Sunday, June 11, 2006

விடை பெறுகிறேன்.

நண்பர்களே! விடை பெறுகிறேன். என்னடா பதிவு தலைப்பு என்று நெனைச்சிறாதீங்க. கொஞ்ச நாள் இந்த ப்ளாக் உலகத்தில் இருந்து விடுப்பில் போய்ட்டு வரலாம் என்று தோன்றியது. அது தான் இந்த 'விடை பெறுகிறேன்'. காரணம் ஒன்றும் பெரிசு இல்லை. இங்கே சொல்லிட்டேன். மறுபடியும் அதே பல்லவிய பாடதடேன்னு ரெண்டு ப்ளாக்கையும் பாக்கற நண்பர்கள் திட்டுவாங்களே :-)).

( கீழே ஊர் கதை ஒன்னு சொல்லி இருக்கேடே..அப்படியே போய்றாதிய.. என்ன :-))

சிவபுராணம் எதுக்கு ஆரம்பிச்சேன்.ம்ம்ம்..எல்லாம் நமக்குன்னு, நம்ம மூஞ்ச போட்டு, நம்ம பேர போட்டு இணையத்தில் பார்க்க ஒரு கிக் தான். ஒரு யோசனையே இல்லாம ஆரம்பிச்சு, அப்புறம் குமரன் எழுதி கொடுத்த திருவாசகம் பாடல் பொருளை போட ஆரம்பிச்சு, அப்புறம் நம்ம மலேசியா ராஜசேகரன் சாரிடம் சண்டை போட்டு (இவர்கள் இந்தியர்கள்), போக்கு இல்லாம ஊர் கதை எழுத ஆரம்பிச்சேன். அப்போ நம்ம மதியும் (மதி கந்தசாமி) காசி சாரும் நட்சத்திர வாரத்தில் என்னை இழுத்துப் போட்டு எனக்கு ஒரு பெரிய வெளிச்சம் போட்டு கொடுத்தார்கள்.

என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வாரம் எனது தமிழ்மணம் நட்சத்திர வாரம். நம் எழுத்தையும் நல்லா எழுதறடே அப்படின்னு சொலல ஒரு நாலு பேர் இருக்காங்கன்னு பார்க்கும் போது வரும் சந்தோசத்துக்கு அளவே இல்லை. எனது சிவபுராணத்தை இது வரை படித்து ஊக்கம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி. சத்தியமா எதுவுமே எழுதி பழக்கம் இல்லாம, திடீர்னு ரெண்டு பேர் நல்லா இருக்குடே என்று சொல்லும் போது வரும் போதையே தனி தான். என்னாலும் கொஞ்சம் சுவாரஸ்யமா எழுத முடியும் என்று ஒரு சின்ன நம்பிக்கையை, ஆசையை கொடுத்தது நண்பர்கள் உங்களின் ஊக்கம் தான். அதற்கு சும்மா இங்கே 'நன்றி' என்று ஒரு வார்த்தையில் சொல்லிட்டு போகமுடியாது.

நம்ம ஊரு திருநெல்வேலி பாசை எங்க ஊரு பயவுலுவ எல்லாத்துக்கும் இங்கே இணையத்தில் ரொம்பவே நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது. 'என்னல மக்கா. நல்லா இருக்கியால' என்று ஊர் நண்பனிடம் இன்றும் பேசும் போது கிடைக்கும் சுகமே தனி தான். இங்கே தமிழ்மணத்தில் சேர்ந்த போது அதை இங்கே ப்ளாக் நண்பர்களிடம் உணர முடிந்த போது வந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை.

'ஏ! நீங்க நம்ம ஊரு பக்கமா' என்று இங்கே அமைந்த நட்பு வட்டம் ஏராளம். ஊருக்கு போய் பாக்கணும் என்று ஒரு பெரிய பட்டியல், பரஞ்சோதி, தம்பி சிங் (சிங் செயகுமார்), தாணு அக்கா, தருமி சார், ராகவன், சாணக்கியன், மரவண்டு கணேஷ் , இளவஞ்சி....இப்படி ஒரு பெரிய பட்டியல். அத்தனையும் இங்கே தமிழ்மணத்தில் கிடைத்த நண்பர்கள்.

சரி..சரி வழ வழன்னு பேசாம, ஊர் கதை ஒன்னு சொல்லி விடை பெறுகிறேன்...

---------------------------------------------------------------------------------

கிராமத்து மணம் - 5 (வேப்ப முத்து)

சின்ன வயசுல கைல காசு கிடைக்க நிறைய வழிகள் உண்டு. 'யப்பூ! அந்த மனுசன் (அதாங்க. வீட்டுக்காரர்) காலைல புளி வாங்க மறந்து போய்ட்டாரு. இப்போ நான் 11 மணிக்கு சாப்பாடு வேற கொண்டு போணும். கொஞ்சம் கடைக்கு போய்ட்டு வர்றீயால. ஒரு ஆரஞ்சு முட்டாயி வேணோன்னா வாங்கிக்க" இப்படி சில நேரம் காசு கிடைக்கும்.

காலைலயே கும்முன்னு கல்லுகடைல ஏத்திட்டு 'ஏல! இன்னைக்கு ஏதாவது மாட்டிச்சின்னா அத்தைக்கிட்ட வந்து கொடுங்கல' அப்படின்னு வேட்டையாட pre-order சில நேரம் கிடைக்கும். நாங்களும் கவுட்டை, கண்ணி, கல்லுன்னு பயங்கர ஆய்தம் எல்லாம் எடுத்துக்கிட்டு கைல கெடைக்கிற எலியோ, அணிலோ, முயலோ, புறாவோ எது கெடைச்சாலும் அடிச்சிக்கிட்டு மாமாவுக்கு side dish ஏற்பாடு பண்ணி கொடுப்போம். எட்டணாவுல இருந்து சில சமயம் ஒரு ரூவா வரைக்கும் கிடைக்கும்.

இன்னொரு சம்பாத்தியம். வேப்ப முத்து பொறுக்குறது. படிக்கு நாலணா என்று ஊருக்குள்ள வேப்ப முத்து வாங்க சைக்கிள்ல நிறைய வியாபாரி வருவாங்க. ஒரு இருபது படி தேத்தினா அஞ்சி ரூபா ஆச்சே. அதுக்கு காடு காடா ஒரு பெட்டிய துக்கிக்கிட்டு வேப்பமுத்து பொறுக்கிக்கிட்டு அலைவோம்.

எங்க ஊரு நூற்பாலை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். காலைல அஞ்சு மணிக்கு பாத்தா சுத்தி இருக்கிற ஊர்ல இருந்து ஆளுங்க கும்பல் கும்பலா உள்ளே போய்ட்டு இருப்பாங்க. மூனு மணி சங்கு அடிச்சா அத்தனை கும்பலும் வெளியே போய்ட்டு இருப்பாங்க. அப்படி சுறுசுறுப்பா இருக்கும். யாருக்காவது சாப்பாடு கொண்டு போகணும்னா மில் வாசல் தான் போக முடியும். வாசலிலேயே போலிசு (வாட்ச் மேன்) சாப்பாட்ட வாங்கிகிட்டு விட்டுடுவாரு. உள்ளே தொழிலாளிகள் தவிர யாரும் நுழைய முடியாது...ஆனால் சின்ன பசங்க நாங்க மட்டும் ஒரு இடம் விடாமல் மில்லை சுற்றி இருக்கிறோம். அது வேப்ப முத்து பொறுக்க போகும் போது..

காலைலயே டவுசர் புல்லா கவுட்டைக்கு கல்ல அள்ளிக்கிட்டு, அது டவுசர ஒரு பக்கமா இழுக்க, அதை இன்னொரு கையால புடிச்சிக்கிட்டு, கைல ஒரு ஓலை பெட்டியையும் வச்சிக்கிட்டு நாங்க ஒரு கூட்டம் மில்லுக்கு கெளம்பிருவோம். வாசல்ல போலிசு எங்க பெட்டிய எல்லாம் சோதனை போட்டுட்டு உள்ளே அனுப்பும். 'ஏல. அங்கண இங்கண போக கூடாது. பொறுக்கிட்டு பாதி பங்க மறக்காம எல்லா பயலுவலும் வச்சிட்டு போய்றணும். என்ன'. நாங்க பொறுக்கினதில் பாதியை மில்லுக்கு கொடுத்திடணும் (எந்த மவராசனுக்கோ :-). இது தான் டீல்.

நாங்க உள்ளே போய் ஒவ்வொரு மரமா போய் கீழே கெடக்கிற வேப்பமுத்த பொறுக்கிக்கிட்டு இருப்போம். நம்ம பீட்டர் அண்ணன் தான் மடமடன்னு மரத்துல ஏறி உலு்ப்ப ஆரம்பிப்பான். நாங்க எல்லாம் மடமடன்னு வாட்ச்மேன் வர்றதுக்குள்ள பொறுக்கிக்கிடுவோம். அலறி அடிச்சிக்கிட்டு ஓடி வருவார் வாட்ச்மேன் 'ஏல! பாவிமக்கா! நாந்தான் சொன்னேன்ல. மரத்துல ஏற கூடாதுன்னு. எறங்குல' அப்படின்னு திட்டு விழும். 'ஏன் வாட்ச்மேன். மேல கெடக்குறது எப்படியும் கீழே தான் விழ போகுது. நாங்க தான் வந்து பொறுக்க போறோம். அதான் நாங்களே...மரத்துல ஏறி'....'நீங்க ஏறி விழுந்து தொலைச்சீங்கன்னா ஆபீசருக்ககு எவம்ல பதில் சொல்றது. சொல்றத கேளுங்கல' .

'நாங்க நல்லா மரம் ஏறுவோம் வாட்ச்மேன். எங்க தெறமைய பாத்தீங்கன்னா நீங்க இப்படி எல்லாம் சொல்ல மாட்டீங்க' இப்படி மனசுக்குள் நெனைச்சுக்குவோம். அந்த திறமை இது தாங்க. கஷ்டப்பட்டு பொறுக்கிய வேப்பமுத்துல பாதிய அப்படியே கொடுக்க மனசு வராது. ஆனா கொடுக்காம வெளியே விடமாட்டாரு. அட போங்கடே அப்படின்னு பீட்டர் அண்ணன் வெளியே நிக்கிற மரத்தோட கிளைய புடிச்சி மடமடன்னு வேப்பமுத்தோடு மில்லுக்கு வெளியே இறங்கி வீட்டுக்கு போய்விடுவான். 'அண்ணே! பேசாம நாம இப்படியே உள்ளே வந்தா என்னா' 'லே! ஏறி உள்ள குதிச்சு வந்தா புடிச்சானுங்கனா திருடனாக்கிருவானுங்க. ஆனா உள்ளே இருந்து வெளியெ போனா பிரச்சினை இல்லல'. அடடா. இந்த தத்துவம் எல்லாம் புரியாம போச்சேண்ணே :-).

'என்னல. போகும் போது அஞ்சு பேரு போனீங்க. இப்போ நாலு பேரு தான் வர்றீங்க. எங்கள இன்னொருத்தன்' வாட்ச்மேன் சரியா புடிப்பாரு. 'அண்ணே அப்பவே வீட்டுக்கு போய்ட்டாங்களே. நீங்க எங்க போய் இருந்தீங்க' இப்படி எடுத்து கொடுப்போம். 'இங்கண தாம்ல இருக்கறேன். என்னல சொல்லுதிய' குழப்பமா பார்ப்பார்.

சரி! ஏறிகுதிச்சி போக முடியாத நாங்க எல்லாம் பங்கு கொடுப்போமான்னு கேக்கறியலா. நாங்க என்ன பண்ணுவோம்னா.....நாங்க வந்து நின்னவுடனே 'ஏல! அங்கண போய் பாதி முத்த தட்டிட்டு வங்கல' அப்படின்னு வாட்ச்மேன் அனுப்புவார். நாங்க அங்க போய் பெரிசா மண்ண குமிச்சி அதுக்கு மேல வேப்பமுத்த நல்லா தூவிட்டு பாக்குறதுக்கு ஏதோ வேப்பமுத்து குவியல் இருக்கிற மாதிரி வச்சிட்டு வந்திருவோம். துரத்துல இருந்து வாட்ச்மேன் பாத்துட்டு 'நெறைய பெறக்கிருக்கீங்க போலையல' அப்படின்னு சொல்லிட்டு அனுப்பிடுவாரு..

அடுத்த நாள் மில்லுக்கு போகும் போது எங்களை வெரட்டி வெரட்டி அடிப்பாரு..அது ஒரு தனி கதை :-))

(மக்கா! இது சின்ன வயசுல பண்ணில ஒரு சில குறும்புகளில் ஒன்றே....நீதி கதை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுடாதிய...என்ன :-))

அன்புடன்,
சிவா

Monday, June 05, 2006

பத்து பைசா

அம்மா அவசரமாக கூப்பிட்டார்கள். 'டேய்! செம்மறிகுளத்தில் இருந்து அத்தையும் மாமாவும் வந்திருக்காங்க. சீக்கிரம் வாடா'. மாமா வந்திருக்காங்களா! சந்தோசத்தில் விளையாண்டு கொண்டிருந்த பட்டத்தை அப்படியே போட்டுவிட்டு ஓடினேன். 'போயி மாமாகிட்ட சொகமாருக்கீங்களான்னு விசாரி' அம்மா. 'வாடா ராசா. வெளாட போயிருந்தியா' மாமா நான் நலம் விசாரிப்பதற்கு முன்னமே என்னை பக்கத்தில் உட்கார வைத்து பேசிக்கொண்டிருந்தார். 'கணேச கூட்டி வரலையா மாமா' 'அவனுக்கு பரிச்சடா. அதான் ஊருலயே விட்டுட்டு வந்துட்டேன். அடுத்த தடவ கூட்டி வர்றேன் என்ன'.

அம்மா உள்ளே கூப்பிட்டு கைல ஒரு ரூபாயை கொடுத்து 'கனி ஆச்சி வீட்டுல போய் ரெண்டு கலர் வாங்கிட்டுவா' என்று அனுப்பினார்கள். மதியம் சாப்பிட்டு விட்டு மாமாவும் அத்தையும் கிளம்ப தயாரானார்கள். 'சரி அக்கா. நான் போய்ட்டு வர்றேன்'. 'அடுத்த தடவ வரும் போது பிள்ளையையும் கூட்டிட்டு வாடா' அம்மாவுக்கும் கணேஷ் வராததில் கொஞ்சம் வருத்தம் தான். மாமா கிளம்பும் போது ஒரு இரண்டு ரூபாவை என் கையில் தினித்து விட்டு கிளம்பினார். இது வழக்கம் போல மாமா வரும் போது எனக்கு கிடைக்கும் ஜாக்பாட் தான்.

வழக்கம் போலவே மாமா போனதும் கையில் இருந்த இரண்டு ரூபாய் அம்மா கைக்கு போய் விட்டது.அதிலிருந்து கடைசில எனக்கு கிடைத்தது பத்து பைசா தான்.

இப்போ கைல பத்து பைசா.

என்ன பண்ணலாம்? பல யோசனை மனசுக்குள் ஓடியது.

பேசாம தடியர் கடைல ரெண்டு கோலிக்கா வாங்கி நேத்து எசக்கியிடம் தோத்த கோலிக்காவ திருப்பி கொடுத்திடலாமா? "கோலிக்காவ திருப்பி கொடுல.திருப்பி கொடுல " அப்படின்னு பாக்குற நேரம் எல்லாம் கேக்கறானே. காலைல கூட வெளாட்டுல சேத்துக்காம வெரட்டி விட்டுட்டானே. நேத்து ஜெயிச்சிருக்க வேண்டியது. சாண் போட்டா, வெரலு கோலிக்காவுல ஒட்டலன்னு நூல விட்டு காட்டி கோலிக்காவ எல்லாம் புடிங்கிக்கிட்டு விட்டுட்டானே.ம்ம்ம்.

அவங்க மாமா வாங்கி கொடுத்தாருன்னு கை நிறைய பல்லி முட்டாய வாங்கி வச்சிக்கிட்டு நேத்து முழுசும் பீத்திக்கிட்டு அலைஞ்சானே பீட்டரு. கொஞ்சம் குடுறான்னு கேட்டதுக்கு வீட்டுக்குள்ள ஓடினவன் வெளியே வரவே இல்லையே. இன்னிக்கு நாம வாங்கி, எங்க மாமா வாங்கி கொடுத்தாருன்னு சொல்லலாமா..

நேத்து கடைல புதுசா பிலிம் எல்லாம் வந்திருக்குன்னு குமாரு சொன்னானே. அவன் வாங்குன பிலிம்ல கூட ரஜினி படம் எல்லாம் இருந்திச்சே. பத்து பைசாவுக்கு பேசாம பிலிம் வாங்கி மத்யானம் படம் போடலாமா.

இப்படி பல யோசனைகளுடன் சாயங்காலம் தடியர் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். கடையில் கூட்டமே இல்லை. தடியர் சும்மா தான் உட்காந்து கொண்டிருந்தார். 'என்னல பொழுதடைய கடைக்கு வந்திருக்க' விசாரித்தார்.

'ஆமாண்ணே! எங்க மாமா வந்திருந்தாங்க. கைல காசு கொடுத்தாங்க. அதான் ஏதாவது வாங்கலாம்னு வந்தேன்' தடியருக்கு பதில் கூறிக்கொண்டே அவரது சின்ன பொட்டிக்கடையை மெதுவாக நோட்டம் விட்டேன். சட்டென்று ஒரு இடத்தில் கண் அப்படியே நின்று விட்டது. நீளமாக ஒரு பிலிம் சுருள் ஒரு அட்டையில் ஒட்டி வைத்திருந்தது. போனவாரம் பீட்டர் பக்கத்து ஊருக்கு படம் பார்க்க போய் நீளமா ஒரு பிலிம் சுருள் கொண்டு வந்தானே, அதே மாதிரி கடையில். 'இது எப்படிடா உனக்கு கிடைச்சது' என்று பீட்டரிடம் ஆச்சரியமாக கேட்ட போது, படம் அத்து போச்சுன்னு வெட்டி போட்டாங்க, எடுத்துட்டு வந்தேன்' என்றான். அதை வைத்து எங்கள் எல்லோரையும் ஒரு வாரமா அவன் வீட்டிலேயே காத்து கிடக்க வைத்தது நினைவுக்கு வந்து போனது.

'இது எவ்வளவுண்ணே' பத்து பைசாவாக இருக்கவேண்டும் என்று மனசுக்குள் வேண்டிக்கொண்டே தடியரிடம் கேட்டேன். 'அது காசுக்கு கெடையாதுல. கீழ இருக்குது பாத்தியா கட்டம் கட்டமா சீட்டு. பத்து பைசா கொடுத்து ஒரு சீட்டு கிழிச்சேன்னா, உனக்கு பிலிம் சுருள் விழுந்தா அது உனக்கு தான். ஒரு நம்பரும் வரலண்ணா ஒன்னும் கெடையாது'

பிலிம் சுருளை அவ்வளவு எளிதாக விட மனம் வரவில்லை. 'கிழிச்சி பாருல. ஒன்னோட ராசியையும் தான் பாப்போமே' கண்டிப்பாக கிழிப்பேன் என்று தடியருக்கு என் மூஞ்சை பார்த்தே முடிவுக்கு வந்து விட்டார். கையில் இருந்த காசை தடியர் கைல கொடுத்துவிட்டு ஒரு சீட்டை கிழித்து பார்த்தேன். ஏதோ படம் தான் போட்டிருந்தது. நம்பர் எதுவும் இல்லை. 'என்னண்ணே இது. நம்பர் மாதிரி தெரியலையே' அவரிடமே சீட்டை கொடுத்தேன். 'ஏல! ஒனக்கு ஜோக்கர் வந்திருக்கு. பரிசு ஒன்னும் விழல'. தடியர் எனக்கு எதுவும் கொடுக்காமலேயே எளிதாக என் பத்து பைசாவை அவர் கல்லாப்பெட்டியில் சேர்த்துக் கொண்டார். கையில் இருந்த பத்து பைசாவும் பறிபோனதில் நொந்த படி வீட்டுக்கு திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

வீட்டுக்கு போனதும் அம்மாவிடம் கேட்டேன் 'மாமா மறுபடி எப்போம்மா வருவாங்க'.

Friday, May 12, 2006

சாமி வருது...சாமி வருது

ஊர்சனம் மொத்தமும் அம்மன் கோவில் வேப்ப மரத்தடியில் கூடி இருந்தது. 'ஏல! நம்ம முத்துசாமி தாத்தா வரல பாரு. கூட்டி வாங்கல' சின்ன பசங்களை விரட்டிக்கொண்டிருந்தார் பண்ணை.

எல்லோரும் வந்தவுடன் பண்ணை ஆரம்பித்தார். 'சித்திரை வரப்போவுது. சுடலைக்கு கொடை நடத்தணும். வரி போடுறதுக்கு தான் எல்லாரையும் வரச் சொன்னேன்'.

'ரெண்டு வருசமா சாமி வரவே இல்ல. என்ன குத்தமோ தெரியல. அதான் இந்த தடவ கொடைய சிறப்பா செஞ்சிப்புடணும். என்னடே சொல்றீங்க. வரிப்பணம் கூட கொஞ்சம் ஆனா கூட பரவால்ல' முத்துச்சாமி தாத்தா கவலையோடு பேசிக்கொண்டிருந்தார்.

கொடை வரி 50 ரூபாய் என்று முடிவு செய்து, கொடைக்கான நாளும் குறித்தாகி விட்டது. "50 ரூபாய்ல கரகாட்டம்லா வருமாடே. பாத்து வரிய போடுங்கப்பா' கரகாட்ட ரசிகர் மன்ற தலைவர் துரை மாமா லேசாக சத்தம் கொடுத்துப் பார்த்தார். 'சும்மா கெடடே! போன தடவையே அவ ஆடுன ஆட்டத்துல வீடு ரெண்டு பட்டு போச்சு. வீட்ல கேட்ட திட்டு போதாதா. இந்த தடவை காசு இருந்தா திரை கட்டி ஒரு படம் போட வேண்டியது தான். கரகாட்டம் எல்லாம் இந்த தடவ கெடையாதுடே'.

'என்ன அதே கருப்பு-வெள்ள படம் தான. கொஞ்சம் கலரா போடுங்கடே'

'50 ரூவா வரில எங்கடே கலருக்கு போறது. ஆளுக்கு ஒரு கலர் கண்ணாடி போட்டுட்டு பாக்க வேண்டியது தான்'

ஊர் பண்டாரத்திடம் கொடைக்கு வேண்டிய பொருட்கள், விவரங்கள் கேட்டுக் குறித்து கொண்டார் பண்ணை. கூட்டம் கலைந்தது.

---

இப்படித் தாங்க ஆரம்பிக்கும் எங்க ஊரு கோவில் கொடை.

---

வியாழன் மதியம் உலகத்துக்கே கேக்கற மாதிரி குழாய்ல எல்.ஆர்.ஈஸ்வரி 'மாரியம்மா..எங்கள் மாரியம்மா' பாட ஆரம்பிக்கும் போது 'லே! செட் வந்துட்டுல' அப்படின்னு நாங்க எல்லாம் ஆடிக்கிட்டு இருக்கிற கோலிக்காவ அப்படியே போட்டுட்டு கோயிலுக்கு ஓடுவோம். வெளியூர்ல செட்டில் ஆகி கொடைக்கு மட்டும் வெள்ளையும் சுள்ளையுமா வரும் ஒரு கூட்டம் ஒன்னொன்னா மெதுவா வர ஆரம்பிக்கும். அவிங்க அள்ளிட்டு வர்ற ரெக்சோனா சோப்பையும் லக்ஸ் சோப்பையும் சொந்த காரனுவலுக்கு பங்கு வைக்கவே ராத்திரி ஆயிரும். அவிங்க ஆச்சி ஒரு சோப்ப எடுத்து மணிக்கணக்கா மணத்துக்கிட்டே 'யய்யா! ராசா. மெட்ராஸுல இந்த சோப்பு போட்டு தான் குளிக்கறியா. நல்லா வாசமா இருக்கு' (போ! ஆச்சி! எல்லாம் ஊருக்கு வரும் போது போடுற சோப்பு..சே! படம் தான். அங்கே ஊரே சேர்ந்து போட்டாலும் வருசம் புல்லா கல்லு மாதிரி உழைக்கும் லைபாய் தான்).

---

'ஏ! வில்லுப்பாட்டு ஆரம்பிச்சிட்டாவ. கெளம்புங்கடே' ஒரு பாய தூக்கிக்கிட்டு எல்லாரும் கெளம்ப ஆரம்பிப்பாங்க. மாயாண்டி கதையோ, அம்மன் கதையோ போய்கிட்டு இருக்கும். 'ஏண்டே! போன தடவையும் இவள தான கூட்டிட்டு வந்தீங்க. வேற ஆளே கெடைக்கலையா' நம்ம ஊரில் குசும்பு பண்ண நம்ம குரு மாமா. 'அத்தக்கிட்ட தான் கேக்கணும் மாமா. கேட்டுச்சொல்லவா' அப்புறம் குரு மாமா சத்தமே இருக்காது. அப்படியே சாமிக்கு அலங்காரம், சாம கொடைக்கு எல்லாம் போய்கொண்டிருக்கும்.

--

ராத்திரி பண்ணிரண்டு மணிக்கு சரியா சாம கொடை ஆரம்பிக்கும். ம்ம்..ரெண்டு வருசமா சாமி ஆடல. இந்த தடவையாவது சாமி வரணும்.. சாமி கும்பிட்டுக்கிட்டே இப்படி எல்லோரும் கவலையா யோசிச்சிக்கிட்டே இருக்கும் போது வேடிக்கை பாக்க வந்த அசலூரு காரர் ஒருத்தர் மெதுவா ஆட ஆரம்பித்தார். 'லே! அந்நா பாருங்கல. அசலூரு காரன் ஆடறான். புடிச்சி அமுக்குங்கல' பண்ணைக்கிட்ட இருந்து கட்டளை பறந்து வந்தது. பசங்க எல்லோரும் ஓடிப்போய் அவரை புடிச்சி அமுக்க ஆரம்பிச்சாங்க. சாமி ரொம்பவே வேகாமா, வெறித்தனமா ஆட ஆரம்பிக்க, 'அட வெளங்கா மட்டைங்களா. புடிச்சி அமுக்கச் சொன்னா. நீங்க அவன் கூட சேர்ந்து சாமி ஆடிக்கிட்டு இருக்கீங்க. நல்லா அமுக்குங்கல'. ஒரு வழியா வந்த சாமிய வெரட்டி உட்டுட்டு தான் மறு சோலி.

இதுக்கு காரணம் ஒன்னே ஒன்னு தாங்க. எங்க ஊருல சாமி ஆடுறவங்க தான் அடுத்த கொடை வரை வாரா வரம் கோயிலுக்கு பூஜை பண்ணணும். அசலூர் காரன் வந்து தவறாம பூச பண்ணுவானா?..அதுவும் அசலூர் காரன் பூசை போடுறதா..இப்படி ஏகப்பட்ட சிக்கல் இருக்கிறதால தான் இந்த ஏற்பாடு.

அப்புறம் மேளம் உச்சக்கட்டத்தில் அடிக்க, மெதுவாக எங்க ஊரு குட்டையரு ஆட ஆரம்பித்தார். 'லே! சாமி வந்துட்டுல' எல்லோர் முகத்திலும் தான் என்ன ஒரு சந்தோசம். மட மடவென்று சுடலை மாடனின் அங்கி மற்றும் தலைப்பாகை எல்லாத்தையும் ஒருவர் குட்டையருக்கு மாட்டி விடுவார். 'பந்தம்! பந்தம் ' ஆடிக்கிட்டே சாமி கேட்க கதகதன்னு எரியற தீப்பந்தம் ஒன்று சாமி கையில் கொடுக்கப்படும். ஒரு கையில் தீப்பந்தமும், மறு கையில் சூலாயுதமும் பிடித்துக்கொண்டு வெறியாக ஆடும் குட்டையரை பார்த்து நாங்க சின்ன பசங்க எல்லாம் ஒரு 10 அடி தள்ளி நின்னுக்குவோம்.

அடுத்த கட்டமா சாமி வாக்குச்சொல்ல ஆரம்பிக்கும். கையில் திருநீரோடு முன்னால் நிற்கும் ஒவ்வொருத்தருக்கும் திருநீறு கொடுத்து நல்வாக்கு சொல்ல ஆரம்பிக்கும். வாக்கு எல்லோருக்கும் உண்டு. கல்யாணம் ஆகாத பிரபாகர் அண்ணணுக்கு ஒரு தடவை சாமி வாக்குச் சொன்னது. அண்ணன் பௌயமா சாமி முன்னாடி போய் நிக்க, சாமி 'உனக்கு சம்சாரம்..சம்சாரம்' என்று தெக்க கைய காட்ட...

'ஏல! சாமி உனக்கு பொண்ணு தெக்க தான் இருக்குன்னு சொல்லுதுல'

'தெக்க என்ன இருக்கு. சுடுகாடு தாம்ல இருக்கு' நம்ம குசும்பு குரு மாமா.

'போ மாமா! அத்த ஊரு பூச்சிக்காடும் தெக்க தான இருக்கு'

'போல! பூச்சிக்காட்டுல பொண்ணு எடுக்கறதுக்கு, பேசாம நீ சுடுகாட்டுக்கே போலாம்டே'

--- இப்படி சாமி வாக்கு சொல்லும் போது ஏகப்பட்ட சுவாரஸ்யம் இருக்கும்.

அப்புறம் சாமி ஊர்வலம் கிளம்பும். ஒரு கொட்டுக்காரனை கூட்டிக்கிட்டு நாங்க ஒரு கூட்டம் பின்னாடியே போவோம். ஒவ்வொரு தெரு தெருவா சாமி வலம் போய்ட்டு, மொத்த ஊரும் சுற்றியவுடன் கோவிலுக்கு திரும்பும்.

------------------

அடுத்த நாள் காலைல ராத்திரி வெட்டின கிடாவ வரிப் பங்கு போட்டு, 'ஏல! எனக்கு எலும்பா அள்ளி போட்டுட்டு அவனுக்கு மட்டும் கறியா அள்ளிப் போட்டிருக்கீங்கல. எவம்ல பங்கு வைக்கிறது. எடுல அந்த அருவாள?' அப்படின்னு அன்பா கொடைய முடிக்கலைனா அன்னைக்கு எவனுக்கும் தூக்கம் வராது. மதியம் நல்லா கறிச்சோறு தின்னுப்புட்டு அன்னைக்கு ராத்திரி 'ஆயிரத்தில் ஒருவன்' திரையில் பார்க்க ரெடியாகிக் கிட்டு இருப்போம்.

Sunday, April 16, 2006

சிலுப்பி

நட்சத்திர வாரத்தில் எங்க ஆடு கதை (கருப்பன்) ஒன்னு பார்த்தேம். இப்போ கோழி கதை ஒன்னு..

எங்க வீட்டுல ஆட்டு கூட்டத்தை விட கோழி தான் அதிகம். காலைல நம்மள எழுப்பி விடறதே வீட்டுக்கொரு சாவல் (சேவல்) தான். காலைல எழுந்து கூட்டை தொறந்து எல்லாத்தையும் பத்தி விடறது தான் முதல் வேலை. அப்புறம் அதுங்களுக்கு தவிடு வாங்க ஒரு சாக்கு பைய எடுத்துட்டு கெளம்புவேன். தவிடு வாங்க ரெண்டு எடத்துக்கு போகலாம். ஒன்னு அடுத்த ஊர்ல இருக்கற ரைஸ் மில். இல்லன்னா பக்கத்து ஊர்ல நெல் அவிப்பாவ. அங்கண போய் அள்ளிக்கிட்டு வந்துறலாம் (காசு கொடுத்து தான்).

நான் மொதல்ல ரைஸ் மில் தான் போவேன். காரணம். அங்கே குமிஞ்சி கெடக்குற உமி மலைல ஏறி வெளாட தான். போனவுடனே ரைஸ் மில் ஓனர் இருக்கறான்னு பாக்கறது. அண்ணாச்சி இல்லன்னா, அந்தாக்க பைய போட்டுட்டு ஒரே வெளாட்டு தான். ஒடம்பெல்லாம் சுள்ளு புள்ளுன்னு உமி குத்தும். ஆனா மேல ஏறி சர்னு உருண்டு விழுற சொகம் இருக்குதே. 'ஏல! குமிச்சி போட்டதை எல்லாம் சரிச்சிட்டியலே' அப்படின்னு வெறட்டி விடற வரைக்கும் வெளாட்டு தொடரும். அப்புறம் பைல தவிட்ட அள்ளிக்கிட்டு எடை பார்த்து காசு கொடுத்துட்டு வந்திருவோம்.

அங்கண இல்லன்னா, அடுத்தால இருக்கற மணிநகர் போவோம். அங்கே நெல் அவிக்கறது தான் குடிசை தொழில். பெரிய அண்டா வச்சி, உமி அள்ளி போட்டு அவிப்பாங்க. பல்லு வெளக்க உமிக்கரி அள்ளவும் அங்கண போறதுண்டு. நமக்கு தெரிஞ்ச நாலு அக்கா வீடு உண்டு. போய்ட்டு தவிடு இருந்தா படி வச்சி அளந்து கொடுப்பாவ. அளக்கறதா..படிக்கு பாதி தான் தேறும். 'நல்லா அமுக்கி அளங்கக்கா' அப்படின்னு சொன்னாலும் அமுக்கற மாதிரி ஒரு ஆக்ட் கொடுத்துட்டு காத்த அளந்து காசு பாத்திருவாவ. ஆனா நல்ல மனசு காரவிய. பாசமா பேசுவாவ. 'யக்கா! ஒரு நல்ல அரிப்ப போட்டு அரிக்க கூடாது. இப்படி உமியா அள்ளி கொட்றியலே, எங்க கோழி விக்கி செத்துறாது' அப்படின்னு கேட்டா 'படிக்கு 5 பைசா கொறச்சிக்கடே' அப்படின்னு ஆடி தள்ளுபடி எல்லாம் உண்டு.

அம்மா நல்லா நீத்தண்ணி ஊத்தி தவிட்ட கொழச்சி வச்சதும் கோழி எல்லாம் காலைல சாப்பிட ஓடி வந்திரும். அப்புறம் 'டேய்! அந்த வெள்ள கோழி இன்னிக்கு முட்டை விடணும். புடிச்சி கூட்டுல அடச்சி போடு' அப்படின்னு அம்மாகிட்ட ஒரு முட்டை போடுற கோழி பட்டியல் இருக்கும். அத வெரட்டி புடிச்சி கவுத்தறதுக்குள்ள போதும் போதும்ணு ஆகிடும். இல்லன்னா நம்ம வீட்டுல தின்னுட்டு பக்கத்து வீட்டுல முட்டைய போட்டுடும். முட்டைல என்ன பேரா எழுதி இருக்கு. அப்புறம் ஒரு முட்டைக்காக வெட்டு குத்தா போயிடும். சில கோழிங்க சமத்தா அதுவாவே போய் முட்டைய போட்டுட்டு போய்டும். சிலதுங்க 'டேய்! நான் கஷ்டபட்டு முட்ட போடுறது நீங்க ஆம்லேட் போட்டு திங்காவா' அப்படின்னு கைய கொண்டு போனாலே கூட்டுக்குள்ள கெடந்து கொத்தும். கோழி உர்ருன்னு கெடந்தா, அது அடைக்கு கெடக்குதுன்னு அம்மா சொல்லுவாங்க. அடை காக்க முட்டை இருந்தா தான. எல்லாம் ஆம்லேட்டா போச்சே. சில கோழிங்க ரொம்ப வெவரமானதுங்க. இப்படி போடுற முட்டை எல்லாம் நாசமா போறத பொறுக்க முடியாம, காட்டுக்குள்ள நமக்கே தெரியாம ஒரு புதரை கண்டுபுடிச்சி அங்கணயே முட்ட விட ஆரம்பிச்சிரும். இங்கே வீட்டுல 'அந்த கருப்பு கோழி மூனு வாரமா முட்டையே போடல. என்னான்னு தெரியலையே. வருது. திங்குது. ஓடிருது'ன்னு பொலம்பிகிட்டு இருப்பாங்க. அப்புறம் ஒரு நாள் கொழந்த குட்டியோட கோழி வீட்டுக்கு வரும் போது தான் தெரியும், கோழி நமக்கு அல்வா கொடுத்துட்டுன்னு (திருநெல்வேலி கோழில்லா).

இந்த கோழி அடை வைக்கிறதே நமக்கு ரொம்ப சந்தோசமான விசயம். நான் தேரில போய் குருத்து மண் அள்ளிட்டு வந்தா, அம்மா ஒரு மண் அண்டாவுல கொட்டி சேர்த்து வச்சிருந்த முட்டைய எல்லாம் அடுக்கி அடைக்கி கெடக்கிற கோழிய புடிச்சி ஒரு 21 நாள் அடச்சி போட்டுருவாங்க. அதுவும் சந்தோசமா ஒக்காந்துக்கிடும். சில நேரம் கின்னி கோழி, வான் கோழி முட்டை எல்லாம் சேர்த்து வச்சிடுவோம். கோழிக்கு அது முட்டைக்கும், வான் கோழி முட்டைக்கும் வித்தியாசம் தெரியாது. குஞ்சு பொறித்தவுடன் தான் தாய் கோழி முழிக்கும். என்னடா இது வித்தியாசமா இருக்கு என்று. காக்கா கூட்டுல குயில் முட்டை மாதிரி தான். வெளிய போய்ட்டு வந்த காக்கா 'என்னடா திடீர்னு ரெண்டு முட்ட எக்ஸ்ட்ரா இருக்குன்னு குழம்பினாலும், அடை காக்கும். அப்புறம் குயில்னு தெரிஞ்சதும், காக்கா கூட்டம் முழுசும் சேர்ந்து அந்த குயில் குஞ்சை ஓட ஓட வெறட்டும். இது அடிக்கடி நடக்கும். கோழிய விட்டுட்டு காக்காவுக்கு வந்துட்டேன்.. :-).

கோழி குஞ்சு என்றால் எனக்கு ரொம்ப புடிக்கும். குட்டியா, க்யா..க்யான்னு கத்திக்கிட்டு, பட்டு போல முடியோட. அதனால மூனாவது வாரம் வந்தவுடனே ஒவ்வொரு முட்டையா மூக்கு குத்திருக்கா என்று எடுத்து பாக்கறது. உள்ளே இருந்து கோழி குஞ்சு தன் அலகால் சின்னதா ஒரு ஊசி அளவுக்கு துளை போட்டு வச்சிருக்கும். அது இல்லனா அது கூ முட்டையா போச்சின்னு அர்த்தம். கூ முட்ட அப்படின்னு திட்டறதுக்கு இது தான் அர்த்தம் :-).

இப்படி தான் ஒரு தடவை அடைக்கு வைக்கும் போது, ஒரு வெளங்காத கோழி ஒரு வாரம் ஒக்காந்துட்டு அப்புறம் ஒக்கார மாட்டேன்னு ஒரே அடம். ஐயோ! முட்டை எல்லாம் கெட்டு போய்ருமே அப்படின்னு அம்மாவுக்கு ஒரே கவலை. இனி அதை ஆம்லேட்டும் போட முடியாது. நம்ம சிலுப்பி கோழிய புடிச்சி போடலாம்ணு சொன்னா, அம்மாவுக்கு இஷ்டமே இல்ல. 'அது ஒரு குருட்டு கோழில. அதுக்கு பறக்க சுத்தமா ரெக்கை கெடையாது. அப்புறம் எல்லாத்தையும் பருந்துக்கும் காக்காவுக்கும் கொடுத்திரும்ல' அப்படின்னு சொன்னாங்க.

சிலுப்பி. சின்னதா இருக்கும் போதே ஒரு நாய் வாய்க்குள் போய் தப்பித்து வந்தது. அதில் ஒரு கண் சுத்தமாக போய்விட்டது. பாதி உலகம் எப்பவுமே இருட்டு தான் அதுக்கு. வலது பக்கம் இருந்து எது வந்து கொத்தினாலும், பாவம். கொத்து பட்டதுக்கு அப்புறம் அலறிக்கிட்டு ஓடும். முடியெல்லாம் சிலுப்பிகிட்டு இருக்கும். ரெக்கைல முடி ரொம்ப கம்மி. அதனால் அதுக்கு சுத்தமாக பறக்க முடியாது. ஓட தான் செய்யும். ஒரு தடவை ஊர்ல கீரி புள்ளைங்க (அணில் மாதிரி பெரிசா இருக்கும்) ரொம்ப அட்டூழியம் பண்ண ஆரம்பிச்சிட்டுதுங்க. ராத்திரி நேரே கோழி கூட்டில் போய் ஒரு கோழிய தூக்கிட்டு போய்டும். ஊர்ல எல்லோரும் அதோட அட்டூழியம் தாங்க முடியாம, கோழிய புடிச்சி புளிய மரத்துல ஏத்தி விட்டுருவோம். கீரி புள்ள கோழி கூட்டுல பாத்துட்டு ஏமாந்து போய்டும். அப்போ எங்க வீட்டுல எல்லா கோழியும் இருட்டின வுடனே பறந்து போய் மரந்துல ஒக்காந்து தூங்க ஆரம்பிச்சிடும். ஒக்காந்துக்கிட்டே எப்படி தான் தூங்குதோன்னு நான் நிறைய தடவை யோசிப்பேன். அப்புறம் சென்னைக்கு வந்தப்புறம் தான் தெரிஞ்சது, டவுன் பஸ்ல நின்னுக்கிட்டே தூங்கற கில்லாடிங்க எல்லாம் இருக்கறாஙன்னு. நம்ம சிலுப்பி மரத்த சுத்தி சுத்தி வரும். குதிச்சி குதிச்சி பாக்கும். உயிர் பிரச்சினை இல்லையா. ம்ம்ம்ம்..ஒன்னும் வேலைக்காகாது. அப்புறம் நான் தான் அதை தூக்கிக்கிட்டு மரத்துல ஏறி ஒரு கிளைல விட்டுட்டு வருவேன்.

அதனால தான் அம்மாவுக்கு சிலுப்பி மேல நம்பிக்கையே இல்ல. வேற எந்த கோழியும் அடைக்கும் இல்லன்னு என்பதால் சிலுப்பிக்கு அடித்தது அதிஷ்டம். அதுவும் சமத்தாக அடை காத்தது. வைத்த எல்லா முட்டையும் குஞ்சு பொறித்தது. அம்மாவுக்கு ஒரே சந்தோசம். இருந்தாலும் ஒரே கவலை, இதுல காக்கா வாயிலையும் பருந்து வாயிலையும் போய் மிச்சம் எத்தனை தேறும் - என்று.

சிலுப்பி, தன் குஞ்சுகளை கூட்டிக்கொண்டு அழகாக மேய செல்லும். அடுக்கடி தன் தலையை திருப்பி தெரியாத பக்கத்தையும் நோட்டம் விட்டுக்கொள்ளும். ஒக்கார மதி அத்து ஓடிப்போன அந்த வெள்ள கோழி நைசா ஒரு ரெண்டு குஞ்சுகளை கூட்டிக்கிட்டு சுத்தியது. அதை பார்த்த சிலுப்பி சண்டை போட்டு அதை விரட்டி விட்டு தன் குஞ்சுகளை கூட்டிக்கொண்டது. பக்கத்தில் யார் போனாலும் கொத்து தான்.

ஒரு நாள், 'ஓ' வென்று அம்மா குரல் கொடுக்க அத்தனை குஞ்சுகளும் செடி புதர்களை நோக்கி ஓட்டம் எடுத்தது. அவைகளுக்கு தெரியும் அது பருந்து வருதுன்னு எச்சரிக்கை என்று. சிலுப்பி தலையை சாய்த்து மேலே பார்த்தது. நொடிப்பொழுதில் ஒரு குஞ்சை காலில் பற்றிக்கொண்டு பருந்து மின்சார கம்பி மீது போய் அமர்ந்து கொண்டது. 'இந்த வெளங்காத கோழிய அப்பவே வேணாம்னு சொன்னேனே' அப்படின்னு அம்மா புலம்ப, அடுத்த நொடியில் சட்டென்று தன் ரெக்கையை அடித்து பறந்த சிலுப்பி, கம்பியில் இருந்த பருந்தை தட்டி விட, அதை எதிர் பார்க்காத பருந்து காலில் இருந்த குஞ்சை தவற விட்டது. தன் இரையை தவற விட்டு சிலுப்பியை பார்த்து பயந்து பருந்து பறந்து விட்டது. மேலே இருந்து குதித்து, தன் குஞ்சுகளோடு நொண்டி கொண்டே நடந்து வந்தது சிலுப்பி, தன் குழந்தையை காப்பாற்றிய பெருமிதத்துடன்.

Friday, March 31, 2006

கல்லூரியில் கத்திக்குத்து

முதன் முதலாக சென்னை வாசம். எங்க கிராமத்துல பி.எஸ்.சி முடிச்சதுக்கப்புறம் கெடைச்சது சென்னையில் M.I.T-ல ஒரு சீட். அதுவரைக்கும் திருநெல்வேலிய தாண்டி கூட வந்தது இல்லை. இதுல வேற என் அண்ணன் வேற கடுதாசி போட்டு 'எலே! அங்கண கொஞ்சம் ராகிங் இருக்கும். பாத்து நடந்துக்கல' அப்படின்னு லேசா மிரட்டி அனுப்பினான். ராகிங்கா...அப்படின்னா..எவனுக்கு தெரியும். கடவுள் மேல பாரத்த போட்டுட்டு போய் சேர்ந்தேன். முதல் நாளே என்னிய ஹாஸ்டலில் தள்ளி விட்டுட்டு அப்பா நெல்லை எக்ஸ்பிரஸ்ஸ புடிச்சி ஊர் போய் சேர்ந்துட்டாங்க. வாழ்க்கைல தன் முதலா ஹாஸ்டல் வாசம் வேற. எங்க அறையில் மூன்று பேர். எல்லாம் நம்ம மாதிரி கிராமம் தான்.

'வெளியே எங்கயும் போனா சீனியர் புடிச்சுக்குவானுங்க'அப்படின்னு எல்லா பயலுவலும் எச்சரிக்கையா ரூமுக்குள்ளேயே கொடக்குறானுவ. திடீர்னு எங்க ஹாஸ்டல்ல ஒரே பரபரப்பு. எல்லா பயலுவலும் ஓடி ஒளியறானுங்க. மொத்தமா சீனியர் பயலுவ எல்லாம் ஹாஸ்டல்ல புகுந்து மாட்ட புடிக்கிற மாதிரி எங்களை எல்லாம் மொத்தமா பத்திக்கிட்டு வெளியே கூட்டிட்டு போனானுங்க. நான் ஒரு கும்பல் கிட்ட மாட்டினேன். என்னிய அந்த கும்பல் அப்படியே ஹாஸ்டலுக்கு வெளியே தள்ளிக்கிட்டு போச்சு. ராத்திரி 11 மணி. துணைக்கு என் ரூம் மேட் செந்திலும்.

அதுல ஒருத்தன் ஆரம்பிச்சான் 'என்ன! பர்ஸ் இயரா'. அதான்!நாங்க முழிக்கிற முழியிலேயே தெரியுதுல்லா. அப்புறம் என்ன கேள்வி. 'ஆமாண்ணே! பர்ஸ் இயர் தான். இன்னிக்கு தான் சேர்ந்தேண்ணே' பவ்யமா பதில் சொன்னேன். 'டே! என்னா இது 'அண்ணே' அப்படின்னுகிட்டு. சீனியர்னு தான் சொல்லணும். தெரிஞ்சிதா' கடுப்பகிப் போன ஒரு அண்ணன். எங்க ஊருல எல்லாம் காலேஜ்ல அண்ணேன்னு தான் கூப்பிடுவோம். அத இந்த பயலுவகிட்ட சொன்னா புரியுமா. 'சரிண்ணே' இப்படி பதில். 'டே! என்னா நக்கலா. நீ என்னா எந்தம்பியா'. ரொம்ப நாளா அண்ணேன்னு தான் பாசமா கூப்பிட்டுக்கிட்டு இருந்தேன். நாம எல்லாம் பாசக்கார பயலுவ இல்லையா.

அப்படியே என்னிய தள்ளிக்கிட்டு வெளியே இருக்குற டீக்கடைக்கு போனது கூட்டம். அடப்பாவிங்களா ரெண்டு பேர ராகிங் பண்ண இருபது பேரா. அடுக்குமாடா. போன உடனே ரெண்டு பேருக்கும் ஓசில டீ வாங்கி கொடுத்தானுவ. மொத நாளே ஓசில டீ எல்லாம் வாங்கி தாராணுவலேன்னு நம்ம மனசே குளுந்து போச்சு. அப்புறம் தான் வெனையே ஆரம்புச்சுது. டீக்கடைல சத்தமா தேவா கானா பாட்ட ஓட விட்டு ரெண்டு பேரையும் ரோட்டுல ஆட சொன்னானுவ. 'லே! ஒரு டீக்கு இப்படி நடு ரோட்டுல ஆடுறதுக்கு நான் என்ன கழைக்கூத்தாடியால' அப்படின்னு எங்களை நொந்து கொண்டே 'டண் டண் டண்..டணக்கு டணக்கு' அப்படின்னு ரோட்டுல ஒரு குத்தாட்டம் போட்டோம். அந்த ராத்திரியிலையும் அதை பார்க்க பொதுஜனமெல்லாம் கூடிடிச்சு. 'அண்ணே! ஒரு இளையராசா பாட்டாவது போடுங்கண்ணே' அப்படின்னு கேட்டுப் பார்த்தேன். ஹும்..நாம என்ன டூயட்டா பாட போறோம். ஆடுங்கடா அப்படின்னு மறுத்துட்டானுவ. அப்புறம் என்ன ஒரு அரை மணி நேரம் 'டணக்கு டணக்கு' தான்.

அப்புறம் காலைல ரொம்ப சாக்ரதையா பார்த்து பார்த்து வெளியே வந்தேன். ஒரு எரும என்னிய பாத்துட்டு. 'டே! எங்க போற!. எப்படிக்கீற! காத்தால நாஸ்டா துண்ட்டியா' அப்படின்னு ஒரு கேள்வி. எனக்கு கிர்ருன்னு தலை சுத்திச்சு. வெளி மாநில கோட்டாவுல வந்தவனுங்ககிட்ட மாட்டிக்கிட்டேனே. இங்கிலீசும் தெரியாதே அப்படின்னு முழிச்சிக்கிட்டு நின்னேன். அப்போ என்னிய காப்பாத்த வந்தவரு தான் இந்த கத்திக்குத்து. 'லே! எந்த ஊருல' அப்படின்னு ஒரு வார்த்தைக்கே 'அண்ணே! நீங்க நம்ம ஊருங்கலா. நல்லாருப்பிய. இந்த அண்ணே ஏதோ கேக்கறாவ. புரியாம நிக்குறேண்ணே' அப்படின்னு பக்கத்தில போய் உரிமையா உக்காந்தேன். 'லே! எந்திரில. சீனியர் முன்னாடி ஒக்கார்ற' அப்படின்னு திட்டினப்போ தான் தெரிஞ்சது அண்ணன் தான் அங்கே ராகிங்ல பெரிய ஆளுன்னு. தெரியாம வழில போற மூதேவிய வெத்தள பாக்கு வச்சு அழைச்சிட்டோமோன்னு தோணிச்சு.

'இவரு யாரு தெரியுமா. கத்திக்குத்து' அந்த மெட்ராஸ் சொன்னது. 'ஓ! அது நீங்க தாணாண்ணே! பயலுவ ஒங்கல பத்தி கத கதயா சொன்னானுவ' அப்படின்னு நெனைச்சிக்கிட்டு, அடுத்த ஆட்டத்துக்கு தயாரானேன். அண்ணாச்சி பேர கேட்டா, எப்படி சொல்லணும் தெரியுமா. நம்ம நாக்க மடக்கி கடிச்சிக்கிட்டு, கண்ண உருட்டிக்கிட்டு, ராமநாராயணன் படம் கிளைமாக்ஸ்ல வர்ற அம்மன் மாதிரி கைய வச்சி போஸ் கொடுத்துக்கிட்டு 'கத்த்த்திக்குத்து' அப்படின்னு ஓங்கி சொல்லணும். இது எங்க கல்லூரில ரொம்ப பேமஸ் அப்போ. கத்திக்குத்துன்னா எல்லோரும் ஓடுவானுவ. இப்படி ஒரு தடவ சொல்லலாம். ஒரு நாள் என்னிய கல்லூரி வாசலில் விட்டு 50 தடவ சொல்லுல அப்படின்னு விட்டுட்டானுவ. கத்திக்குத்து கத்துக்குத்துன்னு கத்தி கத்தி, கண்ணுமுழி எல்லாம் பிதுங்கிப் போச்சு. போற வர்ற புள்ளைங்க எல்லாம் என்னை பாத்து 'சாமி! எறங்கிடுச்சு போல' அப்படின்னு ஒரு மாதிரி சைடு வாங்கி போச்சுதுங்க. மவனே! அன்னிக்கு எங்கைல கத்தி ஒன்னு தான் இல்ல. இல்லன்னா ராமநாராயணன் படம் க்ளைமாக்ஸ் தான்.


'சரி! அந்த பொண்ணு போறால்லா. அவகிட்ட போய் அவ பேரு என்னான்னு கேட்டுட்டு வா' அப்படின்னு என்னிய தொரத்தி விட்டுட்டாரு கத்திக்குத்து. 'அடப் பாவிமக்கா ! முன்ன பின்ன தெரியாத புள்ளைக்கிட்ட பேர கேட்டு அடி வாங்கி கொடுத்துருவிய போல' அப்படின்னுக்கிட்டே அந்த பொண்ணுக்கிட்ட போனேன். அது என்னிய பார்த்ததும் எவனோ சீனியர்னு நெனைச்சு அது திரு திருன்னு முழிக்க, நானு கேக்க வந்தத கேக்கமுடியாம முழிக்க, ஒரு வழியா கேட்டு வந்தேன். 'சரில! அந்த பொண்ண இங்கண வரசொல்லுல' அடுத்த கட்டளை. நீங்க கடலை போடுறதுக்கு உதவி செய்ய நான் தான் கெடச்சேனா. அப்புறம் ஒரு இலைய பறிச்சி 'லே! இதுல எத்தனை இலை இருக்குன்னு எண்ணுல' அப்படின்னு பெரிய பொறுப்பை கொடுத்துட்டு வறுக்க ஆரம்பிச்சுட்டார். 'அண்ணே! ஏதோ தீயிற மாதிரி வாசனை வருது' அப்படின்னு கேட்க ஒரு பிடி மண்ணை அள்ளி என்னிய எண்ணுல அப்படின்ன்னு விட்டுட்டாவ. இப்படி ஏதாவது புள்ளைங்க மாட்டினா, நாம தப்பிச்சிக்கலாம். ஒரு பொண்ணு வந்துட்டா அப்புறம் நாம சீனியர் கண்ணுக்கே தெரிய மாட்டோம்.

ஒரு நாள் ராத்திரி எதோ அசோசியேசன் வேலை அப்படின்னு ராத்திரி மறுபடி அந்த கூட்டம் வந்து எங்களை தள்ளிக்கிட்டு போனது. அதுல ஒருத்தன் ஜூனியர் மாதிரி என்னிடம் வந்து பயந்து பேச, நானும் அவனை நம்ம ஜாதி தான்னு நெனச்சி, கொஞ்சம் தைரியம் வந்து 'லே! அந்தா இருக்கானுங்க பாரு. சீனியர்னு சொல்லிக்கிட்டு. எல்லாம் கிறுக்கு பயலுவ' அப்படின்னு ஏடா கூடமா பேசி வச்சேன். காலைல தான் தெரிஞ்சது அவன் இறுதி ஆண்டு சீனியர்னு. அப்புறம் என்ன..அன்னைக்கு ராத்திரி அதே டீக்கடை..அதே பாட்டு..அதே 'டணக்கு டணக்கு' தான். அப்புறம் வாய தொறக்குறதே இல்ல.

இதுல சூப்பர் சீனியர்னு ஒருத்தர் உண்டு. அது என்ன சூப்பருன்னு கேக்கறியலா. நமக்கு ஒரு நம்பர் இருக்கும் இல்லையா. அதே நம்பர்ல இருக்குற ரெண்டாவது வருசம் படிக்கிற ஆண்ணாச்சி/அக்கா தான் நம்ம சீனியர் (பரம்பரை மாதிரி). அப்புறம் எல்லாத்துக்கு மேல அதே நம்பர்ல கடைசி வருசதுல ஒரு அண்ணன் இருப்பாரே, அவரு தாங்க சூப்பரு. அவர பாக்குறதுக்கு முட்டாய்/கேக் எல்லாம் வாங்கிட்டு போய் பாக்கணும். நான் என்னோட சூப்பர பார்த்ததே இல்ல. சூப்பர பாக்கலண்ணா பெரிய குத்தம் மாதிரி. அப்புறம் அடிக்கடி ஆட வேண்டிவ வரும். என்னோட சூப்பரு பேரு/அறை எண் எல்லாத்தையும் விசாரிச்சு, இருந்த காசுல ஒரு அரைக்கிலோ முட்டாய் வாங்கிக்கிட்டு ஒரு நா ராத்திரி போனேன். அங்கே அறைக்குள்ள ஒரு மூனு பேரு. நாமலே போய் மாட்டினா விடுவானுங்களா. அதுல என்னோட சூப்பரு யாருன்னு வேற தெரியல. 'என்னடா! முட்டாயா! கொண்டா கொண்டா. உன்னோட சூப்பர் சீனியர பாக்க வந்தியா. நான் தான் அது' அப்படின்னு முட்டாய வாங்கி மூனும் தின்னுட்டுதுங்க. அப்புறம் தான் தெரிஞ்சது அதுல என்னோட சூப்பரே இல்லன்னு. தின்னுட்டு 'ஹி..ஹி' ந்னு ஒரு சிரிப்பு வேற. இன்னொரு அரைக்கிலோவுக்கு காசுக்கு நான் எங்கடா போவேன்னு என்னிய நானே நொந்துக்கிட்டேன்.

அப்புறம் தாங்க அந்த பரிதபமான நாவரசு கொலை நடந்துச்சு. அப்புறம் கல்லூரில ஏகப்பட்ட கெடுபுடி. ராத்திரி சீனியர் ரூம்ல ஜூனியரை பாத்தாங்கண்ணா பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிட்டாங்க. அப்புறம் சீனியருங்க எல்லாம் எங்களை பாத்தா தல தெரிக்க ஓடுவானுவ. தெரியாம அவனுங்க ரூமுக்கு போய்ட்டோம்னா 'யய்யா! ராசா! தயவுசெஞ்சு போய்ரு ராசா!' அப்படின்னு கை எடுத்து கும்பிடுவானுவ. யானைக்கு ஒரு காலம்னா, பூனைக்கும் ஒரு காலம் வருது பாத்தியலா.

இப்படியே ஒரு வருசம் ஓடிப் போச்சு. ரெண்டாவது வருடம். எங்கள் வகுப்புக்கு போனா அங்கே நம்ம கத்திக்குத்து அண்ணன் சோகமா ஒக்காந்துகிட்டு இருக்காரு. 'யண்ணே! இங்கே எதுக்கு ஒக்காந்து இருக்கிய.வகுப்பு மாறி வந்துட்டியலா' அப்படின்னு போய் விசாரிச்சேன். 'அட! போடே. விசயம் தெரியாத மாதிரி பேசாத. அதான் போன வருசம் என்னிய ராகிங் பண்ணும் போது புடிச்சி ஒரு வருசம் சஸ்பெண்ட் பண்ணிட்டாவல்லா. இனி மறுபடி ரெண்டாவது வருசம் உங்க கூட தான் படிக்கணும்' பாவமாய் கத்திக்குத்து. 'நெலமைய பாத்தியலா அண்ணே! எங்களை ராகிங் பண்ணிட்டு, இப்போ எங்க கூட படிக்கிற மாதிரி ஆகி போச்சு. பாத்துண்ணே! இந்த வருசமாவது கத்திய தூர தூக்கிப் போட்டுட்டு நல்ல புள்ளையா இரு. அப்புறம் அடுத்த வருசம் ஒன்னிய நாங்கெல்லாம் ராகிங் பண்ணுற மாதிரி ஆகிட போவுது'. 'ஆமாண்டே! என்னிய மறுபடி மொத வருசத்துல தூக்கி போட்டாலும் போட்டுவானுங்க' நொந்து போய் சொன்னார் கத்துக்குத்து.

Friday, March 17, 2006

கிராமத்து மணம் - 4 ( கொடுக்காப்புளியும் கிளியும்)

நம்ம ராகவன் பதிவுக்கு பதிவு கொடுக்காப்புளி கொடுக்காப்புளி என்கிறார். சரி! நம்ம கொடுக்காப்புளி புராணம் ஒன்ன எடுத்து விடலாம்னு தான் இந்த பதிவு. எங்க ஊரிலயும் ஒரு கொடுக்காப்புளி மரம் உண்டு. ரொம்ப பெரிய மரம். யாராலயும் ஏற முடியாத அளவுக்கு உயரம். அப்படி ஒரு ஏக்கருக்கு படர்ந்து கிடக்கும். காலைலயே கனி ஆச்சி வீட்டுக்கு பால் வாங்க போகும் போது, அப்படியே தூக்குச் சட்டிய வச்சிட்டு மரத்த சுத்தி சுத்தி வருவோம். ஏதாவது கொடச்சுதுன்னா, நாம தான் இன்னிக்கி மொத ஆளுன்னு நெனைச்சிக்கலாம். ஒன்னுமே கீழே இல்லன்னா, ஏதோ ஒன்னு நமக்கு முன்னாடியே வந்துட்டு போய்ட்டுன்னு நெனைச்சிக்கலாம்.

கொடுக்காப்புளி அவ்வளவு ருசியா இருக்கும். முத்து முத்தா, வெள்ளையா அத பாக்குறதுக்கே நல்லா இருக்கும். ஆனா கைக்கும் நம்ம சொரண்டி கம்புக்கும் எட்டாத உயரத்துல கெடக்கும். மரத்துல ஏறி ஓடிப்பிடிச்சி வெளையாண்ட காலம். கை வழுக்கி தொப்புன்னு மேலே இருந்து விழுந்தா டவுசர தொடச்சிட்டு மறுபடி மரத்துல ஏறி தாவிக்கிட்டு இருப்போம். 'கொரங்கா பொறக்க வேண்டியதுங்க எல்லாம் மனுசனா பொறந்துட்டுதுங்க' என்று பெரிசுங்க எல்லாம் நாங்க போடுற கூச்சல் தாங்க புடியாம திட்டுவாங்க. ஆனா எங்களால அந்த கொடுக்காப்புளி மரத்துல ஏற முடியாது. அவ்வளவு பெரிய மரம். இல்லன்னா ஒரே நாளில் மரம் மொட்டையாகி விடும். அனைச்சி புடிச்சாலே மூனு பேரு சேர்ந்து புடிக்கணும்.

சரி! ஏறவும் முடியாது. கம்பு வச்சி பறிக்கவும் முடியாது. அப்புறம் என்ன தான் வழி. ஒரே வழி தாங்க. தானா விழுந்தா வுண்டு. வெளையாட்டு எல்லாமே அங்கே தான். டப்புன்னு ஒரு சத்தம் கேட்டுட்டா எல்லோரும் அலறி அடிச்சிக்கிட்டு ஓடிப் போய் பார்ப்போம். 'எங்கல விழுந்திச்சி' அப்படின்னு தேடு தேடுன்னு தேடி எடுத்து பங்கு போட்டுக்குவோம். சில பேர் கெடைச்சவுடனே அப்படியே நைசா வீட்டுக்கு ஓடிருவானுங்க. அப்புறம் அவனை அடுத்த வாட்டி வெளாட்டுக்கு சேத்துக்கிறது இல்ல. 'லே! நீ கொடுக்காப்புளிய கொடுக்காம ஓடிட்டால்லா! ஒன்னிய வெளாட்டுக்கு சேத்துக்கமாட்டோம்' என்று வெரட்டி விட்டுடுவோம். அப்புறம் அவன் போய் அவங்க அம்மாவ கூட்டி வந்து, எங்களுக்கெல்லாம் திட்டு வாங்கி கொடுத்து, எங்க தாத்தாவையும் களத்துல எறக்கி விட்டு பெரிய சண்டைல போய் முடிஞ்சிரும்.

தானா விழுவதை தவிர, ஒரு ஆள் மட்டும் எங்களுக்கு பறித்து போடுவார். அது காட்டுக் கிளி. கிளி எல்லாம் காட்டுல மேஞ்சிட்டு சாயங்காலம் எங்க ஊர தாண்டி தான் பறந்து போகும். கொடுக்காப்புளி மரத்துக்கு கிளி கூட்டம் வந்துட்டாலே, நாங்க எல்லாம் அங்கே ஆஜராகி விடுவோம். அவ்வளவு உச்சத்துல அந்த பச்சை இலைகளுக்கு ஊடால கிளி எங்கே இருக்குன்னு தேடி ஆன்னு கீழே இருந்து பாத்துக்கிட்டே இருப்போம். கிளி மெதுவா போய் ஒரு கொடுக்காப்புளிய பறிச்சி கொறிச்சிக்கிட்டு இருக்கும். காக்கா வாயில இருக்குற வடைக்கு அடி போடுற நரி மாதிரி தான். செல வெவரம் கெட்ட கிளி பறிச்சவுடனேயே தவறி கீழே போட்டுடும். அன்னைக்கு பெரிய ஜாக்பாட் தான். செல வெவரமான கிளிங்க பறிச்சி மெதுவா மொத்தமா தின்னுட்டு வெறும் தோலை மட்டும் போடும். 'நாசமா போற கிளி' அப்படின்னு திட்டிட்டு ஒக்காந்துக்கிட்டே இருப்போம். சோம்பேறி கிளிங்க சில வந்து உக்காந்து ரொம்ப நேரமா யோசிச்சிக்கிட்டே இருக்கும். நாங்களும் அது கொடுக்காப்புளி பறிக்குதா அப்படின்னு பொறுமையா கழுத்து வலிக்க பாத்துக்கிட்டு இருப்போம். 'ஏல! அது தூங்கிட்டுல. அசையாம இருக்கு பாரு' 'இல்லல! அசையுது பாரு. தெரியுதா' அப்படின்னு பேசிக்கிட்டு இருப்போம். அப்புறம் அதுக்கே ஒரு மூடு வந்து பறிச்சி போட்டா உண்டு. இல்லன்னா கடுப்பாகி ஒரு கல்ல எடுத்து வெரட்டி வுட்டுடுவோம்.

இப்படி தாங்க கிளியும் கொடுக்காப்புளியும் எங்க வாழ்க்கைல ஒரு அங்கமா போச்சி. இப்படி இருக்கச்சுல, திடீர்னு ஒரு யோசனை. கிளிக்காக இப்படி காவல் இருப்பதை விட, கிளிய நாமலே புடிச்சி வளந்தா என்ன? அப்போ இந்த துர்கா மாதிரி ராமநாராயணன் படமெல்லாம் பார்த்து ரொம்ப கெட்டுப்போயிருந்தோம். 'லே! பாம்பே பல்லாங்குழி ஆடுது. நாம கிளிய பழக்கி கொடுக்காப்புளி பறிக்க வச்சா என்னா' அப்படின்னு ஒரு யோசனை. கிளி புடிக்கணும்னா நம்ம பீட்டர் அண்ணனை விட்டா வேற வழி. 'யண்ணே! எங்களுக்கு ஆளுக்கு ஒரு கிளி புடிச்சி கொடுங்கண்ணே' அப்படின்னு அவன் வீட்டுல போய் நாங்க வாண்டுங்க எல்லாம் போய் கேட்டோம்.

அடுத்த நாள் எல்லோடும் தேரி காட்டுக்கு கெளம்பிகிட்டு இருக்கோம். கிளி புடிக்கத் தான். காடை கவுதாரி எல்லாம் தரைலயே, முள்வேலிக்குள்ள கூடு கட்டும். காக்கா, குருவி எல்லாம் எல்லா மரத்துலயும் கூடு கட்டும். ஆனா இந்த கிளி இருக்குது பாருங்க. அது ரொம்ப வெவரம்ங்க. நல்ல மொட்ட பனைல (கொண்டை இல்லாம பட்ட மரம்) உச்சத்துல போய் ஒரு பொந்து போட்டு அங்கண போய் கூடு கட்டி வச்சிருக்கும். மொட்ட பன உறுதியா இருக்கா, இல்ல உளுத்துப்போய் இருக்கான்னு முக்கா பன ஏறினா தான் தெரியும். டப்புன்னு ஒடைஞ்சிட்டா, நேரே மேலே தான். இப்படி உயிர பனையம் வச்சி நம்ம பீட்டர் அண்ணன் ஒவ்வொரு பனையா ஏறி ஏறி பார்த்தான். கிட்டத்தட்ட ஆளுக்கு ஒன்னுன்னாலே ஒரு 8 கிளி தேவை பட்டது.

எங்க கூட்டத்த பார்த்துட்டாலே காக்கா குருவி எல்லாம் லபோ திபோன்னு அடிச்சிக்கும். வந்துட்டானுங்கடா காட்டுவாசிங்க அப்படின்னு. அதுலயும் கருப்பு டவுசர் போட்டிருந்தோம்னா காக்கா வந்து டக்குன்னு நம்ம தலைல ஒரு தட்டு தட்டிட்டு 'சௌக்கியமால' அப்படின்னு சொல்லிட்டு போகும். ஏன்னா! கவுட்ட வார் கருப்பு பாத்தீங்களா. அதனால எல்லாத்துக்குமே கருப்புன்னா கொஞ்சம் அலர்ஜி. சும்மா ஒரு கருப்பு துணிய காட்டுனாலே பறவைங்க எல்லாம் ஓடும். அன்னைக்கு நாங்க மரத்துல ஏறுவதை பாத்துட்டு, எல்லாம் கூடிட்டு. நாங்க கைல இருக்குற கவட்டையால வெறட்டி விட்டுக்கிட்டே இருக்க, பீட்டர் அண்ணன் ஒரு மொத்தமா கொஞ்சம் கிளி அள்ளிட்டு வந்தான். 'எண்ணனே இது! கிளி கேட்டா! உறிச்ச கோழிய கொண்டு வந்திருக்க' 'ஏல! இனி தாம்ல முடி மொளைக்கும். போய் நல்லா வாழைப்பழம் கொடுங்கல! சீக்கிரம் பெரிசாயிரும்' இது எங்கள் அண்ணன்..பீட்டர்.

நான் கொடுக்காப்புளிக்கு கொஞ்சம் பேராசை பட்டு, ரெண்டு கிளிய எடுத்துக்கிட்டேன். வீட்டுக்கு கொண்டு போன வுடனேயே ஒரே திட்டு 'ஏல! போன வாரம் தான ஒரு மைனாவ தூக்கிட்டு வந்த..இப்போ இது வேற எதுக்குல' அப்படின்னு. எங்க வீட்டு பூனை வேற ரெண்டு கிளியையும் ஒரு மாதிரி பார்த்தது. நேத்து மைனாவ புடிக்கப் போய் என்னிடம் வாங்கிய அடியை நினைத்து பேசாமல் இருந்தது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாய் கிளி எல்லோர் வீட்டுலையும் வளர்ந்தது. நல்லா முடி மொளைச்சி இப்போ பச்சை கலர்ல கிளி மாதிரி ஆகிட்டு.

பொரிகடலை போட்டா, அது பாட்டுக்க ரெண்டும் ஒக்காந்து கொறிச்சிக்கிட்டு இருக்கும். சட்னிக்கு வச்ச கடலைய காணோம்னு வீட்டுல அம்மாவோட சத்தம் அடிக்கடி கேட்கும். நானும் ரெண்டு கிளிகளுக்கும் நல்லா தீனி போட்டு வளர்த்தேன். எல்லாம் கொடுக்காப்புளி கனவுல தான். சரி! அதுங்களுக்கு நாம சொன்ன ஏதாவது கேக்குற மாதிரி பயிற்சி கொடுக்கலாம்னு நெனைச்சேன். கடைசில நான் கூப்பிட்டா கூட எட்டி பாக்காம ஒரு சோம்பேறி கிளிகளா போச்சி. எம்மனசு ஒடைஞ்சி போச்சி. நான் விசிலடிச்சி கூப்பிட்டா, லேசா எட்டிப்பாத்துட்டு கடலைய கொறிக்கிறதை தொடரும். சில நேரம் ரெண்டும் போய் தூக்கிக்கிட்டு இருக்கிற எங்க வீட்டுப் பூனையை போய் கொத்தி வெரட்டி விட்டுடும். அப்போ நம்ம பூனையார் உச்ச கட்ட எரிச்சலில் இருப்பார். 'கிளிய புடிச்சி என் கைல கொடுப்பாங்க..இங்கே என்னைய புடிச்சி அதுங்க கைல கொடுத்து கொடும படுத்தறீயே! இது நியாயமால' என்பது போல இருக்கும். திருப்பி கடிச்சா அடி விழும் என்று பேசாம இருக்கும்.

அப்புறம் ரெண்டும் சேர்ந்து டூயட் பாட ஆரம்பிச்சிட்டுதுங்க. சரி! இனி நம்ம வீட்டுல கிளி பண்ணை தான் வைக்கனும்னு பயந்து, நல்லா ரெக்கை மொளச்சவுடனே பறக்கும்னு தூக்கி வீசி வீசி பார்த்தேன்.ம்ம்ம்.. சோம்பேறிங்க..வீசுன வேகத்துலேயே திரும்பி வந்து கடலை சட்டி முன்னாடி ஒக்காந்துக்கிடுங்க. நான் படுற பாட்டை பாத்துட்டு எங்க வீட்டு பூனை என்னிய கேவலமா ஒரு லுக் விடும். 'லே! என்னையும் திங்க விட மாட்டேங்குற. ஒனக்கும் ப்ரோஜம் இல்ல. பாத்தியா' அப்படிங்கிற மாதிரி இருக்கும். வெறுத்துப்போய் ஒரு நாள் ரெண்டையும் புடிச்சி ஒரு புளிய மரத்துல ஏறி விட்டுட்டு வந்துட்டேன்.

கடைசில நமக்கு கொடுக்காப்புளி பறிக்க காட்டு கிளிய விட்டா வேற கதி இல்லாம போய்ட்டு. ஒரு நாள் தூத்துக்குடில அடிச்ச புயலில் எங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டு கொடுக்காப்புளி மரம் மொத்தமா சாஞ்சிப் போச்சி. அதுவரைக்கும் கைக்கு எட்டாத கொடுக்காப்புளிய அன்னைக்கு கைலயே பறிச்சி தின்னோம். இனி கொடுக்காப்புளி கைக்கு எட்டாமலே போகப் போறது தெரியாமலேயே.

Friday, March 10, 2006

சாத்தானே விலகிப் போ !

அப்போது நான் நான்காம் வகுப்பில். காலை வகுப்பு தொடங்குவதற்கு முன் டிப்-டாப்பா கோர்ட்- சூட் எல்லாம் போட்டுக்கிட்டு ஒருத்தர் எங்கள் வகுப்புக்கு வருவார். கையில் ஒரு சின்ன சூட்கேஸும் வச்சிருப்பார். எங்களுக்கு தினமும் காலையில் கதை சொல்வது தான் அவர் வேலை. கதை கேட்பது என்றால் எல்லோருக்கும் விருப்பம் தானே. 9 வயது சிறுவன் எனக்கு புடிக்காம போகுமா. வகுப்பில் எல்லோரும் ஆவலாய் கேட்போம். சின்ன சின்ன படம் வைத்து கதை சொல்வார். கதையில் சிங்கம், கரடி, யானை என்று எல்லாம் வரும். இன்னொரு கதாபாத்திரமும் எல்லா கதையிலும் கண்டிப்பா வரும். அது இயேசு. இப்படி போகும் கதை ' குழந்தைகளா! இது தான் நம்மை நேசிக்கும் ஒரே கடவுள். நாமெல்லாம் பாவம் செய்தால் நரகத்தில் தான் போய் விழுவோம். நரகம் என்றால் அங்கே கொப்பரையில் கொதிக்கும் எண்ணையில் தூக்கி போடுவார்கள்.இயேசு ஒருவரே நம்மை சொக்கத்துக்கு அழைத்து செல்லும் வல்லமை கொண்ட தேவன். நீங்கள் எல்லாம் இயேசு பிள்ளைகளா?'. நாங்கள் எல்லாம் மொத்தமாக 'ஆமாம்' என்று தலை ஆட்டுவோம்.

ஒரு 9 வயது சிறுவனுக்கு 'பாவம்' என்றால் என்ன தெரியும்..'நரகம்' என்றால் என்ன தெரியும்..கொதிக்கும் எண்ணை..தீ..என்று ஏன் இந்த மிரட்டல். இவர்களுக்கு என்ன வேண்டும்?. ஒன்றும் புரியாத வயது அது. நீ கும்பிடுவது வெறும் கல். இயேசு ஒருவர் தான் தெய்வம் என்று திரும்ப திரும்ப சொல்லி அந்த பிஞ்சு மனசில் நஞ்சை விதைக்க அப்படி என்ன தான் அவசியம். இத்தனைக்கும் என் வகுப்பில் அத்தனை பேரும் இந்து.

இவர்களுக்கு ஒவ்வொரு மாணவனுக்கு பின்னாலும் இருக்கும் குடும்பம் பற்றி தெரிய வாய்ப்பில்லை. அவர்களுக்கு அது பற்றி தெரிய அவசியமும் இல்லை. அந்த குழந்தைக்காக தேரி காட்டில் போய் கஷ்டப்பாட்டு விறகு சுமந்து 'யய்யா! ..நல்லா படிய்யா' என்று, இருக்கும் ஒரு வேளை சோத்தையும் பிள்ளைக்கு கொடுத்து, பள்ளிக்கு அனுப்பி வைக்கும் அந்த தாயை பற்றி இவர்களுக்கு தெரியாது. 'மாரியாத்தா! எம்புள்ளைய காப்பாத்து தாயே' அப்படின்னு ஒரு சின்ன காய்ச்சல் என்றாலும் உடம்பெல்லாம் திருநீறு அள்ளி போட்டு, இரவெல்லாம் கண் விழித்து கவனித்துக்கொள்ளும் அந்த தாயின் அன்பை பற்றியும் இவர்களுக்கு கவலை இல்லை. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அந்த ஒரு மணி நேரம் பிரசங்கம் செய்தோமா, பிஞ்சு மனச கெடுத்தோமா என்பது தான்.

'யப்பூ! செயகுமாரு அம்மங்கோயிலுக்கு போமாட்டேன்னு சொல்றான். கல்லுங்கறான்யா' என்று சொல்லி அழுத ஒரு தாயின் (எனது அத்தை) வேதனையை விட இவனுங்களுக்கு மதம் பெரிசா போனது. காட்டில் போய் ஓலை சுமந்து, இயலாமல் வீடு வந்தவுடன் அப்படியே ஒரு கட்டிலில் சாய்ந்து கொள்வார்கள் என் அம்மா. ஒரு மணி நேரம் அவர்களால் எதுவும் பேச கூட சக்தி இருக்காது. நான் அக்கா எல்லாரும் சுத்தி உக்காந்துக்கிட்டு இருப்போம். மூச்சு கூட விட முடியாமல் அப்படியே படுத்து கிடப்பார்கள். இது அப்போது எங்கள் வீட்டில் தொடர்கதை. அந்த கஷ்டத்திலும் எங்களை ஆளாக்கினார்கள். 'புள்ளையாரப்பா..புள்ளையாரப்பா' என்று என் தாய் எங்கள் நலனுக்காக வேண்டாத தெய்வம் கிடையாது. இப்படி என் கிராமத்தில் ஒவ்வொரு தாயின் கதையும் இது தான். இவர்களை அழவிட்டு மதம் பரப்பும் அந்த மதம் பிடித்த கிறுக்கர்களை அன்றே எனக்கு பிடிக்காமல் போய் விட்டது.

மதம் என்பது ஒரு நம்பிக்கை. அவ்வளவே. இவர்கள் என்ன இயேசுவை நேரில் பார்த்திருக்கிறார்களா? இல்லை நான் தான் முருகனை நேரில் பார்த்திருக்கிறேனா?. பின் எதற்கு ஏதோ சொர்க்கத்துக்கு டிக்கெட் எடுத்து வைத்திருப்பது போல் 'பாவிகளே! மனம் திரும்புங்கள்' என்று கூச்சல். நான் இங்கு எந்த மதத்தையும் பெரிசு என்று சொல்லவில்லை. தன் தலையிலேயே தங்க காசுகளை அள்ளிக் கொட்டிக்கொண்டு தான் இறைவன் அடிமை என்று சொல்லும் பரதேசிகள் இந்து மதத்திலும் உண்டு. உன் மதத்தை, உன் நம்பிக்கைகளை உன் சமூகத்தில் மட்டும் காட்ட தெரியாதா?. மனிதனை, மனித மனங்களை நேசிக்க, புரிந்து கொள்ள தெரியாத, ஆனால் கடவுளை பற்றி பேசும் இவர்கள் தான் பாவிகள்.

என் கிராமத்தில் எல்லா மதத்தவரும் உண்டு. பொங்கலுக்கு கிருஸ்தவர்கள் வீட்டுக்கு பொங்கல் கொடுப்போம். அதே போல் கிருஸ்மஸுக்கு அங்கே இருந்து வரும். சின்ன வயசில் அந்த திராச்சை ரசத்திற்கும், அப்பத்திற்கும் ஆசை பட்டு நானும் சர்ச்சில் போய் நின்றிருக்கிறேன். ஆர்.சி கோவில் (மாதா கோவில்) திருவிழா என்றால் தவறாமல் "உப்பு-மிளகு (மாதாவுக்கு வேண்டி படைப்பார்கள்) வாங்கி போட்டுட்டு வந்துருய்யா" என்று என் அம்மா தவறாமல் 25 பைசா கொடுத்து அனுப்புவார்கள். நான் காதலிப்பது ஒரு கிருஸ்தவ பெண் என்று தெரிந்ததும் அம்மா சொன்ன ஒரே வார்த்தை 'அடப்பாவி! நல்லா பழகிக்கிட்டு இருக்கிற குடுப்பத்துல இப்படி பண்ணிட்டியே' என்று மட்டுமே. ஒரு வார்த்தை கூட மதம் பற்றி பேசவில்லை. என் திருமணம், திருநீறு, அதன் மேல் சிலுவை, அதன் மேல் திருநீறு என்று (நெத்தியில போட்டு நெத்திய ஒரு வழி ஆக்கிட்டாங்க) அத்தனை பேர் ஆசீர்வாதத்துடன் நடந்தது. இன்று என் வீட்டில் தீபாவளியும் உண்டு. கிருஸ்மஸும் உண்டு. மருதமலைக்கு என்னை கூட்டிச்சென்று, கோவில் கற்பகிரகம் வரை வந்து, ஐயர் கொடுத்த திருநீறை வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி கொண்ட என் மச்சான் (மனைவியின் அண்ணன்) ஒரு கிருஸ்தவர் தான். நானும் அவருடன் வேளாங்கன்னி மாதா கோவிலுக்கு போயிருக்கிறேன். இப்படி மதம் என்பது நம் உறவுகளில், பாசங்களில் பினைத்து கிடப்பது உண்மை தான்.நம் யாருக்கும் யார் தெய்வமும் பெரிசா தெரிவதில்லை. அவரவர் நம்பிக்கையை மதிக்க தெரிந்திருக்கிறது. இதில் 'இயேசு..இயேசு' என்று தெரு தெருவாக அவரை இழுத்துக்கொண்டு அலையும் இவர்கள், சிறு குழந்தைகளிடம் நஞ்சை விதைப்பதை தான் என்னால் பொருத்துக்கொள்ளவே முடிவதில்லை.

எங்க ஊர் சுடலைமாடன் கோவில் கொடையில் எப்பவுமே முன்னால் நிற்கும் சுப்ரமணி அண்ணனை இந்த தடவை பார்க்க முடியவில்லை. விசாரித்ததில் கிருஸ்தனாக மாறி விட்டாராம். என் உறவினர் ஒருவார் எப்பவுமே தண்ணி. அவர் மனைவி ஏதோ பிரச்சினையில் தீக்குளிக்க, அங்கே ஆஸ்பத்திரியிலேயே இவர்கள் ஆஜர். இவர்கள் தீக்குளித்தால் கடவுள் என்ன செய்வார். இப்போது அவர்கள் கிருஸ்தவர்கள். இதில் கொடுமை என்னவென்றால் உடனே அவர்கள் பெயரும் மாற்றப்பட்டு விடுகிறது. அவர் பையன்கள் இப்போது இலவசமாக கிருஸ்தவ பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான். இப்படி நான் பார்த்த மதமாற்றம் ஏராளம். எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் பணம், வேலை, படிப்பு. ஏன் யாருமே முஸ்லீமாகவோ, இல்லை ஒரு முஸ்லீம் இந்துவாகவோ மாறுவதில்லை. இவர்கள் மட்டும் என்ன இயேசுவை நேரில் பார்த்துவிட்டார்களா..என்ன?. 'பாரதி' படத்தில் கிருஸ்தவனாக மாறிவிட்ட தன் நண்பனை (நிழல்கள் ரவி) பார்த்து 'நம் சமூகத்தில் இப்படி ஒரு அமைப்பு இல்லாமல் போய்விட்டதே..மகாசக்தி' என்று புலம்புவார். உண்மை அது தான். மொத்த முடிச்சியையும் பார்த்தால் கடைசியில் அது முடியும் இடம் 'பணம்'. இதற்கு விபசாரம் பண்ணலாமே. இந்த பாவங்களை இவர்கள் சொல்லும் இயேசுவே மன்னிக்க மாட்டார்.

என்னிடம் திட்டு வாங்கி கொண்டு போகும் கூட்டம் ஏராளம். நெல்லை இரயில் நிலையத்தில் ஒரு பெரியவர். ஆசிரியர் போல இருந்தார். எங்கே போனாலும் ஒரு கட்டு நோட்டிஸ், பிட் புத்தகங்களோடு தான் போவார் போல. 'தம்பி! நீ ஏசுவை விசுவாசி. அவர் வரும் காலம் சீக்கிரம் வருகிறது' என்று சில நோட்டிஸ்களை என் கையில் திணித்தார் (இது போல 100 சம்பவங்கள் சந்தித்து இருக்கிறேன்). அங்கேயே அவர் மூஞ்சியில் கிழித்து எறிந்தேன். ஒரு பிச்சைக்காரன் பேசினால் கூட நின்று பேசுவேன். அவனும் மனிதன் தானே. ஆனால் அன்று தெரிந்தே அவரை காயப்படுத்தினேன். அவர் காயப்பட்டது அவர் மூஞ்சியிலேயே தெரிந்தது. ஆனால் இவர்கள் செய்யும் காயங்கள் அவருக்கு தெரியாதா என்ன?. நான் பழனி முருகன் திருநீறு என்று கொடுத்தல் பூசுவாரா?. என் மதத்தை பற்றி கேட்க கூட பிடிக்காத இவனுங்க நாம மட்டும் கை கட்டி 'நீ பாவி' என்று சொன்னால் தலையாட்டி கேக்கணுமாம். 'இந்த நோட்டிஸ் அடிக்கும் காசுக்கு வெளியில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் சிறுவனுக்கு ஒரு பொட்டலும் இட்லி வாங்கி கொடுக்கலாமே.அதை உங்களை கடவுள் ஆசீர்வதிக்க மாட்டாரா! என்ன?' என்று கேட்க நினைத்தேன். அவரின் வயது கருதி கேட்கவில்லை. இந்தியாவில் மட்டும் அல்ல, இங்கே அமெரிக்காவிலும் இவர்களை பார்த்தது எனக்கு ஆச்சரியமே. நம்ம நெத்தியில தான் எழுதி ஒட்டி இருக்குமே இந்து என்று (திருநீறு). 'Hi! Are you from India?. Are you Hindu?. Do you know about Jesus Christ' அப்படின்னு ஆரம்பிப்பானுங்க. ஏன் இந்தியனா இருக்க கூடாதா...இந்துவா இருக்க கூடாதா..அது பாவமா என்ன?..இவர்கள் மனதில் இருப்பது தான் என்ன. இங்கே இருந்து மதம் பரப்புகிறேன் என்று வரும், பணம் அனுப்பும் இவர்கள் யார் கேட்க போகிறார்கள்?. தெரியவில்லை.

இப்போதெல்லாம் இவர்கள் பார்க்கும் போதெல்லாம் நான் மெதுவாக மிருகமாக மாறி விடுகிறேன். இவர்களுக்கு நான் சொல்ல நினைப்பது எல்லாம் ஒன்று தான். 'நீ சொல்லும் இறைவன் உண்மையிலேயே இருந்தால், அவன் மதம் பிடித்து அலையும் உன்னை சொர்க்கத்திலும், அவனை நான் அறிந்து கொள்ளவில்லை என்று ஒரே காரணத்திற்காக என்னை நரகத்திலும் தள்ளினால், நீ தேவன் என்று கொண்டாடும் அவனிடம் ஒன்று சொல்வேன் ' நீ தேவன் அல்ல..ஒரு சாத்தான் என்று'

அன்புடன்,
சிவா

Friday, March 03, 2006

வேலை கெடச்சிடுச்சு - 2

நான் பார்த்த மொத வேலைய பத்தி இங்கே சொல்லிருக்கேன். இப்போ ரெண்டாவதா கெடைச்ச வேலைய பற்றி புராணம் பாட வந்திருக்கேன்.

அப்போ காலைல எந்திரிச்ச வுடனே மொத வேல, பக்கத்து ஊரு மணிநகருக்கு போய் மளிகை சாமான் வாங்கி வருவது தான். எங்க ஊருல கட கெடையாதுல்லா. ஊருல யாரு கண்ணுலையும் படாம போனோம்னா பொழைச்சோம். இல்லன்னா, வீட்டுக்கு வீடு ஒரு சீட்ட எழுது கைல கொடுத்துருவாவ. அப்பாவோட சைக்கிள எடுத்துக்கிட்டு கொரங்கு பெடல போட்டுக்கிட்டே போய் சேரவும், தடியர் வருவதற்கும் சரியா இருக்கும். தடியர் கடை தான் இருக்குற ரெண்டு கடைல ஒன்னு. ஆள் எப்படி இருப்பர்னு சொல்ல தேவை இல்லை. அவரு கடைக்கு போறதுக்கு ரொண்டு காரணம், ஒன்று தேங்கா தண்ணி. ரெண்டாவது ஓசில படிக்க கெடைக்கும் சிறுவர் மலர். 'நல்லா பெரிய தேங்காவா ஒடைங்கண்ணே' தேங்கா செரட்டையோட நின்னுக்கிட்டு இருப்பேன். ரொம்ப பழக்கமாயிட்டார். 'ஏல! லீவு வருதுல்லா. நம்ம கடைக்கு வந்துர்றீயா?' ஓசியில ஒரு வேலையால் கெடைச்சா நல்லா தானே இருக்கும். எனக்கும் ஆசை தான். பல்பொடி கம்பெனிக்கு போய் தண்டமா போச்சி. பசிச்சா ஏதாவது சாப்பிட முடியுதா. மளிகை கடைன்னா, அப்போ அப்போ ஏதாவது அள்ளி வாய்ல போட்டுக்கலாம். 'சரின்னே! லீவு வந்ததும் வந்துடறேன்'. 'கடைய இடிச்சிட்டு கொஞ்சம் பெரிசா கெட்டுங்கண்ணே. நான் நிக்கிறதுக்கு எடம் வேண்டாமா' ரொம்பவே நக்கலா போகும் எங்கள் பேச்சு வார்த்தை.

கோடை விடுமுறை விட்டாலே நம்ம தொல்லை தாங்க முடியாம எங்கையாவது தள்ளி விடுறதுல வீட்டுல குறியா இருப்பாங்க. தொல்லை விட்ட மாதிரியும் இருக்கும். படிக்காம உருப்படாம போய்ட்டா பின்னாடி பயன் படலாம் பாருங்க. தடியர் கடைக்கு தான் இந்த தடவை போவேன்னு சொல்லிட்டேன். நம்ம ஆசைய யாரு கேக்குறா. கடைசில சைக்கிள் கடைல தள்ளி விட்டுட்டாங்க. அப்பா வேல பாக்குற சைக்கிள் கடைல என்னையும் விட்டா வெளங்காதுன்னு, கொஞ்சம் தள்ளி அப்பாக்கு தெரிஞ்சவரோட சைக்கிள் கடை.

ஆனா ஒரு வகைல சந்தோசம். அப்போ சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்ட காலம். அப்பாக்கிட்ட கெஞ்சி கூத்தாடி அப்பா சைக்கிள வாங்கி, அதையும் ஒரு முள்ளுக்காட்டுக்குள்ள மொத்தமா போய் விழுந்து பஞ்சராக்கி திட்டு வாங்கிகிட்டு இருந்த காலம். தீபாவளி பொங்கல்ன்னா ஒரு குட்டி சைக்கிள வாடகைக்கு எடுத்து கொடுப்பாங்க. அன்னைக்கு முழுசும் சோறு தண்ணி இல்லாம ஒட்டிக்கிட்டே இருக்கிறது. அன்னைக்கு முழுசும் அப்படி ஒரு சந்தோசமா இருக்கும். இப்படி இருக்கும் போது சைக்கிள் கடைலயே வேலைன்னா சும்மாவா. எப்படியும் சைக்கிள் கெடைக்கும். சந்தோசமா வேலைல போய் சேர்ந்தேன்.

கடை ஒன்னும் பெரிய கடை இல்லை. காதல் படத்துல பாத்திருப்பீங்களே ஒரு கடை. அதே மாதிரி தான். என்ன இங்கே சைக்கிள். காலைலயே போனவுடனே கடைல பெருக்கி தண்ணி தெளிச்சிக்கிற வேலை. அப்புறம் வர்றவன் போறவனுக்கெல்லாம் காத்தடிச்சி கொடுக்கிற வேலை. நானே அப்போ பம்பு வளத்தி தான் இருப்பேன். என்னைய போய் 'லே! சாருக்கு ப்ரண்டுல காத்தடிச்சி விடுல' அப்படின்னு வெறட்டுவாரு. நானும் பம்பு கூட போராடி போராடி அடிச்சி கொடுத்தா சில சமயம் ஒரு பத்து பைசா கெடைக்கும். அதை மொதலாளி புடுங்கிகிடுவார். உழைப்பு என்னோடதா இருந்தாலும், கடை அவரோடது தானே.

என்னோட முக்கிய வேலை. எவனாவது பஞ்சர்னு வந்தா ட்யூப்ப கலட்டி காத்தடிச்சி ஒரு அழுக்கு தண்ணில முக்கி பஞ்சர கண்டுபுடிச்சி அவருகிட்ட சொல்றது. அவரு ஒட்டி முடிச்சதும், மறுபடி காத்தடிச்சி ரெடி பண்ணி வைக்கிறது.

மத்யானம் ஆயிடுச்சின்னா, அவரு வீட்டுக்கு போயி மதியம் சாப்பாடு வாங்கிட்டு வரணும். மொதலாளி வீடு ஒரு 5 கீ.மீ தள்ளி ஒய்யாங்குடின்னு ஒரு ஊரு. அந்த மே மாசம் வெயிலுல, கொரங்கு பெடல் போட்டே லொங்கு லொங்குன்னு 5 கீ.மீ ( போய் வர மொத்தம் 10 கீ.மீ) அழுத்திப் போய் மொதலாளிக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்து கொடுப்பேன். போற வழில ஒரு குளம் உண்டு. அதுல இறங்கி கொஞ்ச நேரம் வெளாண்டுட்டு, அப்புறம் தான் பிரயாணத்தை தொடருவேன்.

ஊரு பயலுவலுக்கு கவட்ட செய்றதுக்கு சைக்கிள் ட்யூப் எல்லாம் சப்ளை நான் தான். அப்புறம் சாயங்காலம் ஆச்சின்னா மொதலாளி பக்கத்து டீ கடைல ஒரு டீயும், ஸ்வீட் பன்னும் வாங்கி கொடுப்பாரு. அது தான் அன்னைக்கு பம்பு கூட காலைல இருந்து போராடுனதுக்கு கொடைச்ச ஒரே வெகுமதி. தின்னுட்டு மறுபடி வேலைய பாக்க ஆரம்பிச்சிடுவேன். ராத்திரி ஒரு 10 மணிக்கு போல அப்பா வீட்டுக்கு போகும் போது என்னையும் அழைத்துக்கொள்வார்கள்.

இப்படியே ரெண்டு மாசம் ஓடி போச்சி. நல்ல மனுசன். பேசாம அப்படியே அங்கேயே தங்கிறலாம்னு நெனைச்சேன். மண்டைல ஒரு தட்டு தட்டி, படிக்க போலன்னு வெரட்டி விட்டுட்டாங்க. 'யப்பூ! அடுத்த தடவையும் வந்துரு என்ன' மொதலாளி சுட சுட மதிய சாப்பாடு பறிபோன சோகத்தில். 'சரிண்ணே! ' சொல்லிட்டு வந்தேன்.

( அடுத்த பார்த்த வேலை விரைவில்)

Friday, February 24, 2006

நாலு பேருக்கு நன்றி

கோ.ராகவன் கூப்பிட்டு இருக்காக
தம்பி சிங்கு கூப்பிட்டு இருக்காக
கீதா கூப்பிட்டு இருக்காக
குமரன் கூப்பிடவான்னு கேட்டாக, நான் தான் வேண்டாம்னுட்டேன்.

இப்படி செவனேன்னு இருந்தவன இழுத்து இங்கே புலம்பவிட்டுட்டாங்களே..ஏற்கனவே நாலு நாலா பதிவ பாத்து பாத்து வெறுத்து போயி இருப்பாங்க. இதுல என்னைய வேற புடிச்ச நாலு, புடிக்காத நாலுன்னு போட சொன்னா நான் என்ன செய்வேன். இருந்தாலும் ஒரு பதிவு போட விசயம் கெடைச்சிருக்குல்லா. விட முடியுமா? என்ன சொல்லுதிய.

எவனோ ஒரு மகராசன்/ராசி ஆரம்பிச்சி வச்சி, ஒன்னு நாலாகி, நாலு பதினாறாகி..இப்படியே வைரஸ் மாதிரி போய்ட்டு இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ல தமிழ்மணம் முகப்புல வெறும் நாலா தான் தெரியும் போல. 'லே! இனி எவனாவது நாலுன்னு வார்த்தைய பதிவுல எங்கையாவது பயன்படுத்தினா தமிழ்மணம் சேகரிக்காது' அப்படின்னு காசி சார் ஒரு சட்டம் கொண்டு வரதுக்குள்ள என்னோட பதிவ போட்டுறேன் (காசி சார்! சும்மா ஜாலியா தான். தப்பா எடுத்துக்காதிய :-).

என்ன பெரிசா சொல்ல போறேன். ஏதாவது எழுதி அடுத்த நாலு பேர இழுத்து போடணுமே..ம்ம்ம்..சரி ஆரம்பிச்சுடறேன்..

இதுவரை வாழ்ந்த நாலு இடங்கள்.

1. கந்தசாமிபுரம் - எங்க ஊரு பேரு தாங்க.
2. விழுப்புரம் - ரெண்டாப்பு ரெண்டு மாசம் அங்கே படிச்சேன். ஊரு ஒத்துக்கலைன்னு கிராமத்துக்கே ஓடிட்டோம்.
3. சென்னை - படிச்சது, வேலை பார்த்தது
4. அமெரிக்கா - தற்காலிகமாக. கம்பெனி அனுப்பி இருக்கு.

புடிச்ச நாலு படம்

1. ஆண் பாவம்
2. காதலிக்க நேரமில்லை
3. மணல் கயிறு
4. மைக்கேல் மதன காமராஜன்

புடிச்ச நாலு சினிமா ஆளுங்க.

1. இளையராஜா
2. இளையராஜா
3. இளையராஜா
4. இளையராஜா

பார்த்த நாலு வேலைகள்:

1. பல்பொடி கம்பெனி
2. சைக்கிள் கடை (பதிவு சீக்கிரம் வருது)
3. டி.வி ஷோரும்
4. இப்போ சாப்ட்வேர்

போதும்னு நெனைக்கிறேன். இப்போ நாலு பேர எங்கே போய் தேடுவேன். எல்லோரும் சங்கிலில இருக்காங்கலே..யாரு பதிவுக்கு போனாலும் அங்கே 'நாலு'ன்னு ஒரு பதிவு இருக்குதே..என்ன செய்ய..சரி இவங்களை இழுத்து விடலாம்

1. மோகன் தாஸ்
2. பாரதி
3. சத்தியா
4. அல்லி மகன்

Sunday, February 19, 2006

எசக்கி

ஆறாம் வகுப்பு. ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்கும் எங்கள் பள்ளியில் சேர்ந்த எல்லோரும் புதிய முகங்கள். புதிய நட்புகள். இசக்கி முத்துவை பார்த்த போது எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று அவனை கேட்டேன். என் கூட அஞ்சாப்புல படிச்ச சின்னத்துரை தம்பி என்று சொன்னான். ஏற்கனவே என்னோட கூட்டாளியான சின்னத்துரை தம்பி என்பதாலோ எசக்கி எனக்கு முதலிலேயே பழக்கமாகி விட்டான்.

தொடக்கத்தில் இருந்தே எசக்கிக்கு ஏனோ படிப்பு அவ்வளவாக வரவில்லை. வகுப்பில் எல்லாத்துக்கும் அடி வாக்குறது அவனா தான் இருக்கும். 'மக்கு. மக்கு. படிச்சிட்டு வர சொன்னா சும்மா வந்து நிக்குது பாரு' என்று அத்தனை ஆசிரியர்களிடமும் அடி வாங்கிக்கிட்டே இருப்பான். காலையில் முதல் வேலையாக வகுப்பு ஆசிரியர் யாரெல்லாம் ராப்பாட சீட்டு வாங்கி வரலைன்னு வெளியே வரச் சொல்வார். எசக்கி முத ஆளா போய் நிற்பான். எனக்கு மறந்துட்டா அப்பா வேல பாக்குற கடை பக்கத்துல தான். ஓடி போய் வாங்கி வந்துருவேன். படிச்சேனோ..படிக்கலையோ..அப்பா நான் சொல்கிற நேரம் எல்லாம் போட்டு 'என் மகன் நேற்று 7:00 மணியில் இருந்து 9:00 மணி வரை பாடம் படித்தான்' என்று எழுதி கொடுத்துருவாங்க. 'ஏல! ராப்பாட சீட்டு வாங்கிட்டு வரதுல என்ன' கேட்டா ' இல்லல! மறந்து போய்டுது'இதெல்லாம் ஒரு அடியா என்பது போல பதில் சொல்வான்.

வகுப்பு ஆசிரியருக்கு நான் ஒரு செல்லப் பிள்ளை மாதிரி. 'ஒங்க ஊரு தேரி தண்னி தேங்கா தண்ணி மாதிரி இருக்குமாம்ல. அப்படியா?. சாருக்கு தினமும் ஒரு கேன் கொண்டு வந்திரு' அப்படிம்பார். அந்த வருடம் முழுவதும் ஒரு பெரிய கேன்ல சாருக்கு தண்ணி கொண்டு போவேன். எல்லாம் ஒரு பாசம் தான். அப்புறம் அடிக்கிறதுக்கு கம்பு சப்ளையும் நான் தான். 'லே! நாளைக்கு ரெண்டு கம்பு வெட்டிட்டு வால' என்று ஆசிரியரிடம் இருந்து ஆர்டர் வரும். அருவாள தூக்கிக்கிட்டு நல்ல வாடாச்சி மரமா தேடிக்கிட்டு அலைவேன். எசக்கி அடி வாங்குறான் என்றால், கம்பு உடைவது நிச்சயம். 'எரும மாடால நீ! எதுக்கு இப்படி அடி வாங்கி சாகுற. படிச்சிட்டு வர சொன்னா வர வேண்டிய தானே' அவன் சின்ன அடிக்கு எல்லாம் அமைதியா நிற்பதை பார்த்து கடுப்பாகி பின்னி எடுத்து விடுவார். கம்பு நார் நாராக போய் விடும். அப்புறம் நான் தான் அருவாள தூக்கிக்கிட்டு அலையனும்.

ஏனோ எசக்கிக்கு படிப்பு என்பது வராத ஒன்றாகவே இருந்தது. வராத ஒன்றுக்காக அவன் மெனக்கெடவும் இல்லை.

எசக்கியோடு சேர்ந்து நானும் அடி வாங்குவது ஒரே ஒரு வகுப்பில் தான். அது அறிவியல் பாடம். 'லே! என்ன ரெண்டு டவுசரா! ' என்னை பார்த்து நக்கலாக சிரிப்பான் எசக்கி. 'ஒன்ன மாதிரி எரும மாடா இருந்தா பரவாயில்லை. நான் ஆடிக்கு ஒரு தடவை அம்மாவாசைக்கு ஒரு தடவை அடி வாங்கிறவன். நம்மால தாங்க முடியாதுல' நான் திருப்பி அவனை நக்கலடிப்பேன். நான் அரசாங்கம் இனாமாக கொடுத்த டவுசரை போட்டு வந்தாலே அவனுக்கு தெரிந்து விடும், இன்னைக்கு அறிவியல் சார் கேள்வி கேக்குறாங்கன்னு. அந்த டவுசரை மற்ற நாளில் போட முடியாது. முட்டி வரை கிட்டத்தட்ட ஒரு பாவாடை மாதிரி தான் இருக்கும். துணி சும்மா சாக்கு துணி மாதிரி இருக்கும். அறிவியல் ஆசிரியர் கேள்வி கேட்டால் மொத்த வகுப்புக்கும் அடி கிடைக்கும். அதில் நானும் விதிவிலக்கு அல்ல. அவர் வகுப்பிற்கே அரைகுறை போதையில் வருவது மாதிரி தான் வருவார். எவனையும் வாயை தொறந்து பதில் சொல்ல விடமாட்டார். ஒரே கேள்வி தான். வரிசையா எந்திரிச்சி மரியாதையா முட்டங்காளில் போய் நின்னுக்குவோம்.

அப்புறம் வரிசையா அடி விழும். பின்னாடி டவுசரில் விழும் அடிக்கு பயந்து தான் ரெண்டு டவுசர் ஏற்பாடு. அடி விழும் போது சும்மானாட்டுக்கும் 'ஐயோ! சார்! சார்!' என்று கத்துவேன். அடி உறைக்கலன்னு எரும மாடு மாதிரி நின்னோம்னா, முதுகுல பளீர்னு ஒன்னு விழும். அப்புறம் ஒக்காரவும் முடியாம, நிக்கவும் முடியாம நெளிஞ்சிக்கிட்டு இருக்கணும். அதுக்கு தான் அந்த நடிப்பு. எசக்கி அது பாட்டுக்கு அடி வாங்கிட்டு வருவான். ஒரு உணர்ச்சியே இல்லாம. தினமும் அடி வாங்குபவனுக்கு அது ஒன்றுமில்லை தான்.

வகுப்பில் நன்றாக படிக்கும் ஐந்து மாணவர்களை எடுத்து ஆளுக்கு 10 பேரை நேந்து விட்டாங்க. வகுப்புல ஒரு அட்டைல தலைவர் மாதிரி நம்ம பேரும், கீழே நமக்கு நேந்து விட்ட 10 பேரோட பேரும் எழுதி போட்டிருக்கும். என்னோட நேரம் எனக்கு கீழே எசக்கி. மாலையில் ஆறு மணி வரை எல்லோரும் இருந்து என்னிடம் ஒப்பித்துவிட்டு போக வேண்டும். பள்ளி முடிந்ததும் ஓட ஆரபித்தான் எசக்கி. 'அவன புடிச்சி தூக்கிட்டு வாங்கல' கோபத்தில் ஆசிரியர். நாங்க ஒரு நாலு பேர் இருக்குற ரெண்டு கேட்டுக்கும் ஓடினோம். எங்கையாவது எசக்கியை மடக்கி நாலு பேரும் சேர்ந்து தூக்கி வந்து ஆசிரியரிடம் கொடுப்போம். அப்புறம் என்ன அடுத்த கம்புக்கு ஆர்டர் தான். 'சார்! சார்! விட்டுருங்க சார். இனி ஓட மாட்டேன்' வாங்கிய அடி தாங்க முடியாமல் எசக்கி அழுவான். பாவமாக இருக்கும். ஆனால் அதையே தினமும் பண்ணுவான். ஒரு மனதாக என்னிடம் வந்து உக்கார்ந்தான். ஒரு கேள்வி ஒப்பிக்க அன்று முழுவதும் போராடிக்கொண்டிருந்தான். பக்கத்து சர்ச் மணியையே பார்த்துக் கொண்டிருப்பான், எப்போடா மணி 6 ஆறு ஆகும்னு. 'லே! சீக்கிரம் ஒப்பில. இன்னிக்கு செவ்வாக்கெழமல ! நா சந்தைக்கு போணும்ல' நான் அவனிடம் கெஞ்சிக்கொண்டிருப்பேன். வழக்கம் போல அடுத்த நாள் ஒப்பிக்காதவர்கள் பட்டியலில் அடி வாங்க அவனும் இருப்பான்.

பள்ளிக்கூடத்திற்கு கல்வி ஆய்வாளர் வந்த போது எல்லா ஆசிரியர்களும் சுறுசுறுப்பாக அலைந்து கொண்டிருந்தார்கள். காலையில் இருந்தே எங்களுக்கு எப்படி பதில் சொல்வது என்று பயிற்சி போய் கொண்டிருந்தது. ஆய்வாளர் முந்தைய வகுப்பிற்கு வந்த சத்தம் கேட்டவுடனேயே, ஆசிரியர் 'எசக்கி! நீ எங்கையாவது போய்ட்டு ஒரு அர மணி நேரம் கழிச்சி வால' என்று அவனை மட்டும் வெளியே போக சொன்ன போது, ஆசிரியரின் பயம் தெரிந்தது. இதை எதிர் பார்க்காத எசக்கி, தான் மற்ற மாணவர்கள் முன்னால் ரொம்பவே நிராகரிக்கப்பட்டதை உணர்ந்த போது கலங்கி போனான்.

அப்படியே ஒரு வருடம் ஓடி விட்டது. கோடை விடுமுறை முடிந்து எல்லோரும் இப்போது ஏழாம் வகுப்பில். மறுபடியும் எங்கள் வகுப்பு கலைத்து விடப் பட்டது. மற்ற வகுப்பில் இருந்து சில புதிய நண்பர்கள். நான் எசக்கியை தேடினேன். என் வகுப்பில் இல்லை. 'அப்பாடி! இனி தொல்லை இல்லை. சந்தைக்கு நிம்மதியா போலாம்' என்று நினைத்துக் கொண்டேன். பக்கத்து வகுப்பு நண்பர்களிடம் விசார்த்து பார்த்ததில் அங்கேயும் அவன் இல்லை. 'அவன் பெயிலாயிருப்பான்டா..அவனாவது பாஸ் ஆறதாவது. போய் ஆறாப்புல பாரு' நண்பர்கள் கிண்டல் அடித்தார்கள்.

முதல் வகுப்பு தொடங்கியது. வகுப்பு ஆசிரியர் ஒரு அதிர்ச்சி செய்தியோடு வந்திருந்தார் 'மாணவர்களே! நம் பள்ளி மாணவன் இசக்கி, போன மாதம் வயலில் விளையாண்டு கொண்டிருந்த போது பாம்பு கடித்து இறந்து விட்டான். எல்லோரும் ஒரு நிமிடம் எழுந்து இசக்கிக்கு அஞ்சலி செலுத்துவோம்'. எல்லொரும் எழுந்து நின்றோம். நான் உடைந்து போய் விட்டேன். கண்ணை முடிய போது, எசக்கி ஓடியது, அவனை நாங்க எல்லோரும் விரட்டி பிடித்து தூக்கி வந்து அடி வாங்கி கொடுத்தது. அவன் அடி தாங்க முடியாமல் தினமும் அழுதது. ஒவ்வொன்றாக என் கண் முன்னே வந்தது. செத்து போறதுக்கு தான் அவ்வளவு அடி வாங்கினியால. என்னால் தாங்க முடியவில்லை. மனசுக்குள்ளேயே அழுத படியே இசக்கியிடம் கேட்டேன் 'என்ன மன்னிச்சுடுல! எசக்கி'.

( ஆறாம் வகுப்பில் மறைந்த என் நண்பனின் நினைவாக)

Sunday, February 12, 2006

*நட்சத்திரம்* - இன்றே கடைசி

அமாங்க! அந்தா இந்தான்னு ஒரு வாரம் ஓடிடிச்சி. இன்னைக்கு தான் நம்மோட கடைசி ஷோ. இந்த ஒரு வாரம் தமிழ்மணம் தியேட்டரில் சிறப்பு காட்சி திரையிட எனக்கு வாய்ப்பு கொடுத்த காசி சாருக்கும், மதி கந்தசாமி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

மறக்க முடியாத ஒரு வாரம். இதை என்னுடைய வலைப்பூ வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத வாரமாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் ரொம்ப நன்றிங்க. நெசமாவே, நான் இந்த அளவு ஆதரவை எதிர்ப்பார்க்கவில்லை..எத்தனை புதிய நண்பர்கள்..எத்தனை பாராட்டுக்கள்..நன்றி..நன்றி..நன்றி..

பொங்கல் பதிவு போட்டு சரக்கு காலியாகி போய் இருக்கும் போது பார்த்து மதி அவர்கள் 'நட்சத்திரம் ஆக விருப்பமா' என்று கேட்ட போது, ரொம்பவே பயமாக இருந்தது. நம் மானம் போய்டக் கூடாதேன்னு கொஞ்சம் யோசித்தேன். ஒத்துக்கொண்ட நாளில் இருந்தே ஒரே யோசனை...என்ன எழுத..என்ன எழுத..என்று..பல்லு வெளக்கும் போது...சாப்பிடும் போது..இப்படி சதா அதே நெனப்பு தான். அப்போ அப்போ தோனுவதை எழுதி வைத்துக்கொண்டேன். ஒரு வழியாக மொத்தம் ஐந்து பதிவுகளுடன் தயாரானேன்.

நான் அவ்வளவாக மற்றவர்கள் வலைப்பதிவுகளுக்கு சென்றதில்லை. நேரம் இருப்பதில்லை என்பது ஒன்றே காரணம். என் 3 வயது மகளுடன் விளையாடவே நேரம் போய்விடும். எல்லோரும் தூங்கியதும் விடியற்காலை கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் ஏதாவது எழுதுவது உண்டு. நெலம இப்படி இருக்க, இப்படி அறிமுகம் இல்லாத எனக்கு வரவேற்பு கிடைக்குமா என்று அச்சம் இருந்தது. இங்கே வலைப்பதிவை படிப்பதில் 95% நண்பர்கள் வலைப்பதிவர்களே. இங்கே வரும் 1000 வலைப்பதிவையும் படிக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. நமக்கென ஒரு நட்பு வட்டம், நம் ரசனைக்கேற்ற படி உருவாகிவிடுகிறது. என்னை மாதிரி நினைவலைகளில் காலம் தள்ளும் கும்பல், நக்கல்/நையாண்டி என்று ஒரு கும்பல், கருத்து/குடுமி சண்டைக்கு என்று ஒரு கும்பல் என்று நமக்கு ஒரு வட்டம் உருவாவது உண்மையே. இதை எல்லாம் மீறி என்னை கண்டு கொள்வார்களா என்று நினைத்த எனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்து விட்டீர்கள். நன்றி நண்பர்களே..

மொத்தம் ஐந்து பதிவுகளுடன் நட்சத்திர வாரத்தை தொடங்கினேன். 'இன்று முதல்' என்று ஆரம்பத்திற்கு 23 நண்பர்கள் வாழ்த்து சொன்னார்கள். ஆனால் என்னுடைய 'ஏங்குதே மனம்' 32 நண்பர்களை தேடிக் கொடுத்தது. ஒரு காதல் கதை சொல்ல முயற்சியின் விளைவே 'மலரே..குறிஞ்சி மலரே'. இதன் இறுதி பாகத்தை நண்பர் நடாவிடம் காட்டிய போது, சுத்தமாக திருப்தி இல்லை என்று சொல்லி விட்டார். அப்புறம் உட்கார்ந்து நிறைய திருத்தினேன். 'யோய்! காதலர்களை சேர மட்டும் விட்டுடாதீங்க என்ன. நல்லா இருங்கைய்யா' என்று திட்டினார். 'அதெல்லாம் சேர்த்து வைக்க முடியாது. முடிவை மாற்ற ஐடியா இல்லை' என்று கூறிவிட்டேன் :-). சில பதிவுகளை நான் பதிவதற்கு முன்னமே படித்து அதன் நிறை குறைகளை கூறிய நண்பர்கள் நடாவுக்கும், குமரனுக்கும் என்னோட நன்றி. அந்த கதையின் முடிவு எல்லோருக்கும் பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்தது. நிறைய பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வந்து உங்க கருத்துக்களை சொன்னீங்க. அவங்களுக்கு என் மனசுக்குள்ளேயே ஒரு பெரிய நன்றி.

மதி அவர்கள் என்னிடம் என்ன மாதிரியான பதிவை எதிர்பார்ப்பார்கள் என்றும், இந்த வாய்ப்பை எதற்கு கொடுத்தார்கள் என்று எனக்கு தெரியும். ஒரு பதிவிலாவது அவர்களே 'இதை தான் எதிர்பார்த்தேன்னு சொல்ல வைக்கணும்னு நெனைச்சேன். அது 'ஏங்குதே மனம்' பதிவின் மூலம் கிடைத்தது.ரொம்ப சந்தோசமா இருந்தது. நான் இந்த பதிவிற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க வில்லை. மீண்டும் நன்றி நண்பர்களே.

அடுத்து கருப்பனை தான் பதியலாம் என்று இருந்தேன். அப்புறம் ஒரே செண்டிமெண்ட் பதிவாகவே போய்விடும் என்று தான் கிராமத்து மணத்தை எடுத்து விட்டேன்.

ஐந்தாவது (கடைசி) பதிவாக, ஒரே கிராமமா எழுதறோமே, கொஞ்சம் சாதாரணமாகவும் எழுத முயற்சிக்கலாமேன்னு வந்த ஆசையின் விளைவே 'வர..வர..நாடு நல்லால்லே'. நண்பர் கைப்புள்ள (மோகன்ராஜ்) சொன்ன மாதிரி, ஒரு கிராமத்து கதை எடுத்து விட்டிருந்தா நல்லா இருந்திருக்கும். இருந்தாலும் ஒரு முயற்சி தானே. அதில் நான் ஒரு நகைச்சுவை/நையாண்டி நடையில் தான் முயற்சி பண்ணினேன். சில நண்பர்களுகு புரிந்தது. என் மனைவியே வாசித்து பாத்துட்டு திரு திருன்னு முழிக்கிறா. சரி டோட்டல் ப்ளாப்னு நெனைச்சிக்கிட்டேன் :-). அதில் நான் சொல்ல நினைத்த விசயம், ஒரு தனி மனிதனாக நம்மால் முடிந்த அளவு நல்ல விஷயங்களை முயற்சிக்கிறோமா என்று தான். கடைசில எல்லோரும் லஞ்சத்தை புடிச்சிக்கிட்டாங்க. எனக்கே பயம் வந்துட்டு..நாமே ஒரு குடுமி புடி சண்டையை, அதுவும் நட்சத்திர வாரத்தில் ஆரம்பித்து வைக்கிறோமோன்னு..புள்ளையார் புடிக்க கொரங்கா மாறிடுச்சு..அதனால தான் அவசர அவசரமா ஒரு பதிவை 'பள்ளிக்கூடம் போகலாமான்னு' எழுதி போட்டேன் (திருப்தி இல்லாமலேயே), ஒரு விவாத விடயத்துடன் என் நட்சத்திர வாரத்தை முடித்து கொள்ள மனம் இல்லாமல்.அதுக்கும் நண்பர்கள் கொடுத்த பின்னூட்டத்தை இன்னிக்கு காலைலேயே பாத்துட்டு, சந்தோசமா இந்த கடைசி பதிவை எழுதுகிறேன்.

மொத்ததில் நான் எழுதிய ஐந்து பதிவுகளும் எனக்கு ரொம்ப திருப்திங்க. திருப்தி எப்போ வரும்னா, வரும் பின்னொட்டங்களின் எண்ணிக்கையில் அல்ல. அதில் நண்பர்கள் எழுத்துக்களில். எனக்கு எவருமே 'நல்ல பதிவு' 'அருமை' என்று மொட்டையாக சொல்லவில்லை. ஒவ்வொரு பதிவிலும், ஒவ்வொருவரும் மனதில் இருந்து கொட்டி விட்டு போயிருந்தீர்கள். என் பதிவை விட, நீங்கள் இட்ட பின்னோட்டங்கள் ரொம்ப சுவாரசியமானவை. நன்றி நண்பர்களே.

உண்மைய சொல்லனும்னா, இதுக்கே ஓஞ்சி போய்ட்டேன். மண்டையிலே சத்தியமா சரக்கு கெடையாதுங்க. இந்த 5 பதிவுக்கே நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். குடும்ப நேரங்கள் ரொம்பவே அடி வாங்கின. என்ன பண்ணுறது நட்சத்திர வாரமாச்சே. காலியா போன சரக்கு சட்டில இருந்து கொஞ்சம் இருந்ததையும் நல்லா சொரண்டி போட்டாச்சி. இப்போ நல்லா விம் பார் போட்டு கழுவி சட்டிய கவுத்தியாச்சி. என்னுடைய புராணம் வழக்கம் போல வாரம் ஒன்றாவது தொடர முயற்சி செய்கிறேன்.

ஒவ்வொரு வாரமும் ஒருவரை தேர்ந்தெடுத்து ஒரு பெரிய வாய்ப்பை கொடுக்கும் காசி சாருக்கும், மதி கந்தசாமி அவர்களுக்கும் மனசார என் நன்றியை மீண்டும் சொல்லிக்கிறேன்.
எனக்கு அடுத்தததா நட்சத்திரமாக ஆரம்பிக்க காத்திருக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.

இந்த ரெண்டு மூனு வாரமாகவே பரிச்சைக்கு படிக்கும் மக்கு மாணவன் போல தான் என் நிலைமை. கஷ்டப்பட்டு படிச்சி பரிட்சை எழுதிட்டேன். பாஸா! பெயிலா- என்று நீங்க தான் சொல்லணும். பாஸோ..பெயிலோ...ஆனா பரிட்சை முடிஞ்சதும் பெரிய ஒரு லீவு விடுவாங்களே... :-)

ஹையா...எனக்கு லீவு விட்டுட்டாங்களே...வரேன் :-)

--------------------------------------------------

மொத்தமாக 60 நண்பர்கள் வந்து என்னுடைய வாரப்பதிவுகளை படித்து என்னை ஊக்கப்படுத்திச் சென்றுள்ளீர்கள். எல்லோருக்கும் என்னோட சிறப்பு நன்றிகள் :

தேசிகன், எல்.ஏ. வாசுதேவன், மதி கந்தசாமி, சிங் செயகுமார், பாரதி, தருமி சார், ஜோசப் சார், குமரன், பரஞ்சோதி, கைப்புள்ள (மோகன்ராஜ்), ராகவன், ஜோ, சதீஷ், ரஜினி ராம்கி, தாணு, செல்வன், இலவசகொத்தனார்,முத்துகுமரன், சிங்.செயகுமார்(எல்லா பதிவுக்கும் கவிதை கொடுத்ததுக்கு சிறப்பு நன்றி தம்பி), முத்து (தமிழினி), ஐயா ஞானவெட்டியான், மஞ்சூர் ராசா, இராமநாதன், சுந்தர், என்னார், இளவஞ்சி, இளந்திரையன், நடா, நிலவு நண்பன், கார்த்திக் ஜெயந்த், சந்தோஷ், கீதா, கிறுக்கன், டி.ராஜ், விவசாயி, சத்தியா, ஒலியினிலே, உஷா அக்கா, சாம், ராமச்சந்திரன் உஷா, எல்.எல்.தாஸ், மணியன், அபிராமம், தெக்கிக்காட்டான், நாமக்கல் சிபி, நிலா,மதுமிதா அக்கா, செல்வராஜ், பார்த்தா, தங்கமணி, அல்வாசிட்டி விஜய், வி.எஸ்.ரவி, கோபி, அல்லி மகன், காஞ்சனா, கீதா சாம்பசிவம், கார்த்திக், குணா, சிவகுமார்,வெளிகண்ட நாதர், யுகன் மற்றும் அனானி நண்பர்கள். யாராவது விட்டு போயிருந்தா, மன்னிச்சிடுங்க.

மற்றும் படித்து பின்னோட்டம் போட நேரம் இல்லாமல், வசதி இல்லாமல், பின்னோட்டம் எப்படி போடுவது என்று விவரம் தெரியாமல் சென்ற எல்லா நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

எல்லாத்துக்கும் மேலே இந்த வாரம் முழுவதும் ப்ளாக்கர் என்னை தொந்தரவு செய்யாமல் பாத்துக்கிட்ட கடவுளுக்கு ரொம்ப நன்றி.

Saturday, February 11, 2006

*நட்சத்திரம்* - பள்ளிக்கூடம் போகலாமா

சில என் பள்ளிக்கூட நினைவலைகள் உங்களுடன்.

அப்போல்லாம் 6 வயசுல தாங்க பள்ளிக்கூடம். அதுவும் 'நா போமாட்டேன்..போமாட்டேன்' அப்படின்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அப்பா ரெண்டு அடிய போட்டு பள்ளிக்கூடத்துல போய் விடுவாங்க. அங்கே போனா, எனக்கு ஏகப்பட்ட கிராக்கி. டீச்சர் வேற எங்கம்மா கூட அஞ்சாப்பு ஒன்னா படிச்சாங்கலாம். அவங்க B கிளாஸ் டீச்சர் கூட சண்டை. நாந்தான் ராசாவ எடுப்பேன்னு. ஒரு வழியா எங்கம்மா ப்ரண்டு பூமணி டீச்சர் போட்டியில ஜெயிச்சி என்ன 1 ஆ வகுப்புல தூக்கி போட்டாங்க. வீட்டுல நாம கடக் குட்டியா இருந்தோம்னு வச்சுக்கோங்க, நம்ம அண்ணன், அக்கா எல்லாம் பள்ளிக்கூடத்துல நமக்கு நல்ல பேர வாங்கி வச்சிருப்பாங்க. போய் சேந்தவுடனே 'ஓ! அவனோட தம்பியா..நல்ல புள்ளையாச்சே' அப்படின்னு நமக்கும் சேர்த்து ஒரு நற்சான்றிதழ் கொடுப்பாங்க. அப்புறம் நாம வெளியேறுவதற்குள்ள அண்ணன், அக்கா சேர்த்து வச்ச பேர மொத்தமா நாஸ்தி பண்ணிடுவோம். அது வேற கத.

ஒன்னப்புல சிலேட்டு எல்லாம் கெடையாது. ஒரு பிடி மண்ண எடுத்து அதுல 'அ..ஆ' எல்லாம் போடுவோம். மூனாப்புல தான் ABCD எல்லாம். அதுவும் பள்ளிக்கூடத்துக்கே ஒரே டீச்சர் தான் இங்கிலீசு சொல்லி கொடுப்பாங்க. அப்புறம் தான் சிலேட்டு. அதுக்கு மாக்குச்சி, கல்லுகுச்சி, பம்பாய் குச்சின்னு எழுத எத்தனை வகை குச்சி. அதையும் சில பயபுள்ளைங்க தின்னே தீத்திருங்க. 'டீச்சர்! பையன பாத்துக்கோங்க. குச்சி ரொம்ப திங்கறான்'னு மணிகண்டன் அம்மா அடிக்கடி சொல்லிட்டு போவாங்க. அவன் பேரே குச்சி தின்னி.

மதியம் ஆச்சின்னா, நானும் மத்த பயலுவ எல்லாம் சத்துணவு அக்காவுக்கு உதவி பண்ணி கொடுத்துக்கிட்டு இருப்போம். கிணத்துல தண்ணி எறச்சி ஊத்துறது, உப்பு புளி வாங்கியாறது அப்படின்னு செஞ்சிக்கிட்டு கெடப்போம். நமக்கு சோறு போடுற அக்கா இல்லையா.

எனக்கு ரொம்ப நல்லா நியாபகம் இருக்கிறது என்னோட அஞ்சாப்பு தான் (செல்லையா தெரியுமுல்லா). இன்னொரு நண்பன் கிருஷ்ணன். அவன் தான் டீச்சருக்கு செல்லப் பிள்ளை. 'போடா. போய் தலைகிழா நில்லு' அப்படின்னு டீச்சர் சொன்னா இவனும் போய் ஒரு முக்குல போய் குட்டிகரணம் அடிச்சிக்கிட்டு நிற்பான். வகுப்புல முதல் மாணவன். அப்போல்லாம் கிட்ட தட்ட ஒரு 10 பேரு முதல் ரேங்க் தான். அதுல இந்த பொட்ட புள்ளைங்க இருக்கே அது ஒரு 8 இருக்கும். நானும் கிருஷ்ணனும் மற்ற ரெண்டு பேரும்.

ஒரு தடவை எங்க வகுப்புக்கு தண்ணி மண் பானை வாங்க சந்தைக்கு போய் ஒரு பானை வாங்கி வந்தோம். வரும் போது வெயிலில் கால் சூடு தாங்க முடியாம, பானையை போட்டு உடைத்து விட்டோம். சந்தையில் இருந்து பள்ளிக்கூடம் வரை ஓன்னு அழுதுகிட்டே வந்தோம். டீச்சர் அடிப்பாங்களோன்னு தான். இப்படி நிறைய (அஞ்சாம் கிளாசுக்கே ஒரு தனி பதிவு போடலாம். பிறகு)

அப்புறம் நான் அந்த பள்ளிக்கூடத்துல நிம்மதியா படிக்கிறது புடிக்காம, என்னை இங்கிலீசு மீடியத்துல போடலாம்னு எங்க அண்ணன் ஹெட்மாஸ்டர் கூட சண்டை போட்டு டீ.சி வாங்கி ஒரு பள்ளிக்கூடத்துல சேர்த்தாங்க. இங்கிலீசு மீடியம்னா A கிளாஸாம்ல. என் நண்பன் கிருஷ்ணனும் அதே வகுப்பில். 'ஏல! நீயும் இங்கே தான் இருக்கியா மக்கா' அப்படின்னு ஒரே சந்தோசம். வகுப்புல மொத்தம் 80 பேரு. வாத்தியார் வந்து Atmosphere அப்படின்னாலே எனக்கு தலை கிர்ருன்னு சுத்தும். இவ்ளோ பெரிய வார்த்தையா இருக்கேன்னு. C for Cat ..D for Dog.. அந்த ரேஞ்சில தான் அப்போ நம்ம இங்கிலீசு இருந்திச்சி. அப்புறம் தான் விசயமே தெரிஞ்சது இந்த 80 பேருக்கும் ஒரு நுழைவு தேர்வு இருக்கு, அதுல தேறலைன்னா அடிச்சி வெறட்டிருவாங்கன்னு. ஏதோ வல்கேனோ (Volcano) அப்படின்னு ஒன்ன கொடுத்து தமிழ்ல எழுத சொன்னாவ. என்னாடா இது வல்கேனோ...நம்ம கல்கோனா முட்டாய் மாதிரி ஒரு முட்டாயோன்னு நெனைச்சி மொழிபெயர்த்தலில் சும்மா பூந்து வெளையாடிட்டேன் (கல்கோனா முட்டாய் தெரியுமா..சீடை மாதிரி இருக்கும்..காலைல வாயில போட்டா..மதியம் வரைக்கும் கரையாது..சுமா கல்லு மாதிரி கெடக்கும்). அப்புறம் தான் தெரியும் வல்கேனோன்னா எரி மலையாம்ல.

அடுத்த நாள் என்னோட பைய எடுத்துக்கிட்டு 'அன்னா இருக்குல்லா..வரிசையா கிளாஸு..
அதுல ஏதாவது ஒன்னுல போய் ஒக்காந்துக்கோன்னு வெரட்டி உட்டுட்டாங்க. நானும் குத்து மதிப்பா D வகுப்பு முன்னாடி போய் பரிதபமா போய் நின்னேன்.. ஆசிரியர் 'என்னப்பு! என்ன வேணும்' அப்படின்னு கேட்டாரு...'ஒன்னுமில்லைய்யா! அந்த கடைசில ஒரு வகுப்பு இருக்குல்லா..அங்கே இருந்து வெரட்டி விட்டுட்டாங்க' அப்படின்னு சொன்னேன். உள்ளே இருக்குற பயலுவ எல்லாம் என்னைய ஒரு மாதிரி பாத்தானுவ. அப்புறம் என்னைய உள்ளே கூட்டிக்கிட்டாரு...அதோட முடிஞ்சது நம்மோட ஆங்கில கனவு..எனக்கு ஒரே ஒரு கவலை...கிருஷ்ணன் பாசாகி அங்கேயே தங்கிட்டான்...'இனி ஒரே வகுப்புல வரவே முடியாதாம்ல' ரொம்ப சோகமா பேசிக்கிட்டோம்.

இங்கிலீசு மீடியம் பசங்க எல்லாம் ஒரு ரேஞ்சில இருக்குறானுவ..நமக்கு பார்த்தாலே ஏதோ இங்கிலீசு கார தொரைய பாக்குறப்புல இருக்கு..அப்புறம் கிருஷ்ணன் கூட அவ்வளவா ஒட்டுதல் இல்லாமலே போச்சி. ஆறாப்புல நான் தான் ஒன்னாம் ரேங்க். நல்லா படிக்கிற அஞ்சு பேர எடுத்து ஆளுக்கு ஒரு 10 மாணவர்களை மேய்க்க கொடுத்திருப்பார்கள். வகுப்பு முடிஞ்சதும் 10 பயலுவலுக்கிட்டயும் ஒப்பிக்க சொல்லி, ஒப்பிக்காதவனை போட்டுக்கொடுப்பது தான் எனக்கு கொடுக்கப் பட்ட வேலை.

மதியம் ஆச்சினா, நானும் முருகனும் தட்டை தூக்கிக்கிட்டு சத்துணவு சாப்பிட கெளம்பி விடுவோம். சத்துணவா அது...செத்த உணவு...உப்பும் இருக்காது..உறைப்பும் இருக்காது..சில சமயம் புழு கூட கிடக்கும்..நானும் முருகனும் ஆளுக்கு அஞ்சு பைசா போட்டு கடைக்கு போய் பச்ச மொளகா வாங்கி வச்சிருப்போம். சும்மா நறுக்குன்னு கடிச்சிக்கிட்டு சாப்பிட்டோம்னு வச்சிக்கோங்க..தேவாமிர்தம்.

இப்படியே வாழ்க்கை 10 வரைக்கும் போச்சி. எங்க பத்தாப்புக்கு ஒரு ஆசிரியர் புதிதாக வந்திருந்தார். பள்ளிக்கூடத்துக்கே அவர் புதிது. எங்கள் வகுப்பு ஆசிரியர். ரொம்ப நல்ல மனுசங்க. சொந்த காசுல பேப்பர், பேனா எல்லாம் வாங்கி எங்களுக்கு கொடுப்பார். ரொம்ப அன்பா இருப்பார். நான் பள்ளிக்கூடத்துக்கு லீவே போடலைன்னு எனக்கு ஒரு பாக்கெட் கடலை மிட்டாய் எல்லாம் பரிசா கொடுத்தார். எல்லோரும் பரிச்சை எழுதிட்டு பொது தேர்வு மதிப்பெண் எல்லாம் வந்தது. சொல்லலாம்னு கிளம்புனா அவரு செத்து போய்ட்டாருன்னு வகுப்பு மக்கா வந்து சொன்னான். எல்லோரும் அவரு வீட்டுக்கு போய் அழுதுட்டு வந்தோம். எங்களுக்காக ரொம்ப உழைத்த ஆசிரியர். மனசே கேக்கலை.

நம்ம ஆசை எங்கே விட்டது. மறுபடியும் வீட்டுல 11ஆம் வகுப்பிற்கு இங்கிலீசு மீடியம் கேட்டாங்க வீட்டுல. உடனே கொடுத்திட்டாங்க. எனக்கு ஒரே சந்தோசம், கிருஷ்ணன் கூட சேர்ந்து படிக்கலாம்லா. வகுப்பில் போய் தேடினேன். அவனை காணோம். விசாரித்து பார்த்ததில், படிக்க வசதி இல்லாமல் வீட்டில் படிப்பை நிப்பாட்டி விட்டார்களாம். ஏண்டா போய் சேர்ந்தோம் என்று ஆகி விட்டது. என்னை மாதிரியே ஒரு 5 பசங்க, தமிழ் மீடியத்துல இருந்து சேந்திருந்தானுங்க. முதல் பரிட்சைல தமிழ், ஆங்கிலம், கணிதம் தவிர எல்லாம் காலி. விலங்கியலில் மட்டும் பாஸாக ஒரு மார்க் தேவை பட்டது. சரி விழுற அடியில ஒன்னு கொறையுமேன்னு ஆசிரியரிடம் போய் 'சார்! ஒரு மார்க் போடுங்க சார்' அப்படின்னு கேட்டேன். 'தாவரவியலில் எத்தனைல' அப்படின்னார் ' அதுவும் ஊத்திக்கிச்சி சார்' அப்படின்னேன். 'லே! மொத்தமா ரெண்டையும் சேர்த்து தாம்ல பார்ப்போம். கூட்டி கழிச்சி பாத்தா, நீ எப்படியும் பெயிலு தாம்ல. ஓடி போல' அப்படின்னு ஒரு மார்க் போட மறுத்திட்டார். அப்போல்லாம் பண்ணிரண்டாம் வகுப்பிலும் டவுசர் போட்டுக்கிட்டு தான் போவோம். 10 படிக்கும் வரைக்கும் படாத அடிக்கு அன்னைக்கு மொத்தமா வாங்கினேன். என் கூட வந்த மத்த 5 பயலுவலுக்கும் அதே கதி..அடுத்த நாள் பார்த்த மத்த பயலுவ எல்லாம் மூன்றாம் வகுப்பில் போய் மண்வெட்டிய புடிச்சிக்கிட்டு இருக்கானுவ...என்னலன்னு கேட்டா 'மக்கா! நமக்கு அது ஒத்து வராதுல..நமக்கு மண்வெட்டி தாம்ல சரி..மனுசன் அந்த அடிய வருசம் முழுக்க வாங்க முடியுமால' அப்படிங்கறானுங்க.

அப்புறம் கிருஷ்ணன் பாலி டெக்னிக் படித்து விட்டு, அப்புறம் தங்க நகை செய்யும் தொழில் படித்து விட்டு, இப்போ பேங்கில் வேலை செய்கிறான். போன வருடம் கல்யாணம் ஆனது. கல்யாண கார்டு கொடுக்க வீடு தேடி வந்தான். இப்பவும் போனில் பேசுவோன். என்னோட ஒன்னாம் கிளாஸ் நண்பன் இல்லையா. இன்றும் ரெண்டு பேரும் மேலே சொன்ன கதை எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருப்போம்.

( இன்னும் நிறைய சொல்லலாம்..சரி நம்ம வாரம் முடிய போதுல்லா..லீவுல போறதுக்கு முன்னாடி..ஒரு சின்ன நினைவலைகள்...அவ்வளவே)..

*நட்சத்திரம்* - வர வர நாடே நல்லால்ல..

இன்று சனிக்கிழமை. பெயருக்கு தான் விடுமுறை. காலையில் இருந்தே ஒவ்வொரு வேலையாக வந்து தொலைகிறது. தொலைபேசி நாலு நாளா வேலை செய்யவில்லை. எழுதி வைத்தும் பார்க்க யாரும் வரவில்லை. ஊருக்கு போக டிக்கட் புக் பண்ணணும். இப்படி நிறைய வேலை. 'இதுக்கு பேசாம ஆபீஸ்லயே இருக்கலாம்' எண்ணிக்கொண்டே வண்டியை கிளப்பினால், வண்டி ரிசர்வ்ல கெடக்குது. இதுக்கு வேற 2 கி.மீ போகணும். இங்கேயே போடலாம்னா எல்லாம் கலப்பட பெட்ரோல். எங்க எங்க கலப்படம் பண்ணறாங்க பாருங்க. இப்படி நம்ம காச கொள்ள அடிச்சி என்ன பொழப்போ. எரிச்சலோரு கிளம்புகிறேன்.

ஒரு வழியாக பெட்ரோல் போட்டுட்டு மவுண்ட் ஸ்டேசன் போய் சேர்ந்தேன். ஏற்கனவே ஒரு பெரிய வரிசை நின்று கொண்டிருந்தது. இப்போதைக்கு முடியாது போல இருக்கே. எங்கே பார்த்தாலும் கூட்டம். இந்த மக்கள் தொகை தாங்க நம்ம நாட்டுல ஒரே பிரச்சினை. எங்க போனாலும் மணிக்கணக்கா நிக்க வேண்டிய இருக்கு. நிற்பதை தவிர வேறு வழி இல்லை. வரிசையில் போய் நின்றேன். ஏதொ ஒரு எருமை பருப்பு மாதிரி வரிசைல நிக்காம முன்னாடி போனது.என்னா திமிரு பாருங்க. 'யோய்! இங்கே நிக்கறவன் எல்லாம் கேணப்பசங்க மாதிரி தெரியுதா. லைன்ல வாவே' கத்தினேன். என்னை முறைத்துக்கொண்டே பின்னால் போய் நின்றான். ஒரு வேளை இந்த ஏரியா ரௌடியா இருக்குமோ. இந்த வாய் சும்மாவும் இருக்க மாட்டேங்குது. என்னை நானே நொந்து கொண்டேன். ரிசர்வ் பண்ணிட்டு வரும்போது மறுபடியும் முறைத்தான். எட்டிப் பாக்காம வண்டிய கிளப்பிட்டு வந்துட்டேன்.

அடுத்து நேரே எக்ஸ்சேஞ்ச் ஆபீஸ். நான் போய் சேர்ந்தவுடனே முருகன் என்னை கண்டு கொண்டான். 'என்ன சார்! இந்த பக்கம்'. 'ஏம்பா! வீட்ல டெலிபோன் நாலு நாளா வேல செய்யல. எழுதி வச்சும் யாரும் வர காணோம். எதுக்கு இப்படி படுத்தறீங்க' நான். 'இல்ல சார்! எல்லாரும் லீவுல இருக்காங்க. அதான் சார் மெதுவா நடக்குது. எழுதி வச்சவங்களுக்கு வரிசையா பார்க்கிறோம். இருங்க உங்களுக்கு எப்போன்னு பாத்து சொல்றேன்' உள்ளே போய் விட்டான் முருகன்.

'வரிசைப்படி உங்களுக்கு இன்னும் ரெண்டு நாள்ல வந்துரும் சார்!'. 'என்னப்பா இது இன்னும் ரெண்டு நாளா. அது வரைக்கும் தாங்காது'. காசு வெட்டினாத் தான் வேலை நடக்கும் போல. அவன் மூஞ்சிலேயே காசுக்கு அடி போடுகிறான் என்று எழுதி ஒட்டி இருந்தது. ஒரு 50 ஐ தள்ளினேன். 'சரி சார். இன்னைக்கு சாயங்காலமே பண்ணிடலாம் சார்' முருகன் வரும்படி பார்த்த சந்தோசத்தில் வழிந்தான்.

வீட்டுல ரொம்ப போர் அடிக்குது. சரி புது படம் பார்க்கலாம்னு அப்படியே வண்டிய மவுண்ட் ரோட் சரவணன் கடைக்கு விட்டேன். 'என்னப்பா ஆதி சி.டி வந்துட்டா'. 'இன்னும் வரலை சார். படம் வந்து ரெண்டு நாள் தான ஆகுது. நாளைக்கு வந்துடும். பரமசிவம் இருக்கு கொண்டு போறீங்களா'. சரின்னு 20 ரூபா கொடுத்துட்டு பரமசிவத்தை கொண்டு வந்தேன். ஏதோ கஞ்சாவ கொடுக்கற மாதிரி மறைச்சி கொடுக்கறான். இப்போ ரொம்ப கெடுபுடியாம்ல. வாங்கிட்டு கிளம்பும் போது, சுத்தி போக மாச்சப்பட்டு வண்டிய குறுக்கு வழில விட்டேன். நம்ம நேரம். வழில வசூல்ராஜா...அதாங்க சென்னை டிராபிக் போலிஸ். நிறுத்தி ஏதோ மிருகத்தை கூப்பிடுவதை மாதிரி கூப்பிட்டார். 'இது ஒன் வே! தெரியுமா'. 'தெரியும் சார். நீங்க இருப்பீங்கன்னு தான் தெரியாது' என்றா சொல்ல முடியும். 'நா இந்த ஏரியாவுக்கு புதுசு சார். தெரியாம வந்துட்டேன்' முடிந்த அளவு பவ்யமா பதில் சொன்னேன். இன்னைக்கு மொய் 50 ஆ 100 ஆன்னு தெரியலை. பர்ஸ்ல 50 இருந்தா தப்பிச்சேன். 'சரி லைசன்ஸ்-அ கொடு' புடுங்கி வைத்துக் கொண்டு டிராபிக்கை கவனிக்க போய்ட்டார்.

நாமா ஏதாவது அமௌண்ட் முடிவு பண்ணி நீட்டணும். அதுவரை நம்மள எட்டிப் பார்க்க மாட்டார். 'எப்படி வசதி. வண்டிய கோர்டுக்கு கொண்டு போனா அலையணும். பார்த்து கொடுத்துட்டு போ' என்னை பார்க்காமலே பேசுகிறார். பேரம் நடக்கிறது. தெரிந்த கெட்ட வார்த்தையை எல்லாம் சொல்லி மனதுக்குள் அவருக்கு அர்ச்சனை பண்ணி விட்டு ஒரு ஐம்பதை நீட்டினேன். சந்தோசமாக வாங்கிக் கொண்டார். 'சே! என்ன பொழப்பு இது. எங்கு பார்த்தாலும் லஞ்சம்' திட்டிக்கொண்டே வண்டியை நகர்த்தினேன்.

சைதாப்பேட்டை வரும் போதே மழை பிடித்து விட்டது. ஐந்து நிமிடம் தான் மழை பெய்தது. அதற்குள் எங்கும் ஒரே தண்ணிக்காடு. பூமிக்குள்ள தண்ணி எறங்குவதே இல்லை. என்ன ஊரோ. இதுல முன்னாடி போறவனுங்க வேற அடிக்கிற சேத்துல சட்டை எல்லாம் நாஸ்தியாயிடுது. வீட்டுக்கு போற முன்னாடி வர்ற வழில அண்ணாச்சி கடைல வண்டிய நிறுத்தி பால் பாக்கெட் ஒன்னு கேட்டேன். கடை பையன் எடுத்து கொடுத்தான். 'ஒரு கவர்ல போட்டு கொடுப்பா'. 'ஏன் சார்! ஒரு பாலுக்கு கூட கவரா' புலம்பிக்கொண்டே ஒரு பாலிதீன் கவரை எடுத்துக் கொடுத்தான். இதுக்கெல்லாம் கூடைய தூக்கிக்கிட்டா அலைய முடியும். கெடைக்கிற 10 பைசாவுல 5 பைசா போச்சேன்னு எரிச்சல் அவனுக்கு.

நேரே வீட்டுக்கு கிளம்பினேன். வழியெங்கிலும் ஒரே சகதி. வண்டி குடை சாயாமல், ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். காலையிலேயே கிளம்பி விட்டதால், பேப்பர் பார்க்க கூட நேரம் இல்லை. இன்றைய பேப்பரை எடுத்துக் கொண்டு சோபாவில் சாய்ந்தேன். திறந்தவுடன் கொட்டை எழுத்தில் 'பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பிக்கள் லஞ்சம்'. "சே! என்னடா நாடுடா இது. எங்க பார்த்தாலும் லஞ்சம். எங்க பார்த்தலும் ஏமாத்து. ஒரே ஊழல்' புலம்பிக் கொண்டே பரமசிவத்தை சி.டி ப்ளேயருக்குள் தள்ளினேன். ரசிக கண்மணிங்க எல்லாம் தல திரைல வந்ததும் பூ போடுவது வரை தெரிகிறது. மெதுவாக திரையை போகஸ் பண்ணுகிறார்கள். இதுவும் கேமரா பிரிண்ட் தான் போல. இதையும் நல்ல பிரிண்டுன்னு சொல்லி ஏமாத்தறானுங்க பாருங்க. மறுபடியும் புலம்புகிறேன். பரமசிவம் என்னை படுத்த ஆரம்பிக்கிறார்.

Friday, February 10, 2006

*நட்சத்திரம்* - கருப்பன்

லட்சுமி காலையில் இருந்தே கத்திக்கொண்டு இருந்தது. 'டேய்! அத வெளியே விட்டுடாதடா. புடிச்சி கெட்டிப்போடுடா' அடுப்பாங்கரையில் இருந்து அம்மா குரல் கொடுத்தார்கள். லட்சுமி. எங்க வீட்டிற்கு வந்த முதல் ஆடு. அதற்கு லட்சுமின்னு பேர் வைத்தது அக்கா தான். லட்சுமி ஈன்றேடுக்க போகும் குட்டிகளுக்கு நானும் அக்காவும் சேர்ந்து பெயர்கள் தேர்வு செய்தோம். ரெண்டு பெயர் போதும் என்று நினைத்திருந்த எங்களுக்கு லட்சுமி நாலு குட்டி போட்ட போது, ஒரே ஆச்சரியம். ஒவ்வொரு குட்டியாக அம்மா துணியால் சுத்தம் செய்து, கத்தியால் அதன் கால் குளம்புகளை வெட்டி லட்சுமியிடம் கொடுக்க, லட்சுமி பாசமழை பொழிந்து கொண்டுருந்தது. என்னடா இது மூனுமே பொட்ட குட்டியா போச்சி, ஒரு கெடா குட்டி இல்லாம போச்சேன்னு அம்மா புலம்பிக்கிட்டு இருந்தபோது பிறந்த நாலாவது குட்டி தான் சூர்யா. மத்த மூன்று பேரும் ப்ரியா, வித்யா, நித்யா.

ஒரே நாளில் எங்கள் வீடு களை கட்டிப் போனது. நாலும் பாலுக்கு அடித்துக்கொள்ளும். சூரி எப்படியும் அடித்து பிடித்து வயிற்றை நிறைத்து விடுவான். லட்சுமி மேய்ந்து விட்டு தூரத்தில் வரும் போதே இவன் மட்டும் ஓடி போய் கெஞ்சி கூத்தாடியாவது மடியை காலி பண்ணிவிடுவான். 'டேய்! உன் ஆட்ட கெட்டி போடுடா. மத்த குட்டி எல்லாம் பாவம்' அம்மா அவன் மீது அடிக்கடி குற்றப்பத்திரிகை வாசிப்பார்கள். அவனது சுறுசுறுப்பும், குறும்பும் பிடித்து போக, சூரி மற்ற மூவரை விட ரொம்ப பிடித்து போய்விட்டான். சூரி என்று கூப்பிட்டால் எங்கிருந்தாலும் ஓடி வருவான். கொஞ்ச நாளில் அவன் கருப்பு நிறத்தை வச்சே அவனை கூப்பிட ஆரம்பித்து 'கருப்பன்' என்றே ஆகி போய் விட்டான்.

என் கூட கட்டிலில் படுத்து தூங்கும் அளவுக்கு எனக்கு ரொம்ப நெருங்கியவனாகி போனான் கருப்பன். எங்கு சென்றாலும் என் கூட வந்து விடுவான். 'அத மேய விடுடா. அத கூட்டிக்கிட்டே அலையறியே' அம்மா அடிக்கடி என்னைத் திட்டிக்கொண்டிருப்பார்கள். நான் விளையாட போனால், அவனும் கூட வந்து ஒரு ஓரத்தில் மேய்ந்து கொண்டிருப்பான். நான் திரும்பி வரும் போது கூட வருவான். அவனது ஒரே கெட்டப் பழக்கம், சின்ன புள்ளைங்கள தூரத்தில் கண்டாலே ஓடி போய் முட்டி தள்ளி விடுவான். 'யக்கா! ஒங்க ஆடு நம்ம பார்வதி புள்ளைய நேத்து முட்டிட்டு. அத கெட்டி போடுங்க' அப்படின்னு தினமும் ஒரு புகார் வீட்டுக்கு வரும். ஒரு நாயை பார்ப்பது போல எல்லா குழந்தைகளும் 'கருப்பன் வர்றான்'ன்னு ஓடுங்க. தமாசா தான் இருக்கும். மொட்ட கொம்பன் அவன். கீழே தள்ளி விடுவதோடு சரி. இல்லன்னா ஊர் பஞ்சாயத்துல நம்மல இழுத்து விட்டிருப்பான்.

நான் தோளில் ஒரு துண்டை போட்டுக்கொண்டு கையில் ஒரு சொரண்டி கம்பையும் எடுத்து விட்டால், ரொம்ப குஷியாகி விடுவான். நான் அவனை மேய்க்க கூட்டிச் செல்லப் போகிறேன் என்று அவனுக்கு தெரியும். எல்லாரும் நான் நடக்க ஆரம்பித்தால் ஒழுங்காக என் பின்னாடி வருவார்கள். இவன் மட்டும் எனக்கு முன்னாடி எனக்கு வழி காட்டி செல்வான். லட்சுமியும் மற்ற குட்டிகளும் ஒழுங்காக மேய்ந்து கொண்டிருந்தால், இவனுக்கு மட்டும் நான் தனியாக ஏதாவது பறித்து போட வேண்டும். 'கெடுத்து குட்டிச்சுவராக்கி வச்சிருக்க. மேய கறி வலிக்குது பாரு அதுக்கு' அம்மாவின் அடுத்த புகார். பள்ளிக்கூடத்தில் இருந்து வரும் போதே வழியில் கிடக்கும் ஒடங்காவை இவனுக்காக பொறுக்கி வருவேன். அவனுக்கு மட்டும் தனி கவனிப்பு தான்.

பட்டாசுன்னா அவனுக்கு ரொம்ப பயம். தீபாவளி அன்னைக்கு பட்டாசு சத்தத்துக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே கெடப்பான். நான் சாப்பிட உட்கார்ந்தால் வந்து நின்று தட்டையே பார்த்துக் கொண்டிருப்பான். சாம்பார் ஊத்தி ஒரு உருண்டை கொடுத்தால் சந்தோசமாக சாப்பிடுவான். 'ஆட்டுக்கெல்லாம் சோறு ஊட்டிக்கிட்டு இருக்கான் பாரு' அம்மா திட்டுவார்கள். சட்டில புண்ணாக்கு தண்ணி வைத்தால், முதல் வேலையாக மூச்சை பிடித்துக் கொண்டு கழுத்து வரை தண்ணிக்குள் முங்கி கீழே கிடக்கும் புண்ணாக்கை தேடுவான். மூச்சு முட்டியதும் தலையை வெளியே எடுத்து மூச்சு வாங்கிவிட்டு மறுபடி முங்கி தேட ஆரம்பிப்பான். மொத்த புண்ணாக்கும் அவனுக்குத் தான். தலையை வெளியே எடுக்கும் போது மொத்த தலையும் வெள்ளையாக புண்ணாக்கு படிந்து போய் கோமாளி மாதிரி இருப்பான். அவனை பார்த்து நான் சிரித்துக் கொண்டிருப்பேன்.

ஒரு நாள், 'ஏல! ராஜா. ஒங்க ஆடு கெணத்துல வுழுந்துட்டுல' அப்படின்னு பக்கத்து வீட்டு ஆச்சி சொன்ன போது, தலைதெறிக்க ஓடினேன். ஊர்ல எல்லோரும் தெக்க இருக்கிற கெணத்த சுத்தி எட்டி பாத்துக்கிட்டு இருந்தாங்க. தண்ணி இல்லாத பாழுங்கிணறு. துள்ளி குதித்து விளையாடும் போது அந்த மொட்டை கிணத்தில் தவறி விழுந்திருக்கிறான். 'ஐயோ கருப்பா' என்று கத்திக்கொண்டே ஓடி போய் பார்த்தேன். கருப்பன் ஒரு 80 அடி ஆழத்தில் நின்று கத்திக்கொண்டு நின்றான். ஊர்ல எல்லோரும் ஒரு கயிறுல ஒரு கூடையை கட்டி இறக்கினார்கள். கிணத்தில் இறங்கி அவனை கூடைல போட்டு கட்டி விட்டார்கள். ஒரு சின்ன காயம் கூட இல்லாம அப்படியே வந்தான் கருப்பன். அப்போது தான் எனக்கு மூச்சே வந்தது. அவ்வளவு ஆழத்தில் விழுந்து ஒரு காயம் கூட இல்லாம வந்து விட்டானே என்று எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.

இப்படி கருப்பன் எனது உயிர் நண்பனாகி போனான். விளையாட நண்பர்கள் இல்லாத போது, இவனிடம் விளையாடிக் கொண்டிருப்பேன். கை முட்டியை வைத்து முட்டுவது போல பாவ்லா காட்டினால், இவன் முன் கால் இரண்டையும் தூக்கிக் கொண்டு முட்டுவான். நான் எங்காவது ஒளிந்து கொண்டால், ஒவ்வொரு இடமாக தேடுவான். என்னவெல்லாம் கற்றுக் கொடுக்க முடியுமோ எல்லாம் கற்றுக் கொடுத்தேன். இரண்டு காலால் நடப்பது, சுவர் மேல் நடப்பது, வேலி தாண்டுவது என்று வித்தைகள் நிறைய செய்வான். அவன் செய்யும் சேட்டைகளை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

நாட்களும் ஓடியது. கருப்பனும் வளர்ந்து கொண்டே வந்தான். 'யக்கா! உங்க வீட்டு கெடா நல்லா வளந்திருக்கே. வெல பேசிறலாமா' அம்மாவிடம் மாமா கருப்பணுக்கு நாள் குறித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கருப்பனுக்கும் ஒன்றும் புரிய வாய்ப்பில்லை. நாளும் வந்தது. கசாப்பு கடைக்காரன் எங்கள் வீட்டில். 'கருப்பன எதுக்கும்மா கொடுக்கணும். நம்ம கிட்டயே அவன் இருக்கட்டும்.அவன கொடுக்க வேண்டாம்' அவனை இழக்க முடியாமல் அம்மாவிடம் நான் கெஞ்சிக் கொண்டிருந்தேன். 'இதுக்கு மேல அத வளக்குறதுல பிரயோஜனம் கெடையாதுடா. நீ சின்ன பையன். ஒனக்கு ஒன்னும் தெரியாது. சும்மா இருடா' அம்மா என்னை அடக்கி வைத்து விட்டார்கள். நான் சின்னப் பையன் தான். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை, லட்சுமியோடு சேர்ந்து நானும் அழுவதை தவிர. நடக்க மாட்டேன் என்று அடம்பிடித்த கருப்பனை , கசாப்பு கடைக்காரன் அடித்து இழுத்துக்கொண்டே போனான். கத்திக்கொண்டே சென்றான் கருப்பன்...என்னிடம் திரும்பி வருவோம் என்று நினைப்புடன்....

Wednesday, February 08, 2006

*நட்சத்திரம்* - கிராமத்து மணம்- 3 (தேன் கூடு)

மூனு நாளா ஒரே உருக்கமா எழுதறேனா :-),கொஞ்சம் ஜாலியா ஏதாவது எழுதலாம்னு இந்த பதிவு. நம்ம ஊர் புராணம் தான். நம்ம பொழப்பே அப்படி தானே ஓடுது. எங்கள் குருகுலம் பற்றி நிறைய இந்த இரண்டு பதிவிலும் சொல்லியிருக்கேன், இன்று இன்னும் சில.

மணம் - 1 ; மணம் - 2

குளம், ஏரி எதுவும் இல்லாத கிராமம் எங்க கிராமம். நீச்சல் தெரியலன்னா மனுசனாகவே மதிக்க மாட்டானுவ. அப்புறம் நீச்சல் கத்துக்கறது எல்லாமே கெணத்துல தான். கற்றுக் கொடுப்பது...அதே தான்...பீட்டர் அண்ணன். அப்போ வீட்டுக்கு வீடெல்லாம் போர் கெடையாது. தடுக்கி விழுந்தா கெணத்துல தான் விழணும். அப்படி அடிக்கு ஒரு கெணறு இருக்கும். அதுல பாதி மொட்ட கெணறா இருக்கும். குடிகார பயலுவ ரோட்டுக்கும் கெணத்துக்கும் வித்தியாசம் தெரியாம, கெணத்தில விழுந்து தெளிஞ்சி எழுந்து வந்த கத நெறைய நடந்திருக்கு. விழுந்தா ஏறி வர, படி இருக்கும். கெணத்துல தண்ணி இருக்குமான்னு கேக்காதீங்க. அது ஒங்க நேரத்த பொருத்தது.

மழை காலத்துல கெணத்துல தண்ணி கைல எட்டுற அளவுக்கு மேல வந்துடும். மேல இருந்து வெறும் அஞ்சு அடில தண்ணி கெடக்கும். கிணற்றில் ஊற்று எல்லாம் அருவி மாதிரி கொட்டும். அது தான் நாங்கள் நீச்சல் கற்றுக்கொள்ளும் காலம். இடுப்புல ஒரு சின்ன கயித்த கட்டி தண்ணில தள்ளி விட்டுடுவான். எமன் கைல இருக்குற பாசக்கயிறு மாதிரி தான். இப்போ நம்ம உயிரு அண்ணன் கைல. கயிற விட்டான்னா, நேரே சொர்க்கம் தான். நம்ம புள்ளைங்க சோபாவுல இருந்து விழுந்தாலே நமக்கு 'ஐயோ'ன்னு ஆகுது. 100 அடி தண்ணில நீச்சல் தெரியாம நம்மை அனுப்ப அம்மா-அப்பாவுக்கு மனசு வந்திருக்கே. அதுல இருந்தே தெரிஞ்சிக்கலாம், பீட்டர் அண்ணன் திறமையை. கப்புன்னு ரெண்டு மடக்கு தண்ணிய குடிச்சிட்டு தரைய நோக்கி பயணம் புறப்பட்டோம்னா, பீட்டர் அண்ணன் பாய்ந்து வத்து தூக்கிடுவான்.கயிறு எல்லாம் ரெண்டு நாள் தான். மூனாவது நாள், நீச்சல் அடித்துக்கொண்டிருப்போம்.

ஊர்ல இருக்கிற தோட்டத்தில் எல்லாமே பெரிய பெரிய கெணறுங்க. நீச்சல் குளம் பெரிசு இருக்கும். அங்கே அடிக்கடி குளிக்க போவோம். ஒரு நாள் போய் கெணத்தில குதிக்கலாம்னு போய் எட்டிப்பாத்தா, கெணத்துல தண்ணி இல்ல. நேத்து தான மேல வரைக்கும் தண்ணி கெடந்துச்சி. ஒரே நாளில் தோட்டத்திற்கு பாய்த்து காலி பண்ணிவிட்டார் தோட்டக்காரர். வெறும் 15 அடி தான் தண்ணி கெடந்தது. குதிச்சிருந்தா அவ்ளோதான்.

அந்நேரம் பார்த்து தூரத்தில் என்னோட கூட்டாளி செந்தில் வந்து கொண்டிருந்தான். நேத்து நான் பாத்து வச்சிருந்த தக்காளி செடிய புடிங்கிட்டு போய்ட்டான். அவனை பார்த்ததும் நான் பீட்டர் அண்ணனிடம் 'யண்ணே! செந்திலு நா பாத்து வச்சிருந்த செடிய புடிங்கிட்டு போய்ட்டான்'னு புகார் சொல்லிக்கொண்டிருந்தேன். 'அப்படியால பண்ணுனா அவன்.' ஏதாவது அவன பண்ணனும்னு ஒரு திட்டம் போட்டோம். அவன கிணத்துக்குள்ள தள்ளி விடுறதுன்னு..

நாங்க எல்லோரும் மட மடன்னு தொட்டில கெடக்குற தண்ணிய தலைல ஊத்திக்கிட்டு கெணத்து பக்கத்துல போய் நின்னுக்கிட்டோம். செந்தில் வந்தவுடன் 'ஏல! நான் வரதுக்கு முந்தியே குளிக்க ஆரம்பிச்சிட்டீங்களா. நானும் வரேன்ல' அப்படின்னு சொல்லி சட்டையை கழட்டி வச்சிட்டு ஓடி வந்து கெணத்த பார்க்காமலேயே கெணத்தில் குதித்தான். கொஞ்ச நேரம் கழித்து தொபுக்கடீர்னு ஒரு சத்தம். நாங்க எல்லாம் ஓடிப்போய் எட்டி பார்த்தோம். பையன் ஒழுங்கா குதித்ததினால் தப்பிச்சான். மேல ஏறி வந்து எங்களுக்கு செம திட்டு. அதுல இருந்து கெணத்த எட்டி பாக்காம குதிக்க மாட்டான்.

-----------------------------------------------

ஊர்ல எங்க பாத்தாலும் ஒரே ஒடங்காடு தாங்க (முள் மரம்). குருவி கூடு, தேன் கூடு என்று நிறைய பார்க்கலாம். புட்டான் பிடிக்க அலையும் போது, சில நேரம் தேன் கூடு ஏதாவது கண்ணுல மாட்டிக்கும். அப்புறம் என்ன, தேன் கூட்ட பாத்த கரடி மாதிரி தேனுக்கு சுத்தி சுத்தி வருவோம். நாம பாத்து வச்சத வேற எவனாவது தின்னுட்டு போய்ட கூடாதேன்னு, அதை மறைக்க ஏதாவது அள்ளி போட்டு மறைச்சிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைல இறங்குவோம்.

எப்படி தேன் கூட்டில் கை வைக்கிறது. தேனீ கிட்ட கொட்டு பட்டுருக்கியலா. சும்மா சின்னதா எறும்பு கடிச்ச மாதிரி தான் இருக்கும். சும்மா வீங்கி வலி பிண்ணிடும். அது கூட பரவாயில்லை. சுண்ணாம்பு எதையாவது தடவி சரி பண்ணிக்கலாம். ஆனா, நம்ம மானம்னு ஒன்னு இருக்கே. மூஞ்சில வெளையாட்டு போய்ட்டுன்னு வச்சிக்குங்க, அப்புறம் வெளிய தல காட்ட முடியாது. ஊரே சிரிக்கும். ஒரு முக்காட போட்டுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கனும்.

அதானால நானும் என்னோட கூட்டாளி செந்திலும் சேர்ந்து ரொம்ப ஜாக்கிரதையா தான் தேன் கூட்டுல கை வைப்போம். மொதல்ல இன்னைக்கு அம்மாவாசையான்னு பாத்துக்குவோம். அம்மாவாசை அன்னைக்கு தேனை எல்லாம் குடிச்சிடுமாமே..ஒங்களுக்கு தெரியுமா?. அப்புறம் அம்மாவாசை இல்லன்னா, தேன் கூட்டுக்கு நாள் குறிச்சிடுவோம். அன்று செந்தில் ஒரு கண்டுபிடிப்போடு வந்தான். 'ஏல! எங்க ஆச்சி சொன்னாங்க. ஈச்சிக்கு வெங்காய வாசம் புடிக்காதாம்ல. நாம வெங்காயத்த சவச்சி ஊதுனா தேனீச்சி எல்லாம் ஓடிடும். நாம நிம்மதியா தேன் எடுக்கலாம்'. நீங்க Warner Bros 'Lonely Tunes' cartoon பாத்திருக்கீங்களா..அதுல எறும்பு எல்லாம் பொருள் எடுத்து செல்லும் போது 'Hold Onion' அப்படின்னு சொல்லிட்டு ஆனியனை விட்டுட்டு போய்டும். நானும் ஒரு வேளை பூச்சிக்கெல்லாம் வெங்காயம்னா அலர்ஜின்னு நெனைச்சி ஒரு அஞ்சி சின்ன வெங்காயத்த எடுத்துக்கிட்டு தேன் எடுக்க கெளம்பினோம்.

நான் ஒரு 3 வெங்காயத்த வாயில போட்டு சவச்சிக்கிட்டே தேன் கூட்டு பக்கம் போனோன். கொஞ்சம் பயமா தான் இருந்தது. செந்தில் பாதுகாப்பா தள்ளி நின்னுக்கிட்டான். சரி கடவுளை வேண்டிக்கிட்டு 'ப்ப்பூ' அப்படின்னு ஊதி பாத்தேன். தேனீ ஒன்னும் அசையற மாதிரி தெரியலை. 'லே! இன்னும் பக்கத்துல போய் ஊதுல. நீ ஊதுறது கூட்டுல படவே மாட்டேங்குது' அப்படின்னு செந்தில் தூரத்துல இருந்து கத்தினான். நானும் கொஞ்ச கொஞ்சமா நெருங்கு கூட்டு பக்கத்துல வந்துட்டேன். நான் 'ப்ப்ப்பூ' என்று ஊதும் போது பாத்து, ஒரு கடிபடாத வெங்காயம் வாயில இருந்து ஸ்லிப் ஆகி நேரே கூட்டை போய் தட்டிட்டு. அவ்வளவு தான். எவனோ கல்ல வுட்டு தான் எறிஞ்சிட்டான்னு நெனைச்சி தேனீ எல்லாம் பாய்ந்து வந்து என் மூச்சில கோலம் போட்டுடுச்சிங்க. ரெண்டு நாளா வெளிய தல காட்ட முடியல.

அப்புறம் அஹிம்சா முறையை எல்லாம் விட்டுப்புட்டு கடுப்புல கல்ல விட்டு எறிஞ்சே கூட்ட காலி பண்ணிடறது. இல்லன்னா புகைய காட்டி எல்லா தேனீயையும் காலி பண்ணிட்டு தேன் திம்போம். சில நேரம் புகை காட்டுறோம் என்று காட்டையே கொளுத்தி விட்டிருக்கோம். ஆனா அத்தனை தேனீச்சையும் கொன்னுட்டு தேனை தின்னுட்டு வந்தது ரொம்ப கவலையா போச்சி. அடுத்த கூட்டுக்கு இன்னொரு ஐடியா வந்தது.

கொஞ்சம் பாலிதீன் கவரை எடுத்துக் கிட்டோம். இப்போ கண்ணுக்கு தெரியற மாதிரி ரெண்டு ஓட்ட போட்டுக்கிட்டு தலைல ஒன்ன கட்டிக்கிட்டோம். கை ரெண்டுக்கும் பாலிதீன் கவர சுத்திட்டு, வீட்டுல ஒரு போர்வைய சுத்திக்கிட்டு வேட்டைக்கு கிளம்பினோம். ரொம்ப தைரியமாவே தேன் கூட்டு பக்கத்துல போய் நின்னு கைய வச்சே கலச்சி வுட்டோம். சுத்தி தேனீச்சி 'ங்ஙே' அப்படின்னு ஆயுது. ஆனா கொட்ட முடியாதுல்லா. கூட்டில இருக்கிற தேனை மட்டும் காலி பண்ணிட்டு வந்துட்டோம்.

அப்புறம் தான் இன்னொரு ஐடியா வந்தது. ஐடியா கொடுத்தது செந்தில் தான் 'ஏல! ராணி தேனீய புடிச்சிட்டு வந்தா, எல்லா தேனீயும் பின்னாடியே வந்திருமாம்ல. அப்புறம் ராணிய வீட்டுல கெட்டி போட்டுட்டா, எல்லாம் அங்கேயே கூடு கட்டுமாம்ல. நமக்கும் இப்படி தேன் திங்க காடு காடா அலைய வேண்டியது இல்லை'. ராணிய புடிக்கிறதுன்னு, ஒரு நாள் ரொம்ப பொறுமையா (கவசத்தோட தான்) கூட்டு பக்கத்துல ஒக்காந்து பெரிசா இருக்கிற ஒரு தேனீய புடிச்சி ஒரு டப்பால போட்டு கொண்டு வந்துட்டோம். எல்லா தேனீயும் பின்னாடியே பறந்து வரும்னு பார்த்தா ஒன்னையும் காணோம். பீட்டர் அண்ணன் தான் வந்து திட்டினான் 'ஏல! ராணி தேனீய புடிச்சி வச்சிட்டு என்னல பண்றீங்க, அதுக்கு தேன் எடுக்க நீங்களால போக போறிங்க. தொறந்து விடுங்கல'. மனசே இல்லாம தொறந்து விட்டோம்.

அவனே எல்லா வித்தையையும் கத்து கொடுத்தான். சொன்னா நம்ப மாட்டீங்க. நாங்க எல்லோருமே கவசமே இல்லாம தேன் கூட்டுக்கிட்ட போய் கைய வச்சே தேனீய எல்லாம் தள்ளி விட்டுட்டு தேன் எடுக்க ஆரம்பிச்சோம். அமைதியா ஆடாம செஞ்சா ஒரு கொட்டு கூட வாங்காம தேன் எடுக்கலாம். இன்னும் ஒரு படி மேலே போய், அருவாள கொண்டு போய் கொம்போட வெட்டி கைல கூட்டை (தேனீ கலையாமலேயே) தூக்கிட்டு வருவோம். வந்து வீட்டு பின்னாடி ஒரு நல்ல மரமா பாத்து கூட்டோட ஏறி ஒரு கொம்புல கட்டி வச்சிடுவோம். தேன் வேணும்னு தோனிச்சின்னா, ஒரு தட்டையும் கத்தியையும் எடுத்துக்கிட்டு மரத்துல ஏறி தேனை மட்டும் எடுத்து வருவோம். அப்படி வீட்டுக்கு ரெண்டு மூனுன்னு தேன் கூடு கட்டி வச்சிருப்போம். இப்போ அந்த தைரியம் வருமான்னு கேட்டா...இல்லை..சத்தியமா இல்லை.

* நட்சத்திரம்* - எனக்குப் பிடித்தப் பாடல்கள்

ஒரு வாரத்துக்கு முன்னாடி நம்ம குமரன் நட்சத்திர வாரத்தில் 'எனக்கு பிடித்த பாடல்கள்' என்று ஒரு பதிவு போட்டிருந்தார்.ஆசையா போய் பார்த்தா, ஏமாத்திப்புட்டாரு. நெறைய பேரு போய் பார்த்துட்டு 'அட போங்க குமரன். ஆசையா ரெண்டு பாட்டு கேக்கலாம்னு வந்தா இப்படி ஏமாத்திப்புட்டியலே' அப்படின்னு சொல்லிட்டு திரும்பி பாக்காம ஓடி போய்ட்டாங்க. அதுல ஒருத்தர் நீங்க என்றால், அப்படியே இந்த பக்கம் வாங்க. நாம பாட்டு கேக்கலாம். என்ன சொல்லுதிய..

(நேத்து வெவரம் தெரியாம இதை கீதம் ப்ளாக்ல நட்சத்திரப் பதிவு என்று போட்டுட்டேன். காசி சார் தான் ஒரு ப்ளாக்ல தான் நட்சத்திரம் பதிவு எழுதணும்னு சொன்னார். அதனால இதை மறுபதிவு செய்கிறேன். ஏற்கனவே படித்தவர்கள், திட்டாதிங்கடே :-))

எஸ்.பி.பி தனி ஆவர்த்தனம் ஆரம்பித்ததில் இருந்து, நம்ம ப்ளாக் ரேட்டிங்ல ஏறிப் போச்சி :-)) . எனக்கு ராஜா மேல இருக்குற கிறுக்கு மாதிரி, நம்ம அகரமுதல சுந்தருக்கு எஸ்.பி.பி மேல கிறுக்கு போல (தப்பா எடுத்துக்காதிய மக்கா!). நாம மொத்தமா ஒரு எஸ்.பி.பி-க்குன்னு ஒரு குரூப் ப்ளாக் ஆரம்பிக்கலாமான்னு கேட்டார். ரெண்டு ப்ளாக்க வச்சி மேய்க்கறதுக்குள்ள உசுரு போயிடுது. வீட்டுல அடிக்கடி பூரிக்கட்டை எல்லாம் பறக்குது. இதுல இன்னொன்னா. நீங்களே ஆரம்பிங்க. நான் கூட்டாளியா வேணும்னா இருந்துக்கறேன்னு சொல்லிட்டேன். அவருக்கு ரொம்ப சந்தோசம். எஸ்.பி.பி...எஸ்.பி.பி- என்று ஒரே புலம்பல் :-). ஒரு வழியா இன்னைக்கு ப்ளாக்க ஆரம்பிச்சாச்சி.

நண்பர்களே! இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னன்னா! நமக்கு எல்லாம் இன்னொரு இசை இணையம் ரெடி ஆகி விட்டது. (ஒம்ம தொல்ல விட்டுதுன்னு சொல்றியலா :-)). எஸ்.பி.பி பாடல்களுக்கென உருவாகி இருக்கும் அந்த ப்ளாக் 'மை எஸ்.பி.பி'. ஒங்க எல்லாத்துக்கும் ஒரு வேண்டுகோள். 'மை எஸ்.பி.பி' ஒரு குரூப் ப்ளாக். உங்க அனைவரிடமும் இருந்து பதிவுகள் வரவேற்கப் படுகின்றன. உங்களுக்கு எஸ்.பி.பி புடிக்கும் தானே, 'மை எஸ்.பி.பி'- (MySPB) ல இடுக்கைகள் இட விரும்பினால், சுந்தருக்கு ஒரு மெயில் அனுப்புங்க (pepsundar@hotmail.com) . இல்லன்னா இங்கே பின்னோட்டத்துல சொல்லுங்க.

அதனால் இனி எஸ்.பி.பி கீதம் ப்ளாக்ல தனி ஆவர்த்தனம் பண்ண மாட்டார். வேணும்னா இந்த ஒரு வாரம் போட்டுங்கோங்க. அப்புறம் போட்டா, சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று சுந்தர் சொல்லிட்டார் (சும்மா தான்) :-). அதானால இன்னைக்கு புடிச்ச பாட்ட, எனக்கு புடிச்ச எஸ்பி.பி யோட 90ஸ்-க்கு அப்புறம் பாடல்கள் வந்த சில கேட்கலாம். இசை!!! ராஜா தான். வேற யாரு.

இதை சிறப்பு 'எஸ்.பி.பி தனி ஆவர்த்தனம்' என்று வைத்துக்கொள்ளுங்கள் (நட்சத்திர வாரம் அல்லவா). சரி தொடங்கலாமா. ஒரு ஐந்து பாட்டு எடுத்துக்கலாம் என்ன. ரொம்ப இசை வித்தை எல்லாம் இல்லாத, பாடல்களாக எடுத்திருக்கிறேன். சும்மா தலையாட்டிக்கிட்டே கேட்கிற மாதிரி ராகம், மயக்கும் எஸ்.பி.பி குரல். இது போதாதா.

முதல் பாட்டு. எஸ்.பி.பி கதாநாயகனாக நடித்த 'பாட்டுப் பாடவா' படத்தில் இருந்து 'சின்ன கண்மணிக்குள்ளே வந்த'. இந்த படமே இசை காவியம் தாங்க. ஒரு பெண் இயக்குனர் இயக்கிய படம். எஸ்.பி.பி உலகமே தெரியாமல் ஒரு மனநிலை குறைந்தவர்கள் காப்பகத்தில் இருப்பார். பின் பெரிய பாடகராக வளர்வார். எஸ்.பி.பி-யின் உடம்பு சைசு தாங்க இந்த படத்த ரொம்பவே சொதப்பிட்டு. அந்த உடம்பை வச்சிக்கிட்டு அவரு சின்ன குழந்தை மாதிரி பண்ணியது ஏனோ மனதில் ஒட்டவில்லை. சரி! இப்போ பாட்டுக்கு வருகிறேன். எஸ்.பி.பி முதன் முதலில் மேடையில் பாடுவதாக வரும் பாட்டு இது. ராஜாவின் மெலோடிக்கென வரும் வழக்கமான தபேலா மெட்டு. பல்லவியில் அப்படியே கூட பேசுவது போல வரும் புல்லாங்குழல் இசை, கூடுதல் மயக்கம் தரும். எஸ்.பி.பி பாடும் போது நம்மை அறியாமல் கண்ணை மூடிக்கொண்டு கேட்க தூண்டும் உருக்கம். கேட்டுப் பாருங்க..





இப்போ ஒரு கலக்கல் பாட்டு. தபேலாவில் இப்படி ஒரு மெட்டா?. அடிச்சி பட்டைய கெளப்பிருப்பாரு ராஜா. 'ராசா மகன்' படத்தில் இருந்து 'வைகாசி வெள்ளிக் கிழம தானே'. உங்கள் கைகள் இந்த பாட்டுக்கு தாளம் போடுவது நிச்சயம். இளம் கதாநாயகர்களில் ராஜா நிறைய நல்ல பாடல்கள் கொடுத்தது பிரசாந்துக்கு தான். அது இயற்கையாக அப்படி அமைந்து விட்டது என்று நினைக்கிறேன். செம்பருத்தியில் இருந்து தொடங்கியது, ராசா மகன், செந்தமிழ் செல்வன், எங்க தம்பி, கண்மணி, ஆணழகன் என்று நிறைய படங்கள். தெலுங்கில் பிரசாந்த்-திவ்யபாரதி நடித்த ஒரு படம் டப் ஆகி ((டப்பா ஆகி இல்லைங்க) தமிழில் 'இளம் நெஞ்சே வா' (பேரு மறந்து போச்சு) என்று வந்தது. அதிலும் பாட்டு கலக்கலா இருக்கும். எலலாமே அத்தனை இனிமையான பாடல்கள் ( நிறைய படங்கள் டப்பாவாகி போய்விட்டது). சரி பாட்ட கேக்கலாம்.





அடுத்ததாகவும் ஒரு பிரசாந்த் பாட்டு. எம்.எஸ்.வி-யும் ராஜாவும் இனைந்து இசை அமைத்தால் சூப்பர் ஹிட்டு என்று ஒரு இலக்கணம் உண்டு. மெல்ல திறந்தது கதவுல ஆரம்பிச்சி வச்சாங்க ( அதுக்கு முன்னாடி சேர்ந்து இசை அமைத்திருக்கலாம் என்று மனசு சொல்லுது. விவரம் தெரியலை). வரிசையா ஹிட். நம்ம வழ வழ வாசு 'செந்தமிழ் பாட்டு' என்று ஒரு படம் பண்ணினார். அதுவும் சூப்பர் ஹிட் (நேரம்யா). அப்புறம் நம்ம ஆளுங்களுக்குத் தான் கதைய விட, செண்டிமெண்ட்-ல தான நம்பிக்கை அதிகம். 'செந்தமிழ் பாட்டு' ஓடின உடன், உடனே 'செந்தமிழ் செல்வன்' என்று ஒரு படம். அதே ராஜா-எம்.எஸ்.வி காம்பினேஷன். 'பேரு வச்சியே..அதுக்கு சோறு வச்சியா' அப்படின்னு நம்ம விவேக் கேக்கிற மாதிரி, பேரு வச்சதோட விட்டுட்டாங்க. படம் ஊத்திக்கிச்சி. சொல்லப் போனா, செந்தமிழ் பாட்ட விட செந்தமிழ் செல்வனில் பாட்டு ரொம்ப அருமையா இருக்கும். நமக்குத் தான் 'படம் ஹிட்டா தான..பாட்ட ஹிட்டாக்கி பழக்கம்' அதனால இந்த படத்துல ராஜா-எம்.எஸ்.வி காம்பினேசம் அவ்வளவா எடுபடலை.ம்ம்ம்ம்

சரி..சரி..பாட்டுக்கு வருகிறேன். 'செந்தமிழ் செல்வன்' படத்தில் இருந்து 'குயிலே..இளமாங்குயிலே'. எஸ்.பி.பி பாடலை தொடங்கும் போதே ஜிவ்வுன்னு மனசுக்குள்ள ஒரு சோகம் ஏறும். அருமையான வரிகள். பாலு பாடும் விதம் அதற்கு மேலும் அழகு சேர்க்கும். மனநிலை தவறி போன தன் தாயை (சுஜாதா) குணப் படுத்துவதற்காக பிரசாந்த் ஒரு கிராமத்துக்கு கூட்டி வருவார். தன் தாய் குணமடைய ஏங்கும் ஒரு மகனின் ஏக்கத்தை அப்படியே கொண்டு வரும் பாட்டு. கேட்டுப் பாருங்கள்.





சிறப்பு பதிவு என்று சொல்லியாச்சி. மூனோட நிறுத்தினா எப்படி. இன்னும் ரெண்டு கேட்கலாம். என்ன சொல்லுதிய..

'என்றும் அன்புடன்' ராஜாவின் கலக்கலான இசையில் வந்த முரளி படம். நல்ல கதை அம்சத்துடன் வந்த ஒரு படம். அருமையான பாடல்கள் ( துள்ளித் திரிந்ததொரு காலம், மஞ்சள் வெயில் நேரமே, நிலவு வந்தது) நிறைந்த படம். சில பாடல்கள் ரொம்ப கவித்துவமாக இருக்கும். பாடல் வரிகளை அமுக்காத எளிமையான இசை. கவிதை கேளுங்கள்.





இறுதியாக, பார்த்திபனை வச்சி வாசு 'காக்கை சிறகினிலே' அப்படின்னு ஒரு படம் பண்ணினார். படம் கெடப்புல கெடந்து ஒரு ரெண்டு மூனு வருசம் கழிச்சி வந்திச்சி. நம்ம மீடீயாக்களுக்கு தான் ராஜான்னா எரியுமே. உடனே சொல்லிட்டாங்க 'பாட்டு எல்லாம் ரெண்டு மூனு வருசத்துக்கு முன்னாடி வந்த மாதிரி பழைய பாட்டு மாதிரி இருக்கு' அப்படின்னு. மூனு வருசத்துக்கு முன்னாடி போட்டா, அப்படித்தானே இருக்கும். பாட்டு நல்லா இருக்கான்னு பார்க்க மாட்டாங்க. 5 பாட்டும் முத்துக்கள்ங்க. படம் கூட ஓ.கே ரகமா இருந்திருக்கும். ஆனா, ஒரு வில்லன் போட்டாரு பாருங்க. நம்ம சும்மா டார்ச்சர் பண்ணிடுவாருங்க. இப்படி ஒரு படத்துக்கு அப்படி ஒரு வில்லன் தேவையா. வாசுவுக்கே வெளிச்சம். படம் வழக்கம் போல (லேட்டாச்சின்னாலே ஊத்திக்கும்) ஊத்திக்கிச்சி.

அத விடுங்க. பாட்டுக்கு வருகிறேன். 'கோலக் கிளியே..கோலக் கிளியே'. பார்த்திபன் ப்ரித்தீ விஜகுமாரை ஒரு கூடைல வச்சி தலைல சுமந்து கொண்டே பாடிக்கொண்டே செல்வார். 'பட்டு முகத்த வானத்துல பதிச்சா நட்சத்திரங்கள் பட்டிமன்றம் நடத்தும். எட்டி நில்லு வெண்நிலவே தூரம் தூரம்' என்று வரிகள் ரொம்ப அழகா இருக்கும். 'ஆடிடும் துளசிப் பூவே' என்று தொடங்கும் இடத்துல எஸ்.பி.பி ஜிவ்வுன்னு ஒரு பிச் ஏத்தி பாடுவார். ரொம்ப அழகா இருக்கும். ப்ரீத்தி விஜயகுமார் சரணத்தில் தலையை ஆட்டிக்கொண்டே பாடலை ரசிப்பார். அந்த இடத்தில் இசை நம்மையும் தலையை ஆட்ட வைக்கும் நிச்சயம். சரி பாட்ட போடும்யான்னு சொல்றீங்களா..இதோ..