Sunday, June 11, 2006

விடை பெறுகிறேன்.

நண்பர்களே! விடை பெறுகிறேன். என்னடா பதிவு தலைப்பு என்று நெனைச்சிறாதீங்க. கொஞ்ச நாள் இந்த ப்ளாக் உலகத்தில் இருந்து விடுப்பில் போய்ட்டு வரலாம் என்று தோன்றியது. அது தான் இந்த 'விடை பெறுகிறேன்'. காரணம் ஒன்றும் பெரிசு இல்லை. இங்கே சொல்லிட்டேன். மறுபடியும் அதே பல்லவிய பாடதடேன்னு ரெண்டு ப்ளாக்கையும் பாக்கற நண்பர்கள் திட்டுவாங்களே :-)).

( கீழே ஊர் கதை ஒன்னு சொல்லி இருக்கேடே..அப்படியே போய்றாதிய.. என்ன :-))

சிவபுராணம் எதுக்கு ஆரம்பிச்சேன்.ம்ம்ம்..எல்லாம் நமக்குன்னு, நம்ம மூஞ்ச போட்டு, நம்ம பேர போட்டு இணையத்தில் பார்க்க ஒரு கிக் தான். ஒரு யோசனையே இல்லாம ஆரம்பிச்சு, அப்புறம் குமரன் எழுதி கொடுத்த திருவாசகம் பாடல் பொருளை போட ஆரம்பிச்சு, அப்புறம் நம்ம மலேசியா ராஜசேகரன் சாரிடம் சண்டை போட்டு (இவர்கள் இந்தியர்கள்), போக்கு இல்லாம ஊர் கதை எழுத ஆரம்பிச்சேன். அப்போ நம்ம மதியும் (மதி கந்தசாமி) காசி சாரும் நட்சத்திர வாரத்தில் என்னை இழுத்துப் போட்டு எனக்கு ஒரு பெரிய வெளிச்சம் போட்டு கொடுத்தார்கள்.

என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வாரம் எனது தமிழ்மணம் நட்சத்திர வாரம். நம் எழுத்தையும் நல்லா எழுதறடே அப்படின்னு சொலல ஒரு நாலு பேர் இருக்காங்கன்னு பார்க்கும் போது வரும் சந்தோசத்துக்கு அளவே இல்லை. எனது சிவபுராணத்தை இது வரை படித்து ஊக்கம் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி. சத்தியமா எதுவுமே எழுதி பழக்கம் இல்லாம, திடீர்னு ரெண்டு பேர் நல்லா இருக்குடே என்று சொல்லும் போது வரும் போதையே தனி தான். என்னாலும் கொஞ்சம் சுவாரஸ்யமா எழுத முடியும் என்று ஒரு சின்ன நம்பிக்கையை, ஆசையை கொடுத்தது நண்பர்கள் உங்களின் ஊக்கம் தான். அதற்கு சும்மா இங்கே 'நன்றி' என்று ஒரு வார்த்தையில் சொல்லிட்டு போகமுடியாது.

நம்ம ஊரு திருநெல்வேலி பாசை எங்க ஊரு பயவுலுவ எல்லாத்துக்கும் இங்கே இணையத்தில் ரொம்பவே நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது. 'என்னல மக்கா. நல்லா இருக்கியால' என்று ஊர் நண்பனிடம் இன்றும் பேசும் போது கிடைக்கும் சுகமே தனி தான். இங்கே தமிழ்மணத்தில் சேர்ந்த போது அதை இங்கே ப்ளாக் நண்பர்களிடம் உணர முடிந்த போது வந்த சந்தோசத்துக்கு அளவே இல்லை.

'ஏ! நீங்க நம்ம ஊரு பக்கமா' என்று இங்கே அமைந்த நட்பு வட்டம் ஏராளம். ஊருக்கு போய் பாக்கணும் என்று ஒரு பெரிய பட்டியல், பரஞ்சோதி, தம்பி சிங் (சிங் செயகுமார்), தாணு அக்கா, தருமி சார், ராகவன், சாணக்கியன், மரவண்டு கணேஷ் , இளவஞ்சி....இப்படி ஒரு பெரிய பட்டியல். அத்தனையும் இங்கே தமிழ்மணத்தில் கிடைத்த நண்பர்கள்.

சரி..சரி வழ வழன்னு பேசாம, ஊர் கதை ஒன்னு சொல்லி விடை பெறுகிறேன்...

---------------------------------------------------------------------------------

கிராமத்து மணம் - 5 (வேப்ப முத்து)

சின்ன வயசுல கைல காசு கிடைக்க நிறைய வழிகள் உண்டு. 'யப்பூ! அந்த மனுசன் (அதாங்க. வீட்டுக்காரர்) காலைல புளி வாங்க மறந்து போய்ட்டாரு. இப்போ நான் 11 மணிக்கு சாப்பாடு வேற கொண்டு போணும். கொஞ்சம் கடைக்கு போய்ட்டு வர்றீயால. ஒரு ஆரஞ்சு முட்டாயி வேணோன்னா வாங்கிக்க" இப்படி சில நேரம் காசு கிடைக்கும்.

காலைலயே கும்முன்னு கல்லுகடைல ஏத்திட்டு 'ஏல! இன்னைக்கு ஏதாவது மாட்டிச்சின்னா அத்தைக்கிட்ட வந்து கொடுங்கல' அப்படின்னு வேட்டையாட pre-order சில நேரம் கிடைக்கும். நாங்களும் கவுட்டை, கண்ணி, கல்லுன்னு பயங்கர ஆய்தம் எல்லாம் எடுத்துக்கிட்டு கைல கெடைக்கிற எலியோ, அணிலோ, முயலோ, புறாவோ எது கெடைச்சாலும் அடிச்சிக்கிட்டு மாமாவுக்கு side dish ஏற்பாடு பண்ணி கொடுப்போம். எட்டணாவுல இருந்து சில சமயம் ஒரு ரூவா வரைக்கும் கிடைக்கும்.

இன்னொரு சம்பாத்தியம். வேப்ப முத்து பொறுக்குறது. படிக்கு நாலணா என்று ஊருக்குள்ள வேப்ப முத்து வாங்க சைக்கிள்ல நிறைய வியாபாரி வருவாங்க. ஒரு இருபது படி தேத்தினா அஞ்சி ரூபா ஆச்சே. அதுக்கு காடு காடா ஒரு பெட்டிய துக்கிக்கிட்டு வேப்பமுத்து பொறுக்கிக்கிட்டு அலைவோம்.

எங்க ஊரு நூற்பாலை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். காலைல அஞ்சு மணிக்கு பாத்தா சுத்தி இருக்கிற ஊர்ல இருந்து ஆளுங்க கும்பல் கும்பலா உள்ளே போய்ட்டு இருப்பாங்க. மூனு மணி சங்கு அடிச்சா அத்தனை கும்பலும் வெளியே போய்ட்டு இருப்பாங்க. அப்படி சுறுசுறுப்பா இருக்கும். யாருக்காவது சாப்பாடு கொண்டு போகணும்னா மில் வாசல் தான் போக முடியும். வாசலிலேயே போலிசு (வாட்ச் மேன்) சாப்பாட்ட வாங்கிகிட்டு விட்டுடுவாரு. உள்ளே தொழிலாளிகள் தவிர யாரும் நுழைய முடியாது...ஆனால் சின்ன பசங்க நாங்க மட்டும் ஒரு இடம் விடாமல் மில்லை சுற்றி இருக்கிறோம். அது வேப்ப முத்து பொறுக்க போகும் போது..

காலைலயே டவுசர் புல்லா கவுட்டைக்கு கல்ல அள்ளிக்கிட்டு, அது டவுசர ஒரு பக்கமா இழுக்க, அதை இன்னொரு கையால புடிச்சிக்கிட்டு, கைல ஒரு ஓலை பெட்டியையும் வச்சிக்கிட்டு நாங்க ஒரு கூட்டம் மில்லுக்கு கெளம்பிருவோம். வாசல்ல போலிசு எங்க பெட்டிய எல்லாம் சோதனை போட்டுட்டு உள்ளே அனுப்பும். 'ஏல. அங்கண இங்கண போக கூடாது. பொறுக்கிட்டு பாதி பங்க மறக்காம எல்லா பயலுவலும் வச்சிட்டு போய்றணும். என்ன'. நாங்க பொறுக்கினதில் பாதியை மில்லுக்கு கொடுத்திடணும் (எந்த மவராசனுக்கோ :-). இது தான் டீல்.

நாங்க உள்ளே போய் ஒவ்வொரு மரமா போய் கீழே கெடக்கிற வேப்பமுத்த பொறுக்கிக்கிட்டு இருப்போம். நம்ம பீட்டர் அண்ணன் தான் மடமடன்னு மரத்துல ஏறி உலு்ப்ப ஆரம்பிப்பான். நாங்க எல்லாம் மடமடன்னு வாட்ச்மேன் வர்றதுக்குள்ள பொறுக்கிக்கிடுவோம். அலறி அடிச்சிக்கிட்டு ஓடி வருவார் வாட்ச்மேன் 'ஏல! பாவிமக்கா! நாந்தான் சொன்னேன்ல. மரத்துல ஏற கூடாதுன்னு. எறங்குல' அப்படின்னு திட்டு விழும். 'ஏன் வாட்ச்மேன். மேல கெடக்குறது எப்படியும் கீழே தான் விழ போகுது. நாங்க தான் வந்து பொறுக்க போறோம். அதான் நாங்களே...மரத்துல ஏறி'....'நீங்க ஏறி விழுந்து தொலைச்சீங்கன்னா ஆபீசருக்ககு எவம்ல பதில் சொல்றது. சொல்றத கேளுங்கல' .

'நாங்க நல்லா மரம் ஏறுவோம் வாட்ச்மேன். எங்க தெறமைய பாத்தீங்கன்னா நீங்க இப்படி எல்லாம் சொல்ல மாட்டீங்க' இப்படி மனசுக்குள் நெனைச்சுக்குவோம். அந்த திறமை இது தாங்க. கஷ்டப்பட்டு பொறுக்கிய வேப்பமுத்துல பாதிய அப்படியே கொடுக்க மனசு வராது. ஆனா கொடுக்காம வெளியே விடமாட்டாரு. அட போங்கடே அப்படின்னு பீட்டர் அண்ணன் வெளியே நிக்கிற மரத்தோட கிளைய புடிச்சி மடமடன்னு வேப்பமுத்தோடு மில்லுக்கு வெளியே இறங்கி வீட்டுக்கு போய்விடுவான். 'அண்ணே! பேசாம நாம இப்படியே உள்ளே வந்தா என்னா' 'லே! ஏறி உள்ள குதிச்சு வந்தா புடிச்சானுங்கனா திருடனாக்கிருவானுங்க. ஆனா உள்ளே இருந்து வெளியெ போனா பிரச்சினை இல்லல'. அடடா. இந்த தத்துவம் எல்லாம் புரியாம போச்சேண்ணே :-).

'என்னல. போகும் போது அஞ்சு பேரு போனீங்க. இப்போ நாலு பேரு தான் வர்றீங்க. எங்கள இன்னொருத்தன்' வாட்ச்மேன் சரியா புடிப்பாரு. 'அண்ணே அப்பவே வீட்டுக்கு போய்ட்டாங்களே. நீங்க எங்க போய் இருந்தீங்க' இப்படி எடுத்து கொடுப்போம். 'இங்கண தாம்ல இருக்கறேன். என்னல சொல்லுதிய' குழப்பமா பார்ப்பார்.

சரி! ஏறிகுதிச்சி போக முடியாத நாங்க எல்லாம் பங்கு கொடுப்போமான்னு கேக்கறியலா. நாங்க என்ன பண்ணுவோம்னா.....நாங்க வந்து நின்னவுடனே 'ஏல! அங்கண போய் பாதி முத்த தட்டிட்டு வங்கல' அப்படின்னு வாட்ச்மேன் அனுப்புவார். நாங்க அங்க போய் பெரிசா மண்ண குமிச்சி அதுக்கு மேல வேப்பமுத்த நல்லா தூவிட்டு பாக்குறதுக்கு ஏதோ வேப்பமுத்து குவியல் இருக்கிற மாதிரி வச்சிட்டு வந்திருவோம். துரத்துல இருந்து வாட்ச்மேன் பாத்துட்டு 'நெறைய பெறக்கிருக்கீங்க போலையல' அப்படின்னு சொல்லிட்டு அனுப்பிடுவாரு..

அடுத்த நாள் மில்லுக்கு போகும் போது எங்களை வெரட்டி வெரட்டி அடிப்பாரு..அது ஒரு தனி கதை :-))

(மக்கா! இது சின்ன வயசுல பண்ணில ஒரு சில குறும்புகளில் ஒன்றே....நீதி கதை எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுடாதிய...என்ன :-))

அன்புடன்,
சிவா

Monday, June 05, 2006

பத்து பைசா

அம்மா அவசரமாக கூப்பிட்டார்கள். 'டேய்! செம்மறிகுளத்தில் இருந்து அத்தையும் மாமாவும் வந்திருக்காங்க. சீக்கிரம் வாடா'. மாமா வந்திருக்காங்களா! சந்தோசத்தில் விளையாண்டு கொண்டிருந்த பட்டத்தை அப்படியே போட்டுவிட்டு ஓடினேன். 'போயி மாமாகிட்ட சொகமாருக்கீங்களான்னு விசாரி' அம்மா. 'வாடா ராசா. வெளாட போயிருந்தியா' மாமா நான் நலம் விசாரிப்பதற்கு முன்னமே என்னை பக்கத்தில் உட்கார வைத்து பேசிக்கொண்டிருந்தார். 'கணேச கூட்டி வரலையா மாமா' 'அவனுக்கு பரிச்சடா. அதான் ஊருலயே விட்டுட்டு வந்துட்டேன். அடுத்த தடவ கூட்டி வர்றேன் என்ன'.

அம்மா உள்ளே கூப்பிட்டு கைல ஒரு ரூபாயை கொடுத்து 'கனி ஆச்சி வீட்டுல போய் ரெண்டு கலர் வாங்கிட்டுவா' என்று அனுப்பினார்கள். மதியம் சாப்பிட்டு விட்டு மாமாவும் அத்தையும் கிளம்ப தயாரானார்கள். 'சரி அக்கா. நான் போய்ட்டு வர்றேன்'. 'அடுத்த தடவ வரும் போது பிள்ளையையும் கூட்டிட்டு வாடா' அம்மாவுக்கும் கணேஷ் வராததில் கொஞ்சம் வருத்தம் தான். மாமா கிளம்பும் போது ஒரு இரண்டு ரூபாவை என் கையில் தினித்து விட்டு கிளம்பினார். இது வழக்கம் போல மாமா வரும் போது எனக்கு கிடைக்கும் ஜாக்பாட் தான்.

வழக்கம் போலவே மாமா போனதும் கையில் இருந்த இரண்டு ரூபாய் அம்மா கைக்கு போய் விட்டது.அதிலிருந்து கடைசில எனக்கு கிடைத்தது பத்து பைசா தான்.

இப்போ கைல பத்து பைசா.

என்ன பண்ணலாம்? பல யோசனை மனசுக்குள் ஓடியது.

பேசாம தடியர் கடைல ரெண்டு கோலிக்கா வாங்கி நேத்து எசக்கியிடம் தோத்த கோலிக்காவ திருப்பி கொடுத்திடலாமா? "கோலிக்காவ திருப்பி கொடுல.திருப்பி கொடுல " அப்படின்னு பாக்குற நேரம் எல்லாம் கேக்கறானே. காலைல கூட வெளாட்டுல சேத்துக்காம வெரட்டி விட்டுட்டானே. நேத்து ஜெயிச்சிருக்க வேண்டியது. சாண் போட்டா, வெரலு கோலிக்காவுல ஒட்டலன்னு நூல விட்டு காட்டி கோலிக்காவ எல்லாம் புடிங்கிக்கிட்டு விட்டுட்டானே.ம்ம்ம்.

அவங்க மாமா வாங்கி கொடுத்தாருன்னு கை நிறைய பல்லி முட்டாய வாங்கி வச்சிக்கிட்டு நேத்து முழுசும் பீத்திக்கிட்டு அலைஞ்சானே பீட்டரு. கொஞ்சம் குடுறான்னு கேட்டதுக்கு வீட்டுக்குள்ள ஓடினவன் வெளியே வரவே இல்லையே. இன்னிக்கு நாம வாங்கி, எங்க மாமா வாங்கி கொடுத்தாருன்னு சொல்லலாமா..

நேத்து கடைல புதுசா பிலிம் எல்லாம் வந்திருக்குன்னு குமாரு சொன்னானே. அவன் வாங்குன பிலிம்ல கூட ரஜினி படம் எல்லாம் இருந்திச்சே. பத்து பைசாவுக்கு பேசாம பிலிம் வாங்கி மத்யானம் படம் போடலாமா.

இப்படி பல யோசனைகளுடன் சாயங்காலம் தடியர் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். கடையில் கூட்டமே இல்லை. தடியர் சும்மா தான் உட்காந்து கொண்டிருந்தார். 'என்னல பொழுதடைய கடைக்கு வந்திருக்க' விசாரித்தார்.

'ஆமாண்ணே! எங்க மாமா வந்திருந்தாங்க. கைல காசு கொடுத்தாங்க. அதான் ஏதாவது வாங்கலாம்னு வந்தேன்' தடியருக்கு பதில் கூறிக்கொண்டே அவரது சின்ன பொட்டிக்கடையை மெதுவாக நோட்டம் விட்டேன். சட்டென்று ஒரு இடத்தில் கண் அப்படியே நின்று விட்டது. நீளமாக ஒரு பிலிம் சுருள் ஒரு அட்டையில் ஒட்டி வைத்திருந்தது. போனவாரம் பீட்டர் பக்கத்து ஊருக்கு படம் பார்க்க போய் நீளமா ஒரு பிலிம் சுருள் கொண்டு வந்தானே, அதே மாதிரி கடையில். 'இது எப்படிடா உனக்கு கிடைச்சது' என்று பீட்டரிடம் ஆச்சரியமாக கேட்ட போது, படம் அத்து போச்சுன்னு வெட்டி போட்டாங்க, எடுத்துட்டு வந்தேன்' என்றான். அதை வைத்து எங்கள் எல்லோரையும் ஒரு வாரமா அவன் வீட்டிலேயே காத்து கிடக்க வைத்தது நினைவுக்கு வந்து போனது.

'இது எவ்வளவுண்ணே' பத்து பைசாவாக இருக்கவேண்டும் என்று மனசுக்குள் வேண்டிக்கொண்டே தடியரிடம் கேட்டேன். 'அது காசுக்கு கெடையாதுல. கீழ இருக்குது பாத்தியா கட்டம் கட்டமா சீட்டு. பத்து பைசா கொடுத்து ஒரு சீட்டு கிழிச்சேன்னா, உனக்கு பிலிம் சுருள் விழுந்தா அது உனக்கு தான். ஒரு நம்பரும் வரலண்ணா ஒன்னும் கெடையாது'

பிலிம் சுருளை அவ்வளவு எளிதாக விட மனம் வரவில்லை. 'கிழிச்சி பாருல. ஒன்னோட ராசியையும் தான் பாப்போமே' கண்டிப்பாக கிழிப்பேன் என்று தடியருக்கு என் மூஞ்சை பார்த்தே முடிவுக்கு வந்து விட்டார். கையில் இருந்த காசை தடியர் கைல கொடுத்துவிட்டு ஒரு சீட்டை கிழித்து பார்த்தேன். ஏதோ படம் தான் போட்டிருந்தது. நம்பர் எதுவும் இல்லை. 'என்னண்ணே இது. நம்பர் மாதிரி தெரியலையே' அவரிடமே சீட்டை கொடுத்தேன். 'ஏல! ஒனக்கு ஜோக்கர் வந்திருக்கு. பரிசு ஒன்னும் விழல'. தடியர் எனக்கு எதுவும் கொடுக்காமலேயே எளிதாக என் பத்து பைசாவை அவர் கல்லாப்பெட்டியில் சேர்த்துக் கொண்டார். கையில் இருந்த பத்து பைசாவும் பறிபோனதில் நொந்த படி வீட்டுக்கு திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.

வீட்டுக்கு போனதும் அம்மாவிடம் கேட்டேன் 'மாமா மறுபடி எப்போம்மா வருவாங்க'.