Sunday, February 05, 2006

*நட்சத்திரம்* - இன்று முதல்...

வணக்கம் நண்பர்களே! நல்லாருக்கியலா! ஒங்க நேரம் இந்த வார நட்சத்திரம் அடியேன் தான் :-). முப்பது பதிவே இன்னும் தாண்டலை. அதுக்குள்ள மதி அவர்களிடம் இருந்து நம்ம குமரனுக்கு ஒரு மடல் 'சிவா மெயில் ஐடி கொடுங்க' என்று. அதை குமரன் எனக்கு அனுப்பிய போது என்னால் நம்ப முடியவில்லை (எல்லோரும் இதையே தான சொல்றாங்கன்னு சொல்றீங்களா..உண்மை அது தானே). அப்புறம் மதி என்னிடம் நட்சத்திரம் ஆக இருக்கறீங்களான்னு கேட்ட போது, மறுக்க முடியல. வாரம் ஒரு பதிவு, அதிகமா போனா 10 பின்னோட்டம் என்று ப்ளாக் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருந்தது. தினமும் பதியணும்னு சொல்றாங்க, முடியுமா. சரி முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஆரம்பிக்கிறேன். கிடைத்த வாய்ப்பு அரிய வாய்ப்பு அல்லவா.

எனக்கு இந்த வாய்ப்பு அளித்த மதி கந்தசாமி அவர்களுக்கும், காசி சாருக்கும் முதலில் என்னோட நன்றிய தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நிறைய எழுதியிருக்கிறேன் என்றெல்லாம் பொய் சொல்லலைங்க. பத்தாப்பு படிக்கும் வரை தான் முழுசா நாலு வார்த்தை தமிழில் எழுதியது. அப்புறம் அம்மா அப்பா ஆசை படறாங்கன்னு இங்கிலீசு மீடியத்துல தூக்கி போட்டாங்க. அத்தோட தமிழும் போச்சி. ஆங்கிலமும் போச்சி. ப்ளாக் என்பது தெரியும் முன்னமே அல்வா சிட்டி விஜய்யின் இனையம் அறிமுகம் ஆனது. அடடே நல்லா இருக்கே. மக்கள் எல்லாம் படிச்சி பாக்கறாங்களேன்னு தேடி பார்த்ததில் கிடைத்தது தான் ப்ளாக்கர். இளையராஜாவின் திருவாசகத்திற்கு குமரன் பொருள் எழுதி கொடுத்த போது, மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆரம்பித்தது தான் சிவாபுராணம். அப்புறம் நம்ம ஓணான் அடித்த கதை, ஊர் கதை எல்லாம் எழுத ஆரம்பித்தேன். இப்போ இங்கே வந்து நிக்குது. சரி குமரனையும் உள்ளே இழுத்து போடலாம்னு நான் தான் அவரையும் ப்ளாக் ஆரம்பிக்க வச்சி அவரு தூக்கத்தை கெடுத்தேன். இப்போ 10, 15 ப்ளாக் வச்சிக்கிட்டு மனுசன் எப்படித்தான் மேய்க்கறாரோ.

இளையராஜா மேல் எனக்கு ரொம்ப பைத்தியம். நாள் முழுக்க, வாழ்க்கை முழுக்க அவர் பாடலை கேட்டுக்கொண்டே இருப்பேன். அவர் பற்றி மற்றவர்களுடன் பேச அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்க வில்லை. அதனால் ஆரம்பித்தது தான் கீதம் சங்கீதம். எனக்கு இசை ஞானம் எல்லாம் கெடையாதுங்க. மனசு ரசிக்கிறதை அப்படியே எழுதுகிறேன். நிறைய நண்பர்கள் படித்துவிட்டு நல்லாயிருக்கு என்று சொல்லும் போது ரொம்ப சந்தோசமா இருக்கும். நினைவுகளை பதிய சிவபுராணம், ராஜாவை பற்றி பேச கீதம் என்று இனைய வாழ்க்கை உங்கள் ஆதரவால் திருப்தியா போய்ட்டு இருக்கு.

என்னை பற்றி சொல்லணும்னா, பேரு சிவா தாங்க (புனை பெயர்..பூனை பெயர் எல்லாம் கெடையாது) சொந்த ஊர் நெல்லை (அல்வா...அல்வா) அருகில் ஒரு கிராமம் (நான் சென்னைல வாய தொறந்தாலே 'இன்னாப்பா! சொந்த ஊரு திருநவேலி அண்டயா' அப்படி கேட்டுடுவாவ). கல்லூரி வரை ஊரிலேயே படிப்பு. முதன் முதலாக சென்னைக்கு வந்தது பொறியியல் படிக்க. அப்படியே ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலை. இப்போ தற்காலிகமாக அமெரிக்காவில்.

வேறு என்னத்த சொல்ல. என்னால முடிஞ்ச அளவு சுவாரஸ்யமா கொண்டு போக முயற்சிக்கிறேன். வாழ்த்துவீங்க கண்டிப்பா :-). அப்படியே உங்கள் ஆதரவையும் தொடர்ந்து கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் என் வாரத்தை தொடங்குகிறேன்.

சென்ற வார நட்சத்திரம் தாணு வாரத்தில், ப்ளாக்கர் ரொம்பவே படுத்திட்டு போல. என்னோட வாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லாம இருக்க சாமிய வேண்டிக்கிட்டு ஆரம்பிக்கிறேன்.

அன்புடன்,
சிவா

44 comments:

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்கள் சிவா. முதல் வாழ்த்து என்னோடதா இருக்கணும்ன்னு எவ்வளவு நேரம் தான் காத்திருக்கிறது? :-)

சரி. இப்பத் தூங்கப் போறேன். காலையில வந்து மிச்சப் பின்னூட்டம் போடறேன். என்ன?

பரஞ்சோதி said...

ஆகா,

போன வார நட்சத்திரம் நம்ம ஊர் அக்கா.

இந்த வார நட்சத்திரம் நம்ம ஊரு மக்காவா.

வாழ்த்துகள் சிவா.

நட்சத்திர வாரத்தில் நம்ம ஊர் பதிவுகள் அதிகம் எதிர்பார்க்கிறேன். கலக்குங்க.

கைப்புள்ள said...

வாழ்த்துகள் சிவா! ஆர்வமா காத்துக்கிட்டிருக்கேன் உங்க நட்சத்திர வாரத்து பதிவுகளுக்காக.

G.Ragavan said...

வாழ்த்துகள் சிவா. உங்கள் நட்சத்திர வாரம் ஜொஜ்ஜொலிப்பாய் ஜொலிக்க எனது வாழ்த்துகள்.

திருநவேலியா...சொந்தூரு...பக்கத்துலதான். திருநவேலீல எங்க? டவுணா? பாளையங்கோட்டையா? ஜங்சனா?

சாந்தி ஸ்வீட்ஸ் எப்படிப் போகுது? அவங்க மஞ்சக் கலர்ல ஒரு பர்பி போடுவாங்களே...அத இன்னும் போடுறாங்களா? முந்தியெல்லாம் திருநவேலீல நண்பனப் பாக்கப் போனா சாந்தி ஸ்வீட்ஸ்ல அந்த மஞ்ச பர்பி வாங்காம வர மாட்டேன். அவ்வளவு பிடிக்கும்.

அதே மாதிரி சாலைக்குமாரசாமி கோயிலும் ரொம்பப் பிடிக்கும். பாலத்துக்கு அடீல ஜம்முன்னு ஜில்லுன்னு இருக்கும். அருணகிரீன்னு ஒரு தேட்டரு இருக்கே....அங்கதான் நண்பர்கள்ளாம் சேந்து டூயட்டு படத்தைப் பாத்தோம்.

திருநவேலியப் பத்தி நெறையச் சொல்லுவீங்கன்னு எதிர்பாக்கோம்.

ஜோ/Joe said...

மக்கா சிவா,
இந்த வாரம் நட்சத்திரம் நீயாடே? சந்தோஷம்!தெக்கத்தி பாசைல புகுந்து விளையாடு மக்கா! மொட்டை ரசிகன்னு வேற சொல்லிட்ட..உட்டுகுடுக்க மாட்டோம்லா?

ஜெ. ராம்கி said...

வாங்க பாட்டு வாத்தியாரே.... ஒரு பாட்டை எடுத்து விடுஙக!

தாணு said...

சிவா
இப்போ அமேமேமேரிக்காவிலேயா இருக்கீங்க? ஊர்ப்பக்கம் வந்தா வாங்கன்னு சொன்னதும் நாசரேத்தில்தான் இருக்கீங்கன்னு நினைச்சேன். ஆனாலும்`பத்தாப்பு’ பாஷை போகலியே! நம்ம ஊர் பாசஹி அப்படி, ஊரை விட்டு வந்து 25 வருஷம் ஆகப்போகுது, ஆனாலும் திருநெவேலியான்னு வாயைத் தொறந்ததும் கேட்டுருவாங்க!
இப்போதான் உங்க பதிவு எல்லாம் வாசிச்சுட்டு வந்தேன், பொங்கல் சூப்பர்!
ப்ளாக்கர் பொறியாளர்களை படுத்துவதில்லையாம், ஜமாய்ங்க!

Unknown said...

சிவாவின் நட்சத்திர வாரம் ஜொலிக்க என் வாழ்த்துக்கள்

Anonymous said...

சிவா,
முன்னுரையே எதார்த்தமாக, களைப்பே ஏற்படாத நல்ல நடை. வாழ்த்துக்கள் !
அன்புடன்
தேசிகன்

டிபிஆர்.ஜோசப் said...

வாழ்த்துக்கள் சிவா,

நாம எல்லாருமே கத்துக்குட்டிங்கதான். கவலைப்படாம சும்மா ஜமாய்ங்க..

இலவசக்கொத்தனார் said...

ஏலே. நீதானா இந்த வாரம். நல்லா எளுதுலே. நம்ம ஊரு மானத்த கப்பலேத்திராதே. என்னா.

சாமிய வேண்டிட்டு மொதா பதிவை போட்டுட்டையிலா. இனிமே சரியா போவும். கேட்டுகிட்டையா.

மரியாதை இல்லாம எழுதலைங்க. சும்மா ஜாலிக்கு. :) வாழ்த்துக்கள்.

சிவா said...

நன்றி குமரன்! எனக்குத் தெரியும் நீங்க காத்திருக்கிறீங்க என்று :-). முதல் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி. உங்க அளவுக்கு இல்லன்னாலும், என்னால முடிஞ்சத எழுதறேன். மறக்காம படிச்சிருங்க.


பரமன்குறிச்சி காரரே பரஞ்சோதி! எப்படி இருக்கிய? இந்த மக்காவுக்கு ஒரு வாய்ப்பு. எழுதறேன். படிச்சிட்டு சொல்லுங்க. ஊர் கதை இல்லாம நம்ம பொழப்பு ஓடுமா :-)

சிவா said...

வாங்க மோகன் ராஜ் (கைப்புள்ள), உங்கள் ஆதரவில் நட்சத்திர வாரம் இனிதே போகும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்களுக்கு நன்றி கைப்புள்ள்.

ராகவன்! நெல்லை பக்கத்துல என்று சொன்னேன். ஆனா நெல்லை அல்ல ;-). நாசரேத்து பக்கத்துல ஒரு குக்கிராமம். செந்தூருக்கு நடந்தே போயிருக்கிறோம். நீங்க தூத்துக்குடியா...நாம ஒரே மாவட்டமா போயிட்டோம். நாசரேத்திலிருந்து திருநெல்வேலிக்கு போக்குவரத்து அதிகம் என்பதால், தூத்துக்குடிக்கு குறைவாக தான் வந்திருக்கிறேன். அருணகிரி-ல தான் படம் பார்த்தீங்களா...நான் நெல்லைல எல்லா தியேட்டரிலும் படம் பார்த்திருக்கிறேன்.

சிவா said...

ஜோ! வாங்க மக்கா! நம்ம ஊரு பாச விட்டுப் போயிருமாவே...அது இல்லாம எப்படி எழுத.. :-). எல்லா பதிவையும் படிச்சிட்டும்வே. என்ன சரியா..

வாழ்த்துக்கு நன்றி சதிஷ்,

ராம்கி! பாட்டு வாத்தியார்னு சொல்லிப்புட்டிய.. :-). நம்ம பாட்டு தான, எடுத்து விட்டுட்டா போச்சி.

சிவா said...

தாணு! ஊருக்கு நான் சீக்கிரம் வந்திடுவேன். அப்போ நாசரேத் வரும் போது கண்டிப்பா ஒரு எட்டு வீட்டுக்கு வாங்க. நானும் சென்னைல ஒரு 5 வருசம் குப்பை கொட்டி இருக்கேன். இங்கே அமெரிக்கவுலயே வாய தொறந்தா 'ஏல..சும்மா போல' அப்படின்னு தான் வருது..ஊர் பாசை விட்டு போகுமா.. பொங்கல் ரொம்ப நாளைக்கு முன்னாடி விட்டது. படிச்சதுக்கு நன்றி.

//** ப்ளாக்கர் பொறியாளர்களை படுத்துவதில்லையாம் **// அப்படி நடந்தால் கோடி புண்ணியம்.

வாழ்த்துக்களுக்கு நன்றி செல்வன்.

சிவா said...

முதல் வருகைக்கு நன்றி தேசிகன்! உங்கள் வாயால நட்சத்திர முதல் பதிவுக்கே பாராட்டு கேட்பதற்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. எல்லா பதிவையும் படிச்சி உங்க கருத்த சொல்லுங்க.

ஆமாம் ஜோசப் சார்! நாம எல்லாரும் கத்துக்குட்டிங்க தான்! குருவி தலைல பனங்காய வச்சிட்டாங்க. ஒரு வாரம் முடிஞ்ச அளவு எழுதறேன். அப்படியே உங்க ஆதரவையும் கொடுத்திட்டு போய்டுங்க.

இலவசக்கொத்தனார்! ஆமாம் கொத்தனார்! கைல சாந்து கரண்டிய கொடுத்து வீட்ட கட்ட சொல்லிட்டாவ. அஸ்திவாரம் போட்டிருக்கிறேன். பாத்து எப்படி இருக்குன்னு சொல்லிடுங்க. அடிக்கடி வந்து வீடு எப்படி எழும்புதுன்னு பாத்து சரி பண்ணிட்டு போங்க. நீங்களும் நம்ம ஊரு பக்கம் தானாவே?.

முத்துகுமரன் said...

இரண்டு நாளக்கி முன்னாடி நினைச்சேன். இன்னிக்கு பலித்து விட்டது. சிவா பட்டைய கிளப்புங்க....

வர வர எனக்கு பின்னாடி நடக்க போறது முன்னாடியே தெரிஞ்சு போகுது. மருத்துவர பாத்துட்டு வந்துடறேன்:-))))))))

சிங். செயகுமார். said...

அட மக்கா நாந்தேன் ரொம்ப லேட்டா? கொஞ்சம் வேல பளு அதேன் நெட்டு பக்கம் வரல .கொளுத்துங்க, எல்லாம் முன்னமே பிரிபேரா இருக்காம்ல. வந்து தாளிச்சுடுவோம்ல

சிவா said...

முத்துகுமரன்! கிளப்பிரலாம் பட்டையை :-)ரெண்டு நாளைக்கு முன்னாடியே நெனைச்சீங்களா முத்துக்குமரன். அதுக்கு எதுக்கு மருத்துவர பார்த்துக்கிட்டு. வேலை வேற பெண்ட எடுக்கறானுங்க அப்படின்னு சொன்னீங்க. அப்படி ஏதாவது முன்னமே தெரிஞ்சா, முன்னமே லீவ போட்டுட்டு வீட்டுல இருந்துக்கோங்க. :-))

வாப்பா தம்பி சிங். இப்போ தான் நேரம் கெடைச்சிதா..சந்தோசம். வேலையா இருக்குன்னு இந்த பக்கமே வராம இருந்துடாதீங்க. என்ன நான் சொல்றது :-)

Muthu said...

welcome siva...

பல பின்னூட்டங்கள் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

ஞானவெட்டியான் said...

அன்பு சிவா,
அனைவருக்கும் பின்னால் வந்துள்ளேன். இருப்பினும் என்ன?

இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்.
வாழ்க! வளர்க!

சிவா said...

முத்து! வாழ்த்துக்களுக்கு நன்றி. பல பின்னோட்டத்தில் சில உங்களதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

ஐயா ஞானவெட்டியான்! முதல் வருகைக்கு நன்றி ஐயா. உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா!

மஞ்சூர் ராசா said...

நெல்லைக்காரவுக எல்லாமே இலக்கியத்திலெ தூள் கிளப்பறீங்களே.

கலக்குங்கப்பா, நல்லா கலக்குங்கப்பா

G.Ragavan said...

// ராகவன்! நெல்லை பக்கத்துல என்று சொன்னேன். ஆனா நெல்லை அல்ல ;-). நாசரேத்து பக்கத்துல ஒரு குக்கிராமம். //

அட ஊரு பேரச் சொல்லுமைய்யா....தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு...தூத்துகுடீல பஸ்சுல பாத்துருப்போமுல்லா.

// செந்தூருக்கு நடந்தே போயிருக்கிறோம். நீங்க தூத்துக்குடியா...நாம ஒரே மாவட்டமா போயிட்டோம்.//

எங்கூர்ல இருந்தும் தூத்துக்குடி வழியா திருச்செந்தூருக்கு நடப்பயணம் போவாங்கள்ளா. வீட்டுல கொஞ்சப் பேரு போயிருக்காங்க. நாந்தாம் போனதில்ல.

// நாசரேத்திலிருந்து திருநெல்வேலிக்கு போக்குவரத்து அதிகம் என்பதால், தூத்துக்குடிக்கு குறைவாக தான் வந்திருக்கிறேன். அருணகிரி-ல தான் படம் பார்த்தீங்களா...நான் நெல்லைல எல்லா தியேட்டரிலும் படம் பார்த்திருக்கிறேன். //

இல்ல. இல்ல. அப்படியில்ல....அந்தப் படம் பாத்தது நல்லா மனசுல இருக்கு. என்னோட பாசக்கார நண்பருக மொத வாட்டீ திருநவேலீல படத்துக்குக் கூட்டீட்டுப் போனாங்க....அதான் மறக்கலை.

G.Ragavan said...

// நெல்லைக்காரவுக எல்லாமே இலக்கியத்திலெ தூள் கிளப்பறீங்களே.
கலக்குங்கப்பா, நல்லா கலக்குங்கப்பா //

மஞ்சூர் ராசா....நெல்லை+தூத்துடி மாவட்டமுன்னு சொல்லுங்க. ரெண்டுமே ஒட்டுவாரொட்டிதான். எல்லாம் மணிமுத்தாறும் தாமிரபரணியும் சீவலப்பேரி தண்ணியும் பண்ற வேல. கி.ரான்னு ஒருத்தர் எழுத்துல பெரிய ஆளா இருக்காரு. அவரும் இடசெவல்தான். அதாய்யா தூத்துக்குடி மாவட்டந்தான்.

rv said...

சிவா,
திருநெல்வேலி வாசனை நல்லாவே இருக்கு. வாழ்த்துகள்.

பரஞ்சோதி said...

இராகவன் அண்ணா,

என்னுடைய சிறுவர் பூங்காவில் போட்ட கதையை பாருங்க, சிவாவின் ஊர் பெயர் இருக்கும்.

சிவா said...

ராமநாதன்! ஊரு பாசை விட்டு போய்டுமா...என்ன சொல்லிதிய..வாழ்த்தோட அடிக்கடி வந்து பாருங்க.

மன்சூர் ராசா! என்னோட எழுத்த இலக்கியம்னு சொல்லிப்புட்டிய. பயலுவ எவனாவது அருவாள தூக்கிட்டு வந்துட போறானுவ.. :-). உங்கள் ஆதரவு இருந்தால் கலக்கல் தான்.

சிவா said...

ராகவன்! ஊர் காரவியலா ஆயிட்டிய...மத்தவியலுக்கு நெல்லைன்னா தான புரியும். அதான் மொட்டையா சொல்லிட்டேன். சொந்த ஊர் அப்புவிளை (திசையன் விளை பக்கத்துல் இருக்கு. அப்பா ஊர்)...பிறந்து வளந்தது எல்லாம் நாசரேத் அருகில் உள்ள அம்மாவோட சொந்த கிராமம். ஊரு பேரு தெரிஞ்சவுடனேயே நம்ம ஊரு காரரு பரஞ்சோதி என் பேருல சிறுவர் பூங்காவுல ஒரு கதை போட்டுட்டாவ..நம்ம ஊரு காரனாச்சே அப்படிங்கற பாசத்துல :-)

Sundar Padmanaban said...

வாழ்த்துகள் சிவா. இவ்வாரமும் முந்தைய வாரங்களைப் போலவே இனிதாய் போகும் என்று நம்புகிறேன்.

ஒரு நல்ல நாள் பாத்து அறிவிக்கணும்னு பேசிக்கிட்டமே.. நட்சத்திர வாரத்தைவிட நல்ல வாரம் வேற என்ன வேணும்? அறிவிச்சிடலாம் - கடைசில! ;)

கலக்குங்க!

பாராட்டுகள்

ENNAR said...

வாழ்த்துக்கள் சிவா
//ஆகா,
போன வார நட்சத்திரம் நம்ம ஊர் அக்கா.
இந்த வார நட்சத்திரம் நம்ம ஊரு மக்காவா. //
பரம்ஸ் அடிக்கு யோகம் தெக்கா

ilavanji said...

வாங்க சிவா! வாழ்த்துக்கள்!!!

ப்ளாகர் படுத்துதோ இல்லையோ.. பதிவாளர்கள் நாங்க படுத்தமாட்டோம் என உறுதி கூறுகிறேன்!

:)

இளந்திரையன் said...

நட்சத்திர வாரம் ஜொலிக்க வாழ்த்துக்கள்

-அன்புடன் இளந்திரையன்

சிவா said...

சுந்தர்! வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் ஆதரவு தொடர்ந்து இருந்தால், கலக்கி விடலாம்.
ஆமாம்! அறிவித்து விடலாம். நாம பேசிய படி, வெள்ளிக்கிழமை சொல்லிடறேன்.

என்னார்! வாழ்த்துக்களுக்கு நன்றி! ஆமாம் இப்போ தெக்க காத்து வீசுது. :-))

சிவா said...

இளவஞ்சி! யாரு படுத்தறாங்களோ இல்லையோ..நீங்க படுத்த மாட்டீங்க :-)) அடிக்கடி வந்து பாருங்க.

இளந்திரையன்! வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க.

Unknown said...

Anbulla Siva,

Vaazthukal. I am realy sorry for being the last person to wish. Manichutinga Siva.....No net connection at new house and cud not browse at office too. Eppadiyoy..today I cud do.....Endrum ungalluku yennathu prayers vundu Siva!!!!

Anbudan,
Thangal Nanban,
Natarajan.

சிவா said...

என்ன நடா இது! சாரி எல்லாம் சொல்றீங்க. வீட்டுல கனெக்சன் இல்லன்னு நேத்தே சொன்னீங்களே..அப்புறம் நான் எதுக்கு தப்பா நெனைக்கிறேன். போங்க சார் :-)). நேரம் கிடைக்கும் போது படிங்க. உங்களை விடுவதாக இல்லை :-))

மஞ்சூர் ராசா said...

ராகவா
கி.ராவை தெரியாதவங்க யாராவது இருப்பாங்களா?
அவருடைய நடையே ஒரு அழகு
கிராமிய மணம் கமழும்
கோபல்லபுரத்து மக்கள் படிக்கலையா

Pot"tea" kadai said...

நண்பர் சிவா அவர்கட்கு,
தங்கள் நட்சத்திர வார பதிவுகளைத் தவறாமல் படித்தாலும் பின்னூட்டமிடாததிற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவா said...

நன்றி பொட்டீக்கடை :-)

Maraboor J Chandrasekaran said...

வாழ்த்துகள் சிவா.நட்சத்திர வாரம் வாழ்த்துக்கள்

கால்கரி சிவா said...

வாழ்த்துக்கள் சிவா.....,

நட்சதிரமாய் ஜொலியுஙகள்........

உங்கள் பெயரைப் பார்த்து விட்டு நான், மதுரை சிவா அல்லது சென்னை சிவா என்று பெயர் வைத்து கொள்ளாலும் என நினைத்து, நான் வாழும் ஊர், கால்கரியின் பெயரை வைத்து பின்னூட்த்தில் பதிவு செய்துள்ளேன். நட்சதிரம் ஆகும் திறமையோ, தகுதியோ, எண்ணோமோ எனக்கில்லை.

சிவா மீண்டூம் வாழ்த்துக்கள்.


Calgary Siva

சிவா said...

வாங்க மரபூர் ஜெயசந்திரம். கொஞ்சம் தாமதமா வாழ்த்து சொல்லி இருக்கீங்க..இருந்தாலும் வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க..மற்ற பதிவுகளையும் படிச்சிட்டு சொல்லுங்க..நன்றி நண்பரே முதல் வருகைக்கு :-)

சிவா said...

வாங்க கால்கரி சிவா! நான் ஊர் பேரெல்லாம் வைக்கலீங்க :-). வெறும் சிவான்னே வச்சிட்டேன்..கால்கரின்னா எங்கே இருக்கு..சொல்லுங்க..

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.

//** நட்சதிரம் ஆகும் திறமையோ, தகுதியோ, எண்ணோமோ எனக்கில்லை. **// அப்படி எல்லாம் இல்லைங்க..எல்லோருமே நட்சத்திரம் ஆகலாம்..நானெல்லாம் ப்ளாக்கில் தான் முதலில் எழுத ஆரம்பித்தேன்...நீங்களும் ஒரு நாள் நட்சத்திரம் ஆக வாழ்த்துக்கள் ..