Friday, January 13, 2006

பொங்கல் விடலாம் வாங்க

நாளைக்கு பொங்கல். ம்ம்ம்ம். இந்த தடவை அமெரிக்காவுல மாட்டிக்கிட்டேன். சரி! இங்கே இருந்து ஒன்னும உருப்பட போறதில்லை. பொங்கல் விட்ட புராணத்தையாவது எழுதலாம்னு கிளம்பிட்டேன். இன்னைக்கு காலைல நண்பர் நடாகிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போது, உங்க ஊர்ல பொங்கல் எப்படி இருக்கும் சிவா என்று கேட்டார். ஸ்டவ்ல பொங்கல் வச்சிட்டு டி.வி முன்னாடி உட்கார்ந்து கொண்டாடுற பொங்கல் இல்லப்பா. அந்த பொங்கலே தனி, அத ரெண்டு வார்த்தைல சொல்ல முடியாது. பதிவாகவே போட்டுடறேன். படிச்சுக்கோங்கன்னு சொல்லிட்டேன். எனக்கு பிடித்த பண்டிகைகளிலே முதல் இடம் பொங்கல் தான். அது ஒரு உயிரோட்டமான பண்டிகை.

பொங்கலுக்கு ஒரு வாரத்திற்க்கு முன்னமே கிராமத்தில் எல்லா வீடும் களை கட்ட ஆரம்பித்துவிடும். முதல் வேலை வீட்டுக்கு வெள்ளை அடிப்பது. சந்தையில் தான் வெள்ளை அடிக்க சிப்பு சுண்ணாம்பு கிடைக்கும். எங்க ஊருல செவ்வாய்கிழமை. திசையன்விளைல வெள்ளிக்கிழமை. இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊருல சந்தை இருக்கும். சிப்பி சுண்ணாம்பு படி ஒரு ரூபாய்க்கு ஒரு பத்து படி அள்ளிக்கிட்டு வந்து அப்பாகிட்ட கொடுத்தா, அத ஒரு பெரிய மண்பானைல தண்ணி ஊத்தி நீத்த போடுவாங்க. ரெண்டு நாள் கழித்து வெள்ளை அடிக்க சுண்ணாம்பு ரெடி. ஒரு பனை பாளைய எடுத்து சுத்தியல வச்சி நச்சுன்னு ரெண்டு அடி அடி அடிச்சா வெள்ள அடிக்க பிரஷ் ரெடி. வீட்ல ரெண்டு நாளைக்கு பரபரப்பா இருக்கும். "யப்பூ! எனக்கும் கொஞ்சம் வெள்ள அடிச்சி கொடுத்திருப்பூ' ன்னு அத்தை மாமான்னு ஊருல நெறைய கோரிக்கை இருக்கும். எல்லாம் முடிச்சி கொடுக்கவே நாலு நாலாகிடும். இத முடிச்சிட்டு நம்ம பீட்டர் அண்ணன கூட்டிக்கிட்டு தேரிக்கு போய் பனை ஓலை வெட்டி வருமோம்.

அப்புறம் பொங்காங்கட்டி செய்ற வேலை. பொங்காங்கட்டின்னா பொங்கல் விட அடுப்பு கல். வெறும் செங்கலையோ, கல்லையோ அடுப்பாக வைப்பது கிடையாது. அதற்கென்று மண் குழைத்து ஒரு வடிவத்தில் செய்வது தான் பொங்காங்கட்டி. பொங்காங்கட்டி செய்ய களிமண் வெட்ட, ஒரு மம்பட்டியையும் ஒரு வாளியையும் எடுத்துக்கிட்டு கிளம்பிடுவேன். நல்ல களிமண்ணில் தான் கட்டி நன்றாக வரும். அதனால் ஊரில் ஓடைகரையில் வெட்டி ஒரு இடத்தில் ஊரே வெட்டி வெட்டி என் ஆழத்திற்க்கு பள்ளம் கிடக்கும். அதில் இறங்கி மஞ்சள் களிமண்ணை வெட்டி வர வேண்டும். அதை தண்ணில குழைத்து ஒரு சட்டியில் போட்டு கவுத்தால் சட்டி போல பொங்காங்கட்டி ரெடி. அதோடு முடிவதில்லை. அதற்க்கு வெள்ளை அடித்து, காவி அடித்து அழகு படுத்தினால் தான் அது பொங்காங்கட்டி. இல்லான்னா அது மண்ணாங்கட்டி.

பொங்கலுக்கு முந்தின நாள் தான் ஊரே அல்லோல படும். அன்று ஊரில் சிறப்பு சந்தை இருக்கும். பொங்கலுக்கு காத்திருப்பதே அந்த கரும்புக்காக தான். அம்மாவ கூட்டிக்கிட்டு சந்தைக்கு போனா, ரெண்டு கரும்பு, மஞ்சககுலை, காய்கறி. இன்னொன்ன விட்டுட்டேன். பனங்கிழங்கு. ம்ம்ம்ம். எல்லாத்தையும் வாங்கி வருவோம். கடையில இருந்து பச்சரிசி, சர்க்கரை, பூஜை பொருள் எல்லாம் அப்பா வாங்கி வர, பொங்கல் விட எல்லாம் ரெடி. அம்மா வீடு, முற்றம் எல்லாம் கோலம் போட்டு முடிக்க எப்படியும் இரவு 12 ஆகி விடும்.

காலைல 4 மணிக்கே எழுப்பி விடுவார்கள். தோட்டத்துல அந்த மார்கழி குளிரிலும் (தை ஒன்று தான இன்னைக்கு. மார்கழி குளிர் இருக்கும் தானே) தொட்டில கெடக்குற பச்சத் தண்ணில நடுங்கிகிட்டே குளிக்கும் சுகம் தனி தான். அப்புறம் நாம ஆவலா காத்துக்கிட்டு இருக்கிற கோடு போட்ட சட்டையையும் டவுசரையும் போட்டு அழகு பார்ப்பது அடுத்த சுகம்.

இனி பொங்கல் விட வேண்டியது தான். சூரியன் உதிக்கும் போது பொங்கல் பொங்கியிருக்க வேண்டும். அதனால் காலை 5 மணிக்கே அடுப்பில் பானை ஏறியிருக்கும். மஞ்சள்குலை சுற்றப்பட்டு குங்குமம் விபூதி எல்லாம் பூசப்பட்டு மங்களகரமாக இரண்டு பானை ரெடியாக இருக்கும். ஒன்று வெண் பொங்கல். இன்னொன்று சர்க்கரை பொங்கல். முற்றத்தில் போன வருடம் பொங்கல் விட்ட இடத்தை தோண்டி கண்டுபிடித்து அந்த போன வருட சாம்பலில் மேல் இலை போட்டுதான் சாமி படையல் போடுவோம். இந்த வருடம் பொங்கலும் அதே இடத்தில் தான் விடுவோம். எத்தனை வருடம் ஆனாலும் பொங்கல் விடும் இடம் மாறாது. மழை நேரத்தில் காட்டுக்குள் இருந்து புடுங்கி நட்ட என் தக்காளி, கத்தரி செடி எல்லாம் காய்த்திருக்கும். அதையும் பரித்து படையலில் வைத்துக்கொள்வேன். சாமிக்கு என் படையல் அது.

அப்பா ஆரம்பித்து வைக்க, நான், அண்ணன், அக்கா மூவரும் ஆளுக்கொரு கரையில் பனை ஓலையயை வைத்து தீ மூட்டிக்கொண்டிருப்போம். பொங்கல் பொங்கி வந்ததும் அம்மா குலவை விட, சூரியன் எட்டி பார்ப்பதற்க்கும் சரியாக இருக்கும். எல்லோரும் கை கூப்பி வணங்கி விட்டு தீ மூட்டும் வேலையை தொடர்வோம். பொங்கல் ரெடியானதும், அப்பா பூஜை செய்து தீபாராதனை காட்டுவார்கள். நம்ம கண் முழுவதும் அந்த கரும்பு மேல தான் இருக்கும். எந்த இடத்தில் வெட்டினா பெரிய கணுவா வரும். பல்லுக்கு வேலை இல்லாம சாப்பிடலாம் என்று மூவருக்கும் போட்டி வரும். உடனே பொங்கலில் கை வைத்தால் அம்மாவிடம் இருந்து அடி தான் விழும். ஏனென்றால் முதலில் கவனிக்க படவேண்டியவர் ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு கொடுத்தபின் தான் நாம் சாப்பிட வேண்டும். அது யார் சொல்லுங்க பார்ப்போம்....

அவர் தான். காக்கா. பொங்கல் கொஞ்சம், வாழை பழம் என்று எடுத்துக்கிட்டு மாடியேறி 'கா..கா..காக்காச்சி' அப்படின்னு கூப்பிடணும். எங்கிருந்தாவது ஒரு காக்கா வந்து விடுவார். வந்து மாடியில் அமர்ந்து கொஞ்ச நேரம் சந்தேகத்தில் நம்மை பார்ப்பார். நேத்து தான கிண்ணத்தோட எஸ்கேப் ஆகும் போது இவன் கல்ல விட்டு எறிந்தான். இப்போ வாழை இலையில் பழம், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் கொடுத்து சாப்பிட சொல்கிறானே. என்ன மேட்டர்னு தெரியலையேன்னு யோசிப்பார். அப்புறம் கொஞ்சம் நம்பிக்கை வைத்து சாப்பிட்டு பார்த்துவிட்டு அவர் சொந்தங்களையும் கூப்பிட ஆரம்பிப்பார். எல்லோர் வீட்டிலும் இந்த பழக்கம் உண்டு. அன்று ஊரில் இருக்கும் எல்லோருக்குமே பொங்கல் தான்.

அப்புறமும் உடனே சாப்பிட முடியாது. அத்தைக்கு, மாமாவுக்கு என்று ஒரு பட்டியல் இருக்கும். சில பேர் கிருஸ்தவர்கள். நமக்கு கிருஸ்மசுக்கு கரெக்டா வந்து விடும். சில பேர் மாலையில் தான் பொங்கல் விடுவார்கள். அவர்கள் வழி அப்படி. அப்புறம் சாப்பிட்டு விட்டு, ஒரு கரும்பை கடிச்சிக்கிட்டே அத்தை வீட்டில் ஆஜராகி விடுவேன். 'என்னல! பொங்கல் விட்டாச்சா" " ஆமாம்! மாமா. நீங்க இன்னும் ஆரம்பிக்கவே இல்ல போல" "ஏல! ஒங்க அத்தய பத்தி தாம் தெரியும்ல. இவ என்னைக்கு சீக்கிரம் ஆரம்பிச்சா". அத்தைக்கு தெரியும் நான் அங்கே நான் எதற்கு முதலில் ஆஜர் என்று. எல்லா பொங்கலுக்கும் படம் பார்க்க 50 பைசா கொடுப்பது அத்தை தான். "என்னல படம் போட்டிருக்கிறான்". "சின்ன வீடு போட்டிருக்கிறான் மாமா. எம்ஜார் படம் விக்கிரமாதித்தனும் போட்டிருக்கிறான்". 'சின்ன வீடு' லேடிஸ் ஒன்லி படம் என்பதால், தலைவர் படம் தான் அந்த பொங்கலுக்கு. அடிச்சி புடிச்சி கவுண்டர்ல எறிகுதிச்சி டிக்கட் வாங்கி படம் பார்த்தா, ஒரு வருசத்துக்கு திருப்தியா இருக்கும். தலைவர் பாவாடைய கட்டிக்கிட்டு வாள் சண்டை போடுவார் பாருங்க. அது தாங்க பொங்கல் படம்.

இப்படியே பொங்கல் நாள் ஓடி விடும். அடுத்த நாள் பொங்கல் விளையாட்டு விழா. குழந்தை முதல் குமரி வரை. தாய்குலம், தந்தை குலம் எல்லா குலத்திற்க்கு அன்று விளையாட்டு உண்டு. முறுக்கு கடித்தல், பலுன் உடைத்தல், ஓட்ட பந்தையம் என்று ஒரு கரையில் போய் கொண்டிருக்கும். ஊசி கோர்த்தல், சோடா பாட்டிலில் நீர் நிரப்புதல் இப்படி பெண்களுக்கும் விளையாட்டு உண்டு. அப்புறம் கயிறு இழுத்தல். ஸ்லோ சைக்கிள், பானை உடைத்தல் இன்னும் நிறைய. இந்த விளையாட்டு பற்றி தனி பதிவா பார்க்கலாம். கடைசில ரெண்டு பேரையாவது அடிச்சி வீட்டுல படுக்க வைக்கலன்னா நமக்கு தூக்கம் வராதே. அதுக்கு தான் கபடி இருக்குதே. பயலுவ தூக்கி வீச தான் செய்வானுவ. சில பெரிசுங்க கொலுத்து போய் களத்துல இறங்கி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடும் நெலையும் ஆகிருக்கு. நான் இன்று வரை கபடி பார்ப்பதோடு சரி. ஒடிச்சி வீசிருவானுங்க, பாவி பயலுவ.

அப்புறம் பரிசு கொடுக்கும் போது 'ஏல! எவம்ல பரிசு கொடுக்குறது. மானங்கெட்டவனுங்களா. கண்ட நாய்ங்கள தலைவர்னு சொல்றீங்களேல" அப்படின்னு அருவாள தூக்கி, மாலைக்கு அடிச்சிக்கிட்டு முடிச்சோம்னா தான் பொங்கல் விழா சிறப்பாக முடிந்ததாக ஒரு திருப்தி இருக்கும். போன வருசம் யாருமே அடிச்சிக்கல. இந்த தடவை என் நண்பனிடம் கேட்டால் தான் தெரியும். அடுத்த தடவை ஏதாவது நாமலாவது போய் செய்யணும். வாழ்க்கைனா ஒரு சுவாரசியம் இருக்கணும் இல்லையா.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த ஒரு நாளுக்காக ரொம்பவே ஏங்கும் என் மனம். பணம் மட்டும் இல்லடா வாழ்க்கை. அதுக்கும் மேல ஒன்னு இருக்குன்னு உணர்த்துவது இந்த பொங்கல் விழா தான். கோபுரத்திலும் வெறுமை இருக்கும். குடிசையிலும் சந்தோசம் இருக்கும் என்பது இப்படி ஒரு பொங்கல் கொண்டாடி பார்த்தால் தெரியும். அந்த வகையில் நான் கிராமத்தானாக ரொம்ப ரொம்ப கொடுத்து வைத்தவன். இத்தனையையும் விட்டுப்புட்டு இந்த தடவை இங்கே கம்யூட்டரில் உட்கார்ந்துக்கிட்டு உங்ககிட்ட புராணம் பாடவேண்டியதா போச்சு. இது தான் நான் மிஸ் பண்ணும் கடைசி பொங்கலாக இருக்கணும் என்று கடவுளை வேண்டிக்கொள்கிறேன். அடுத்த பொங்கலுக்கு லைவ் கவரேஜ் பண்ணிடலாம்டே.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

அனைத்து நண்பர்களுக்கும் என் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Saturday, January 07, 2006

கிராமத்து மணம் - 2 (திருட்டு மாங்கா)

இந்த பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சுடே! சரி இன்னொரு ஊர் கதைய சொல்லிட்டு போலாம்னு வந்தேன். எங்க ஊரு பீட்டர் அண்ணனும் நாங்களும் பண்ணின கூத்தை கிராமத்து மணம்-1 ல சொல்ல ஆரம்பிச்சி அப்படியே கெடப்புல போட்டுட்டேன். சரி இன்னைக்கு ஒன்ன சொல்லலாம்னு ஆரம்பிச்சாச்சு.

பீட்டர் அண்ணன் கூட சுத்துறதுல இன்னொரு விசயம் என்னனா, தீனி. போட்டுக்கிட்டே இருப்பான். எளநீ வேணுமால அப்படின்னு தென்ன மரத்துல ஏறி கொல கொலையா வெட்டி போட்டிக்கிட்டே இருப்பான். எல்லாம் நம்ம ஊரு காரங்க தோட்டம் தான். நம்ம தோட்டம்னு நெனைச்சுக்காதீங்க. ஒரு நாள் அப்படி தான் பனை நுங்கு சாப்பிடலாம் என்று ஒரு அருவாளையும் எடுத்துக்கிட்டு தேரிக்கு கெளம்பினோம். தேரின்னா பனங்காடு. வெறும் பனை மரம் மட்டும் தான் ஏக்கர் கணக்கில் பரவி கிடக்கும். ஊர்ல இத தேரின்னு சொல்லுவோம்.

பனை ஏறுவதற்க்கு ரொம்ப திறமை வேண்டும். பாதி வழியில முடியலன்னா குதிக்க முடியாது. ஓய்வு எடுக்கவும் கிளை கெடையாது. மேலே கொண்டைக்கு போனவுடன் நெரே போய் ஒக்கார முடியாது. கிழிச்சுரும். மட்டைல இருக்குற கருக்க எல்லாம் அருவாளால வெட்டிவிட்டு பன மரத்துல ஒக்காரததுக்குல்ல போதும் போதும்னு ஆயிடும். கைய எசகுபிசகா விட்டோம்னா நேரே சொர்க்கலோகம் தான். எங்க பசங்களில் எல்லோருக்குமே பனை ஏற சொல்லி கொடுத்தான். அதுல தேறாதது நான் தான் :-). பாதி பனை எறிவிட்டு முன்னேறவும் முடியமாம, இறங்கவும் தெரியாம நெஞ்செல்லாம் காயத்தொரு நான் சறுக்கி விழுத்ததோடு சரி, என் பனை ஏறும் முயற்சி. அப்புறம் சரிந்து கிடக்கும் பனைல ஏறுவதோடு சரி.

சரி கதைக்கு போவோம். தேரில ஒரு நல்ல பனைய தேர்ந்தெடுத்து பீட்டர் அண்ணன் ஏற ஆரம்பித்தான். நாங்கள் தூர நின்று குத்தகைகாரன் வரானானு பாத்துக்கிட்டோம். மாட்டிக்காம திருடனும் இல்லையா. பெரிய கொலையா (குலையா..பயந்துராதீங்க) மூனு வெட்டி போட்டான். ஊரே ஒக்காந்து திங்கலாம். நாங்க ஒரு அஞ்சு பேரு இருந்தோம். அண்ணன் கீழே இறங்கி எல்லோருக்கும் சீவி கொடுக்க, திங்க ஆரம்பிச்சோம்.

திடிர்னு "ஏல! பாவி மக்கா" அப்படின்னு சத்தம் வரவே, எட்டி பாத்தா தூரத்துல குத்தகை காரன். 'நிம்மதியா திங்க விடமாட்டானுங்களே" அப்படின்னு திட்டிக்கிட்டே எல்லோரும் ஓட ஆரம்பிச்சோம். சினிமாவுல விசிலடிச்சு திருடன எச்சரிக்கை பண்ணி வெரட்டிட்டு பின்னாயே போலிசு தொறத்துமே, அப்படியே அண்ணாச்சியும் ஒரு சத்தம் கொடுத்ததால் நாங்களும் ஓட ஆரம்பித்தோம். நாங்க எல்லாம் அப்போ ஆறாவது படிச்சிக்கிட்டு இருந்தோம். பீட்டர் அண்ணன் தான் எட்டாங்கிளாஸ். எல்லோருக்கும் பெரியவன். அவன் முன்னாடி ஓட, நாங்க எல்லாம் அவனை தொடர்ந்து ஓட, (குத்தகை) அண்ணாச்சி வெரட்ட, ஓட்ட பந்தயம் தான் அன்னைக்கு. பின்னாடி திரும்பி பாத்த அண்ணன், அப்படியே நின்னுட்டான். என்னடா இது, எல்லோரும் நல்லா தானே ஓடரோம். இவன் எதுக்கு இப்படி நிபந்தனையற்ற சரண்டர் ஆகிறான் என்று நாங்களும் நின்னோம்.

பாத்தா, அண்ணாச்சி மடி நெறைய பெரிய பெரிய கருங்கல். வேட்டில மடிச்சு வச்சுருக்காவ. இன்னும் ரெண்டு அடி ஓடிருந்தோம்னா மண்டைய பொளந்திருப்பாரு. நாங்க பனைய மேஞ்சிக்கிட்டி இருப்பதை தூரத்துல பார்த்தவுடனேயே கல்லு பொறுக்கி வச்சிட்டு தான் எங்களுக்கு சத்தம் கொடுத்திருக்கிறார். எல்லோரும் பீட்டர் அண்ணன் பின்னடி போய் ஒளிஞ்சிக்கிட்டோம். இப்படி பட்ட சமயங்களில் அண்ணன் எப்பவுமே பின் வாங்கியதும் இல்லை, எங்களை மாட்டிவிட்டுட்டு ஓடினதும் இல்லை. தலைவன் என்றால் அவன் தான். அதை நம்பி தான வீட்டுல அவன் பின்னாடி விடுவாங்க.

"பாவி மக்கா! இப்படி கொல கொலையா வெட்டி சாச்சுப்புட்டியலேல. யாரு மவன்ல நீங்க". அமைதியா நின்னுக்கிட்டு இருந்தோம். அப்பா பேர சொல்றதும், வீட்டுக்கு அட்ரஸ் சொல்லி அனுப்புவதும் ஒன்னு தான். ஊர்ல போய் இன்னாரு பையன்னு சொன்னா ஊரே கைய காட்டும். அதுகாக அப்பா பேர தப்பாவா சொல்ல முடியும். "என்னல! புடிச்சு வச்ச கொழுக்கட்ட மாத்தி நிக்கீங்க. பேசுங்கல". அப்புறம் பீட்டர் அண்ணன் தான் பேச்சு வார்த்தை நடத்தினான் "இத பாருங்க அண்ணாச்சி! பயலுவ ஆசபட்டானுங்க. அதான் வெட்டினோம். இந்த ஒரு வாட்டி (நெறைய வாட்டி) விட்டுடுங்க. இனி இந்த பக்கம் வரமாட்டோம்". எங்க கிட்ட பிடுங்குவதற்ககு ஒன்னும் இருக்காது. மேல் சட்டை கூட இருக்காது. கைல ஒரு கவட்டை, கொஞ்சம் கல்லு. இது தான் இருக்கும். அப்புறம் அருவாள (அது ஒன்னு தான எங்க கிட்ட இருக்குறதுல உருப்படி) புடிங்கிகிட்டு "ஓடுங்கல. இனி இந்த பக்கம் வரப்புடாது" என்று எச்சரிக்கை செய்து விட்டுட்டாங்க அண்ணாச்சி.

---

என்னடா கிராமத்துல இப்படி திருட்டு எல்லாம் சாதாரணம் தானா என்று நெனைச்சிராதீங்க. உள்ளூர் காரன் பண்ணுர வரைக்கும் தான் அது ஜாலி. அசலுரு கார பய பண்ணினா அவன் காலி. ஒரு பிடி மண் எடுத்தாலும் வெட்டு குத்தாயிடும்.

அப்படி தான். ஊரில் சுடலைமாடன் சாமி கோவில் கொடையோட, ராத்திரி ஊர் சனங்க எல்லாம் கோவில்ல வில்லுப்பாட்டு பார்த்துக்கிட்டு இருக்கு. அசலூருகார பய ஊருக்குள்ள சுத்துறதா தகவல் வந்தது. எல்லோரும் டார்ச் லைட் ஒன்னையும், ஒரு கம்பையும் எடுத்துக்கிட்டு தெரு தெருவா (மொத்தமே 3 தெரு தான), தோட்டம் எல்லா இடத்திலும் தேடினோம். கை வேற நம நமன்னு யாரையாவது அடிக்கனும் போல எல்லொருக்கும் இருந்தது. பய தப்பிச்சிட்டான்.

மூதேவி. அடுத்த வாரமே ஏதோ தோட்டத்துல ஏறி குதிக்க, மாட்டிக்கிட்டு. புடிச்சி ஊர்ல இருக்குற அம்மன் கோவில் வேப்பமரத்துல கட்டி போட்டுட்டு, நாங்க எல்லாம் வீடு வீடா போய் "சித்தி! கள்ளன் மாட்டிருக்கான். பெரியப்பா! கள்ளன் மாட்டிருக்கான். ஊர் வேப்பமரத்துல கட்டி போட்டிருக்கு" அப்படின்னு சொல்லிட்டு வந்தோம். எல்லோரும் வந்தது பூஜை ஆரம்பித்தது. கேட்ட கேள்விக்கு எடக்கு முடக்கா பதில் வர, பெரிசுங்க எல்லாம் அடி பொளக்க ஆரம்பிச்சது. ஊர்மக்கள் எல்லாம் வரிசையா நின்னு டோக்கன் போட்டு அடிச்சது அவன தான். நேத்து பொறந்தது வரை வந்து ரெண்டு அப்பு அப்பியது. "ஐயோ! என்ன போலிசுல புடிச்சு கொடுத்துருங்க" அப்படின்னு அடி தாங்காம அவன் அலற, அப்புறம் அவன அவுத்து விட்டு 'இந்த பக்கமே வந்துராதல" அப்படின்னு எச்சரிக்கை பண்ணி வெரட்டி விட்டோம். வாங்குன அடிக்கு அவன் திரும்பி வருவான்னு நெனைக்கறீங்க?

கிராமத்துல எல்லாம் திருட்டு பயம் எல்லாம் கிடையாது. 50,000 ரூவா வண்டிய வெளிய விட்டுட்டு 10 நாள் ஊருக்கு போய்ட்டு வந்தா வண்டி அப்படியே நிற்க்கும். ஊருக்குள்ள வருகிற புது மனிதர்கள் ஒவ்வொருத்தாரும் தெரியும். போலிசு எல்லாம் ஊருக்கும் வருவதை யாரும் விரும்ப மாட்டார்கள். அது ஒரு தனி உலகம்.

சென்னையில் நிலமை தலைகீழ். அப்படி தான், பக்கத்து வீட்டுகாரர் தன்னோட வண்டிய ஒரு யானைய கட்டுற சங்கிலியால டெய்லி ஒரு தூண்ல கட்டி போட்டுட்டு, தொங்கி பார்த்து கொள்வார். ஒரு நாள் ராத்திரி லாரில வந்து தூணோட உடைச்சு வண்டிய தூக்கிட்டு போய்டானுங்க. சிட்டில நெலம இப்படி இருக்கு.

- அன்புடன்
கிராமத்தான்.