Friday, March 31, 2006

கல்லூரியில் கத்திக்குத்து

முதன் முதலாக சென்னை வாசம். எங்க கிராமத்துல பி.எஸ்.சி முடிச்சதுக்கப்புறம் கெடைச்சது சென்னையில் M.I.T-ல ஒரு சீட். அதுவரைக்கும் திருநெல்வேலிய தாண்டி கூட வந்தது இல்லை. இதுல வேற என் அண்ணன் வேற கடுதாசி போட்டு 'எலே! அங்கண கொஞ்சம் ராகிங் இருக்கும். பாத்து நடந்துக்கல' அப்படின்னு லேசா மிரட்டி அனுப்பினான். ராகிங்கா...அப்படின்னா..எவனுக்கு தெரியும். கடவுள் மேல பாரத்த போட்டுட்டு போய் சேர்ந்தேன். முதல் நாளே என்னிய ஹாஸ்டலில் தள்ளி விட்டுட்டு அப்பா நெல்லை எக்ஸ்பிரஸ்ஸ புடிச்சி ஊர் போய் சேர்ந்துட்டாங்க. வாழ்க்கைல தன் முதலா ஹாஸ்டல் வாசம் வேற. எங்க அறையில் மூன்று பேர். எல்லாம் நம்ம மாதிரி கிராமம் தான்.

'வெளியே எங்கயும் போனா சீனியர் புடிச்சுக்குவானுங்க'அப்படின்னு எல்லா பயலுவலும் எச்சரிக்கையா ரூமுக்குள்ளேயே கொடக்குறானுவ. திடீர்னு எங்க ஹாஸ்டல்ல ஒரே பரபரப்பு. எல்லா பயலுவலும் ஓடி ஒளியறானுங்க. மொத்தமா சீனியர் பயலுவ எல்லாம் ஹாஸ்டல்ல புகுந்து மாட்ட புடிக்கிற மாதிரி எங்களை எல்லாம் மொத்தமா பத்திக்கிட்டு வெளியே கூட்டிட்டு போனானுங்க. நான் ஒரு கும்பல் கிட்ட மாட்டினேன். என்னிய அந்த கும்பல் அப்படியே ஹாஸ்டலுக்கு வெளியே தள்ளிக்கிட்டு போச்சு. ராத்திரி 11 மணி. துணைக்கு என் ரூம் மேட் செந்திலும்.

அதுல ஒருத்தன் ஆரம்பிச்சான் 'என்ன! பர்ஸ் இயரா'. அதான்!நாங்க முழிக்கிற முழியிலேயே தெரியுதுல்லா. அப்புறம் என்ன கேள்வி. 'ஆமாண்ணே! பர்ஸ் இயர் தான். இன்னிக்கு தான் சேர்ந்தேண்ணே' பவ்யமா பதில் சொன்னேன். 'டே! என்னா இது 'அண்ணே' அப்படின்னுகிட்டு. சீனியர்னு தான் சொல்லணும். தெரிஞ்சிதா' கடுப்பகிப் போன ஒரு அண்ணன். எங்க ஊருல எல்லாம் காலேஜ்ல அண்ணேன்னு தான் கூப்பிடுவோம். அத இந்த பயலுவகிட்ட சொன்னா புரியுமா. 'சரிண்ணே' இப்படி பதில். 'டே! என்னா நக்கலா. நீ என்னா எந்தம்பியா'. ரொம்ப நாளா அண்ணேன்னு தான் பாசமா கூப்பிட்டுக்கிட்டு இருந்தேன். நாம எல்லாம் பாசக்கார பயலுவ இல்லையா.

அப்படியே என்னிய தள்ளிக்கிட்டு வெளியே இருக்குற டீக்கடைக்கு போனது கூட்டம். அடப்பாவிங்களா ரெண்டு பேர ராகிங் பண்ண இருபது பேரா. அடுக்குமாடா. போன உடனே ரெண்டு பேருக்கும் ஓசில டீ வாங்கி கொடுத்தானுவ. மொத நாளே ஓசில டீ எல்லாம் வாங்கி தாராணுவலேன்னு நம்ம மனசே குளுந்து போச்சு. அப்புறம் தான் வெனையே ஆரம்புச்சுது. டீக்கடைல சத்தமா தேவா கானா பாட்ட ஓட விட்டு ரெண்டு பேரையும் ரோட்டுல ஆட சொன்னானுவ. 'லே! ஒரு டீக்கு இப்படி நடு ரோட்டுல ஆடுறதுக்கு நான் என்ன கழைக்கூத்தாடியால' அப்படின்னு எங்களை நொந்து கொண்டே 'டண் டண் டண்..டணக்கு டணக்கு' அப்படின்னு ரோட்டுல ஒரு குத்தாட்டம் போட்டோம். அந்த ராத்திரியிலையும் அதை பார்க்க பொதுஜனமெல்லாம் கூடிடிச்சு. 'அண்ணே! ஒரு இளையராசா பாட்டாவது போடுங்கண்ணே' அப்படின்னு கேட்டுப் பார்த்தேன். ஹும்..நாம என்ன டூயட்டா பாட போறோம். ஆடுங்கடா அப்படின்னு மறுத்துட்டானுவ. அப்புறம் என்ன ஒரு அரை மணி நேரம் 'டணக்கு டணக்கு' தான்.

அப்புறம் காலைல ரொம்ப சாக்ரதையா பார்த்து பார்த்து வெளியே வந்தேன். ஒரு எரும என்னிய பாத்துட்டு. 'டே! எங்க போற!. எப்படிக்கீற! காத்தால நாஸ்டா துண்ட்டியா' அப்படின்னு ஒரு கேள்வி. எனக்கு கிர்ருன்னு தலை சுத்திச்சு. வெளி மாநில கோட்டாவுல வந்தவனுங்ககிட்ட மாட்டிக்கிட்டேனே. இங்கிலீசும் தெரியாதே அப்படின்னு முழிச்சிக்கிட்டு நின்னேன். அப்போ என்னிய காப்பாத்த வந்தவரு தான் இந்த கத்திக்குத்து. 'லே! எந்த ஊருல' அப்படின்னு ஒரு வார்த்தைக்கே 'அண்ணே! நீங்க நம்ம ஊருங்கலா. நல்லாருப்பிய. இந்த அண்ணே ஏதோ கேக்கறாவ. புரியாம நிக்குறேண்ணே' அப்படின்னு பக்கத்தில போய் உரிமையா உக்காந்தேன். 'லே! எந்திரில. சீனியர் முன்னாடி ஒக்கார்ற' அப்படின்னு திட்டினப்போ தான் தெரிஞ்சது அண்ணன் தான் அங்கே ராகிங்ல பெரிய ஆளுன்னு. தெரியாம வழில போற மூதேவிய வெத்தள பாக்கு வச்சு அழைச்சிட்டோமோன்னு தோணிச்சு.

'இவரு யாரு தெரியுமா. கத்திக்குத்து' அந்த மெட்ராஸ் சொன்னது. 'ஓ! அது நீங்க தாணாண்ணே! பயலுவ ஒங்கல பத்தி கத கதயா சொன்னானுவ' அப்படின்னு நெனைச்சிக்கிட்டு, அடுத்த ஆட்டத்துக்கு தயாரானேன். அண்ணாச்சி பேர கேட்டா, எப்படி சொல்லணும் தெரியுமா. நம்ம நாக்க மடக்கி கடிச்சிக்கிட்டு, கண்ண உருட்டிக்கிட்டு, ராமநாராயணன் படம் கிளைமாக்ஸ்ல வர்ற அம்மன் மாதிரி கைய வச்சி போஸ் கொடுத்துக்கிட்டு 'கத்த்த்திக்குத்து' அப்படின்னு ஓங்கி சொல்லணும். இது எங்க கல்லூரில ரொம்ப பேமஸ் அப்போ. கத்திக்குத்துன்னா எல்லோரும் ஓடுவானுவ. இப்படி ஒரு தடவ சொல்லலாம். ஒரு நாள் என்னிய கல்லூரி வாசலில் விட்டு 50 தடவ சொல்லுல அப்படின்னு விட்டுட்டானுவ. கத்திக்குத்து கத்துக்குத்துன்னு கத்தி கத்தி, கண்ணுமுழி எல்லாம் பிதுங்கிப் போச்சு. போற வர்ற புள்ளைங்க எல்லாம் என்னை பாத்து 'சாமி! எறங்கிடுச்சு போல' அப்படின்னு ஒரு மாதிரி சைடு வாங்கி போச்சுதுங்க. மவனே! அன்னிக்கு எங்கைல கத்தி ஒன்னு தான் இல்ல. இல்லன்னா ராமநாராயணன் படம் க்ளைமாக்ஸ் தான்.


'சரி! அந்த பொண்ணு போறால்லா. அவகிட்ட போய் அவ பேரு என்னான்னு கேட்டுட்டு வா' அப்படின்னு என்னிய தொரத்தி விட்டுட்டாரு கத்திக்குத்து. 'அடப் பாவிமக்கா ! முன்ன பின்ன தெரியாத புள்ளைக்கிட்ட பேர கேட்டு அடி வாங்கி கொடுத்துருவிய போல' அப்படின்னுக்கிட்டே அந்த பொண்ணுக்கிட்ட போனேன். அது என்னிய பார்த்ததும் எவனோ சீனியர்னு நெனைச்சு அது திரு திருன்னு முழிக்க, நானு கேக்க வந்தத கேக்கமுடியாம முழிக்க, ஒரு வழியா கேட்டு வந்தேன். 'சரில! அந்த பொண்ண இங்கண வரசொல்லுல' அடுத்த கட்டளை. நீங்க கடலை போடுறதுக்கு உதவி செய்ய நான் தான் கெடச்சேனா. அப்புறம் ஒரு இலைய பறிச்சி 'லே! இதுல எத்தனை இலை இருக்குன்னு எண்ணுல' அப்படின்னு பெரிய பொறுப்பை கொடுத்துட்டு வறுக்க ஆரம்பிச்சுட்டார். 'அண்ணே! ஏதோ தீயிற மாதிரி வாசனை வருது' அப்படின்னு கேட்க ஒரு பிடி மண்ணை அள்ளி என்னிய எண்ணுல அப்படின்ன்னு விட்டுட்டாவ. இப்படி ஏதாவது புள்ளைங்க மாட்டினா, நாம தப்பிச்சிக்கலாம். ஒரு பொண்ணு வந்துட்டா அப்புறம் நாம சீனியர் கண்ணுக்கே தெரிய மாட்டோம்.

ஒரு நாள் ராத்திரி எதோ அசோசியேசன் வேலை அப்படின்னு ராத்திரி மறுபடி அந்த கூட்டம் வந்து எங்களை தள்ளிக்கிட்டு போனது. அதுல ஒருத்தன் ஜூனியர் மாதிரி என்னிடம் வந்து பயந்து பேச, நானும் அவனை நம்ம ஜாதி தான்னு நெனச்சி, கொஞ்சம் தைரியம் வந்து 'லே! அந்தா இருக்கானுங்க பாரு. சீனியர்னு சொல்லிக்கிட்டு. எல்லாம் கிறுக்கு பயலுவ' அப்படின்னு ஏடா கூடமா பேசி வச்சேன். காலைல தான் தெரிஞ்சது அவன் இறுதி ஆண்டு சீனியர்னு. அப்புறம் என்ன..அன்னைக்கு ராத்திரி அதே டீக்கடை..அதே பாட்டு..அதே 'டணக்கு டணக்கு' தான். அப்புறம் வாய தொறக்குறதே இல்ல.

இதுல சூப்பர் சீனியர்னு ஒருத்தர் உண்டு. அது என்ன சூப்பருன்னு கேக்கறியலா. நமக்கு ஒரு நம்பர் இருக்கும் இல்லையா. அதே நம்பர்ல இருக்குற ரெண்டாவது வருசம் படிக்கிற ஆண்ணாச்சி/அக்கா தான் நம்ம சீனியர் (பரம்பரை மாதிரி). அப்புறம் எல்லாத்துக்கு மேல அதே நம்பர்ல கடைசி வருசதுல ஒரு அண்ணன் இருப்பாரே, அவரு தாங்க சூப்பரு. அவர பாக்குறதுக்கு முட்டாய்/கேக் எல்லாம் வாங்கிட்டு போய் பாக்கணும். நான் என்னோட சூப்பர பார்த்ததே இல்ல. சூப்பர பாக்கலண்ணா பெரிய குத்தம் மாதிரி. அப்புறம் அடிக்கடி ஆட வேண்டிவ வரும். என்னோட சூப்பரு பேரு/அறை எண் எல்லாத்தையும் விசாரிச்சு, இருந்த காசுல ஒரு அரைக்கிலோ முட்டாய் வாங்கிக்கிட்டு ஒரு நா ராத்திரி போனேன். அங்கே அறைக்குள்ள ஒரு மூனு பேரு. நாமலே போய் மாட்டினா விடுவானுங்களா. அதுல என்னோட சூப்பரு யாருன்னு வேற தெரியல. 'என்னடா! முட்டாயா! கொண்டா கொண்டா. உன்னோட சூப்பர் சீனியர பாக்க வந்தியா. நான் தான் அது' அப்படின்னு முட்டாய வாங்கி மூனும் தின்னுட்டுதுங்க. அப்புறம் தான் தெரிஞ்சது அதுல என்னோட சூப்பரே இல்லன்னு. தின்னுட்டு 'ஹி..ஹி' ந்னு ஒரு சிரிப்பு வேற. இன்னொரு அரைக்கிலோவுக்கு காசுக்கு நான் எங்கடா போவேன்னு என்னிய நானே நொந்துக்கிட்டேன்.

அப்புறம் தாங்க அந்த பரிதபமான நாவரசு கொலை நடந்துச்சு. அப்புறம் கல்லூரில ஏகப்பட்ட கெடுபுடி. ராத்திரி சீனியர் ரூம்ல ஜூனியரை பாத்தாங்கண்ணா பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லிட்டாங்க. அப்புறம் சீனியருங்க எல்லாம் எங்களை பாத்தா தல தெரிக்க ஓடுவானுவ. தெரியாம அவனுங்க ரூமுக்கு போய்ட்டோம்னா 'யய்யா! ராசா! தயவுசெஞ்சு போய்ரு ராசா!' அப்படின்னு கை எடுத்து கும்பிடுவானுவ. யானைக்கு ஒரு காலம்னா, பூனைக்கும் ஒரு காலம் வருது பாத்தியலா.

இப்படியே ஒரு வருசம் ஓடிப் போச்சு. ரெண்டாவது வருடம். எங்கள் வகுப்புக்கு போனா அங்கே நம்ம கத்திக்குத்து அண்ணன் சோகமா ஒக்காந்துகிட்டு இருக்காரு. 'யண்ணே! இங்கே எதுக்கு ஒக்காந்து இருக்கிய.வகுப்பு மாறி வந்துட்டியலா' அப்படின்னு போய் விசாரிச்சேன். 'அட! போடே. விசயம் தெரியாத மாதிரி பேசாத. அதான் போன வருசம் என்னிய ராகிங் பண்ணும் போது புடிச்சி ஒரு வருசம் சஸ்பெண்ட் பண்ணிட்டாவல்லா. இனி மறுபடி ரெண்டாவது வருசம் உங்க கூட தான் படிக்கணும்' பாவமாய் கத்திக்குத்து. 'நெலமைய பாத்தியலா அண்ணே! எங்களை ராகிங் பண்ணிட்டு, இப்போ எங்க கூட படிக்கிற மாதிரி ஆகி போச்சு. பாத்துண்ணே! இந்த வருசமாவது கத்திய தூர தூக்கிப் போட்டுட்டு நல்ல புள்ளையா இரு. அப்புறம் அடுத்த வருசம் ஒன்னிய நாங்கெல்லாம் ராகிங் பண்ணுற மாதிரி ஆகிட போவுது'. 'ஆமாண்டே! என்னிய மறுபடி மொத வருசத்துல தூக்கி போட்டாலும் போட்டுவானுங்க' நொந்து போய் சொன்னார் கத்துக்குத்து.

Friday, March 17, 2006

கிராமத்து மணம் - 4 ( கொடுக்காப்புளியும் கிளியும்)

நம்ம ராகவன் பதிவுக்கு பதிவு கொடுக்காப்புளி கொடுக்காப்புளி என்கிறார். சரி! நம்ம கொடுக்காப்புளி புராணம் ஒன்ன எடுத்து விடலாம்னு தான் இந்த பதிவு. எங்க ஊரிலயும் ஒரு கொடுக்காப்புளி மரம் உண்டு. ரொம்ப பெரிய மரம். யாராலயும் ஏற முடியாத அளவுக்கு உயரம். அப்படி ஒரு ஏக்கருக்கு படர்ந்து கிடக்கும். காலைலயே கனி ஆச்சி வீட்டுக்கு பால் வாங்க போகும் போது, அப்படியே தூக்குச் சட்டிய வச்சிட்டு மரத்த சுத்தி சுத்தி வருவோம். ஏதாவது கொடச்சுதுன்னா, நாம தான் இன்னிக்கி மொத ஆளுன்னு நெனைச்சிக்கலாம். ஒன்னுமே கீழே இல்லன்னா, ஏதோ ஒன்னு நமக்கு முன்னாடியே வந்துட்டு போய்ட்டுன்னு நெனைச்சிக்கலாம்.

கொடுக்காப்புளி அவ்வளவு ருசியா இருக்கும். முத்து முத்தா, வெள்ளையா அத பாக்குறதுக்கே நல்லா இருக்கும். ஆனா கைக்கும் நம்ம சொரண்டி கம்புக்கும் எட்டாத உயரத்துல கெடக்கும். மரத்துல ஏறி ஓடிப்பிடிச்சி வெளையாண்ட காலம். கை வழுக்கி தொப்புன்னு மேலே இருந்து விழுந்தா டவுசர தொடச்சிட்டு மறுபடி மரத்துல ஏறி தாவிக்கிட்டு இருப்போம். 'கொரங்கா பொறக்க வேண்டியதுங்க எல்லாம் மனுசனா பொறந்துட்டுதுங்க' என்று பெரிசுங்க எல்லாம் நாங்க போடுற கூச்சல் தாங்க புடியாம திட்டுவாங்க. ஆனா எங்களால அந்த கொடுக்காப்புளி மரத்துல ஏற முடியாது. அவ்வளவு பெரிய மரம். இல்லன்னா ஒரே நாளில் மரம் மொட்டையாகி விடும். அனைச்சி புடிச்சாலே மூனு பேரு சேர்ந்து புடிக்கணும்.

சரி! ஏறவும் முடியாது. கம்பு வச்சி பறிக்கவும் முடியாது. அப்புறம் என்ன தான் வழி. ஒரே வழி தாங்க. தானா விழுந்தா வுண்டு. வெளையாட்டு எல்லாமே அங்கே தான். டப்புன்னு ஒரு சத்தம் கேட்டுட்டா எல்லோரும் அலறி அடிச்சிக்கிட்டு ஓடிப் போய் பார்ப்போம். 'எங்கல விழுந்திச்சி' அப்படின்னு தேடு தேடுன்னு தேடி எடுத்து பங்கு போட்டுக்குவோம். சில பேர் கெடைச்சவுடனே அப்படியே நைசா வீட்டுக்கு ஓடிருவானுங்க. அப்புறம் அவனை அடுத்த வாட்டி வெளாட்டுக்கு சேத்துக்கிறது இல்ல. 'லே! நீ கொடுக்காப்புளிய கொடுக்காம ஓடிட்டால்லா! ஒன்னிய வெளாட்டுக்கு சேத்துக்கமாட்டோம்' என்று வெரட்டி விட்டுடுவோம். அப்புறம் அவன் போய் அவங்க அம்மாவ கூட்டி வந்து, எங்களுக்கெல்லாம் திட்டு வாங்கி கொடுத்து, எங்க தாத்தாவையும் களத்துல எறக்கி விட்டு பெரிய சண்டைல போய் முடிஞ்சிரும்.

தானா விழுவதை தவிர, ஒரு ஆள் மட்டும் எங்களுக்கு பறித்து போடுவார். அது காட்டுக் கிளி. கிளி எல்லாம் காட்டுல மேஞ்சிட்டு சாயங்காலம் எங்க ஊர தாண்டி தான் பறந்து போகும். கொடுக்காப்புளி மரத்துக்கு கிளி கூட்டம் வந்துட்டாலே, நாங்க எல்லாம் அங்கே ஆஜராகி விடுவோம். அவ்வளவு உச்சத்துல அந்த பச்சை இலைகளுக்கு ஊடால கிளி எங்கே இருக்குன்னு தேடி ஆன்னு கீழே இருந்து பாத்துக்கிட்டே இருப்போம். கிளி மெதுவா போய் ஒரு கொடுக்காப்புளிய பறிச்சி கொறிச்சிக்கிட்டு இருக்கும். காக்கா வாயில இருக்குற வடைக்கு அடி போடுற நரி மாதிரி தான். செல வெவரம் கெட்ட கிளி பறிச்சவுடனேயே தவறி கீழே போட்டுடும். அன்னைக்கு பெரிய ஜாக்பாட் தான். செல வெவரமான கிளிங்க பறிச்சி மெதுவா மொத்தமா தின்னுட்டு வெறும் தோலை மட்டும் போடும். 'நாசமா போற கிளி' அப்படின்னு திட்டிட்டு ஒக்காந்துக்கிட்டே இருப்போம். சோம்பேறி கிளிங்க சில வந்து உக்காந்து ரொம்ப நேரமா யோசிச்சிக்கிட்டே இருக்கும். நாங்களும் அது கொடுக்காப்புளி பறிக்குதா அப்படின்னு பொறுமையா கழுத்து வலிக்க பாத்துக்கிட்டு இருப்போம். 'ஏல! அது தூங்கிட்டுல. அசையாம இருக்கு பாரு' 'இல்லல! அசையுது பாரு. தெரியுதா' அப்படின்னு பேசிக்கிட்டு இருப்போம். அப்புறம் அதுக்கே ஒரு மூடு வந்து பறிச்சி போட்டா உண்டு. இல்லன்னா கடுப்பாகி ஒரு கல்ல எடுத்து வெரட்டி வுட்டுடுவோம்.

இப்படி தாங்க கிளியும் கொடுக்காப்புளியும் எங்க வாழ்க்கைல ஒரு அங்கமா போச்சி. இப்படி இருக்கச்சுல, திடீர்னு ஒரு யோசனை. கிளிக்காக இப்படி காவல் இருப்பதை விட, கிளிய நாமலே புடிச்சி வளந்தா என்ன? அப்போ இந்த துர்கா மாதிரி ராமநாராயணன் படமெல்லாம் பார்த்து ரொம்ப கெட்டுப்போயிருந்தோம். 'லே! பாம்பே பல்லாங்குழி ஆடுது. நாம கிளிய பழக்கி கொடுக்காப்புளி பறிக்க வச்சா என்னா' அப்படின்னு ஒரு யோசனை. கிளி புடிக்கணும்னா நம்ம பீட்டர் அண்ணனை விட்டா வேற வழி. 'யண்ணே! எங்களுக்கு ஆளுக்கு ஒரு கிளி புடிச்சி கொடுங்கண்ணே' அப்படின்னு அவன் வீட்டுல போய் நாங்க வாண்டுங்க எல்லாம் போய் கேட்டோம்.

அடுத்த நாள் எல்லோடும் தேரி காட்டுக்கு கெளம்பிகிட்டு இருக்கோம். கிளி புடிக்கத் தான். காடை கவுதாரி எல்லாம் தரைலயே, முள்வேலிக்குள்ள கூடு கட்டும். காக்கா, குருவி எல்லாம் எல்லா மரத்துலயும் கூடு கட்டும். ஆனா இந்த கிளி இருக்குது பாருங்க. அது ரொம்ப வெவரம்ங்க. நல்ல மொட்ட பனைல (கொண்டை இல்லாம பட்ட மரம்) உச்சத்துல போய் ஒரு பொந்து போட்டு அங்கண போய் கூடு கட்டி வச்சிருக்கும். மொட்ட பன உறுதியா இருக்கா, இல்ல உளுத்துப்போய் இருக்கான்னு முக்கா பன ஏறினா தான் தெரியும். டப்புன்னு ஒடைஞ்சிட்டா, நேரே மேலே தான். இப்படி உயிர பனையம் வச்சி நம்ம பீட்டர் அண்ணன் ஒவ்வொரு பனையா ஏறி ஏறி பார்த்தான். கிட்டத்தட்ட ஆளுக்கு ஒன்னுன்னாலே ஒரு 8 கிளி தேவை பட்டது.

எங்க கூட்டத்த பார்த்துட்டாலே காக்கா குருவி எல்லாம் லபோ திபோன்னு அடிச்சிக்கும். வந்துட்டானுங்கடா காட்டுவாசிங்க அப்படின்னு. அதுலயும் கருப்பு டவுசர் போட்டிருந்தோம்னா காக்கா வந்து டக்குன்னு நம்ம தலைல ஒரு தட்டு தட்டிட்டு 'சௌக்கியமால' அப்படின்னு சொல்லிட்டு போகும். ஏன்னா! கவுட்ட வார் கருப்பு பாத்தீங்களா. அதனால எல்லாத்துக்குமே கருப்புன்னா கொஞ்சம் அலர்ஜி. சும்மா ஒரு கருப்பு துணிய காட்டுனாலே பறவைங்க எல்லாம் ஓடும். அன்னைக்கு நாங்க மரத்துல ஏறுவதை பாத்துட்டு, எல்லாம் கூடிட்டு. நாங்க கைல இருக்குற கவட்டையால வெறட்டி விட்டுக்கிட்டே இருக்க, பீட்டர் அண்ணன் ஒரு மொத்தமா கொஞ்சம் கிளி அள்ளிட்டு வந்தான். 'எண்ணனே இது! கிளி கேட்டா! உறிச்ச கோழிய கொண்டு வந்திருக்க' 'ஏல! இனி தாம்ல முடி மொளைக்கும். போய் நல்லா வாழைப்பழம் கொடுங்கல! சீக்கிரம் பெரிசாயிரும்' இது எங்கள் அண்ணன்..பீட்டர்.

நான் கொடுக்காப்புளிக்கு கொஞ்சம் பேராசை பட்டு, ரெண்டு கிளிய எடுத்துக்கிட்டேன். வீட்டுக்கு கொண்டு போன வுடனேயே ஒரே திட்டு 'ஏல! போன வாரம் தான ஒரு மைனாவ தூக்கிட்டு வந்த..இப்போ இது வேற எதுக்குல' அப்படின்னு. எங்க வீட்டு பூனை வேற ரெண்டு கிளியையும் ஒரு மாதிரி பார்த்தது. நேத்து மைனாவ புடிக்கப் போய் என்னிடம் வாங்கிய அடியை நினைத்து பேசாமல் இருந்தது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாய் கிளி எல்லோர் வீட்டுலையும் வளர்ந்தது. நல்லா முடி மொளைச்சி இப்போ பச்சை கலர்ல கிளி மாதிரி ஆகிட்டு.

பொரிகடலை போட்டா, அது பாட்டுக்க ரெண்டும் ஒக்காந்து கொறிச்சிக்கிட்டு இருக்கும். சட்னிக்கு வச்ச கடலைய காணோம்னு வீட்டுல அம்மாவோட சத்தம் அடிக்கடி கேட்கும். நானும் ரெண்டு கிளிகளுக்கும் நல்லா தீனி போட்டு வளர்த்தேன். எல்லாம் கொடுக்காப்புளி கனவுல தான். சரி! அதுங்களுக்கு நாம சொன்ன ஏதாவது கேக்குற மாதிரி பயிற்சி கொடுக்கலாம்னு நெனைச்சேன். கடைசில நான் கூப்பிட்டா கூட எட்டி பாக்காம ஒரு சோம்பேறி கிளிகளா போச்சி. எம்மனசு ஒடைஞ்சி போச்சி. நான் விசிலடிச்சி கூப்பிட்டா, லேசா எட்டிப்பாத்துட்டு கடலைய கொறிக்கிறதை தொடரும். சில நேரம் ரெண்டும் போய் தூக்கிக்கிட்டு இருக்கிற எங்க வீட்டுப் பூனையை போய் கொத்தி வெரட்டி விட்டுடும். அப்போ நம்ம பூனையார் உச்ச கட்ட எரிச்சலில் இருப்பார். 'கிளிய புடிச்சி என் கைல கொடுப்பாங்க..இங்கே என்னைய புடிச்சி அதுங்க கைல கொடுத்து கொடும படுத்தறீயே! இது நியாயமால' என்பது போல இருக்கும். திருப்பி கடிச்சா அடி விழும் என்று பேசாம இருக்கும்.

அப்புறம் ரெண்டும் சேர்ந்து டூயட் பாட ஆரம்பிச்சிட்டுதுங்க. சரி! இனி நம்ம வீட்டுல கிளி பண்ணை தான் வைக்கனும்னு பயந்து, நல்லா ரெக்கை மொளச்சவுடனே பறக்கும்னு தூக்கி வீசி வீசி பார்த்தேன்.ம்ம்ம்.. சோம்பேறிங்க..வீசுன வேகத்துலேயே திரும்பி வந்து கடலை சட்டி முன்னாடி ஒக்காந்துக்கிடுங்க. நான் படுற பாட்டை பாத்துட்டு எங்க வீட்டு பூனை என்னிய கேவலமா ஒரு லுக் விடும். 'லே! என்னையும் திங்க விட மாட்டேங்குற. ஒனக்கும் ப்ரோஜம் இல்ல. பாத்தியா' அப்படிங்கிற மாதிரி இருக்கும். வெறுத்துப்போய் ஒரு நாள் ரெண்டையும் புடிச்சி ஒரு புளிய மரத்துல ஏறி விட்டுட்டு வந்துட்டேன்.

கடைசில நமக்கு கொடுக்காப்புளி பறிக்க காட்டு கிளிய விட்டா வேற கதி இல்லாம போய்ட்டு. ஒரு நாள் தூத்துக்குடில அடிச்ச புயலில் எங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டு கொடுக்காப்புளி மரம் மொத்தமா சாஞ்சிப் போச்சி. அதுவரைக்கும் கைக்கு எட்டாத கொடுக்காப்புளிய அன்னைக்கு கைலயே பறிச்சி தின்னோம். இனி கொடுக்காப்புளி கைக்கு எட்டாமலே போகப் போறது தெரியாமலேயே.

Friday, March 10, 2006

சாத்தானே விலகிப் போ !

அப்போது நான் நான்காம் வகுப்பில். காலை வகுப்பு தொடங்குவதற்கு முன் டிப்-டாப்பா கோர்ட்- சூட் எல்லாம் போட்டுக்கிட்டு ஒருத்தர் எங்கள் வகுப்புக்கு வருவார். கையில் ஒரு சின்ன சூட்கேஸும் வச்சிருப்பார். எங்களுக்கு தினமும் காலையில் கதை சொல்வது தான் அவர் வேலை. கதை கேட்பது என்றால் எல்லோருக்கும் விருப்பம் தானே. 9 வயது சிறுவன் எனக்கு புடிக்காம போகுமா. வகுப்பில் எல்லோரும் ஆவலாய் கேட்போம். சின்ன சின்ன படம் வைத்து கதை சொல்வார். கதையில் சிங்கம், கரடி, யானை என்று எல்லாம் வரும். இன்னொரு கதாபாத்திரமும் எல்லா கதையிலும் கண்டிப்பா வரும். அது இயேசு. இப்படி போகும் கதை ' குழந்தைகளா! இது தான் நம்மை நேசிக்கும் ஒரே கடவுள். நாமெல்லாம் பாவம் செய்தால் நரகத்தில் தான் போய் விழுவோம். நரகம் என்றால் அங்கே கொப்பரையில் கொதிக்கும் எண்ணையில் தூக்கி போடுவார்கள்.இயேசு ஒருவரே நம்மை சொக்கத்துக்கு அழைத்து செல்லும் வல்லமை கொண்ட தேவன். நீங்கள் எல்லாம் இயேசு பிள்ளைகளா?'. நாங்கள் எல்லாம் மொத்தமாக 'ஆமாம்' என்று தலை ஆட்டுவோம்.

ஒரு 9 வயது சிறுவனுக்கு 'பாவம்' என்றால் என்ன தெரியும்..'நரகம்' என்றால் என்ன தெரியும்..கொதிக்கும் எண்ணை..தீ..என்று ஏன் இந்த மிரட்டல். இவர்களுக்கு என்ன வேண்டும்?. ஒன்றும் புரியாத வயது அது. நீ கும்பிடுவது வெறும் கல். இயேசு ஒருவர் தான் தெய்வம் என்று திரும்ப திரும்ப சொல்லி அந்த பிஞ்சு மனசில் நஞ்சை விதைக்க அப்படி என்ன தான் அவசியம். இத்தனைக்கும் என் வகுப்பில் அத்தனை பேரும் இந்து.

இவர்களுக்கு ஒவ்வொரு மாணவனுக்கு பின்னாலும் இருக்கும் குடும்பம் பற்றி தெரிய வாய்ப்பில்லை. அவர்களுக்கு அது பற்றி தெரிய அவசியமும் இல்லை. அந்த குழந்தைக்காக தேரி காட்டில் போய் கஷ்டப்பாட்டு விறகு சுமந்து 'யய்யா! ..நல்லா படிய்யா' என்று, இருக்கும் ஒரு வேளை சோத்தையும் பிள்ளைக்கு கொடுத்து, பள்ளிக்கு அனுப்பி வைக்கும் அந்த தாயை பற்றி இவர்களுக்கு தெரியாது. 'மாரியாத்தா! எம்புள்ளைய காப்பாத்து தாயே' அப்படின்னு ஒரு சின்ன காய்ச்சல் என்றாலும் உடம்பெல்லாம் திருநீறு அள்ளி போட்டு, இரவெல்லாம் கண் விழித்து கவனித்துக்கொள்ளும் அந்த தாயின் அன்பை பற்றியும் இவர்களுக்கு கவலை இல்லை. இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அந்த ஒரு மணி நேரம் பிரசங்கம் செய்தோமா, பிஞ்சு மனச கெடுத்தோமா என்பது தான்.

'யப்பூ! செயகுமாரு அம்மங்கோயிலுக்கு போமாட்டேன்னு சொல்றான். கல்லுங்கறான்யா' என்று சொல்லி அழுத ஒரு தாயின் (எனது அத்தை) வேதனையை விட இவனுங்களுக்கு மதம் பெரிசா போனது. காட்டில் போய் ஓலை சுமந்து, இயலாமல் வீடு வந்தவுடன் அப்படியே ஒரு கட்டிலில் சாய்ந்து கொள்வார்கள் என் அம்மா. ஒரு மணி நேரம் அவர்களால் எதுவும் பேச கூட சக்தி இருக்காது. நான் அக்கா எல்லாரும் சுத்தி உக்காந்துக்கிட்டு இருப்போம். மூச்சு கூட விட முடியாமல் அப்படியே படுத்து கிடப்பார்கள். இது அப்போது எங்கள் வீட்டில் தொடர்கதை. அந்த கஷ்டத்திலும் எங்களை ஆளாக்கினார்கள். 'புள்ளையாரப்பா..புள்ளையாரப்பா' என்று என் தாய் எங்கள் நலனுக்காக வேண்டாத தெய்வம் கிடையாது. இப்படி என் கிராமத்தில் ஒவ்வொரு தாயின் கதையும் இது தான். இவர்களை அழவிட்டு மதம் பரப்பும் அந்த மதம் பிடித்த கிறுக்கர்களை அன்றே எனக்கு பிடிக்காமல் போய் விட்டது.

மதம் என்பது ஒரு நம்பிக்கை. அவ்வளவே. இவர்கள் என்ன இயேசுவை நேரில் பார்த்திருக்கிறார்களா? இல்லை நான் தான் முருகனை நேரில் பார்த்திருக்கிறேனா?. பின் எதற்கு ஏதோ சொர்க்கத்துக்கு டிக்கெட் எடுத்து வைத்திருப்பது போல் 'பாவிகளே! மனம் திரும்புங்கள்' என்று கூச்சல். நான் இங்கு எந்த மதத்தையும் பெரிசு என்று சொல்லவில்லை. தன் தலையிலேயே தங்க காசுகளை அள்ளிக் கொட்டிக்கொண்டு தான் இறைவன் அடிமை என்று சொல்லும் பரதேசிகள் இந்து மதத்திலும் உண்டு. உன் மதத்தை, உன் நம்பிக்கைகளை உன் சமூகத்தில் மட்டும் காட்ட தெரியாதா?. மனிதனை, மனித மனங்களை நேசிக்க, புரிந்து கொள்ள தெரியாத, ஆனால் கடவுளை பற்றி பேசும் இவர்கள் தான் பாவிகள்.

என் கிராமத்தில் எல்லா மதத்தவரும் உண்டு. பொங்கலுக்கு கிருஸ்தவர்கள் வீட்டுக்கு பொங்கல் கொடுப்போம். அதே போல் கிருஸ்மஸுக்கு அங்கே இருந்து வரும். சின்ன வயசில் அந்த திராச்சை ரசத்திற்கும், அப்பத்திற்கும் ஆசை பட்டு நானும் சர்ச்சில் போய் நின்றிருக்கிறேன். ஆர்.சி கோவில் (மாதா கோவில்) திருவிழா என்றால் தவறாமல் "உப்பு-மிளகு (மாதாவுக்கு வேண்டி படைப்பார்கள்) வாங்கி போட்டுட்டு வந்துருய்யா" என்று என் அம்மா தவறாமல் 25 பைசா கொடுத்து அனுப்புவார்கள். நான் காதலிப்பது ஒரு கிருஸ்தவ பெண் என்று தெரிந்ததும் அம்மா சொன்ன ஒரே வார்த்தை 'அடப்பாவி! நல்லா பழகிக்கிட்டு இருக்கிற குடுப்பத்துல இப்படி பண்ணிட்டியே' என்று மட்டுமே. ஒரு வார்த்தை கூட மதம் பற்றி பேசவில்லை. என் திருமணம், திருநீறு, அதன் மேல் சிலுவை, அதன் மேல் திருநீறு என்று (நெத்தியில போட்டு நெத்திய ஒரு வழி ஆக்கிட்டாங்க) அத்தனை பேர் ஆசீர்வாதத்துடன் நடந்தது. இன்று என் வீட்டில் தீபாவளியும் உண்டு. கிருஸ்மஸும் உண்டு. மருதமலைக்கு என்னை கூட்டிச்சென்று, கோவில் கற்பகிரகம் வரை வந்து, ஐயர் கொடுத்த திருநீறை வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி கொண்ட என் மச்சான் (மனைவியின் அண்ணன்) ஒரு கிருஸ்தவர் தான். நானும் அவருடன் வேளாங்கன்னி மாதா கோவிலுக்கு போயிருக்கிறேன். இப்படி மதம் என்பது நம் உறவுகளில், பாசங்களில் பினைத்து கிடப்பது உண்மை தான்.நம் யாருக்கும் யார் தெய்வமும் பெரிசா தெரிவதில்லை. அவரவர் நம்பிக்கையை மதிக்க தெரிந்திருக்கிறது. இதில் 'இயேசு..இயேசு' என்று தெரு தெருவாக அவரை இழுத்துக்கொண்டு அலையும் இவர்கள், சிறு குழந்தைகளிடம் நஞ்சை விதைப்பதை தான் என்னால் பொருத்துக்கொள்ளவே முடிவதில்லை.

எங்க ஊர் சுடலைமாடன் கோவில் கொடையில் எப்பவுமே முன்னால் நிற்கும் சுப்ரமணி அண்ணனை இந்த தடவை பார்க்க முடியவில்லை. விசாரித்ததில் கிருஸ்தனாக மாறி விட்டாராம். என் உறவினர் ஒருவார் எப்பவுமே தண்ணி. அவர் மனைவி ஏதோ பிரச்சினையில் தீக்குளிக்க, அங்கே ஆஸ்பத்திரியிலேயே இவர்கள் ஆஜர். இவர்கள் தீக்குளித்தால் கடவுள் என்ன செய்வார். இப்போது அவர்கள் கிருஸ்தவர்கள். இதில் கொடுமை என்னவென்றால் உடனே அவர்கள் பெயரும் மாற்றப்பட்டு விடுகிறது. அவர் பையன்கள் இப்போது இலவசமாக கிருஸ்தவ பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறான். இப்படி நான் பார்த்த மதமாற்றம் ஏராளம். எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் பணம், வேலை, படிப்பு. ஏன் யாருமே முஸ்லீமாகவோ, இல்லை ஒரு முஸ்லீம் இந்துவாகவோ மாறுவதில்லை. இவர்கள் மட்டும் என்ன இயேசுவை நேரில் பார்த்துவிட்டார்களா..என்ன?. 'பாரதி' படத்தில் கிருஸ்தவனாக மாறிவிட்ட தன் நண்பனை (நிழல்கள் ரவி) பார்த்து 'நம் சமூகத்தில் இப்படி ஒரு அமைப்பு இல்லாமல் போய்விட்டதே..மகாசக்தி' என்று புலம்புவார். உண்மை அது தான். மொத்த முடிச்சியையும் பார்த்தால் கடைசியில் அது முடியும் இடம் 'பணம்'. இதற்கு விபசாரம் பண்ணலாமே. இந்த பாவங்களை இவர்கள் சொல்லும் இயேசுவே மன்னிக்க மாட்டார்.

என்னிடம் திட்டு வாங்கி கொண்டு போகும் கூட்டம் ஏராளம். நெல்லை இரயில் நிலையத்தில் ஒரு பெரியவர். ஆசிரியர் போல இருந்தார். எங்கே போனாலும் ஒரு கட்டு நோட்டிஸ், பிட் புத்தகங்களோடு தான் போவார் போல. 'தம்பி! நீ ஏசுவை விசுவாசி. அவர் வரும் காலம் சீக்கிரம் வருகிறது' என்று சில நோட்டிஸ்களை என் கையில் திணித்தார் (இது போல 100 சம்பவங்கள் சந்தித்து இருக்கிறேன்). அங்கேயே அவர் மூஞ்சியில் கிழித்து எறிந்தேன். ஒரு பிச்சைக்காரன் பேசினால் கூட நின்று பேசுவேன். அவனும் மனிதன் தானே. ஆனால் அன்று தெரிந்தே அவரை காயப்படுத்தினேன். அவர் காயப்பட்டது அவர் மூஞ்சியிலேயே தெரிந்தது. ஆனால் இவர்கள் செய்யும் காயங்கள் அவருக்கு தெரியாதா என்ன?. நான் பழனி முருகன் திருநீறு என்று கொடுத்தல் பூசுவாரா?. என் மதத்தை பற்றி கேட்க கூட பிடிக்காத இவனுங்க நாம மட்டும் கை கட்டி 'நீ பாவி' என்று சொன்னால் தலையாட்டி கேக்கணுமாம். 'இந்த நோட்டிஸ் அடிக்கும் காசுக்கு வெளியில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் சிறுவனுக்கு ஒரு பொட்டலும் இட்லி வாங்கி கொடுக்கலாமே.அதை உங்களை கடவுள் ஆசீர்வதிக்க மாட்டாரா! என்ன?' என்று கேட்க நினைத்தேன். அவரின் வயது கருதி கேட்கவில்லை. இந்தியாவில் மட்டும் அல்ல, இங்கே அமெரிக்காவிலும் இவர்களை பார்த்தது எனக்கு ஆச்சரியமே. நம்ம நெத்தியில தான் எழுதி ஒட்டி இருக்குமே இந்து என்று (திருநீறு). 'Hi! Are you from India?. Are you Hindu?. Do you know about Jesus Christ' அப்படின்னு ஆரம்பிப்பானுங்க. ஏன் இந்தியனா இருக்க கூடாதா...இந்துவா இருக்க கூடாதா..அது பாவமா என்ன?..இவர்கள் மனதில் இருப்பது தான் என்ன. இங்கே இருந்து மதம் பரப்புகிறேன் என்று வரும், பணம் அனுப்பும் இவர்கள் யார் கேட்க போகிறார்கள்?. தெரியவில்லை.

இப்போதெல்லாம் இவர்கள் பார்க்கும் போதெல்லாம் நான் மெதுவாக மிருகமாக மாறி விடுகிறேன். இவர்களுக்கு நான் சொல்ல நினைப்பது எல்லாம் ஒன்று தான். 'நீ சொல்லும் இறைவன் உண்மையிலேயே இருந்தால், அவன் மதம் பிடித்து அலையும் உன்னை சொர்க்கத்திலும், அவனை நான் அறிந்து கொள்ளவில்லை என்று ஒரே காரணத்திற்காக என்னை நரகத்திலும் தள்ளினால், நீ தேவன் என்று கொண்டாடும் அவனிடம் ஒன்று சொல்வேன் ' நீ தேவன் அல்ல..ஒரு சாத்தான் என்று'

அன்புடன்,
சிவா

Friday, March 03, 2006

வேலை கெடச்சிடுச்சு - 2

நான் பார்த்த மொத வேலைய பத்தி இங்கே சொல்லிருக்கேன். இப்போ ரெண்டாவதா கெடைச்ச வேலைய பற்றி புராணம் பாட வந்திருக்கேன்.

அப்போ காலைல எந்திரிச்ச வுடனே மொத வேல, பக்கத்து ஊரு மணிநகருக்கு போய் மளிகை சாமான் வாங்கி வருவது தான். எங்க ஊருல கட கெடையாதுல்லா. ஊருல யாரு கண்ணுலையும் படாம போனோம்னா பொழைச்சோம். இல்லன்னா, வீட்டுக்கு வீடு ஒரு சீட்ட எழுது கைல கொடுத்துருவாவ. அப்பாவோட சைக்கிள எடுத்துக்கிட்டு கொரங்கு பெடல போட்டுக்கிட்டே போய் சேரவும், தடியர் வருவதற்கும் சரியா இருக்கும். தடியர் கடை தான் இருக்குற ரெண்டு கடைல ஒன்னு. ஆள் எப்படி இருப்பர்னு சொல்ல தேவை இல்லை. அவரு கடைக்கு போறதுக்கு ரொண்டு காரணம், ஒன்று தேங்கா தண்ணி. ரெண்டாவது ஓசில படிக்க கெடைக்கும் சிறுவர் மலர். 'நல்லா பெரிய தேங்காவா ஒடைங்கண்ணே' தேங்கா செரட்டையோட நின்னுக்கிட்டு இருப்பேன். ரொம்ப பழக்கமாயிட்டார். 'ஏல! லீவு வருதுல்லா. நம்ம கடைக்கு வந்துர்றீயா?' ஓசியில ஒரு வேலையால் கெடைச்சா நல்லா தானே இருக்கும். எனக்கும் ஆசை தான். பல்பொடி கம்பெனிக்கு போய் தண்டமா போச்சி. பசிச்சா ஏதாவது சாப்பிட முடியுதா. மளிகை கடைன்னா, அப்போ அப்போ ஏதாவது அள்ளி வாய்ல போட்டுக்கலாம். 'சரின்னே! லீவு வந்ததும் வந்துடறேன்'. 'கடைய இடிச்சிட்டு கொஞ்சம் பெரிசா கெட்டுங்கண்ணே. நான் நிக்கிறதுக்கு எடம் வேண்டாமா' ரொம்பவே நக்கலா போகும் எங்கள் பேச்சு வார்த்தை.

கோடை விடுமுறை விட்டாலே நம்ம தொல்லை தாங்க முடியாம எங்கையாவது தள்ளி விடுறதுல வீட்டுல குறியா இருப்பாங்க. தொல்லை விட்ட மாதிரியும் இருக்கும். படிக்காம உருப்படாம போய்ட்டா பின்னாடி பயன் படலாம் பாருங்க. தடியர் கடைக்கு தான் இந்த தடவை போவேன்னு சொல்லிட்டேன். நம்ம ஆசைய யாரு கேக்குறா. கடைசில சைக்கிள் கடைல தள்ளி விட்டுட்டாங்க. அப்பா வேல பாக்குற சைக்கிள் கடைல என்னையும் விட்டா வெளங்காதுன்னு, கொஞ்சம் தள்ளி அப்பாக்கு தெரிஞ்சவரோட சைக்கிள் கடை.

ஆனா ஒரு வகைல சந்தோசம். அப்போ சைக்கிள் ஓட்ட கத்துக்கிட்ட காலம். அப்பாக்கிட்ட கெஞ்சி கூத்தாடி அப்பா சைக்கிள வாங்கி, அதையும் ஒரு முள்ளுக்காட்டுக்குள்ள மொத்தமா போய் விழுந்து பஞ்சராக்கி திட்டு வாங்கிகிட்டு இருந்த காலம். தீபாவளி பொங்கல்ன்னா ஒரு குட்டி சைக்கிள வாடகைக்கு எடுத்து கொடுப்பாங்க. அன்னைக்கு முழுசும் சோறு தண்ணி இல்லாம ஒட்டிக்கிட்டே இருக்கிறது. அன்னைக்கு முழுசும் அப்படி ஒரு சந்தோசமா இருக்கும். இப்படி இருக்கும் போது சைக்கிள் கடைலயே வேலைன்னா சும்மாவா. எப்படியும் சைக்கிள் கெடைக்கும். சந்தோசமா வேலைல போய் சேர்ந்தேன்.

கடை ஒன்னும் பெரிய கடை இல்லை. காதல் படத்துல பாத்திருப்பீங்களே ஒரு கடை. அதே மாதிரி தான். என்ன இங்கே சைக்கிள். காலைலயே போனவுடனே கடைல பெருக்கி தண்ணி தெளிச்சிக்கிற வேலை. அப்புறம் வர்றவன் போறவனுக்கெல்லாம் காத்தடிச்சி கொடுக்கிற வேலை. நானே அப்போ பம்பு வளத்தி தான் இருப்பேன். என்னைய போய் 'லே! சாருக்கு ப்ரண்டுல காத்தடிச்சி விடுல' அப்படின்னு வெறட்டுவாரு. நானும் பம்பு கூட போராடி போராடி அடிச்சி கொடுத்தா சில சமயம் ஒரு பத்து பைசா கெடைக்கும். அதை மொதலாளி புடுங்கிகிடுவார். உழைப்பு என்னோடதா இருந்தாலும், கடை அவரோடது தானே.

என்னோட முக்கிய வேலை. எவனாவது பஞ்சர்னு வந்தா ட்யூப்ப கலட்டி காத்தடிச்சி ஒரு அழுக்கு தண்ணில முக்கி பஞ்சர கண்டுபுடிச்சி அவருகிட்ட சொல்றது. அவரு ஒட்டி முடிச்சதும், மறுபடி காத்தடிச்சி ரெடி பண்ணி வைக்கிறது.

மத்யானம் ஆயிடுச்சின்னா, அவரு வீட்டுக்கு போயி மதியம் சாப்பாடு வாங்கிட்டு வரணும். மொதலாளி வீடு ஒரு 5 கீ.மீ தள்ளி ஒய்யாங்குடின்னு ஒரு ஊரு. அந்த மே மாசம் வெயிலுல, கொரங்கு பெடல் போட்டே லொங்கு லொங்குன்னு 5 கீ.மீ ( போய் வர மொத்தம் 10 கீ.மீ) அழுத்திப் போய் மொதலாளிக்கு சாப்பாடு வாங்கிட்டு வந்து கொடுப்பேன். போற வழில ஒரு குளம் உண்டு. அதுல இறங்கி கொஞ்ச நேரம் வெளாண்டுட்டு, அப்புறம் தான் பிரயாணத்தை தொடருவேன்.

ஊரு பயலுவலுக்கு கவட்ட செய்றதுக்கு சைக்கிள் ட்யூப் எல்லாம் சப்ளை நான் தான். அப்புறம் சாயங்காலம் ஆச்சின்னா மொதலாளி பக்கத்து டீ கடைல ஒரு டீயும், ஸ்வீட் பன்னும் வாங்கி கொடுப்பாரு. அது தான் அன்னைக்கு பம்பு கூட காலைல இருந்து போராடுனதுக்கு கொடைச்ச ஒரே வெகுமதி. தின்னுட்டு மறுபடி வேலைய பாக்க ஆரம்பிச்சிடுவேன். ராத்திரி ஒரு 10 மணிக்கு போல அப்பா வீட்டுக்கு போகும் போது என்னையும் அழைத்துக்கொள்வார்கள்.

இப்படியே ரெண்டு மாசம் ஓடி போச்சி. நல்ல மனுசன். பேசாம அப்படியே அங்கேயே தங்கிறலாம்னு நெனைச்சேன். மண்டைல ஒரு தட்டு தட்டி, படிக்க போலன்னு வெரட்டி விட்டுட்டாங்க. 'யப்பூ! அடுத்த தடவையும் வந்துரு என்ன' மொதலாளி சுட சுட மதிய சாப்பாடு பறிபோன சோகத்தில். 'சரிண்ணே! ' சொல்லிட்டு வந்தேன்.

( அடுத்த பார்த்த வேலை விரைவில்)