போன்ற வேலைகளை பார்த்திக் கொண்டிருந்தோம். இல்லன்னா வான வெடி விடுவாறே அந்த தாத்தாக்கிட்ட செட்டில் ஆகிடுவோம். கைல வச்சி ராக்கெட்ட என்னம்மா வுடுவாரு. ஒரு கயிறுல தணல வச்சி, கைல வெடிய பத்தவச்சி வெடிக்க போகுதுன்னா, தூக்கி மேலே வீசுவாரே, செம த்ரில்லிங் அது.

அப்புறம் திடிர்னு கல்யாண் வீட்ல ஒரே பரபரப்பு. மாப்பிள்ளை மயங்கி விழுந்துட்டாராம். அடப்பாவிங்களா இது என்ன உல்டாவா இருக்குன்னு போய் பாத்தா, எல்லோரும் மாப்பிள்ளைய உக்காரவச்சி விசிறிக்கிட்டு இருந்தாவ. மாலை கணம் தாங்க முடியாம மாப்பிள்ளை மயங்கி விழுந்திட்டாருன்னு ஒரே கேலி. அப்புறம் தாலி கட்ட ரெடியானதும், பொண்ண அழைச்சிட்டு வந்தாங்க. அதிக மேக்கப் இல்லாம பொண்ணு வந்தது. ஒரு கல்யாணத்துல அப்படித்தான், நிறைய மேக்கப் போட்டு "ஏ! பொண்ண மாத்திட்டாங்கடோ" அப்படின்னு மாப்பிளளையோட அம்மா ஏக ரகளை பண்ணிட்டாங்க. அப்புறம் அப்பின பாண்ட்ஸ் பவுடரை எல்லாம் எடுத்தப்புறம் தான் அமைதி ஆனாங்க.


பொண்ணு குனிஞ்ச தல நிமிராம வருது (சொல்லி வச்சி கூட்டி வருவாங்களோ?). ( ஊருக்கு வந்தப்புறம் தான் பாக்கணும், அக்கா போடற சவுண்ட்ல குடிகாரன் போதை கூட எறங்கிடும்) அப்புறம் என்ன, ஆயிரம் வாலா வெடி வெடிக்க, கெட்டி மேளம் ஒலிக்க அண்ணன் முருகேசு தாலி கட்டினார். சாப்பாட்ட ஒரு வெட்டு வெட்டிட்டு நாங்க எல்லோரும் ஊர் கெளம்பினோம்.

கடைசியா ஒன்னு இருக்கே. மாலையில் மாப்பிள்ளை வரவேற்பு. மாப்பிள்ளை வாராரா அப்படின்னு ஊர் எல்லையில இருந்து பார்த்துக்கிட்டே இருந்தோம். எதுக்கு தெரியுமா?. பாட்டு போடத்தான். தூரத்தில் வண்டி தெரிந்ததும், ஓடி வந்து செட் கார அண்ணன் கிட்ட வந்து சொன்னோம்னா, டக்குன்னு பாட்டு ஒன்ன தட்டி விடுவாரு. "மணமகளே! மருமகளே! வா..வா.. உன் வலது காலை எடுத்து வைத்து வா..வா...குணம் இருக்கும் குலமகளே வா..வா". இந்த பாட்டு போட்டாலே ஊர் சனம் எல்லாம் உசாராயிடும். பொண்ணு-மாப்பிள்ளை வருதுன்னு. கல்யாணத்துக்கு போக முடியாத எல்லாரும் ஓடி போய் சாலை ஓரத்தில் நின்னுக்கிடுவாங்க. அந்த மக்கள் முகத்தை பார்க்கணுமே, பொண்ணு எப்படி இருக்குன்னு பார்க்க அப்படி ஒரு ஆவலோடு நிற்ப்பார்கள். (பார்த்தவுடன் வரும் கமெட்ட போட ஒரு தனி பதிவே போடலாம். "ஏலா! பொண்ணு கொஞ்சம் ஒயரம் கம்மியா தான் இருக்கு" " முருகேசு கலருக்கு கொஞ்சம் கம்மி தான்" இப்படி நெறைய). அப்புறம் வரவேற்பு. நாங்க பரிமாறுவதில் பிசியாகி விடுவோம்.

ஒரே ஒரு கவலை மட்டும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். "நாளைக்கு ஸ்கூலுக்கு போவணுமே"

Sunday, November 27, 2005

கல்யாணமாம் கல்யாணம் -2

இத படிச்சிட்டு வாங்க - பாகம்-1

கல்யாண நாளும் வந்தது. கல்யாண நாளுக்கு முந்தின நாளே ஊர் களை கட்ட ஆரம்பித்து விட்டது. மாப்பிள்ளை வீட்டில் பந்தல் போட்டவுடனேயே, எங்களை போன்ற வாண்டுகள் வெளையாட்டு இடத்தை அங்கே மாற்றி கொண்டோம். "ஏல! ஸ்பீக்கர் செட் வந்துட்டுடா' கத்திக்கொண்டே செந்தில் ஒடி வந்தான். அதற்க்காக தானே காலையில் இருந்தே காத்து கொண்டிருந்தோம். எதற்க்கு என்று கேட்கறிங்களா? எல்லாம் அந்த பொட்டி சாவிக்காக தான். அப்போல்லாம் LP ரெக்காட்டு, பெரிசா வால்வு வச்ச ஆம்ளிபயர் தான். ஒரு பெரிய பொட்டில எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு செட்டு கார அண்ணன் வருவாவ. சில நேரம் சாப்பிட போகும் போது அந்த பொட்டி சாவி நம்ம கைல கெடைக்கும். நம்ம இஷ்டத்துக்கு பாட்டு போடலாம்லா. அதுக்கு தான், அண்ணனுக்கு எல்லா சேவையும் செஞ்சிக்கிட்டு இருப்போம்.

கொய்யா மரத்துல ஏறி குழாய் ஸ்பீக்கர் கட்டுறது, ஊர்ல ட்யூப் லைட் போட குழி தோணறது, இப்படி சகல வேலையும் செஞ்சி கொடுப்போம். அப்போத்தான நம்ம கைக்கு சாவி வரும். சாப்பிட போவும் போது எந்த எந்த ரெக்கார்டு எந்த நம்பர்ல ஓட்டணும்னு வெவரம் எல்லாம் சொல்லிருவாவ. அப்புறம் என்னா...விவித்பாரதியே நம்ம கைல கெடைச்ச மாதிரி தான். அப்போல்லாம் ரேடியோவ விட்டா பாட்டு கேக்க வேற நாதி கெடையாது. சிலோன் ரேடியோல தான் பாட்டு. எங்க ஊர்லருந்து திருச்சி ரேடியாவ புடிச்சா, ரெயில் சத்தம் தான் கேட்கும்..அப்போ அப்போ பாட்டு எட்டி பாக்கும். இல்லன்னா, பக்கத்து ஊர்ல ஏதாவது விசேசம்னா, காத்து நம்ம ஊருக்கு நேரே காத்து அடிச்சா, பாட்டு நல்லா கேக்கும். எதிர்காத்து அடிச்சிச்சுன்னா, பாட்டையும் சேர்த்து தள்ளிக்கிட்டு போய்டும். அப்படி பாட்டு கேக்கறது கூட ஒரு சொகம் தான்.

இந்த மாதிரி சமயம் மட்டுமே தேர்ந்து எடுத்து பாட்டு போடலாம். அப்புறம் என்ன! நேயர் விருப்பம் தான். பாரதிராஜா 'என் இனிய கிராமத்து மக்களே" அப்படின்னு ஆரம்பித்து "முதல் மரியாதை"ல இருந்து ஒவ்வொரு பாட்டா போட்டுக்கிட்டு இருப்பாரு. ஓட்ட ரெக்கார்டு மாட்டிக்கிட்டா தட்டிவிடறது, ஸ்பீடு மாத்தி பாட்டு போடறது இப்படியே நல்லா பொழுது போவும். "ஏல! அந்த விதி கதை வசனம் இருந்தா போடுல" அப்படின்னு அத்தை கேட்டா, " அந்த ரெக்கார்டு போட்டு போட்டு தேஞ்சி போச்சாம்" சொல்லி தப்பித்துக்கொள்வோம் ( யப்பா! அந்த ரெக்கார்டு ஒரு காலத்துல எப்படி ஓடிச்சி தெரியுமா)

சாயங்காலம் ஆனவுடன் ஊர் ஜனங்கள் ஒவ்வொன்னா வர ஆரம்பித்தது. பந்தக்கால் நட்டறது, தாய்மாமன் சடங்கு எல்லாம் அன்று தான். தாய்மாமன் என்று இருந்தால், அங்கே பகை இருக்க வேண்டும் என்பது கிராமத்தில் எழுதப்படாத விதி. அப்போ தான ஊர்ல மத்த பயலுவலுக்கு இவங்க சண்டைய பாத்து பொழுது போவும். அப்புறம் ஊர் பெரிசுங்க எல்லாம் போய் "ஏ! உன் தங்கச்சி பையன் தானப்பா! நீ வராம இருந்த எப்படி..வாடே" அப்படின்னு தள்ளிக்கிட்டு வரும். அப்புறம் ஆலந்தலை (ஆல்+அத்தி+இலை) மாப்பிளைக்கு சுத்தி போடுற கதை ஒன்னு நடக்கும். நாங்களும் வரிசையில் பெரிய ஆள் மாதிரி நின்றுக்கிட்டோம். துரை மாமா "ஏல! இது சொக்காரனுங்க மட்டும் தான் செய்யணும். பொடிசுங்க அந்தால போங்கல" என்று எங்களை பத்தி விட, எங்க செட் குமாரு " போங்க சித்தப்பா! ஓந்தான் அடிக்கிறதுல இருந்து பன மரத்துல ஏறி பயினி திருடறது வர நாங்களும் மாப்ளையும் ப்ரண்டு. தெரியுமா! நீங்க போங்க சித்தப்பா" அப்படின்னு மாப்ளைக்கு எங்க ஜன்ம பந்ததை சொல்லி வைத்தான்.

அப்புறம் பந்தி ஆரம்பிச்சதும் தான் எங்க வேலையே ஆரம்பிக்கும். அவன் அவன் சைசுக்கு தகுந்த மாதிரி கொளம்பு வாளி, கூட்டு வாளி, தண்ணி ஊத்துறது போற்ற பதவிகளை பிடித்துக்கொண்டேம். அந்த பாயச வாளில மட்டும் ஒரு கண்ணு இரூக்கும். ஆனா அது நம்ம கைக்கு கெடைக்காது. சமையல்காரர் கஸ்டடில தான், அவர் தான் பரிமாறுவார். இல்லன்னா, நாங்க கொண்டாடிருவோம்லா. இப்படி பரிமாறுவதுல இருக்கற சொகமே தனி தான். நம்ம சொந்த பந்தங்கள பாத்து, வேணுமா, வேணுமான்னு கேட்டு பரிமாறுகிறதே சொகம் தான். கூட்டத்துல 'ஏ! இது நம்ம ராஜி மொவனா" அப்படி விசாரிப்புகள் வேறு நடக்கும். எந்த கல்யாண வீடு என்றாலும் ஒரு போதும் பந்திக்கு முந்துகிற வழக்கம் கெடையாது. எவன் எந்த வாளியை புடிக்கலாம்னு தான் போட்டி இருக்கும். எல்லாம் முடிஞ்சப்புறம் மொத்தமா உக்காந்து வாளியை வரிசையா வச்சி இஷ்டத்துக்கு அள்ளி கட்டினோம்னா, ரெண்டு நாளைக்கு இரை எடுக்க வேண்டியது இல்லை பாருங்க :-)

எல்லாம் முடிஞ்சப்புறம் பெரிசுங்க, இளசுங்க எல்லாம் சீட்டாட ஆரம்பிச்சிட்டங்க. ஊர்ல இருந்து ரொம்ப நாள் பாக்காத மாமன், மச்சினன் எல்லாம் வந்திருக்கும் அல்லவா. விடியும் வரை சீட்டாட்டம் தான்.

( தொடரும் - மன்னிக்கனும். வேலை அதிகமாகி விட்டதால் :-) )

Saturday, November 26, 2005

கல்யாணமாம் கல்யாணம் -1


ஒரு கல்யாண வீட்டுக்கு போகலாமா?. எங்கன்னு கேக்கறீங்களா?. எங்க கிராமத்துல தான். யாருக்கு கல்யாணம்?. நம்ம முருகேசன் அண்ணனுக்கு தான். சும்மா! உங்கள கிராமத்து கல்யாணத்த காட்டலாம்னு நெனைச்சேன். அப்படியே ஒரு 18 வருசம் பின்னாடி போயிரலாம். . சரி தொடஙகலாமா.....

எங்க கிராமத்துல மொத்தமே 40 வீடு தான். எல்லோரும் சொக்காரனுங்க.. சொந்தகாரனுங்க.. ஊர்ல ஒருத்தனுக்கு கொளவி கொட்டுனாலே ஊர்ல எல்லா ஜனமும் கூடிவிடும். கல்யாணம்னா சொல்ல வேண்டுமா! . திருவிழா தான் போங்க. நிச்சயம் பண்ண போறதுல இருந்தே ஜாலி தான். அதுவும் என்னை போல வாண்டுகளுக்கு கொண்டாட்டம் தான். மொதல்ல பள்ளிக்கூடத்துக்கு லீவு போட்டுடலாம். அப்புறம் புதுசா ஊர் பாக்கலாம். இன்னும் நெறைய இருக்கு. ஒவ்வொன்னா பாக்கலாம்.

காலைலயே ஒரு மகிந்திரா ஜீப் வந்துட்டு. முருகேசன் அண்ணன் ஒவ்வொரு வீடா வந்து கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். "யக்கா! ரெடியா! மயினி! ரெடியா! வண்டி வந்துட்டு. கெளம்புங்க" இப்படி வீடு வீடாக கெளப்பிக்கொண்டிருந்தார் மாப்பிள்ளை முருகேசு. எல்லோரையும் அள்ளிக்கிட்டு மூச்சு முட்ட ஜீப் கெளம்பியது, பொண்ணு பாக்க. இந்த மாதிரி சமயங்களில் தான் பெரிசுங்க குசும்பு , நக்கல், நையாண்டின்னு பொளந்து கட்டும். "ஏல! தெக்கயா பொண்ணு எடுக்க. வெளங்குமாடே! ஏற்கனவே மயினி கத்துனா ஊர்ல எவனும் இருக்க முடியல! இதுல எதிர்பாட்டு பாட தெக்காட்டு காரிய வேற விட்டா ஊரு தாங்குமால. பொண்ணு பாக்கறதுக்கு முன்னாடி ஊர் பயலுவலயும் நெனைச்சு பாருங்கல" வாலகுரு மாமா முருகேசு அண்ணனை பயம் காட்டிக்கொண்டிருந்தார். "இல்லண்ணே! நம்ம சொடலமாடன் சாமி போன கோயில் கொடைல தம்பிக்கு தெக்க தான் பொண்ணு எடுக்கணும்னு வாக்கு சொல்லிருச்சுல்ல. பய என்ன பண்ணுவான்" இது துரை மாமா.

ஆழ்வார்தோப்பு வந்து விட்டது. ஆத்துக்குள் அத்தனை பேரையும் வைத்து இழுக்க முடியாமல், போராடி தோற்று , ஜீப் ஆத்துக்குள்ளேயெ நின்று விட்டது. எங்க ஊர்ல ஆறு, குளம் எதுவும் இல்லை என்பதால், வாண்டுகள் எல்லோரும் தாமிரபரணி ஆத்துக்குள் இறங்கி வெளையாட ஆரம்பித்தோம். ஜீப் டிரைவர் ஒரு நீள 'ட' மாதிரி ஒரு கம்பியை ஜீப்பின் முன்னாடி விட்டு சுத்தோ சுத்துன்னு சுத்தி போராடிக்கிட்டு இருந்தார். வண்டி ஒரு வழியாக மூச்சு விட, எல்லோரும் ஆத்துல மீன் பிடிக்கிற வேலைய விட்டுட்டு பொண்ணு வீட்டுக்கு கிளம்பினோம். ஊர்ல எங்க ஜீப்ப பாத்தவுடன் ஊர் ஜனம் எல்லாம் வரிசையாக பாதை ஓரத்தில் நின்னு மாப்பிள்ளை ஜீப்புக்குள்ள எங்கே என்று தேட ஆரம்பித்தார்கள்.

பொண்ணு வீட்ல பெரிய வரவேற்பு. அங்கேயும் ஊர் பெரிசுகள் எல்லாம் ஆஜர். ஒவ்வொன்னும் அது அதுக்கு ஏற்ற மாதிரி கும்பல் சேர்த்துக்கொண்டு அரட்டை அடிக்க ஆரம்பித்தன. பெரியவர்கள் தட்டு மாற்றிக்கொண்டார்கள்.

"யண்ணே! பொண்னு கலரு கம்மியா இருக்கும் போலயே" நம்ம துரை மாமாவிடம் கல்யாணி சித்தி.

"சும்மா. கெடடே. நம்ம மாப்ள மழைல நனைஞ்ச பன மரம் கலர்ல தான இருக்கான். அவனுக்கு இது போதும்டே. மயினிக்கு ஈடுக்கட்ட இது தாண்டே சரி. நிம்மதியா கள்ள குடிச்சிட்டு ஊர்ல அலம்ப முடியுதா. மயினி போடுற சந்தத்துல எல்லா போதையும் எறங்க்கிடுது " துரை மாமாவின் வழக்கமான நக்கல் தொடர்கிறது.

தட்டு மாற்றி, கல்யாண நாள் எல்லாம் குறித்து, சம்பிரதாயம் எல்லாம் முடிந்தவுடன், பந்தி ஆரம்பிக்கிறது. பொண்ணு வீட்டில் எல்லோருக்கும் ராஜ மரியாதை தான். போடுகிற இலையில் இருந்து பரிமாறுகிற இட்லி வரை மிக கவனமாக பரிமாறினார்கள். இல்லன்னா "பொண்ணு வீட்டுக்காரன் கிழிஞ்ச எலைய போட்டுட்டான்"னு பெரிய ரகளையை உண்டு பண்ண, மாமா மாதிரி ஊருக்கு ரெண்டு மூனு பேராவது இருப்பாங்க. எல்லாம் முடிந்து கிளம்ப ஊருக்கு ஆரம்பித்தோம்.

( கல்யாணத்துக்ககு இன்னும் சில நாட்கள் இருக்கிறது. காத்திருங்கள்)

Thursday, November 17, 2005

அன்புள்ள தாத்தாவுக்கு...


அன்புள்ள தாத்தா மலேசியா ராஜசேகரன் அவர்களுக்கு பேராண்டி சிவா எழுதுவது, நலம். நலமறிய அவா. உங்களை இங்கே தாத்தா என்று குறிப்பிட்டது சத்தியமாக கிண்டல் அடிப்பதற்காக அல்ல. "சமுதாய உணர்வு கொண்ட பெரியவர்" என்று நீங்களே சொல்லியிருக்கிற காரணத்தினாலும் "விடை பெறுகிறேன்" என்று கடைசி பதிவு போல போட்டிருந்ததினாலும், நானும் சின்னப்பையன் என்பதாலும் 'தாத்தா' என்றே அழைக்கிறேன்.

நம்ம கதை, குஷ்பு கதை போல மறுபடி உங்களால் தொடங்கி வைக்கப்பட்டாதால், இந்த பதிவு போட வேண்டியாதா போச்சி. முதலில், என்னோட "இவர்கள் இந்தியர்கள்" பதிவு உங்களுக்கு வெறும் வசை கட்டுரையாக தெரிந்தது நான் போன ஜென்மத்தில் செய்த பாவமே. அந்த பதிவிற்க்கு நீங்கள் "பிறகு நான் பதில் சொல்கிறேன்" என்று சொன்ன போது, எனக்கு உள்ளுக்குள் கொஞ்சம் உதைக்கத் தான் செய்தது "மவனே! ஏதோ பருப்பு மாதிரி எழுதிட்ட. பெரியவர் அவர் பதில் சொல்லி உனக்கு லாடம் கட்ட போறார்" என்று நினைத்துக் கொண்டிருந்தேன் . இன்று குமரன் வந்து உங்கள் எதிர்பாட்டு பதிவை சொன்ன போது, ஓடி வந்து பார்த்த முதல் ஆள் நான் தான். எனக்காடா அருகதை இல்லை இந்தியாவ பத்தி சொல்ல - என்று நீங்கள் மீசையை முறுக்கிக் கொண்டு ஆரம்பித்ததை பார்த்து நான் பயந்தே போய்விட்டேன். இப்படி சப்பென்று ஆக்கிட்டியலே தாத்தா.

"என் அருகதையை சொல்கிறேன் கேளுங்கள்" என்று ஆரம்பித்து போகும் உங்க பட்டியல் --

1. வசிப்பது தான் கோலாலம்பூரில் , பேசுவது சுத்த மதுரைத் தமிழில். மலேசிய நாட்டின் குடிமகன் என்றாலும், நான் முக்காலே மூணு வீசம் இந்தியனும் கூட.

2. மலேசியாவில் சம்பாதித்ததை வைத்து தமிழ்நாட்டில் எங்கள் மூதாதையர்கள் கிராமத்தில் கட்டிய வீடும், திருப்பத்தூரை ஒட்டி வாங்கிய சொத்துக்களும, அதற்கு முன்னர் அவர்களுக்கு முந்திய மூதாதையர்கள் அங்கு சேகரித்திருந்த நிலங்களும் இன்றும் எங்களின் பராமரிப்பில் அப்படியேதான் உள்ளன

3. "இதெல்லாம் போக " என்று பெரிய Build-up கொடுத்து என்னமோ சொல்ல போறீங்கன்னு பாத்தா, இந்தியாவில் கிராமத்தில் எங்களுக்கென்று தனி குடும்ப இடுகாடும் 100 வருடங்களாக இருக்கின்றது.

4. உங்கள் சொத்து சொந்த பந்தம் எல்லாம் அங்கே இங்கே தான் இருக்கிறது என்று ஒரு பட்டியல் கொடுத்து இருக்கிறீர்கள்.

5. உறவுகளாலும் தொடர்புகளாலும் உந்தப் பட்டு வருடத்திற்கு ஒர் , இரு முறை கடந்த 30 வருடங்களாக நான் இந்தியா போய் வந்து கொண்டு இருக்கிறேன்.

என் அருகதை குறித்து நான் சொல்ல இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், சொன்னது போது என்று நினைக்கிறேன் " -- இப்படி முடித்திருக்கிறீர்கள். இப்படி ஒரு பட்டியலை கொடுத்துவிட்டு, இன்னும் ஏராளமான விசயங்கள் இருக்கிறது என்கிறீர்கள். அந்த 'இன்னும்' என்ன "தவறாமல் இந்தியா சுதந்திர தினத்திற்கு எங்க வீட்ல பாயாசம் பண்ணிருவோம்" " எல்லா குடியரசு தினத்திற்கும் மாரியாத்தா கோவில்ல கூலு ஊத்திருவோம்" இப்படியா?.

சரி இவ்வளவு உணர்ச்சி வசப்படும் உன் அருகதை என்ன என்று ஒரு கேள்வி வரும் அல்லவா. அதை சொல்லத் தான் இந்த பதிவே. நீங்களும் உங்கள் சுயபுராணம் பாடிட்டீங்க. சரி நாங்களும் எங்க சுயபுராணத்த இந்த சிவபுராணத்தில் பாடிடலாமேன்னு தொடங்குகிறேன்.

DreamIndia2020 பற்றி தெரியாதவர்களுக்கு சொல்கிறேன். என்னோட பதிவுகளில் தவறாம நடராஜனையும் குமரனையும் பார்த்திருக்கலாம். நடராஜனின் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஆரம்பித்த ஒரு சின்ன இயக்கமே DreamIndia2020. இவர்கள் வேலை 'இதோ சீனாவை பாருங்கள். ஜப்பானை பாருங்கள்' என்று இந்தியாவை வெறுமனே எழுத்துக்களில் மட்டும் நேசிக்காமல், கொஞ்சம் செயலிலும் காட்டுவது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நமக்கு அரை மணி நேரம் செலவழித்து இணைய வசதியோடு இதை படிக்க வசதி இருக்கிறது. நம் நாட்டில் எத்தனை பேர் அடுத்த வேளை சோத்துக்கு அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக இந்தியாவையே நம்மால் தலைகீழாக ஒரே நாளில் மாற்ற சக்தி வேண்டும் என்றல்ல. நம்மை சுற்றி இருக்கும் இயலாதவர்களுக்கு நன்றாக இருக்கும் நாம் நம்மாலான உதவிகளை செய்யலாம் அல்லவா. நாம் ஆளுக்கு இரண்டு பேரை முன்னேற்றினால், நம் நாடு முன்னேறாதா என்ன?. சொல்லுங்கள்.

DreamIndia2020 நண்பர்கள் ஒவ்வொரு நகரத்திலும் ஒரு குழு அமைத்து சுற்றி இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது, கஷ்டப்பட்ட மாணவர்களின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வது, வயதான உழைக்க முடியாத, சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட முதியோர்களுக்கு உதவுவது போன்றவற்றை முடிந்த அளவு செய்து வருகிறார்கள். இப்போது மும்பையில் நரிக்குறவர்கள் போல் வாழும் ஒரு இன மக்களுக்காக ஒரு பள்ளி ஆரம்பிக்க வேலையை தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த வாரம் 'பாத்திமா இல்லம்' என்று ஒரு அனாதை விடுதி சென்னை மழையால் மூழ்கிப் போய்விட, அதை கவனித்துக்கொள்ளும் அம்மாவின் வேண்டுகோளின் படி, 10 லோடு மணல், கழிவுகள் போட்டு தரை மட்டத்தை உயர்த்த நடா & Co வேலை செய்து கொண்டிருக்கிறது. இதற்க்கு எல்லாம் பணம் கொடுக்க எல்லா நண்பர்களுமே உதவி செய்கிறார்கள்.

நண்பர் குமரன் இந்த பள்ளிக்கூடம் ஆரம்பிக்க Rs. 13000 கொடுத்துள்ளார். நான் போன மாதம் தான் இவர்கள் நட்பு வட்டத்துக்குள் வந்து விழுந்தேன். போன வாரம் நடராஜன் மூன்று ஏழை குழந்தைகளை கம்யூட்டர் வகுப்பில் சேர்த்துவிடலாம், Rs.4500 ஆகும் என்று சொன்ன போது, அதற்கான செலவை ஏற்றுக் கொண்ட மூன்று நண்பர்களுள், உங்கள் பேராண்டி நானும் ஒருவன். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா எங்கள் தாய் நாடு என்ற ஒரு பற்றும் அது முன்னேறும் என்று நம்பிக்கையும் இந்த இளைஞர்களிடம் இருக்கிறது. இதை சுயவிளம்பரம், வசை பதிவு என்று எடுத்துக் கொண்டாலும், உங்களில் சொத்துப் பட்டியலை விட எங்கள் பட்டியல் உயர்ந்ததே என்பது என் அபிப்பிராயம். என்ன சொல்லறீங்க.

இவர்கள் எல்லோருமே போன வருடம் படிப்பை முடித்துவிட்டு வேலையில் சேர்ந்து ஒரு வருடமே ஆன இளைஞர்கள். உங்கள் கிழட்டு அனுபவத்தில் நீங்கள் பட்டியல் போட்டிருக்கும் அருகதையை விட இந்தியாவை பற்றி பேச எங்கள் அருகதை கொஞ்சம் உயர்ந்ததே என்பது என் அபிப்பிராயம். உங்கள் அபிப்பிராயம் என்னவோ. நாங்கள் இன்று சிறிய அளவில் இருந்தாலும், கண்டிப்பாக ஒரு நாள் நாங்கள் வளர்வோம். இந்தியாவும் வளரும்.

இந்த இளைஞர்களுக்கும் இந்தியாவுக்கும் உங்கள் கிழட்டு அனுபவம் எந்த வகையில் பயன்?. சொல்லுங்க தாத்தா. வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்தில் இவர்கள் இந்தியாவில் செய்திருக்கும் விசயங்கள் என்ன? இவர்கள் வயத்தை விட அதிக அனுபவம் கொண்ட தாங்கள் பட்டியலிட்டிருக்கும் "அருகதை" என்ன?. எந்த நாட்டில் அடுத்து புலம் பெயர்தால் நல்லது என்று மண்டையை போட்டு உருட்டிக்கொண்டிருக்கும் உங்களுக்கு, இதை பற்றி யோசிக்க நேரம் இருக்காது தான்.

நீங்க ஏரோப்ளேன் படம் எல்லாம் போட்டு அழகழகா ஓயின் கதை எல்லாம் சொல்லிருக்கீங்க. எங்களிடமும் சில கதைகள் இருக்கு. அதை போட்டா பதிவு பெரிசாயிடும் என்பதால், நேரம் இருந்தால் இங்கே படித்துக்கொள்ளுங்கள்.

கதை எண்-1 ; கதை எண்-2 ; கதை எண்-3

அன்புடன் பேராண்டி,

சிவா

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதுவரை படித்த நண்பர்களுக்கு நன்றி. உங்களுக்கு ஒரு விண்ணப்பம். உங்களில் யாராவது எங்களை போல எண்ணத்தில் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளுங்கள் (dream_india_2020@yahoo.co.in) . பணம் தேவை இல்லை. மனம் தான் தேவை.





தீபாவளிக்கு வசந்தம் என்ற ஒரு மனநிலை குறைந்த குழந்தைகளின் காப்பகத்தில் குழந்தைகளோடு DreamIndia நண்பர்கள்.

குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் DreamIndia நண்பர்கள்:

Friday, November 11, 2005

பா..பா...பா...பா..பா...பாம்பு


பாம்பு.

என் தைரியத்தையும் வீரத்தையும் சோதிப்பதற்க்காகவே கடவுளால் படைக்க பட்ட ஒரு உயினினம். படத்தில் எல்லாம் பாத்தீங்கன்னா, பாம்புக்கு பொதுவாக ரெண்டு வேலைகள் தான் கொடுக்கப் பட்டிருக்கும். ஒன்னு, கதாநாயகி தலையில் பூவைத்து விடுவது, அழும் குழந்தைக்கு கிலுகிலுப்பை ஆட்டுவது, தொட்டில் ஆட்டுவது, வில்லியை பயங்காட்டுவது. இது (இராமநாராயணன்) சாமி பாம்பு. ரெண்டாவது, நேரே போய் ஹீரோ கழுத்துல போய் தொங்கிக்கிட்டு காமெடி பண்ணுறது. ஹீரோவும் "பா..பா..பா...பா" அப்படின்னு நமக்கு வயிறு வலி வரும் வரைக்கும் இழுத்துக்கிட்டே இருப்பாரு. "பா" க்கள் தாங்க முடியாமல் பாம்பும் வெறுத்துப் போய் இறங்கி பொந்துக்குள்ள போயிடும். அப்புறம் "ம்பு" அப்படின்னு சொல்லிட்டு ஹீரோ தொப்புன்னு மயக்கம் போட்டு விழுந்திடுவாரு. இது காமெடி பாம்பு. இப்போதெல்லாம் இராமநாராயணன் கலைஞரை வைத்து மட்டும் தான் படம் எடுப்பதால் (கழக கண்மணிகள் மன்னிக்கவும்), பாம்புகள் எல்லாம் வாய்ப்பு கிடைக்காமல் கோடம்பாக்கத்தை சுற்றி வருவாதாக கேள்வி.

எனக்கும் பாம்பை பார்த்தால் 'பா...பா...பா...பா.." தான். கிராமத்தில எல்லாம் பாத்தீங்கன்னா, பாம்பு ரொம்ப சகஜம். யாரு தோட்டத்திலாவது பாம்பு புகுந்திட்டுன்னா, என்னை மாதிரி அப்பாவிங்க ஜீவன்கள் கைல ஒரு கம்ப கொடுத்து பாம்பு அடிக்க அனுப்பிருவாங்க. எனக்கு பாம்பு என்று நினைத்தாலே உள்ளுக்குள் உதறும். அதன் வழ வழ உடம்பும், நெளிந்து வளைந்து ஒடும் ஓட்டமும், நினைத்தாலே சகலமும் ஒடுங்கி விடும். என்ன பண்ணறது?. ஆம்பளையா பொறந்துட்டோம். அதுவும் கிராமத்துல பொறந்துட்டோம். அதனால், கொஞ்சம் தைரியமா நடிச்சி தான் ஆவனும். பாம்பு வரும் போது எவன் மாட்டுகிறானோ அவன் தான் அன்னைக்கு "டாக் ஆஃப் த கிராமம்".

அப்படித்தான் ஒரு நாள் அத்தை வீட்டு தோட்டத்துல ஒரு பாம்பு புகுந்திடுச்சி. "எய்யா! ராசா! நம்ம தோட்டத்துல ஒரு பாம்பு புகுந்திடுச்சி. வந்து அடிய்யா" அப்படின்னு அத்தை, மகளுடன் வந்து என்னிடம் சொன்ன போது, என்னால் தட்ட முடியவில்ல. பாம்படிக்க போகும் போதெல்லாம் நான் வேண்டுவது "நல்ல பாம்பாகவோ, சாரை பாம்பாகவோ இருக்கக் கூடாது. பாம்பு கொஞ்சம் சின்னதாக இருந்தால் நல்லது. நம் மானம் காப்பாற்றப்படும்" என்று. இதுல வேற, 'ஏல! நல்ல பாம்ப அடிச்சி விட்டுறாதல! நெனவு வச்சி வந்து போட்டு தள்ளிடும்" என்று பெரிசுங்க வேற கொஞ்சம் இருக்கிற தைரியத்துலயும் மண் அள்ளி போட்டுங்க. "நீயா" மாதிரி படம் பார்த்து, அந்த நெனப்பு வேற நம்மை ஆட்டும். "ஒரு வேள இது ஜோடி பாம்பா இருக்குமோ" இதுவும் அதே பெருசு தான்.

கையில் ஒரு கம்பை கொடுத்து, பாம்பு இருப்பதாக தெரியும் இடத்தை காட்டி விட்டு எல்லோரும் பாதுகாப்பா ஒரு 30 அடி தள்ளி நின்று கொண்டார்கள். உள்ளுக்குள் உதறினாலும், அத்தை பொண்ணு வேற நம்ம சாகசத்தை பார்க்க நின்று கொண்டிருப்பதால், தடியை எடுத்துக் கொண்டு, எல்லா சாமியையும் வேண்டிக்கிட்டு கிளம்பினேன். ஆடிப் போய்விட்டேன். சும்மா ஒரு 5 அடி நீளத்தில், எனக்கு சோதனையாக நின்று கொண்டிருந்து பாம்பு. என் நேரம், கோட்டைச் சுவரின் முக்கில் (Corner), ஓட வழி இல்லாமல் நின்று கொண்டிருந்தது. இல்லன்னா, படம் காட்டி அதை விரட்டிட்டு "பாம்பு ஒடிடிச்சி" அப்படின்னு சொல்லிக்கலாம். அதற்க்கும் வழி இல்லாமல் போய்விட்டது. ஒன்னு அது. இல்லன்னா நான். அப்படி ஒரு நெலம.

கொஞ்ச நேரம் நான் பாம்பு கூட போட்ட சிலம்பாட்டத்தில் சுத்தி இருக்கற பூச்செடி எல்லாம் ஒவ்வொன்னா மண்டைய போட, அத்தை தள்ளி நின்னு "ஏல! மனுசா! ஒன்ன பாம்படிக்க கூட்டி வந்தா! இருக்கற செடிய அடிச்சிக்கிட்டு இருக்கற" என்று சொல்ல, அத்தை பொண்ணு வேற நக்கலாக ஒரு சிரிப்பு சிரிக்க, வீரம் வந்து பாம்பு மண்டைல ஒரே போடு. பாம்பும் மண்டைய போட, அப்புறம் அன்றைக்கு நான் தான் "டாக் ஆஃப் த கிராமம்".

சென்னை மடிப்பாக்கம் . நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே வசிக்க கூடிய இடம். வேலையில் சேர்ந்த புதிதில் அக்கா வீட்டில் அங்கு தான் தங்கி இருந்தேன். மழை பெய்தால் வெள்ளம் தான். சகலமும் வந்து போகும். அப்படித்தான் ஒரு பாம்பு பொழுது போகாமல் நேரே எதிரில் உள்ள மாமி வீட்டு சமையல் அறைக்குள் போய்விட்டது. நல்ல வேளை. மாமி பார்த்து விட்டார்கள். அசைவ பாம்புக்கு அது 'மாமி வீடு' என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு என்ன பசியோ, சமையல் அறையை உருட்ட போய்விட்டது. மாமி அலறிக் கொண்டு அக்கா வீட்டுக்கு ஓடி வந்தார்கள். நானும் என் அத்தான் கடை பையன் கோட்டானும் (சின்ன பையன் தான்) கம்பை எடுத்துக்கிட்டு போனோம். மாமி பையனுக்கும் என் வயது தான். வீட்டில் தான் இருந்தான். ஆனால் அம்பி நடுங்கி போய், வீட்டுக்குள் வரவே இல்லை. மாமி பொண்ணோ சமையல் அறை வாசலில் தைரியமாய் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். அது போதாதா நமக்கு. சின்ன சமையல் அறை. அறை எங்கும் உரிக்கப்படாத தேங்காய் குவிந்து கிடக்க, வெளிச்சமும் அதிகம் இல்லாத அறை. பாம்பு ஒடினால் நமக்கு ஓடவும் இடம் இல்லாத அறை. நானும் கோட்டானும் ஒவ்வொரு தேங்காயாக நகர்த்திக்கொண்டே வந்தோம். சரியான பாம்பு. பெரிய போராட்டத்துக்கு பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து பாம்பை காலி செய்தோம்.

வெளியே வரும் போது மாமி அம்பியை பார்த்து "ஏண்டா! ராம்கி. சின்ன பையன். எவ்வளவு நன்னா, தைரியமா இருக்கான் பாரு. நோக்கு தைரியமே கிடையாதுடா. தண்டம்" . இப்படி மாமியின் மொத்த ஓட்டையும் கோட்டான் அள்ளிக் கொண்டு போக, நான் முடிவு செய்தேன் " அடுத்த தடவை மாமி வீட்டுக்குள்ள பாம்பு போனா, கோட்டானை கழட்டி விடுவது" என்று.

Friday, November 04, 2005

தாலாட்டு கேக்குதம்மா!!


திரை இசையில் தாலாட்டுப் பாடல்கள் எப்படி இருக்கின்றன என்று தேடியதில் சில நல்ல பாடல்கள் கிடைத்தன. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று தான் இந்த பதிவு. தாலாட்டு பாடல்கள் எல்லாமே சுகமானவை. அழகான தாய்மையை சொல்லும் வரிகள் கொண்ட பாடல்கள். இங்கே சிலவற்றை கேட்டு பாருங்கள்.
__________________________________________________

முதல் பாடல். இசைகருவிகள் பயன்படுத்தாத ஒரு பாடல். சின்ன குயில் என்று சும்மாவா சொன்னார்கள். பாடல் இதோ...

தவமான தவமிருந்து தாளாம நா சொமந்த முக்கனியே !
நவமான மாமணியே ! நா படைச்ச கண்மணியே எந்துரையே !
பழஞ்சேலையில ஏனகட்ட செல்வ மக தூங்கிரலாம் !
அதிகாலையிலே கண்முழிச்சி வெளையாட போயிரலாம்.!




________________________________________________________

இதுவும் சித்ரா தான். அப்படி ஒரு இனிமை. தபேலா இசை மேலும் அழகு சேர்க்கிறது. கேட்டு பாருங்கள்.

சிறுவாழை தண்டு ரெண்டு சினுங்கி வரும் கால்களில்
செவ்வந்தி மாலை ரெண்டு சாய்ந்து வரும் தோள்களில்
தாய்மை என்பது அது போல வரமும் ஏதடா!
உன்னை சுமப்பது அது போல சுகமும் ஏதடா!
இளங்காற்றின் இன்பமே ! இனி ஏது துன்பமே !



__________________________________________________

மூன்றாவதாக ஒரு சுசிலா பாடல்.

குழலோடும் யாழோடும் இசை கேட்ட போதும்
மழழை உன் சொல் போல இசையாவதேது!

யாரடி உன்னை படைத்தார் அன்னையும் தந்தையும் இல்லை !
உன்னை என் கையில் கொடுத்தார் தெய்வமா நம்பவும் இல்லை !

அன்பிலே அன்பை இனைத்து வம்புகள் செய்வதும் என்ன
உண்மை தான் சொல்லடி செல்வமே சிரிக்காதே !




_________________________________________________________

"துளி சோகம் கண்டால் உந்தன் கண்ணில், புயல் வீசும் கண்ணா எந்தன் நெஞ்சில்....அறிவாயோ" இதோ ஒரு அன்னையின் பாசம்.

பகல் நேரத்திலும் நிலா கேட்கும் உந்தன்
கண்ணில் நிலவு குடி இருக்கும்!
இதழ் ஒரத்திலும் சிந்தும் தேன் துளிகள்
அமுதாய் அமுதாய் அது இனிக்கும் !
நீ சிரித்தால் அந்த தெய்வீக சங்கீதம் கேட்கும் !
நீ பார்த்தால் மணி தீபங்கள் என் நெஞ்சில் ஆடும்.....அறிவாயோ?.




_____________________________________________________________

கடைசியாக ஒரு சின்ன தாலாட்டு. மூன்று வரி தான் இந்த பாடல். சோகம் கலந்த ஒரு தாலாட்டு.

ஆசை ராஜா ஆரீரோ !
அம்மா பொன்னே ஆரீரோ !
தோளிலே மாலையாய் ஆடும் கண்ணா ஆரீரோ!
ஆடும் கண்ணா ஆரீரோ!

உமா ரமணனின் முதல் பாடல் என்று நினைக்கிறேன். பாடல் கேட்க..



_________________________________________________________________

பின் குறிப்பு : இதில் சின்ன தம்பியில் வரும் "தூளியிலே ஆட வந்த" போன்ற பாடல்களை எடுத்துக் கொள்ளவில்லை. இந்த பாடல்களில் பொதுவாக "பாட்டெடுத்து நான் படிச்சா. ...காட்டருவி கண்ணுறங்கும்" - இந்த ரீதியில் ஹீரோவில் பாடும் திறமையை போற்றி பாடுவதாகவே போகும். இதை தாலாட்டு பாடலாக எடுத்துக் கொள்ளவில்லை.

உங்களுக்கு தெரிந்த பாடல்களையும் கூறுங்கள்.

Saturday, October 29, 2005

"முறுக்கு" செல்லையா (தொடர்ச்சி)


இதை படிச்சிட்டு தொடருங்கள்.

தான் பிச்சை எடுக்க வந்திருப்பதை கூட உணராமல், என்னை பார்த்தவுடன் வெள்ளத்தியாய் சிரித்தான் செல்லையா. "யம்மா! இவ என் கூட தான் படிக்கறான்" அவன் அம்மாவிடம் சொல்லி சந்தோசப்பட்டு கொண்டான். என் அம்மாவும் குரல் கேட்டு முன்னால் வர, "யம்மா! இது சின்னவரா?. சின்ன வயசுல பாத்தது. நல்லா வளந்துட்டாவ " இது செல்லையாவின் அம்மா. இப்படி பிச்சை எடுப்பவர்கள் வழக்கமாக வருவதால், நலம் விசாரிப்பது எல்லாம் சகஜம் தான். " சரி! வரேன்" சொல்லிவிட்டு அடுத்த விட்டை பார்க்க செல்லையா கிளம்பிவிட்டான். 'மனது என்னவோ போல இருந்தது' என்று சொல்ல எனக்கும் வயசு பத்தாது. நானும் வெள்ளத்தியாய், அவனுக்கு டாட்டா காட்டிக்கொண்டிருந்தேன்.

பள்ளியில் ஒரு நாள், எனக்கும் ராஜாமணிக்கும் ஏதோ கைகலப்பு வர, சண்டையில் அவன் என் சட்டையை பிடித்து இழுத்து விட்டான். ஏற்கனவே இத்து போயிருந்த சட்டை, அவன் இழுத்தவுடன், ட்ர்ர்ர்-னு மொத்தமா கிழிந்து போய்விட்டது. சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் போய் செல்லையாவிடம் போய் "ராஜாமணி என்ன அடிச்சிட்டான்ல" என்று முறையிட, செல்லையா கிளம்பிவிட்டான். எனக்கொரு அடியாள் மாதிரியே அவன் இருந்தான். எவனும் என்னை திட்ட கூடாது, அடித்தாலோ அவ்வளவு தான். பாசக்கார பய. இவன் போய் ராஜாமணியை அடிக்கவும், டீச்சர் வகுப்பிற்க்குள் வரவும் சரியாக இருந்தது. அப்புறம் டீச்சர் வைத்த பஞ்சாயத்தில், ரெண்டு அடி கொடுத்து, என் சட்டையயை வீட்டுக்கு போய் தைத்து கொண்டுவர ராஜாமணிக்கு தீர்ப்பு ஆயிட்டு. ராஜாமணி வீட்டிலும் போய் வாங்கி இருப்பான். தேவையில்லாமல் மூக்கை நுழைத்ததற்க்காக செல்லையாவும் அடி வாங்கினான். மேல் சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் ஆண்டி போல உக்காந்திருந்ததால் நான் அடி வாங்காமல் தப்பித்தேன்.

செல்லையாவின் ஒரு திறமை, அவன் அப்பாவிடம் இருந்து பழைய ரப்பர் செருப்புகளை வெட்டி அழகாக டிராக்டர் சக்கரம் போல அழகாக செதுக்கி, அதற்கு வண்டியும் ஒன்று செய்து கொண்டு வருவான். எங்களுக்குள் சில சமயம் பண்டமாற்று நடக்கும். நான் அவனுக்கும் சிறுவர் கதை புத்தகங்களில் வரும் கதைகளை படித்து வந்து சொல்ல வேண்டும். அப்போதெல்லாம் என் அப்பா வேலை பார்க்கும் சைக்கிள் கடைக்கு வெள்ளிக்கிழமை போய்விடுவேன். தினமணிகதிரில் தொடராக வந்த "சூப்பர் தும்பி" தொடரை படித்து வந்து செல்லையாவுக்கு வாரா வாரம் சொல்லிவிட வேண்டும். அதற்கு அவன் செய்த வண்டியை எனக்கு கொடுப்பான். தியேட்டருக்கு வரும் எல்லா படத்துக்கும் விமர்சனம் சொல்லிவிடுவான். 'நான் சிகப்பு மனிதன்'ல ரஜினி 29 கொலை பண்ணுவான்டா. சூப்பர் படம்" இப்படி தான் இருக்கும் அவனது பட விமர்சனம்.

அப்புறம் என் பெற்றோர்களின் ஆசையால், நான் ஐந்து முடிந்ததும் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டேன். அதற்க்கப்புறம் இன்று வரை செல்லையாவை பார்க்க முடியாமலே போனது. அவன் நினைவுகள் மெல்ல அடிமனதில் தேங்க தொடங்கின......

சென்னை விமான நிலையம். " வரேன்பா" ஆசிரியர் விடைப்பெற்றுக்கொண்டார். நெல்லை விரைவு வண்டியை பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தேன். ஊரில் கல்யாண ஏற்பாடு எல்லாம் போய்க்கிட்டு இருப்பது தூரத்தில் இருந்தே தெரிந்தது. அமெரிக்க புராணத்தை எல்லோரிடம் கொஞ்ச நேரம் பாடிவிட்டு, படமெல்லாம் காட்டி கொண்டிருந்தேன். 'நல்லாருக்கியலா. மருமகன. பிரயாணம் எல்லாம் நல்லபடியா இருந்திச்சா? " மாமனார் நலம் விசாரித்துவிட்டு போனார். ஸ்பீக்கரில் "வினாயகனே! வெவ்வினையை வேரருக்க வல்லான்" சீர்காழி தொடக்க பாடலை கணீரென்று பாடிக்கொண்டிருந்தார். ஊர் வாண்டுகள் எல்லாம் ஒடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன. கல்யாண வீடு களை கட்டிக்கொண்டிருந்தது.

கல்யாணத்திற்க்கு முந்தின மாலை, ஊரில் இருக்கும் அம்மன் கோவில், சுப்ரமணியன் கோவிலுக்கெல்லாம் மேள தாளத்தோடு ஒரு ரவுண்ட் விட்டுட்டு வீட்டில் நின்று கொண்டிருந்தேன். வீட்டில் பந்தல் போட்டுக்கொண்டிருக்கும் முகம் ரொம்ப பழகிய முகமாக படவே, போய் பார்த்தால், அது செல்லையா. கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆனாலும், அந்த முகம் செல்லையா தான் என்று உடனே மனதில் பட்டது.

கிட்ட போய் "ஏல! செல்லையா! எப்படி இருக்கற. என்ன நியாபகம் இருக்குதா" . என்னை அடையாளம் கண்டு கொண்டவன் "நீங்களா! நல்லா இருக்கீங்களா?. ஆளு மாறவே இல்ல. அப்படியே இருக்கீங்க. அமெரிகாவிலா இருக்கீங்க. எல்லோரும் சொன்னாங்க. நல்லா இருக்கியல்லா?" . வார்த்தைக்கு வார்த்தை "ங்க" சேர்த்து கொண்டான். அவனின் "ங்க" வில் அவன் சொல்ல வந்தது ஒன்று மட்டும் புரிந்தது. "நாம் இருவரும் வளர்ந்துவிட்டோம்! ஜாதி, அந்தஸ்து என்னும் வார்த்தைகளுக்கு நமக்கு அர்த்தம் புரிய ஆரம்பித்துவிட்டது. " சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான் 'முறுக்கு' செல்லையா.

அவன் அன்று ஓசியில் எனக்கு கொடுத்த அஞ்சு பைசா முறுக்கின் ருசி லேசாக நாக்கில் வந்து போனது.

(முற்றும்).

Friday, October 28, 2005

"முறுக்கு" செல்லையா


ப்ராங்பர்ட் (Frankfurt) விமான நிலையம். சிகாவோவில் இருந்து வந்த என் விமானம் தாமதமானதால், சென்னை செல்லும் விமானத்தை தவற விட்டு நின்று கொண்டிருந்தேன். அடுத்த வாரம் கல்யாணம். யாருக்குன்னு கேக்கறீங்களா?. எனக்கு தான். இந்நேரம் பார்த்து இவனுங்க வேற படுத்தறானுங்களே என்று எரிச்சலாக இருந்தது. மும்பை செல்லும் விமானத்தில் அனுப்புவதாக கூறினார்கள். இன்னும் ஆறு மணி நேரம் இருக்கிறது. எரிச்சலோடு இருக்கையில் போய் அமர்ந்தேன். பொழுது போகாமல், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கொஞ்சம் தள்ளி, ஒரு அம்மாவை, எங்கேயோ பார்த்தது போல இருக்கவே, அருகில் போய் பார்த்தால், எனது நாலாம் வகுப்பு ஆசிரியர். அவர் பெயர்....தெரியாது. ஆரம்ப பள்ளியில் எல்லா ஆசிரியர்களுக்கும் பெயர் ஒன்னாப்பு டீச்சர், ரெண்டாப்பு டீச்சர், இப்படி தான். இரு கைகளையும் கூப்பி "வணக்கம்! டீச்சர்" என்றேன். என்னை இனம் கண்டு கொண்டவர், "எப்படிப்பா இருக்க?" என்று நலம் விசாரித்தார். தன் மகள் அமெரிக்காவில் இருப்பதாகவும், அவரை பார்த்துவிட்டு திரும்புவதாகவும் கூறினார். ஆசிரியரை எனக்கு ஊரிலேயே தெரியும். மெயின் பஜாரில் தான் அவர்கள் வீடு. அடிக்கடி பார்க்கலாம். "நீ நல்லா வருவேன்னு எனக்கு அப்பவே தெரியும். அப்பவே நீ நல்லா படிப்பே" என்று என்னை பார்க்கும் போதெல்லாம் சொல்லுவார். தான் கற்றுக் கொடுத்த மாணவனை இன்று நல்ல நிலைமையில் பார்க்கும் போது வரும் நல்வார்த்தைகளே அவை.

ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தேன். "கிருஷ்ணன தெரியுமா! டீச்சர். இப்போ அவன் மெட்ராசுல ஒரு பேங்க்ல வேலை பாக்கறான். சக்தி கணேசன் மெட்ராசுல ஜூஸ் கடை வச்சிருக்கான்" - இப்படி எனது ஐந்தாம் வகுப்பு நண்பர்களை பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவருக்கு அவர்கள் நினைவிருக்க நியாயம் இல்லை தான். எத்தனை ஆயிரம் மாணவர்கள் அவரை கடந்து வந்திருப்பார்கள். இருந்தாலும், சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தார். அப்படி பேசிக் கொண்டு வந்த போது தான் "செல்லையா" பேச்சும் வந்தது.

செல்லையா. எனது ஆரம்ப பள்ளித் தோழன். எனது ஆரம்ப பள்ளி நண்பர்கள் ஒவ்வொருவரின் குடும்ப பிண்ணனியும் வித்தியாசமானது. அதில் செல்லையாவின் பிண்ணனி,
செல்லையா கிராமத்தில் பிச்சை எடுப்பதே ஒரு தொழிலாக இருந்தது. காலையிலேயே ஒரு பாத்திரத்தை தூக்கிக் கொண்டு குழந்தைகளுடன் கிளம்பி விடுவார்கள். சில பேர் செருப்பு தைப்பது போன்ற வேலைகளை செய்வார்கள். செல்லையா அப்பாவும் செருப்பு தைப்பவர் தான். அப்படி ஒரு ஏழ்மையான நிலையில் இருந்து அவன் படிக்க வந்திருப்பதே பெரிய விசயம் தான்.


ஐந்து படிக்கும் போது, என் சித்தி தவறாமல் எம்.ஜி.யார் படம் பார்க்க தியேட்டருக்கு கூட்டி போவார்கள். அங்கு தியேட்டரில் செல்லையாவை பார்க்கலாம். முறுக்கு விற்றுக் கெண்டிருப்பான். "முறீக்கே! முறீக்கே!" என்று அவன் கத்துவது தியேட்டர் முழுவதும் கேட்கும். ஒரு தகட பெட்டியில் அடுக்கி வைத்த முறுக்கை தலையில் வைத்துக்கெண்டு, மேல் சட்டை இல்லாமல், டவுசரை கையில் பிடித்த படி முறுக்கு விற்றுக் கொண்டிருப்பான். அந்த கூட்டத்தில் என்னை எப்படியும் கண்டு பிடித்து, என்னிடம் வந்து ஒரு முறுக்கையாவது கொடுத்து "வச்சிக்கல" ன்னு கொடுத்து விட்டு தான் நகருவான். அவனுக்கு கிடைப்பதே இரண்டு முறுக்குக்குறிய காசாக தான் இருக்கும். முறுக்கை எண்ணி தான் கொடுத்திருப்பார்கள் என்றும் அவனுக்கு தெரியும். இருந்தாலும், ஒன்றை கைல தினித்து விட்டு தான் நகருவான். அவனுக்கு கிடைக்கும் பெரிய கூலி, ஓசியில் படம் பார்ப்பது தான். அவனுக்கு கொடுக்க என் கையிலும் அஞ்சு பைசா கூட இருக்காது. என் வகுப்பில் வேறு யாருக்கும் முறுக்கு கொடுக்க மாட்டான். நண்பன் நான் என்றால் மட்டும் தான்.

ஏற்கனவே நிறைய தடவை இதே படத்தை பார்த்து இருப்பான் என்பதால், படம் தொடங்கியதும் என்னிடம் வந்து அமர்ந்து கொண்டு, கதை சொல்ல ஆரம்பித்து விடுவான். நம்பியார் எம்.ஜி.யாரை கத்தியால் குத்த மணிக்கணக்கில் போராடி கொண்டிருக்க, நாங்கள் இருவரும் கத்தியை பார்த்தவுடனே பெஞ்சுக்கு அடியில் ஒளிந்து கொள்வோம். இடைவேளை வரப் போவது தெரிந்ததும், தன் பெட்டியை தூக்கிக் கொண்டு கிளம்பி விடுவான், "முறீக்கே! முறீக்கே" என்று கூவிய படி. என் வருப்பில் எல்லோருமே தியேட்டருக்கு போகும் போது செல்லையாவை பார்த்திருப்பதால், அவனுக்கு பட்ட பெயரே "முறுக்கு" செல்லையாவாகி போனது.

ஒரு நாள் வீட்டில், "அம்மா! தருமம் போடு தாயீ" என்று குரல் வர, அம்மா ஒரு தட்டில் கொஞ்சம் அரிசி வைத்து "போட்டுட்டு வந்துருல" ன்னு கூறினார்கள். நான் தட்டை எடுத்துக் கொண்டு கதவை திறந்தால், வெளியே, தட்டு எந்திய படி அவன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்தான் செல்லையா!

(தொடரும் - பதிவின் நீளம் கருதி)

Thursday, October 20, 2005

கிராமத்து மணம் - 1 (குதிரை சவாரி)

கிட்டத்தட்ட 20 வருடம் கிராமத்து (கல்லூரி முடிக்கும் வரை) வாழ்க்கை. சின்ன வயசில் பண்ணிய சின்ன சின்ன குறும்புகள், சின்ன சின்ன ஆசைகள் . அடடா! அது அல்லவா வாழ்க்கை. அவற்றை வாழ்க்கை முழுவதும் அசை போட்டுக் கொண்டே இருக்கலாம். அவற்றில் சிலவற்றை இங்கே பதிய ஆரம்பிக்கிறேன். உங்களுக்கும் பிடித்திருந்தால் சொல்லுங்கள்.

எல்லா கிராமத்திலும் ஒரு சகலகலா வல்லவர் இருப்பார். எங்க ஊரிலும் ஒருத்தர் உண்டு. ஊரில் செமையா பீட்டரு விட்டுக்கிட்டு இருந்த எங்கள் அண்ணன் (கூட பொறந்த அண்ணன் இல்லப்பா) "பீட்டர்" பற்றி தான் இந்த முதல் பதிவு.

"வெள்ள அடிக்கணுமா பீட்டர கூப்பிடு" "மரம் வெட்டணுமா பீட்டர கூப்பிடு" "கோழி புடிக்கணுமா பீட்டர கூப்பிடு" "குழி தோண்டனுமா பீட்டர கூப்பிடு" என்று ஊரே எதற்க்கெடுத்தாலும் பீட்டர் அண்ணனிடம் தான் போய் நிற்க்கும். அதற்க்கேற்றார் போல் சரக்கும் அவனிடம் இருக்கும். எலக்ரிக்கல் வேலைல இருந்து எலி பிடிக்கற வேலை வறை பொறுமையாக, கச்சிதமாக செய்து கொடுப்பான். அதுமட்டும் அல்ல, எங்களை போன்ற வாண்டுகளுக்கு , ஓணான் அடிப்பதில் இருந்து, நீச்சல் அடிப்பது வரை அனைத்தையும் எங்களுக்கு கற்று கொடுத்த "குரு" அவன் தான். அதனால் நாங்கள் எப்போதுமே அவனையே சுற்றிக் கொண்டிருப்போம். " பீட்டர் கூடயா போற..போய்ட்டு வா" என்று எல்லார் வீட்டிலும் விட்டு விடுவார்கள். அந்த அளவுக்ககு அவன் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை.

எங்கள் குருகுலத்தில் நடந்த சிலவற்றை இங்கே பார்க்கலாம்...

அப்போ நான் எட்டாம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருந்தேன். ஓரு நாள் ஊர்ல சொடல மாடன் கோயில் கொடைக்கு "அன்பே வா" படம் திரை கட்டி போட்டாங்க. அதுல வந்த "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" பாட்ல குதிரைல சரோஜா தேவியோடு 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் டூயட் பாடறத பாத்து , எங்களுக்கும் குதிரை ஓட்ட ஆசை வந்தது. அதை எங்கள் குரு பீட்டரண்ணணிடம் சொல்ல, "குதிரை தானல. புடிச்சிரலாம். நாளைக்கு மேக்கே வந்துருங்கல" என்றான்.

அடுத்த நாள் நாங்கள் எல்லோரும் போக, பீட்டரண்ணனும் ரெடியாக இருந்தான். "என்னன்னே, குதிரய எங்கண்ணே". "வரும்ல வெயிட் பண்ணுங்க. எல்லோரும் சேர்ந்து தான் புடிக்கணும். ரெடியா இருங்கல" "டேய். அதோ வருதுடா" பீட்டரண்ணன் எங்களை ரெடியா இருக்கச் சொன்னான். அவன் காட்டிய திசையில் வந்து கொண்டிருந்தது.......எங்க ஊர் வண்ணானின்...........கழுதை.

"டேய் இது குதிர இல்லல..குதிர மாதிரி..அட்ஜஸ்ட் பண்ணுங்கள. இந்த தேரி காட்டுக்குள்ள குதிரைக்கு எங்கல போறது " - இது குரு (பீட்டர் அண்ணன்). ஒரு வழியாக கழுதையை நாங்கள் எல்லோரும் சேர்ந்து மடக்கி பிடிப்பதற்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. செமையா ஓட்டம் காட்டியது. ஊரில் எவனாவது பார்த்தால் மானம் போய் விடும் என்பதால் ஊருக்கு கொஞ்சம் தள்ளியே எங்கள் குதிரை ஓட்டும் பயிற்சியை வைத்துக் கொண்டோம். கழுதை பிடிப்பது பார்த்து பிடிக்க வேண்டும். பின்னால போனா நம்ம கேப்டன் மாதிரி Back kick போட்டு தாக்கி விடும். முன்னால போனா கடித்து விடும்.

ஏற்கனவே வண்ணானிடம் பொதி சுமந்து, பொதி சுமந்து நொந்து போன கழுதை, இருந்து இருந்து எங்களிடம் வந்து மாட்ட, அது எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ! . குதிரையை கட்டுப்படுத்த கடிவாளம் இருக்கும். கழுதைக்கு.....பீட்ரண்ணன் ஒரு பம்பர கயிறை எடுத்து கழுதை மூஞ்சியில் கட்டி கையில் பிடித்துக் கழுதை மீதேறி அமர்ந்து கொண்டான். இந்த மாதிரி டெக்னிகல் விசயங்கள் எல்லாம் அவன் அழகாக பண்ணுவான். கயிறும் நல்லாவே ஒர்க் அவுட் ஆச்சு. கழுதை வாயை கட்டினாதால் அது கடிக்கவும் முடியாம போச்சி. நாங்கள் ஒவ்வொருவாரா அவன் பின்னால் ஏறிக் கொள்ள, அவன் சாரதியாக இருந்து ஆளுக்கு ஒரு ரவுண்டு வந்து விடுவான். கழுதையும் இரண்டு பேரை ஏத்திக்கிட்டு நல்லா தான் ஓடிச்சி. கழுதைக்கு ஏதாவது ஆச்சின்னா, இதே கழுதையில வச்சி ஊர்ல ஊர்வலம் விட்டுடுவாங்க என்பதால், அப்போ அப்போ ஊர்ல எவனாவது பாக்கரானான்னு பார்த்துக்கிட்டோம்.

கொஞ்ச நேரம் கழிச்சி, நாங்களே தனியாக சவாரி செய்யலாம் என்று எங்கள் குரு இல்லாமல் ஓட்ட ஆரம்பித்தோம். ஊட்டி கொடைக்கானல்ல எல்லாம் குதிரைன்னு ஒன்ன வச்சி சவாரி போவாங்களே, அதை விட எங்க ஊரு கழுதை அழகாகவே ஓடிச்சி.

என் சுற்றும் வந்தது. என் சுற்று வரும் போது தானா கழுதைக்கு கிறுக்கு புடிக்க வேண்டும். போன ரவுண்டில் கழுதை ஒரு முள் காட்டுக்குள் ஓட, உடம்பெல்லாம் வீர தழும்புகளுடன் திரும்பி வந்த செந்தில் என்னை பார்த்து ஒரு நக்கல் சிரிப்பு சிரித்துக் கொண்டான். "போடா..போ..நானும் பாக்கத்தான போறேன்" என்பது போல இருந்தது. நான் ஏரி உக்காந்ததும், நாசமா போன கழுதை தலைதெரிக்க ஓட ஆரம்பித்தது.....எங்கள் கிராமத்தை நோக்கி....

போன தீபாவளிக்கு இதே கழுதை வாலில் சரவெடி கட்டி வுட்டது, காவோலை (காய்ந்த பனை ஓலை) கட்டிவிட்டு அதை தலை தெரிக்க ஓட வைத்தது எல்லாம் நினைவுக்ககு வந்துச்சி. அப்போது தான் எனக்கு உறைத்தது, கழுதை அதற்கு பழி வாங்க, நம்ம மானத்தை வாங்க முடிவு செய்து விட்டது என்று. நான் பம்பர கயிரை புடிச்சி இழுக்க, என் போதாத காலம், கயிறு அத்து கைல வந்து விட்டது. அது ஓடுன ஓட்டத்துக்கு என்னால கழுதையில இருந்து குதிக்கவும் முடியாம, புடிக்க கயிறும் இல்லாம முழிச்சிக்கிட்டு இருக்க, நேரே கழுதை ஊருக்குள் போய் நின்று விட்டது. ஊர் சனம் எல்லாம் பார்த்து "ஏல! என்னல தப்பு பண்ணுண. கழுதைல ஏத்தி விட்டுருக்காங்க! " என்று சிரிக்க, ஒரே கேவலமா போச்சி. கழுதை வந்த வேலை முடிந்த சந்தோசத்தில், என்னை கீழே தள்ளி விட்டு ஓடியது. ...வண்ணான் வீட்டை நோக்கி.


(தொடரும்)

Sunday, October 16, 2005

பிடித்த பாடல் - S.P.B & வாணி ஜெயராம்

பழைய பாடல்களில் ஒரு சுகம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் S.P.B பாட வந்த புதிதில் ஜெய்சங்கர் படங்களிலும், சிவகுமார் படங்களிலும் தன் இளங்குரலால் பாடிய பாடல்கள் (வேதா போன்ற இசை அமைப்பளர்களின் காலத்தில்) எனக்கு மிகவும் பிடித்தவை. இசையில் தொழில்நுட்பங்கள் அவ்வளவாக வளராத காலத்தில், பாடலின் ராகமும், பாடகரின் குரலுமே பாடலை எடுத்துச் செல்லும். அப்படி இருந்தும், இன்று கேட்டாலும் எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

வாணி ஜெயராம் குரலுக்கு அறிமுகம் தேவை இல்லை. அதெல்லாம் அந்த காலம் என்று ஏங்க வைக்கும் பாடகி. S.P.B -யும் வாணி ஜெயராமும் பாடிய பாடல்கள் நிறைய. அவற்றில் ஒன்று இதோ உங்களுக்காக,

படம் : அவன் அவள் அது
பாடல் : இல்லம் சங்கீதம்..அதில் ராகம் சம்சாரம்..




எனக்கு பிடித்தவைகளில் சில S.P.B & வாணி ஜெயராம் பாடல்கள்:

  1. அன்பு மேகமே இங்கு ஓடி வா..எந்தன் துணையை அழைத்து வா - எங்கம்மா சபதம்.
  2. தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள் - காமாட்சியின் கருனை
  3. இதோ உன் காதலி கண்மணி..இவள் மனம் இனி உனது - சௌந்தர்யமே வருக வருக
  4. ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை..மனம் தாளாமல் துடித்திடும் ஓசை - என்னடி மீனாட்சி
  5. சொர்க்கத்திலே முடிவானது..சொந்தத்திலே நிலையானது - லலிதா
  6. தங்கச்சி பொண்ணு..தங்கச்சி பொண்ணு..தல குனிஞ்சிக்கம்மா - கிழக்கும் மேற்க்கும் சந்திக்கின்றன.

S.P.B & P. சுசிலா பாடல்களை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Wednesday, October 12, 2005

இவர்கள் இந்தியர்கள்

"நாங்கள்லாம் இந்தியாவுல எந்த விதியையும் (Rules) கடைபிடிக்கவே மாட்டோம். எங்க ஊர்ல எதுவுமே உருப்படியாக இருக்காது" - இப்படி இங்கே அமெரிக்கவில் இருக்கும் நம்ம பசங்க தன்னுடன் சிலர், வேலை செய்யும் அமெரிக்கரிடம் சொல்லிக் கொள்வதை நிறைய தடவை பார்த்திருக்கிறேன். ரொம்ப பெருமையாக சொல்லி விட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை கூறியது போல சிரித்து கொள்வார்கள். "டெண்டுல்கர் எல்லாம் ஒரு Player-ஆ" "கமல் எல்லாம் ஒரு நடிகனா?" இப்படி பேசி தன்னை ரொம்ப தெரிந்தவன் போல காட்டிக் கொள்ளும் புத்தி, தாய் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. ஒரு அயல் நாட்டவனிடம் தன் தாய் நாட்டை கேவலமாக பேசுகிறோமே என்று கொஞ்சம் கூட உணர்ச்சியே இல்லாமல் கெக்கே பெக்கே என்று சிரித்து கொண்டிருப்பார்கள்.

இங்கே அமெரிக்காவிலும் அத்தனையும் உண்டு என்று பார்த்திருந்திருந்தும், ஏனோ அப்படி பேசுவார்கள். இங்கேயும் மாலையில் வாகன நெரிசலில் எத்தனையோ பேர் சாலையை விட்டு கரையில் வண்டியை ஓட்டி செல்கிறார்கள் (அங்கு வண்டியை ஓட்டக் கூடாது என்று விதி இருந்தும்). அதற்கு மேல் போக பாதை இல்லை என்றதும் சாலைக்குள் வர, முன்னேறி போறவனையும் போக விடாமல் தங்கி கொண்டிருப்பார்கள். எல்லா கண்ராவியும் இங்கேயும் உண்டு. தெருவுக்கு தெரு பிச்சை காரர்கள் இங்கேயும் உண்டு. "Hey! Man! U have a dollar change" - என்று கேட்கும் கருப்பண்ணன். பாலத்திற்க்கு அடியில் தூங்கி விட்டு, "Homeless! Hungry! Help Please! God Bless You" என்று சோம்பேறித்தனமாக அட்டையை வைத்துக் கொண்டு சிக்னலில் பிச்சை எடுக்கும் வெள்ளையன். தாளமே இல்லாமல் ஒரு கொட்டை வைத்துக்கொண்டு "டண்ட நக்கர" என்று தட்டிக் கொண்டு தட்டு ஏந்தும் கருப்பண்ணன். இப்படி இந்த சின்ன ஊரிலேயே என்னால் 100 பிச்சை காரர்களை காட்ட முடியும். தொலை தூரம் போகும் பஸ்ஸில் இடம் கிடைக்காது என்று தெரிந்ததும் இடத்திற்க்காக அடித்து கொள்ளும் அமெரிக்கர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதற்க்காக நான் அமெரிக்காவை குறை சொல்ல வில்லை. எல்லா நாட்டிலும் எல்லாமும் இருக்கிறது என்றே சொல்கிறேன்.

அமெரிக்காவிலும் எல்லா ஒழுங்கும், எல்லாம் தனக்கு தாராளமாய் கிடைக்கும் என்பது வரைக்கும் தான். ஏனோ! எதற்க்கெடுத்தாலும் "அமெரிக்காவை பார்! ஜப்பானை பார்!" என்று பாடம் நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள் ( என்னடா 'அன்னியன்' -அ பத்தியான்னு நினைக்காதீர்கள். இது வேற).

இந்த பதிவை நான் போட காரணமே "கிழட்டு அனுபவங்கள்" என்று ராஜசேகரன் எழுதிய பதிவினால் தான். ஏதோ பெரிய மேதாவி போல் " தலை கீழாக நின்றாலும் இந்தியாவால் சீனாவின் வளர்ச்சியில் பாதியைக் கூட எட்ட முடியாது." "இதைச் சொல்வதற்கு எனக்கும் சங்கடமாகத்தான் இருக்கின்றது. ஆனால் உண்மை என்று ஒன்று உள்ளது இல்லையா? " என்று சொல்லியிருந்தார். சரி, அது அவரது அபிப்பிராயம் என்று என்னால் ஒதுக்க முடியவில்லை. இது ஏதோ குஷ்பு மேட்டரும் இல்லை, "பெண் சுதந்திரம்" மேட்டரும் இல்லை.

ஐயா! மேதாவியே! அயல்நாட்டிலேயே குடியுரிமை பெற்று அங்கேயே சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கும், தங்களுக்கு என் தாய் நாட்டை பற்றி என்ன நக்கல்?. அயல் நாட்டுக்கு போங்கள். நன்றாக சம்பாதியுங்கள். முடிந்தால் தாயகம் திரும்பி வாருங்கள். இல்லை "சூழ்நிலை" காரணமாகவோ, இல்லை "இந்தியா உங்களுக்கு வாழ தகுதியற்ற நாடு என்று நீங்கள் நினைத்தாலோ" அங்கேயே குடிமகனாகி விடுங்கள். அதில் தப்பேதும் இல்லை. அது அவன் அவன் விருப்பம்.

ஆனால், அயல் நாட்டின் குடியுரிமை வாங்கி கொண்டு, பொழுது போகவில்லை என்றால் வருடத்திற்க்கு ஒரு முறை இந்தியா வந்து விட்டு இந்தியா பற்றி எகத்தாளம் பேசாதீர்கள். ஏதோ ஒரு A/C அறையில் உட்கார்ந்து கொண்டு, ஓசியில் ஒரு இனையம் கிடைத்ததும் உங்கள் புண்ணாக்கு மேதாவி தனத்தை "இந்தியா ஒரு போதும் முன்னேற போவதில்லை" "நான் சீனா போயிருக்கிறேன்" "ஜப்பான் போயிருக்கிறேன்" என்று கேணத்தனமாக பேசாதீர்கள். நீங்கள் வேறு நாட்டை பற்றி உயர்வாக தாராளமாக பேசுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் ஏன் எதற்க்கெடுத்தாலும் இந்தியாவை இழுக்கிறீர்கள். நீங்கள் வந்து இறங்கியவுடன் பளிங்கு போல சாலையும், பல்லக்கு போல காரும் இருந்தால் தான் அது உங்களுக்கு வளர்ந்த இந்தியாவாக தெரியும் என்றால், அது உங்கள் தவறு.

தன் வேலையை விட்டு அடுத்தவர் பசி போக்க உழைத்து கொண்டிருக்கும் இந்த மதுரை இளைஞரும் இந்தியாவில் தான் இருக்கிறார்.

ஏழை மாணவிக்காக பணம் சேர்த்து கொடுத்து சந்தோசமாக இருக்கிறது என்று சொல்லும் இந்த டோண்டு ராகவனும், பாலாவும் இந்தியாவில் தான் இருக்கிறார். முட்டி அளவு சென்னை மழை நீரில் செருப்பை கையில் பிடித்துக் கொண்டு சென்றதாக கூறும் இவர்கள், அதற்க்காக 'இந்தியா முன்னேறாது' என்றா சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நோக்கம் ஒரு ஏழை மாணவிக்கு உதவுவது. அது அவர்களின் நல்ல எண்ணம்.

தன்னால் முடிந்த கல்வியை ஏழை மாணவர்களுக்கு கற்று கொடுக்க, நேரம் ஒதுக்கி, இந்தியா முன்னேற வேண்டும் என்று இருக்கும் இவர்களும் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். இவர்களின் கனவு இது தான்.

இவர்கள் திரு. அம்பானியோ. டாட்டாவோ கிடையாது. நம் ஒருவரால் என்ன மாற்றம் கொண்டு வர முடியும் என்று சப்பை கட்டுபவர்களுக்கு மத்தியில், சாதாரண மக்களாய் இருந்து தன்னால் முடிந்தவற்றை தன் தாய் நாட்டுக்கு செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரிடம் கேட்டால், இந்தியா "சீனா மாதிரியோ! அமெரிக்கா மாதிரியோ" ஆக வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள். "நான் நன்றாக இருக்கிறேன். என்னால் என் தாய் நாட்டுக்கு, என் மக்களுக்கு முடிந்ததை செய்வது என் கடமை " என்று தான் சொல்வார்கள். இவர்கள் சாலை உடைந்து கிடந்தாலும், தன்னால் ஒரு கல்லை எடுத்து போட முடியுமா என்று பார்ப்பார்கள். இந்தியாவில் எதுவுமே சரியில்லை என்று உம்மை போல சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். இப்படிப் பட்ட இவர்களின் இந்தியாவிற்க்கு, உம்மை போன்றவர்களின் பரிதாபமோ, கரிசனமோ தேவை இல்லை.

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் தெரிந்தவன் மனிதன்.

இருப்பதை சிறப்பாக்க முயற்ச்சி செய்து கொண்டிருக்கும் இவர்கள் இந்தியர்கள்.

இவர்களுக்கு (இந்தியர்களுக்கு) உங்கள் புண்ணாக்கு அனுதாபம் தேவை இல்லை.

பரபரப்பாக எழுத வேண்டும் என்றால் "பெண் விடுதலை" "கற்பு" "ஆண் ஆதிக்கம்" என்று எழுதுங்கள். கேணத்தனமாக எதற்கெடுத்தாலும் இந்தியாவை இழுக்காதீர்கள்.

அன்புடன், சிவா.

Saturday, October 08, 2005

சூப்பர் ஸ்டார் - S.P.B பாடல் - ரசித்த பாடல் -1

பாடலுக்கு முன் கல்லூரி முதலாமாண்டு நடந்த ஒரு சின்ன சம்பவம்.
நம்ம அறை நண்பர் வேலு கும்பகர்ணன் தம்பி என்பதால், தூக்கத்தில் பொளந்து கட்டுவான். சுத்தி என்ன நடக்குது. எப்போ தூங்கினோம், எப்போ முழிக்கிறோம் என்பது கூட தெரியாமல் தூங்குவான். ஒரு நாள் எதோ ஒரு வகுப்பு இல்லாமல் போக, மதியமும் வகுப்பு இல்லை என்பதால், வந்தவுடன் கட்டையை சாய்த்து விட்டான். நான் மதியம் துணி எல்லாம் தொவைச்சி குளிச்சி மாலையில் அறையில் உக்கார்ந்து இருந்தேன். மாலையில் எழ போகும் நண்பரை கொஞ்சம் கலாய்க்கலாம் என்று, எழுந்தவுடன் "என்னடா! நாயே! இப்படி தூங்கிட்ட! வகுப்புக்கு நேரமாச்சுடா. ஏண்டா மனுசன்னா இப்படியா தூங்குவான். நேத்து தூங்கி, இன்னைக்கு காலைல எழுந்திருக்கிறே! " என்றேன். சாயங்காலம் என்பதால் வேலுக்கு சூரியன் மறையுதா, உதிக்குதான்னு கொஞ்சம் குழப்பமாயிடுச்சு!. தவிர நான் வேற குளிச்சி விபூதி பட்டையெல்லாம் அடிச்சு இருந்தேனா, விடிஞ்சிடுச்சு போலன்னு நம்பிட்டான்.

மட மடன்னு ப்ரஷ்ல பேஸ்ட வச்சி பல்ல வெளக்கிகிட்டே குளிக்க பக்கட்டையும் எடுத்துக்கிட்டு பாத் ரூம் கெளம்பிட்டான். அங்கே எவனும் இல்லாததை பார்த்து வேலுக்கு சந்தேகம் வந்து விட்டது. உடனே பக்கத்து அறைல போய் பசங்க கிட்ட சூரியனை காட்டி
" டேய்! இப்போ விடியுதா! இருட்டுதா!" ன்னு கேட்க செம காமெடியாச்சு.

நேற்று ஒரு பாடல் கேட்டுக் கொண்டிருந்தேன். "போக்கிரி ராஜா' படத்தில் இருந்து S.P.B அலம்பி தள்ளிய பாடல். சில பாடல்கள் S.P.B மட்டுமே பாடமுடியும். அதுவும் இந்த மாதிரி பேசி கதை சொல்லிக் கொண்டே பாட அவரை விட்ட வேற ஆளு கிடையாது. அதில் வரும் "சந்திரனா சூரியனா சரியாய் நீ சொல்லு" வரியை கேட்டதும் என் கல்லூரியில் நடந்த மேலே சொன்ன சம்பவம் நினைவுக்கு வந்தது.

இந்த பாடலை கேட்டு சந்தோசமா இருங்க. (பாடலுக்கு கீழே).

பாடல்:






கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு
மனுசன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு
ஐயா மேலே சாமி வந்து ஆடும்
சும்மா கேளு ஜோசியமே கூறும்

அந்திபட்ட நேரத்தில சந்திரன ஒருத்தன் பார்த்தான்
அவன் கூட வந்தவனும் சூரியன் தான் அதுன்னான்

சந்திரனா சூரியனா சண்ட வந்து சேர்ந்ததய்யா
இந்த நேரம் பார்த்து..எதுத்தால ஒரு மனுசன் தலைகீழா

தள்ளாடி தள்ளாடி தல கீழா நடந்து வந்தான்
சண்டையிட்ட ரெண்டு பேரும் சாட்சியா அவன வச்சி
சந்திரனா சூரியனா சரியாய் நீ சொல்லு என்னான்..
எனக்கொன்னும் தெரியாது நா வெளியூருன்னு பூட்டான் அவன்

என்ன தான் போட்டாலும் நிதானம் தான் தப்பாது
இடுப்பு வேட்டி மட்டும் நிக்காதையா
கன்னியை தாயென்பேன் கிழவியை கன்னி என்பேன்
கன்ரோலு கொஞ்சம் கூட கொறையாதையா
அட மீன் செத்தா கருவாரு நீ செத்தா வெறும் கூடு
யாரு பெரியவன்டா டேய் தம்பி

கடவுள்...

ஒரு பெண்ண பார்த்தேன்.. என்னம்மா கல்யாணம் ஆச்சான்னே..
ஆகலன்னா.. குழந்த குட்டி இருக்கான்னே...குடுத்தா பளார்னு
நா விடுவேனா.. அடுத்த பெண்ண பார்த்து
முன்கூட்டியே குழந்த குட்டி இருக்கான்னே
ஆமா! ரெண்டு கொழந்த இருக்குன்னா...
அப்புறம் தான்.. கல்யாணம் ஆச்சான்ன்னு கேட்டேன்..
அன்னைக்கு தான் தங்க பல்லு கட்ட அவசியம் வந்தது.

விஸ்கிய போட்டேன்னா இங்கிலிசு பாட்டெடுப்பேன்
சாராயம் உள்ளே போனா தமிழ் பாட்டு.
கள்ள குடிச்சேன்னா நாடோடி பாட்டு வரும்
கல்லுக்கும் டான்சு வரும் அத கேட்டு.
அட ஆகாயம் கால் மேலே...பூலோகம் கை மேலே
ஆடி காட்டுகிறேன் வா நைனா..


கடவுள்...

Thursday, October 06, 2005

சனங்களே ! நாங்க படம் போட போறோம்..

எங்கேடா படம்னு கேக்காதீங்க. இது நாங்கள் ஊரில் சின்ன வயசில் ஊர்மக்களுக்கு உண்மையிலேயே காட்டிய படம் பற்றியது. அப்போதெல்லாம் ஊரில் டி.வி என்பதே கிடையாது. படம் பார்க்க வேண்டுமென்றால் ஊரில் உள்ள ஒரு ஓட்டை தியேட்டரை விட்டால் வேற போக்கு கிடையாது. ஊத்திக்கிட்ட படம் என்றால் எப்படியும் ஒரு வருடத்திற்க்குள் வந்துவிடும். சூப்பர் ஹீட் படம் என்றால் இரண்டு வருடம் காத்திருக்க வேண்டும். எங்காவது கோவில் கொடை என்றால் திரைப்படம் போடுவார்கள். சுத்துப்பட்டு 18 கிராமத்திலிருத்தும் மக்கள் பாய், தலையனையோடு கிளம்பிவிடுவார்கள். அப்படி என்ன படம் போடுவார்கள் என்று கேட்கறீர்களா?. கொஞ்ச நஞ்ச புதுசு இல்லை.. அப்படி புது படமாக போட்டு தள்ளுவார்கள்.. "வணங்கா முடி" "தூக்கு தூக்கி" "மன்னாதி மன்னன்"..இதற்க்கு புதிதாக பார்த்ததாக எனக்கு நியாபகம் இல்லை. ஒரு இத்து போன ரீலை கொண்டு வந்து படுத்தி கொண்டிருப்பார்கள். அதுவும் அத்து அத்து.. 21 ரீல் படம் 210 ரீலாக ஓடிக்கொண்டிருக்கும்.

இதிலிருந்து எங்களை காப்பாத்த வந்தது தான் " டி.வி-டெக் வாடகைக்கு" என்று முளைத்த கடைகள். கிராமமே ஆவலோடு எதிர்பார்க்க ஒருநாள் டி.வியும் டெக்கும் (அதாம்பா VCR) ஒரு ப்ளசர் காருல வந்துச்சி (அம்பாசிடர் கார்). டெக்கையும் கேசட்டையும் பார்க்க எல்லாருக்கும் ஒரெ ஆச்சரியம். கோவிலுக்கு தேங்காயெல்லாம் உடைச்சி படத்தை ஒரு 10 மணிக்கு ஆரம்பிச்சாங்க. அப்போவெல்லாம் அந்த ஓட்டை தியேட்டருல இரவு இரண்டாம் ஆட்டம் ஆரம்பித்தவுடனே தான் ஊர்ல எல்லாம் படம் போடணும்னு ஒரு சட்டம் இருந்துச்சு. முதல் ரெண்டு படங்கள் 1. சம்சாரம் அது மின்சாரம். 2.நம்ம ஊரு நாயகன் (யாருன்னு கேக்கறீங்களா...நம்ம ராமராஜன் தான்).

அப்புறம் கல்யாண வீடு, சிவராத்திரி என்று எல்லாவற்றுக்கும் படம் போட்டு விடுவார்கள். ரெண்டு மூனாகி நாலாகி ஐந்து படமாகி நின்றது. சாயங்காலம் 6 மணிக்கே ஆரப்பித்து விடுவேம். காலை 7 மணி வரை மராத்தான் மாதிரி படம் பார்ப்போம்.

பொழுது போகவில்லை என்றால் பசங்க எல்லாம் சேர்ந்து ஒரு நோட்டையும் போனாவையும் எடுத்துக்கிட்டு வீடு வீடாக படம் போடுகிறோம் என்று காசு பிரிக்க கிளம்பி விடுவோம். மொத்தமே ஊரில் 40 வீடு தான். "ஏல ! உங்களுக்கு வேற வேலை இல்லையா. போங்கல !" பாதி வீட்டுல இருந்து இப்படி தான் பதில் வரும். பக்கத்து வீட்டு பாட்டி ஒரு 5 ரூவா கொடுத்துட்டு "ஒரு எம்.ஜி.ஆர் படம் போடுங்கல என்பார். ஆளுக்கு ஒரு படம் என்று ஒரு 20 படம் பட்டியலில் சேர்த்து விடும். காசுக்கு ஏத்த மாதிரி ரெண்டு படமா மூனு படமான்னு முடிவு செய்து படம் தேர்வு செய்ய முடிவு பண்ணுவோம். இங்கே தான் ரொம்ப ரொம்பா கவனமாக இருக்க வேண்டும். இடக்கு மடக்கா படத்த எடுத்துட்டு வந்து போட்டா, வெட்டு குத்தாயிடும். சனங்களுக்கு ஒரு படம் என்றால் இப்படி இருக்க வேண்டும்.

1. படம் கிராமத்து படமாக இருக்க வேண்டும். ஒரு நாட்டாமை இருந்தால் நல்லது. கொறைஞ்சது ஒரு பண்ணையாராவது இருக்க வேண்டும்.

2. சாமி படம் பரவாயில்லை. ராமநாராயணன் படம் என்றால் அசத்தி விடலாம். பேபி ஷாம்லி, பாம்பு, கொரங்கு இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்யலாம்.

3. காதல் இருக்கலாம். ஆனால் ஒரே காதல் புராணமாக இருக்க கூடாது (காதல், இதயத்தை திருடாதே மாதிரி).

4. துப்பாக்கியை வைத்து டுமீல் டூமீல் என்று எடுத்ததெற்க்கெல்லாம் சுட்டுக்கொண்டிருக்க கூடாது. வேண்டுமென்றால் அருவாளால் வெட்டி கொள்ளலாம்.

5. ரொம்ப விவரமாக பேசுவதாக நினைத்து கொண்டு முக்கி முனகி அத்து அத்து பேச கூடாது (மணிரத்னம் படம் மாதிரி). சொல்ல வந்ததை நேராக தெளிவாக பேச வேண்டும்.

6. 'மன்மத ராசா' மாதிரி குத்தாட்டம், 'உம்மா..உம்மம்மா' மாதிரி கெட்ட ஆட்டம் எல்லாம் இருக்க கூடாது. வேண்டுமென்றால் 'ஒத்த ரூவா' பாட்டு மாதிரி கரகாட்டம் ஆடி கொள்ளலாம்.

7. ஒளிப்பதிவு நல்ல வெளிச்சமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் "ஏண்டா. நாசமா போனவனுங்களா. இந்த கண்ணு எழவு வேற சரியா தெரிய மாட்டேங்குது. என்னல படம் எடுத்துட்டு வத்தீங்க" அப்படின்னு பாட்டியின் பட விமர்சனம் உடனே கிடைக்கும்.

8. கமல்/மணிரத்னம் படம் சுத்தமாக ஆகாது. அப்படி ஒரு அலர்ஜி.

9. கதை புரட்ச்சிகரமாக இருக்க கூடாது .(எங்க ஊரு பாசையில கேனத்தனமா இருக்க கூடாது). உதாரணமா பாலசந்தர் படங்கள் ( கல்கி).

10. "A" ரக படங்கள் ( "உள்ளே வெளியே" "நியூ" ரகங்கள்) தெரியாதனமா போட்டுட்டா படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, ஊர் சனம் மொத்தமும் எங்களை வஞ்சிக்கிட்டு இருக்கும். "செம்பருத்தி" வந்த புதிதில் ஊரெ 'ரோசா..ரோசா' அப்படின்னு புலம்பிக்கிட்டு கெடக்க, நாங்களும் சரி நாங்களும் என்னதான் அது ரோசான்னு பாக்க படத்தை எடுக்க, ரெண்டு பாட்டு ( "பட்டு பூவே" , "சலக்கு சலக்கு சேல" ) எங்க இமேஜ சுத்தமாக காலி பண்ணி விட்டது. "ஏல ! மதி கெட்ட மூதி (மூதேவி என்பதன் சுருக்கம்) ! படமால எடுக்கறீங்க. காசுன்னு அடுத்த தடவை வாங்க பாத்துக்கறேன்" - 5 ரூவா கொடுத்துட்டு பாட்டி பொரிந்து தள்ளிவிட்டார் .

மேலே சொன்ன விதிகளை மீறாமல், மொத்தமாக ஓட்டை அள்ளிக்கொண்டு வருபவர்கள் கொஞ்ச பேர் தான். ராமராஜன் படங்கள், இயக்குநர் விக்ரமன்/ஆர்.வி.உதயக்குமார் படங்கள், இராம. நாராயணன் படங்கள். கிட்டத்தட்ட எல்லா ராமராஜன் படங்களும் போட்டிருப்போம். இப்படியே பார்த்து பார்த்து, உண்மையிலேயே டவுசர் ராமராஜன் ஒரு நாள் நேரிலேயே வந்து ஓட்டு கேட்க, இந்த ஜனங்களும் ராமராஜனை எம்.பி ஆக்கி சந்தோசப்பட்டது.

இந்த இலக்கணங்களை எல்லாம் மீறி ஒரு நடிகையின் படம் ரெகுலராக எல்லா "திரைப்பட விழா" விலும் இடம் பெறும். அது அடிதடி மன்னி விஜயசாந்தி படம். அதற்க்கு காரணம், துரை மாமா தான். வீட்டில் அத்தையிடம் படாத பாடு படுவார் போல. விஜயசாந்தி படம் போட்டாத் தான் படம் போடவே அனுமதி கொடுப்பார். ஊர் பெரிய மனிதர் கும்பலில் மாமாவும் ஒருவர் என்பதாலும், நாங்களும் குடும்ப படமா பார்த்து ஓய்ந்து போய் விட்டதாலும், நாங்களே ஒரு விஜயசாந்தி படம் எடுத்து விடுவோம்.

இப்ப்டியெல்லாம் போய்க்கிட்டு இருந்த ஊர் சனங்க சந்தோசத்துல மண் அள்ளி போட வந்தது தான் கேபிள் டி.வி. ஓட்டை தியேட்டருக்கும், எங்கள் பட விழாவுக்கும் சுத்தமாக மூடு விழா நடத்தி விட்டது. சனங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்து சீரியலை பார்த்துக்கிட்டு அழுதுக்கிட்டு இருக்காங்க. ஒரு படம் பார்த்தாலும் அவ்வளவு சந்தோசமா இருக்கும். இப்போ 100 சேனல் வந்தாலும், அந்த திருப்தி இல்லையே! காசு பிரிப்பதில் இருந்து படம் போட்டு முடிக்கும் வரை எத்தனை சுவாரஸ்யங்கள்.. ம் ம் ம் ம்.... அந்த காலம் எல்லாம் போச்சு !

Tuesday, October 04, 2005

பூவேறு கோனும் - பொருள்

இளையராஜாவின் 'திருவாசகம்' இசை தொகுப்பில் 3 வது பாடலாக வரும் 'பூவேறு கோனும்' திருவாசக பாடலின் பொருளை கீழே உள்ள சுட்டியில் இருந்து இறக்கி கொள்ளுங்கள். 6 பாடல்களிலேயே இந்த பாடல் மிகவும் எளிமையான இனிமையான பாடல். இது நண்பர் குமரன் என் போல் சில நண்பர்களுக்காக எழுதி கொடுத்தது. தமிழ் தட்டச்சு மட்டுமே நான். நான் முன்பே சொன்னது போல், ஒரு முறை இந்த பொருளை படித்து விட்டு பாடலை கேட்டு பாருங்கள்.

பூவேறு கோனும்

மறக்காமல் SaiIndira Font-ஐ இங்கே இருந்து இறக்கி கொள்ளுங்கள் (முதல் தடவை மட்டும்). ( Copy to your C:\Windows\Fonts folder).

நண்பர் குமரன் புதிதாக இரண்டு (அபிராமி அந்தாதி ; விஷ்ணு சித்தர் ) ப்ளாக்குகள் ஆரம்பித்துள்ளார். விரைவில் தன் எண்ணங்களை பதிய பொதுவாக ஒரு ப்ளாக்கும் ஆரம்பிக்கவுள்ளார். வாருங்கள் குமரன், உங்கள் நல்ல தமிழில் பதிவுகளை எதிர்ப்பார்க்கிறோம்.

மகாத்மா காந்தி - பாடல்கள்


'மகாத்மா - மகாகவி' பதிவை பார்த்து விட்டு வினதா அக்கா 'டேய் ! இந்த ரெண்டு பாடலையும் போடுடா " அப்படின்னு எனக்கு அனுப்பி இருந்தார்கள். நண்பர் குமரனும் அந்த பாடல் கிடைத்ததா என்று விசாரித்தார். சரி, நல்ல பாடல் தான் போல என்று , நேயர் விருப்பமாக இங்கே போடுகிறேன். ஒன்று ஹிந்தி பாடல், ஒன்று சமஸ்கிருதம் என்று நண்பர் சொன்னார். நமக்கும் ஹிந்திக்கும் ஜென்ப பகை என்பதால் (சுத்தம் :-) ), இந்த இரு நண்பர்கள் போல சில பேர் கேட்டு மகிழ்வார்கள் என்ற நம்பிக்கையில் பாடல்கள் இதோ...

Hari -Tum- Haro (MSS)


Maitrim bhajata


Sunday, October 02, 2005

மகாத்மா காந்தி - மகாகவி


நம் தேசப்பிதா மகாத்மாவை மகாகவி போற்றி பாடிய பாடல் காந்தி ஜெயந்திக்காக...

வாழ்க நீ எம்மான் ! இந்த
வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மகாத்ம ! நீ வாழ்க ! வாழ்க !

பொருள்:

வாழ்க நீ எம்மான் - எங்கள் தலைவனே ! நீ வாழ்க
இந்த வையத்து நாட்டில் எல்லாம் - இந்த உலகத்தில் உள்ள நாடுகளில் எல்லாம்
தாழ்வுற்று - கீழான நிலைமை அடைந்து
வறுமை மிஞ்சி - வறுமை மிகுந்து
விடுதலை தவறி - விடுதலை இழந்து அடிமையுற்று
கெட்டு பாழ்பட்டு
நின்ற தாம் ஒர்
பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்ம !
நீ வாழ்க ! வாழ்க !

( நண்பர்களே! கடைசி வரியில் மகாத்ம என்று குறிலில் தான் பாரதி முடிக்கிறார். எழுத்து பிழை என்று எண்ண வேண்டாம்)

இந்த பாடலை நண்பர் குமரன் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு எனக்கு அனுப்பி இருந்தார். அதை அப்படியே போட்டாச்சு (அவரிடம் சொல்லி விட்டு தான்!). எளிதான பாடல் தான், என்னை போன்ற தமிழ் அறிவாளிகளுக்காக பொருளையும் சொல்லி விடுவார். நன்றி குமரன்.

நண்பர் குமரன் விரைவில் ஒரு ப்ளாக் ஆரம்பிக்க என்னிடம் விவரம் கேட்டுள்ளார். விரைவில் பக்தி, இலக்கியம் என்று நல்ல தமிழில் ஒரு ப்ளாக்கை எதிர்ப்பாக்கலாம்.

Friday, September 30, 2005

கிளி ஜோசியம் - 1

ஒரு ப்ளாக்கில் நண்பர் ஒருவர் குமுதம் ஜோசியம் பற்றி கூறியிருந்தார். சரி ! என்ன தான் போட்டிருக்குன்னு போய் பாத்தா...செம காமெடிப்பா. இப்பொவெல்லாம் டி.வி-ல காலைலயே ஆரம்பிச்சுடறாங்க. "இன்னைக்கு உனக்கு சனி. நாசமா போய்டுவே..நீ செய்ற காரியம் எதுவும் உருப்படாது" - இப்படி போகும். அப்புறம் நாள் வெளங்குனது மாதிரி தான். அது தவிர சில கோஷ்டி கலர் கலரா கல் விக்க ஆறம்பிச்சுடுது. அப்புறம் என்ன..மஞ்ச கலரு ஜிங்கிச்சா...பச்ச கலரு ஜிங்கிச்சா தான். காசு வர ஒரு கல்லு.. கல்யாணம் ஆக ஒரு கல்லு...மக்களும் கலர் கலரா கைல போட்டுக்கிட்டு கலக்க தான் செய்றாங்க. ஆனா ஒன்னும் உருப்பட தான் மாட்டேங்குது.

இன்னொரு கும்பல் அம்மா அப்பா ஆசையா வெச்ச பேரை மாத்த சொல்லி காசு பாத்துக்கிட்டு இருக்கு. "உங்க பேருல முன்னாடி ஒரு கால போட்டு ( துனை எழுத்து ) பின்னாடி ஒரு கைய போட்டா...வாழ்க்கையில எங்கேயோ போய்ருவீங்க" - இப்படி போகும் உரையாடல்.

இந்த கும்பல் எல்லாம் ஒரே மாதிரி விபூதி பட்டையை அடித்து கொண்டு பக்தி பழமாக இருக்கும். மக்கள் அப்போ தான் நம்புவாங்களாம்.

இதெல்லாம் பெரிய பட்ஜெட் ப்ராஜெக்ட். கிராமத்துல பாத்தீங்கன்னா சின்ன பட்ஜெட்ல சின்னதா ஒரு கிளி (இல்லன்னா எலி), ஒரு பத்து சாமி படம் வச்சு சில பேரு காலத்த ஓட்டிட்டு இருப்பாங்க. கிளியும் அது பாட்டுக்க கொடுக்கற பொறிகடலைய கொறிச்சிக்கிட்டு, தொறந்து விட்டா அதுக்கு புடிச்ச படத்தை எடுத்து கொடுக்கும். அனுமார் படம் எடுத்திச்சுன்னா, அது என்னை கொரங்குன்னு நினைச்சுட்டுன்னு அர்த்தம். ரெண்டு பொண்டாட்டியோட முருகர் வந்தா , அது என் பொண்டாட்டிக்கிட்ட அடி வாங்கி கொடுக்க முடிவு பண்ணிடுச்சுன்னு அர்த்தம்.

இன்னொரு கும்பல் நீங்க திருச்செந்தூர் போனீங்கன்னா பாக்கலாம். ஹாரி பாட்டர் படத்துல கொளந்தைங்கல்லாம் கைல ஒரு குச்சி வச்சிக்கிட்டு பூச்சாண்டி காட்டுமே, அதே மாதிரி குச்சி வச்சிக்கிட்டு குறி சொல்ல (குழி பறிக்க) சுத்திக்கிட்டு இருக்கும். ஏற்கனவே சந்தணம் தடவிய திருச்செந்தூர் மொட்டையில் மொளகா அரைக்க ரெடியா இருப்பாங்க. " 5 ரூவா தான் சாமி. கோவில்ல வந்து இல்லன்னு சொல்ல கூடாது சாமி" இப்படி சாமி எல்லாம் பலமாக இருக்கும். அழகாக ஆரம்பிப்பார்கள் - "ராசா நீ ! ஊரு மெச்ச வாழ்பவன் நீ ! உன் மனைவி மக்கள் எல்லாம் நல்லாருக்கும்" . கடைசில வரப்போகும் தோசம் மேட்டர் தெரியாம பார்ட்டி சந்தோசமா தலையை ஆட்டி ஆட்டி கேட்டுக்கிட்டு இருக்கும். "உனக்கு ஒரு தோசம் இருக்கு ராசா. அதுக்கு நீ பரிகாரம் பண்ணனும் ராசா. இல்லன்னா உனக்கு அது நல்லதுல்ல ராசா. நானே அதை பண்ணி தறேன் ராசா. ஒரு 100 ரூ ஆகும் ராசா" - கல்கத்தா காளி, மாரி என்று நம்மை பயம் காட்ட எல்லோரையும் துனைக்கு அழைத்து கொள்வார்கள். வேணாம்னு சொல்லவும் முடியாம், கோவிலுக்கு வந்து பணத்தையும் நிம்மதியையும் தொலைத்து விட்டு செல்வார்கள்.

(தொடரும்...)


Thursday, September 29, 2005

பூவார் சென்னி மன்னன்


இளையராஜாவின் 'திருவாசகம்' வந்த புதிதில் எனக்கு அதில் உள்ள இசை பிடித்திருந்தது. ஆனால் பாடலின் பொருள் அவ்வளவாக புரியவில்லை. எதோ சிவனை போற்றி பாடப்படுகிறது என்று தெரிகிறது, ஆனால் முழு பொருளும் புரியவில்லை. B.Sc முதலாமாண்டில் இரண்டாவது செமஸ்டரில் 3 கணித பாடத்திலும் சேர்த்து 94 % எடுத்ததற்க்காக தமிழ் ஆசிரியர் என்னை கூப்பிட்டு பாராட்டிவிட்டு தமிழில், ஆங்கிலத்தில் என்ன என்று கேட்டார். நானும் பாசாகிட்டேன் சார் என்று 35 , 36 என்றேன். காரி துப்பிவிட்டு சென்றார் (ஆங்கிலத்தில் 1 மார்க் அதிகம் எடுத்த கோபம் அவருக்கு). இப்போது இந்த இளையராஜாவால் மறுபடியும் தமிழ் படிக்க வேணடியதா போச்சு.


அங்கே, அங்கே சில பாடல்களுக்கு பொருள் கிடைத்தது, ஆனால் முழு பாடலுக்கும் கிடைக்கவில்லை. அந்நேரம் கிடைத்தவர் தான் எனது நண்பர் குமரன். நம்ம மரமண்டைக்கு ஏறும் வகையில் தினமும் ஒரு அடிக்கு பொருள் எழுதி தருகிறேன் என்றார். தன் வேலைகளுக்கு இடையே எனக்காக எழுதி கொடுக்கவும் ஒரு மனம் வேண்டும். இப்போது 4-வது பாடல் எழுதி கொண்டு இருக்கிறார்.

திருவாசகத்தில் ஒவ்வொரு பாடலும் ஒரு பொருளை கொண்டு வரும். 'பூவார் சென்னி மன்னன்' பாடல் 'வாருங்கள் ! இறைவனை நோக்கி செல்வோம்' என்று ஒரு நடைபயணம் போல என்பது போல எல்லா பாடல்களும் வரும். அதற்கு ஏற்றார் போல் இசையும் ஒரு Marching போல செல்லும். "பூவேறு கோனும்" பாடலில் ஒரு தும்பி வாயிலாக இறைவனின் புகழ் பாடப்படும்.

பொருள் புரியாமல் கேட்டதை விட, திருவாசக பாடல்கள், பொருள் புரிந்து கேட்க்கும் போது பல மடங்கு ரசிக்க முடிந்தது. பூவார் சென்னி மன்னன் பாடலின் பொருளை கீழே உள்ள சுட்டியில் இருந்து இறக்கி கொள்ளுங்கள்.

முதலில் மறக்காமல் SaiIndra Font-ஐயும் இங்கே இருந்தது இறக்கிக்கொள்ளுங்கள். இது அழகி மென்பொருளை கொண்டு எழுதியது. ( யுனிகோடில் சரியாக எனது கணிணியில் வரவில்லை). ( Copy to your C:\Windows\fonts folder)

ஒரு முறை முழுவதும் வாசித்து விட்டு பாடலை கேட்டு பாருங்கள். முழு இசையையும் உணர்வீர்கள்.

பூவார் சென்னி மன்னன்

இந்த Document-ல் எதாவது எழுத்து பிழை இருந்தால் சுட்டி காட்டுங்கள். திருத்தி கொள்கிறேன். தமிழ் தட்டச்சுக்கு நான் புதிது.

பின்னணி இசை-1 பாரதி

நேற்று cinesouth-ல் சந்திரமுகி படத்தின் பின்னணி இசை ஒலித்தட்டாக வருவதாக ஒரு செய்தி பார்த்தேன். வரவேற்க்கதக்க ஒன்று.

என்னிடம் இருக்கும் இந்த பாரதி படத்தின் பின்னணி இசையையும் கேட்டு பாருங்கள்.

பாரதி, இளைராஜாவின் இசை தாலாட்டு. அத்தனை பாடல்களுமே அருமை. பாரதி வெளிவந்து தேவி திரையரங்கு 40 நாள் ஓடிக்கொண்டிருக்கும் போது, படம் பார்க்க சென்று 'ஹவுஸ்புல்' என்று திருப்பி வந்தேன் (பகல் காட்சி மட்டும் ஒடியது). ரொம்ப மகிழ்ச்சியோடு திரும்பி வந்தேன், படம் ஓடுகிறதே என்று. அந்த படத்தில் வரும் அத்தனை பின்னணி இசையுமே அருமை. இதோ உங்களுக்காக....பிடித்திருந்தால் சொல்லுங்கள்.

1. பாரதி கல்கத்தாவில் மக்களின் மூடநம்பிக்கைகளை பார்த்து மனம் வெதும்பி தனது சடை முடி எடுத்து விட்டு ஒரு மகாகவியாக மாறும் காட்சி. கேட்டு பாருங்கள்.


மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்.

2. பாரதி-செல்லமா முதலிரவு காட்சி. இங்கே அந்த தொடக்க பியானோ, அழகாக செல்லம்மாளின் பதட்டத்தை கொண்டுவரும். அதை தொடர்ந்து 'மயில் போல' பாடலை லேசாக தொட்டு வரும் இசை (அப்படியே பாடலை பிரதிபலிக்காமல்), அழகு. இசையிலேயே மனசுக்குள் பட்டாம்பூச்சியை பறக்க விட்டிருப்பார்.



மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்.

3. பாரதி அரண்மனையில் வேலையில் சேர வரும்போது வரும் இசை. என்ன ஒரு கம்பீரம். பாரதியின் மிடுக்கான நடையை அப்படியே இசையில் பிரதிபலிக்க வைத்திருப்பார்.



மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்.

4. இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த இசை இது. பாரதி தன் வீட்டிற்க்கு வந்திருக்கும் நண்பர்களை சாப்பிட்டு விட்டு போக சொல்ல, செல்லம்மா அவர்கள் வேறு சாதிகாரர்களாக இருப்பார்கள் போல என்று தயங்க, பாரதி செல்லம்மாவை அறையும் காட்சி. பியானோவும் வயலினும் அழகாக பாரதியின் பதட்டத்தையும் (நண்பர்கள் கேட்டிருப்பார்களோ! என்று) செல்லம்மாவின் அழுகையையும் ஒரே காட்சியில் கொண்டு வரும். இங்கே..



மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்

5. பாரதி தன் சொந்த ஊருக்கு திருப்பி வரும் காட்சி. 'நல்லதோர் வீணை செய்தே' பாடலை தொட்டு வரும் வயலின் அழகு.



மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்

6. பாரதி தன் அழிந்து போன வீட்டில் சென்று பழையவற்றை நினைத்து வருந்தும் காட்சி. வித்தியாசமான தொடக்க இசை எனக்கு பிடித்திருந்தது. கேட்டு பாருங்கள்.



மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்

7. இது பாரதி படத்தின் ஆரம்ப இசை. அழகான வீணை இசை.



மேலே உள்ள 'Real Player' வேலை செய்யாவிட்டால், இங்கே சொடுக்குங்கள்

Monday, September 26, 2005

ஒரு ஹீரோ.. ரெண்டு காமெடியன்கள்..

பொறியியல் கல்லூரியில் சேர்ந்த புதிது. முதன் முதலாக விடுதி வாழ்க்கை. முதல் வருடத்தில் எனது அறையில் மூன்று பேர். நான், தனபால், வேல். வேலுவின் வீட்டிற்க்கு (செய்யாறு பக்கத்தில் ஒரு கிராமம்) கூட போய் ரெண்டு நாள் ஆட்டம் போட்டு விட்டு வந்தோம்.

விசயம் இது தான். சேர்ந்த புதிதில், பொது பாடம் நிறைய இருக்கும். மற்ற துறை மாணவர்களும் ஒரே வகுப்பில் இருப்போம். எங்கள் வகுப்பில் பசங்க மட்டும் தான். ஒரே வறட்சி. எப்போதும் வகுப்பு முடிந்ததும் எங்க கூடவே வரும் வேலு, கொஞ்ச நாளாக மட்டம் போட ஆரம்பித்தான். ஒரு நாள் பார்த்ததில், அடுத்த துறை பிகர் ஒன்றுடன் சேர்ந்து வந்து கொண்டிருந்தான். வகுப்பு முடிந்ததும் தேங்கி விட்டு, கடைசியில் அந்த பிகருடன் சேர்ந்து விடுதி வரை பேசி கொண்டே வந்தான். இது வழக்கமா தொடர்ந்தது.

தனபால் துறை பிகர் என்பதால், அவனுக்கு லேசான ஒரு புகைச்சல். என்னிடம் புலம்பி கொண்டிருப்பான். எங்களுக்கு தெரியும், அது ஏதோ பையன் பாவம் என்று பேசுகிறது என்று. பையன் சில காலமாக ரொம்ப எங்களை கழட்டி விடுவதும், ரொம்ப பீற்றி கொள்வதும் அதிகமானதால், தனபாலும் நானும் பேசி, நண்பருக்கு ஒரு ஆப்பு வைப்பது என்று முடிவு செய்தொம். அதன் படி...


ஒரு நாள் பையனை அறையில் வைத்து, எங்களுக்கு ஒன்றும் தெரியாத மாதிரி, "டேய்! மச்சி! நீ பெரிய ஆளுடா. வகுப்பு முடிஞ்சி ரெண்டு பேரும் சேர்ந்தே வறீங்க. சேர்ந்தே போறீங்க. பெரிய ஆளுடா நீ", ஆப்புவை மெதுவாக வைக்க ஆரம்பித்தேம். பையன் 'மன்மதன்' சிம்பு மாதிரி உள்ளுக்குள் பறப்பது நன்றாக தெரிந்தது. லேசாக வெட்க பட்டு வைத்தான். "எப்படிடா கண்டு புடிச்சிங்க!" ஆப்பு வேலை செய்ய ஆரம்பித்தது. "மச்சி! எவ்வளவு நாள் தாண்டா காலேஜ்குள்ளேயே சுத்திக்கிட்டு இருப்பீங்க. சென்னையில் இடமா இல்ல. எங்கயாவது வெளியே கூட்டிட்டு போடா" தனபால் ஐடியா கொடுத்தான். "அவள் வருவாளாடா" இது பையன். பையனுக்கு உற்சாக டானிக் கொடுத்து (அட்வைஸ்) தேத்தி அனுப்பினோம், 'எப்படியோ நாளைல இருந்து பையன் நம்ம கூட தான் வருவான்' என்ற நம்பிக்கையில்.

அடுத்த நாள் மாலையில் வேலு அறையில் சோகமாக இருந்தான். கப்பல் கவுந்து விட்டது நன்றாக தெரிந்தது. லேசா தான் வைக்க நினைத்த ஆப்பு கொஞ்சம் பெரிதா போய்விட்டது. அதற்க்கப்புறம் கல்லூரி முடியும் வரை இரண்டும் பேசிக்கவே இல்லை. இவனும் 'அவ என்ன பெரிய இவளா. நா என்ன பெரிசா கேட்டுட்டேன். பீச்சிக்கு போலாமான்னு தானே கேட்டேன். பெரிய இவா மாதிரி இனி என்னிடம் பேசாதேன்னு சொல்லிட்டா' புலம்பினான். 'விட்றா மச்சி! உன் மூஞ்சிக்கெல்லாம் இது ரொம்ப கம்மிடா' நாங்கள் இருவரும் ஆறுதல் சொல்லி கொண்டிருந்தோம்.


அதற்க்கப்புறம் வேலு ஒரே சோகப்பாடல்களாக கேட்டு கொண்டிருப்பான். தனபால் நன்றாக கவிதை எழுதுவான். நன்றாக மேடையில் பாடவும் செய்வான். அவன் தான் வேலுவுக்கு கவிதை சப்ளை பண்ணிக்கொண்டிருப்பான். நாங்கள் வைத்த ஆப்பினால், தன் கவிதைக்கு ஒரு ரசிகன் கிடைத்த சந்தோசம் அவனுக்கு. வேலு என்னையும் கவிதை கேட்டு படுத்துவான். கிட்ட தட்ட அவனை ஒரு ஹீரோ மாதிரியும் எங்க ரொண்டு பேரையும் சுத்தி இருக்கற காமெடியன்கள் மாதிரியும் நினைத்து கொண்டிருந்தான். நாங்கள் தான் அவன் கதைக்கு வில்லன்கள் என்று அவனுக்கு தெரியாது.

நானும் அவ்வப்போது பழைய பாடல்களை சுட்டு கவிதை என்று கொடுப்பேன். பையனுக்கு அவ்வளவாக சினிமா பாடல்கள் தெரியாததால், ஆஹா..ஓகோ ன்னு சொல்லிக்கிட்டு இருப்பான். அப்படி சுட்டு படம் காட்டிய பாடல் ஒண்ணு. 'ஆட்டோ ராஜா' படத்தில் இருந்து சுட்ட பாடல். அருமையான பழைய எஸ்.பி.பி பாடல்.

பாடலுக்கு இங்கே சொடுக்குங்கள்.

Sunday, September 25, 2005

வாடாத ரோசா பூ

வாடாத ரோசா பூ...நா ஒன்னு பார்த்தேன்... (பக்கத்து ரோசா தோட்டத்திலிருந்து)






Friday, September 23, 2005

நன்றிகள் பல..

நான் எழுதியும் ரெண்டு மூனு பேர் படிச்சு நல்லாருக்குன்னு சொல்லியிருக்காங்க. ரொம்ப நன்றிங்கோ! இனி படிக்க போற நண்பர்களுக்கும் நன்றிகள்.

கணேஷ்
கங்கா
ரவிசங்கர்
ஜெகதிஷ்
குமரேஷ்
வசந்தன்
ரம்யா நாகேஸ்வரன்
மதி கந்தசாமி
சித்தன்
C R வெங்கட்
அனுராதா ...

இப்படியே பட்டியல் போய் கொண்டே இருக்குது (ஹி..ஹி..ஹி..இவ்வளவு தான்).