Friday, December 23, 2005

ஓணானும் ராமாயணமும்


பொதுவாக நிறைய பேருக்கு ஓணான் அடிப்பது ஒரு சிறந்த பொழுது போக்கு. அட பாவிங்களா! ஒரு உயிர கொடுமை படுத்துறது உங்களுக்கெல்லாம் ஒரு பொழுது போக்கா? அப்படீங்கறீங்களா?. இந்த கேள்வி இந்த ஓணானுக்கும் தோன்றியது. இந்த கேள்வியோட, நம்ம கதைல வர்ற ஓணான் இப்போ கடவுள் ராமரை பார்க்க போகுது. ராமருக்கும் ஓணானுக்கும் என்ன சம்பந்தம்!! ராமருக்கும் இதே சந்தேகம் வந்தது. நாம ஓணானிடமே கேட்கலாம்.

ராமர்: என்ன ஓணானே! அதிசயமாக இருக்கிறது! என்னை காண வந்திருக்கிறாய்!

ஓணான்: அது ஒன்னும் இல்ல! சாமி. இந்த பயலுவ தொல்ல தாங்க முடியல சாமி. நிம்மதியா தெருவுல நடக்க கூட விடமாட்டேங்கிறானுவ. எங்கள பாத்துட்டாலே கல்ல தூக்கிகிட்டு கெளம்பிருறானுங்க. ஓடி ஓடி ஓய்ச்சி போய்ட்டோம் சாமி. அதான் ஒங்கள பாத்து ஒரு நியாயம் கேட்டுட்டு போலாம்னு வந்தேன்.

ராமர்: அடடா! என்ன கொடுமை இது! பூலோகத்தில் மானிடர்கள் இப்படி எல்லாமா கொடுமை செய்கிறார்கள்.

ஓணான்: மரத்துல நிம்மதியா தூங்கிகிட்டு இருந்தாலும் தொல்ல பண்ணுறானுங்க! காலார ஒரு வாக்கிங் போனாலும் தொல்ல பண்ணுறானுங்க! நிம்மதியா பொண்டாட்டிக்கிட்ட கொஞ்சிக்கிட்டு இருந்தாலும், வெவஸ்தை இல்லாம அப்பவும் தொல்ல பண்ணுறானுங்க! வெறுத்துப்போயி தான் ஒங்க கிட்ட வந்தேன் சாமி!

ராமர்: தொல்லை! தொல்லை! என்கிறாயே! அப்படி என்ன பண்ணுகிறார்கள்

ஓணான்: வெளக்க வேற செய்யணுமா! சாமி! நேத்து அப்படி தான், பக்கத்து காட்டுல என் மச்சினன பாத்துட்டு வரலாம்னு மரத்தவுட்டு இறங்கினேன். பக்கத்து வீட்டு கொரங்கு நா எறங்குறத பாத்துட்டு. அவ்வளவு தான் சாமி! எல்லா பயலுவலும் சேர்ந்து்க்கிட்டு ஊர்ல கெடக்குற மொத்த கல்லையும் அள்ளி அடிக்கறானுவ. அவ்வளவு கல்லையும் வச்சா, ஒரு வீடே கட்டலாம் சாமி! உயிர கைல புடிச்சிக்கிட்டு ஓடி போயி மரத்துல ஏறுனா, சுத்தி நின்னு அடிக்கிறானுவ.நல்ல வேள சாமி, ஒரு பயலுக்கும் குறி பார்த்து அடிக்க தெரியல. இல்லன்னா, எங்க இனத்தையே காலி பண்ணியிருப்பானுங்க.

ராமர்: அடப் பாவமே!

ஓணான்: இருங்க! இன்னும் முடியலை. அதுல ஒரு எரும அடிச்ச கல்லு எம்மேல பட்டு நான் கீழே விழ, மறுபடியும் அந்த காட்டு கும்பல் என்ன தொரத்த ஆரம்பிச்சது. பக்கத்துல இருக்கற பன மரத்துல ஏறிட்டேன்.ஒரு பயலுவலுக்கும் பன ஏற தெரியாது, நிம்மதியா இருக்கலாம்னு பாத்தா, பெரிய பெரிய கல்ல எடுத்து பன மரத்து தூர்ல டங்கு டங்குன்னு அடிக்கிறானுவ. மரமே ஆடி போச்சு. நான் பயத்துல பல்ல கடிச்சிக்கிட்டு அவ்வளவு உச்சில இருந்து சர்க்கஸ் காரன் மாதிரி குதிச்சேன். தரைல வந்து விழுந்து சுதாரிக்கறதுக்குள்ள, ஒருத்தன் மண்டைல போட்டுட்டான்.

ராமர்: அப்புறம் என்னவாயிற்று?

ஓணான்: அப்புறம் சாமி! எல்லோரும் ஏதோ புலிய வேட்டையாடி புடிச்ச மாதிரி ஆடிக்கிட்டானுங்க. அப்புறம் தான் கொடுமையே ஆரம்பிச்சுது சாமி! அல்கொய்தா கைல மாட்டுன அமெரிக்க காரன் மாதிரி தான் என்னோட நெலமை. என்ன இழுத்துக்கிட்டு ஊருக்குள்ள போனானுங்க. ஒரு எரும அவனோட தாத்தா பொடி தடைல இருந்து மூக்கு பொடி எடுத்து வந்தது.

ராமர்: மூக்கு பொடியா அது என்ன?

ஓணான்: ஓ அதுவா! அது இந்த மனுச பயலுவ சர் சர்னு மூக்குக்குள்ள ஒரு பொடிய போட்டு உறிஞ்சறானுங்க. கருமம்! சும்மா கிர்றுண்ணு மண்டைல ஏறுது. மனுச பய மூக்கு தாங்கும். இந்த குட்டி மூக்கு தாங்குமா. பொடிய எடுத்துட்டு வந்து என்னோட மூக்குல ஒரு எரும போட, எனக்கு கிறு கிறுத்து போச்சி. நான் சும்மா ராட்டினம் மாதிரி சுத்த, மனசாட்சியே இல்லாம, எல்லா கொரங்கும் சிரிக்குதுங்க. இப்படி பல கொடுமைகள் சாமி! அப்புறம் விட்டுட்டானுவ. ரெண்டு நாளா எந்திரிக்க முடியல.

ராமர்: உன்னை மட்டும் தான் இப்படி கொடுமை செய்கிறார்களா?. இல்லை எல்லோரையுமா?

ஓணான்: ஓணான் என்று பேப்பர்ல எழுதினா, அந்த பேப்பரையும் கல்ல தூக்கி எறிவானுங்க, இவனுங்க. போன வாரம், என்னோட மாச்சான் அப்படித்தான் சாமி. ரொம்ப அப்பாவி சாமி! அவனோட சைட்ட பாக்க கெளம்பி இருக்கிறான். பாவி பயலுவ! சத்தமே இல்லாம அவன் பின்னாடியே போய் கழுத்துல சுருக்க மாட்டிட்டானுவ. தெரு தெருவா இழுத்துட்டு போயி, ஒடம்பெல்லாம் ஒரே காயம். இப்போ தான் தேறிருக்கான்.

ராமர்: சரி! அதற்கு என்னை எதற்க்கு பார்க்க வந்தாய்?. உனக்கு வேறு கடவுளே கிடைக்க வில்லையா?.

ஓணான்: பொறுங்க சாமி! மேட்டர் இல்லாமலா ஒங்கல பார்க்க வருவேன். இவ்வளவு கொடுமைக்கும் இந்த பயலுவ ஒரு நியாயம் வேற வச்சிருக்கானுவ. என்னன்னு கேக்கறீயலா.
ஒங்க பொண்டாட்டிய எவனோ தூக்கிட்டு போய்ட்டனாம, இலங்கைல இருந்து. அப்போ நீங்க வாணர படைகளோட சிலோனுக்கு பாலம் போட்டீங்கலாம். அந்த நேரத்தில், தாகமா இருந்த ஒங்களுக்கு அணில் இளநீர் கொடுத்ததாம். ஒடனே! நீங்க அத பாசமா எடுத்து முதுகுல ஒங்க விரல வச்சி தடவி கொடுத்தீங்களாம். அது அதோட முதுகுல மூனு கோடாக விழுந்ததாம்.

ராமர்: கதை நன்றாக தானே இருக்கிறது! அதற்கு என்ன ஓணானே?

ஓணான்: அதுவரைக்கும் கத நல்லாத்தான் இருக்கு. அப்புறம் தான் ஏதோ ஒரு மூதேவி எங்க மேல இருக்கற எரிச்சல்ல, ஒரு கதைய சேர்த்துடுச்சி. அணில் இளநீர் கொடுத்திச்சா. நாங்கல்லாம் ஒன் அடிச்சி குடுத்தோமாம். :-( இப்படி ஒரு கதைய கேட்டு தான் இந்த பயலுவ "நம்ம சாமிக்கே ஒன் அடிச்சி கொடுத்திட்டுடா" ன்னு எங்கள ஓட ஓட வெறட்டுதானுவ. ஏன்! சாமி ! அப்படி நாங்க எப்போ செஞ்சோம். எங்க பாட்டுக்கு செவனேன்னு போய்ட்டு இருக்கோம்.

ராமர்: கேட்க வருத்தமாக தான் இருக்கிறது. வால்மீகி, கம்பரும் எழுதிய ராமாயணத்தில் இவை எல்லாம் இல்லையே. சரி! நான் என்ன செய்ய வேண்டும்.

ஓணான்: அப்படியே எங்க முதுகுலயும் மூனு கோடு போட்டு விட்டுடுங்க. நாங்களும் பொழச்சுப்போம்லா.

ராமர்: அப்படியெல்லாம் உடனே செய்ய முடியாது ஓணானே. அது இயற்கைக்கு புறம்பானது. பரிணாம வளர்ச்சியினால், உன் முதுகிலும் கோடு வரும். அப்போது நீ நிம்மதியாக இருக்கலாம்.

ஓணான்: எப்போ சாமி அது நடக்கும்!

ராமர்: இன்னும் சில கோடி வருடங்கள் ஆகலாம்.

ஓணான்: அட போங்க சாமி! இந்த வெளாட்டு தான வேணாங்கிறது. பக்கத்து வீட்டு டி.வில ஒரு நாள் பார்த்தேன். அமெரிக்காவுல ஓணான எடுத்து கொஞ்சல்லாம் செய்றாங்க. செல்ல பிராணியா வேற வளக்கறாங்கலாமே. அப்படியே சிலோனுக்கு போட்ட பாலம் மாதிரி, சின்னதா அமெரிக்காவுக்கும் ஒரு பாலம் போட்டு கொடுத்திடுங்க. அகதியா ஓடி போயாவது பொழச்சுக்கறோம்.

ராமர்: நன்றாய் சொன்னாய் போ! ஈரானில் இருந்து குழாய் போட்டலே, அமெரிக்காகாரன் தீவிரவாதம் என்கிறான். என்னை, அமெரிக்கவுக்கே பாலம் கட்ட சொல்கிறாய். அப்புறம் மூன்றாம் உலகப்போர் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆகி விடும். ஆள விடப்பா!

எங்கிகுந்தோ பறந்து வந்த கல், ஓணானின் மண்டையை தாக்குகிறது. "வந்துட்டாய்யா அந்த சிவா!" ஓட ஆரம்பிக்கிறது ஓணான்.

Saturday, December 17, 2005

வேலை கிடைச்சிடுச்சி

'பற்களின் வெண்மைக்கு பூபால் பல்பொடி
பூப்போன்ற பற்களுக்கு பூபால் பல்பொடி
ஒய்யாங்குடி, பாட்டக்கரை, சாத்தான்குளத்தில்
விற்பனையில் முதலிடம் பூபால் பல்பொடி'


இப்படி எங்க ஊரு தேட்டருல அடிக்கடி ஒரு விளம்பரம் ஓடும். ஒரு நாள் அப்படி தான் படம் பார்த்துட்டு வீட்டுக்கு வந்தா, அப்பா 'ஏல! பூபால் கம்பெனில ஒனக்கு வேல கெடச்சிருக்கு. நாளைல இருந்து போவணும்" அப்படிங்கறாங்க. அடடா! நம்ம திரைல பாத்த கம்பெனில நமக்கு வேலையா. ஒரே சந்தோசம். தூக்கமே வரல.

அப்போ நான் அஞ்சாப்பு படிச்சிட்டு, லீவுல வீட்ல இருந்தேன் :-). வெயில்ல புள்ள காடு காடா சுத்தி கருத்து போயிர கூடாதுன்னு இப்படி ஒரு வேலை ஏற்பாடு. இங்கே கருத்து போறதுக்கு ஒன்னும் இல்லன்னாலும், நானும் காக்காவும் ஒரே ஜாதி என்றாலும், ஒரு பழமொழி சொல்லுவாங்கல்லா. அதான்.

கம்பனிக்கு போறதுக்கு முன்னாடி பல்பொடி பற்றி ஒரு ப்ளாஷ் பேக். என்னோட சின்ன வயசுல சாம்பல் (உமிக்கரி) தான் பல்பொடி. காலைல எந்திருச்சோம்னா, வீட்டு பின்னாடி ஒரு டால்டா டின்ல உமிக்கரி தொங்கிகிட்டு இருக்கும். ஒரு கை நிறைய அப்படியே அள்ளி வாயில போட்டு சவச்சி வாய கொப்பளிச்சா, பல் வெளக்கின மாதிரி. பல்பொடி முடிஞ்சி போச்சின்னா, டின்ன தூக்கிக்கிட்டு பக்கத்து ஊரு மணிநகருல போய் யாரு வீட்லயாவது 'யக்கா! பல்பொடி இருக்குமா' ன்னு கேட்டா, "அடுப்புக்குள்ள கெடக்கு. அள்ளிட்டு போப்பு" அப்படின்னு நெல் அவிக்கும் பெரிய அடுப்ப காட்டுவாவ. மணிநகர்ல எல்லோருக்கும் நெல் அவிக்கிற தொழில். "பாத்துப்பு! தணலா கெடக்கு. அப்படியே அள்ளி வாயில போட்டுறாத. வாயி வெந்துரும்". அடுப்பு அண்டா சைசுக்கு இருக்கும். ஒரு நீளமான கரண்டிய வச்சி டின்ன நெறப்பிக்கிட்டு வந்து சேருவோம்.

நான் கண்ணால பல்பொடிய பார்த்தது, மூனாங்கிளாஸ் படிக்கும் போது தான். எம்.ஜி.ஆர் படம் போட்டு பல்பொடி ஒன்னு பள்ளிக் கூடத்துல ஓசில கொடுப்பாவ. செம டேஸ்ட். அதும் வீட்டுக்கு வந்து சேர்வதற்க்குள் காலியா போய்விடும். மொத்த பாக்கெட்டையும் வர வர தின்னே தித்துடுறது.

இப்படி பட்ட நிலமைல, பல்பொடி கம்பெனில வேலைன்னா சும்மாவா. ஆயிரம் கனவுகளோடு பல்பொடி கம்பெனிக்கு எங்க ஊரு பசங்க ஒரு அஞ்சு பேரு கெளம்பினோம். மொதளாளி எல்லோரையும் வரவேற்று வேலை நெளிவு சுழிவுகளை பற்றி சொல்லி கொடுத்தார். எனக்கு கொடுக்கப் பட்ட முதல் வேலை "ஏல! அந்த ரூமுக்குள்ள கெடக்கற பல்பொடிய இந்த மெஷின்ல அள்ளி வந்து கொட்டுல". நானும் அண்ணாச்சி காட்டுன ரூமுக்குள்ள போய் பாத்துட்டு "யண்ணே! அங்க பல்பொடி ஏதும் இல்லண்ணே. உமிக்கரி தான் கெடக்கு" என்றேன். "அதாம்ல பல்பொடி. கொண்டு வந்து கொட்டுல" என்றார் சூப்பர்வைசர் அண்ணன். அடப்பாவிங்களா! இங்கேயும் அதானா. பல்பொடி திங்கலாம்னு வந்த நாக்கு செத்து போச்சி.

என்னோட வேலை. பல்பொடி :-) ய கலக்குற மெஷுன்ல கொண்டு வந்து கொட்டணும். மெஷின் பல்பொடியோட ரோஸ் கலர் சாயம், கொஞ்சம் சாக்கரீன் (அப்போ தான சுவையா வரும்) கலக்கும். அதை அள்ளி வெயில்ல காய வைக்கணும். இப்போ சுவையான, மணமான பூபால் பல்பொடி தயார். அப்புறம் அதை அள்ளி, ஒரு பொடி டப்பா சைசுல அளந்து சின்ன சின்ன பாக்கெட்ல அடைச்சி ஒட்டணும். அப்புறம் சின்ன பாக்கெட் எல்லாத்தையும் சேர்த்து ஒரு பெரிய பண்டலா மாற்றுவோம். வாரம் அஞ்சு ரூவா சம்பளம். ரெண்டு வாரம் வேலைக்கு போனேன். மொத்தம் பத்து ரூவா கெடைச்சது. அப்படியே அம்மா கைல கொடுத்தாச்சி. மொத சம்பளம் இல்லையா.


அப்புறம் ஊர்ல ஒணான் கூட்டம் பெருகி போச்சுன்னாங்க. ஊர் மக்கள் கஷ்டத்த பார்க்க முடியாம, வேலைய விட்டுட்டேன்.

Sunday, December 11, 2005

கல்யாணமாம் கல்யாணம் -3 (கடைசி)

(சும்மா ஆரம்பிச்சி, இந்த பதிவு இழு இழுன்னு இழுத்துக்கிட்டு போயிடுச்சி. மன்னிக்கனும். இந்த பதிவுல முடிச்சிடறேன்.) . பாகம்-1 பாகம்-2

அடுத்த நாள். கல்யாண நாள். காலையிலேயே பொண்ணுவீட்டுக்கு கிளம்ப ஆரம்பித்தோம். அதே ஜீப். மாப்பிள்ளை காரில் ஏறப்போன அண்ணன் முருகேசை "ஏல! எங்கள மாத்திரம் ஆத்துல தள்ளி விட்டுட்டு நீ சொகுசா போலாம்ணு பாக்றியா! ஜீப்ல எங்க கூட வால" அப்படின்னு துரை மாமா, மாப்பிள்ளையையும் எங்க கூட ஏத்திவிட வண்டி கிளம்பியது. போக போக வழியில் இருக்கும் சாமிக்கெல்லாம் தேங்காய் உடைத்துக் கொண்டே வண்டி கிளம்பியது.


பொண்ணு வீட்ல எங்களுக்கெல்லாம் வேலை இருக்காது. நாங்க சும்மா தாமிரபரணி ஆத்துல போய் காக்கா நீச்சல் அடிக்கிறது, மீன் புடிக்கிறது போன்ற வேலைகளை பார்த்திக் கொண்டிருந்தோம். இல்லன்னா வான வெடி விடுவாறே அந்த தாத்தாக்கிட்ட செட்டில் ஆகிடுவோம். கைல வச்சி ராக்கெட்ட என்னம்மா வுடுவாரு. ஒரு கயிறுல தணல வச்சி, கைல வெடிய பத்தவச்சி வெடிக்க போகுதுன்னா, தூக்கி மேலே வீசுவாரே, செம த்ரில்லிங் அது.

அப்புறம் திடிர்னு கல்யாண் வீட்ல ஒரே பரபரப்பு. மாப்பிள்ளை மயங்கி விழுந்துட்டாராம். அடப்பாவிங்களா இது என்ன உல்டாவா இருக்குன்னு போய் பாத்தா, எல்லோரும் மாப்பிள்ளைய உக்காரவச்சி விசிறிக்கிட்டு இருந்தாவ. மாலை கணம் தாங்க முடியாம மாப்பிள்ளை மயங்கி விழுந்திட்டாருன்னு ஒரே கேலி. அப்புறம் தாலி கட்ட ரெடியானதும், பொண்ண அழைச்சிட்டு வந்தாங்க. அதிக மேக்கப் இல்லாம பொண்ணு வந்தது. ஒரு கல்யாணத்துல அப்படித்தான், நிறைய மேக்கப் போட்டு "ஏ! பொண்ண மாத்திட்டாங்கடோ" அப்படின்னு மாப்பிளளையோட அம்மா ஏக ரகளை பண்ணிட்டாங்க. அப்புறம் அப்பின பாண்ட்ஸ் பவுடரை எல்லாம் எடுத்தப்புறம் தான் அமைதி ஆனாங்க.


பொண்ணு குனிஞ்ச தல நிமிராம வருது (சொல்லி வச்சி கூட்டி வருவாங்களோ?). ( ஊருக்கு வந்தப்புறம் தான் பாக்கணும், அக்கா போடற சவுண்ட்ல குடிகாரன் போதை கூட எறங்கிடும்) அப்புறம் என்ன, ஆயிரம் வாலா வெடி வெடிக்க, கெட்டி மேளம் ஒலிக்க அண்ணன் முருகேசு தாலி கட்டினார். சாப்பாட்ட ஒரு வெட்டு வெட்டிட்டு நாங்க எல்லோரும் ஊர் கெளம்பினோம்.

கடைசியா ஒன்னு இருக்கே. மாலையில் மாப்பிள்ளை வரவேற்பு. மாப்பிள்ளை வாராரா அப்படின்னு ஊர் எல்லையில இருந்து பார்த்துக்கிட்டே இருந்தோம். எதுக்கு தெரியுமா?. பாட்டு போடத்தான். தூரத்தில் வண்டி தெரிந்ததும், ஓடி வந்து செட் கார அண்ணன் கிட்ட வந்து சொன்னோம்னா, டக்குன்னு பாட்டு ஒன்ன தட்டி விடுவாரு. "மணமகளே! மருமகளே! வா..வா.. உன் வலது காலை எடுத்து வைத்து வா..வா...குணம் இருக்கும் குலமகளே வா..வா". இந்த பாட்டு போட்டாலே ஊர் சனம் எல்லாம் உசாராயிடும். பொண்ணு-மாப்பிள்ளை வருதுன்னு. கல்யாணத்துக்கு போக முடியாத எல்லாரும் ஓடி போய் சாலை ஓரத்தில் நின்னுக்கிடுவாங்க. அந்த மக்கள் முகத்தை பார்க்கணுமே, பொண்ணு எப்படி இருக்குன்னு பார்க்க அப்படி ஒரு ஆவலோடு நிற்ப்பார்கள். (பார்த்தவுடன் வரும் கமெட்ட போட ஒரு தனி பதிவே போடலாம். "ஏலா! பொண்ணு கொஞ்சம் ஒயரம் கம்மியா தான் இருக்கு" " முருகேசு கலருக்கு கொஞ்சம் கம்மி தான்" இப்படி நெறைய). அப்புறம் வரவேற்பு. நாங்க பரிமாறுவதில் பிசியாகி விடுவோம்.

ஒரே ஒரு கவலை மட்டும் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். "நாளைக்கு ஸ்கூலுக்கு போவணுமே"