Friday, February 24, 2006

நாலு பேருக்கு நன்றி

கோ.ராகவன் கூப்பிட்டு இருக்காக
தம்பி சிங்கு கூப்பிட்டு இருக்காக
கீதா கூப்பிட்டு இருக்காக
குமரன் கூப்பிடவான்னு கேட்டாக, நான் தான் வேண்டாம்னுட்டேன்.

இப்படி செவனேன்னு இருந்தவன இழுத்து இங்கே புலம்பவிட்டுட்டாங்களே..ஏற்கனவே நாலு நாலா பதிவ பாத்து பாத்து வெறுத்து போயி இருப்பாங்க. இதுல என்னைய வேற புடிச்ச நாலு, புடிக்காத நாலுன்னு போட சொன்னா நான் என்ன செய்வேன். இருந்தாலும் ஒரு பதிவு போட விசயம் கெடைச்சிருக்குல்லா. விட முடியுமா? என்ன சொல்லுதிய.

எவனோ ஒரு மகராசன்/ராசி ஆரம்பிச்சி வச்சி, ஒன்னு நாலாகி, நாலு பதினாறாகி..இப்படியே வைரஸ் மாதிரி போய்ட்டு இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ல தமிழ்மணம் முகப்புல வெறும் நாலா தான் தெரியும் போல. 'லே! இனி எவனாவது நாலுன்னு வார்த்தைய பதிவுல எங்கையாவது பயன்படுத்தினா தமிழ்மணம் சேகரிக்காது' அப்படின்னு காசி சார் ஒரு சட்டம் கொண்டு வரதுக்குள்ள என்னோட பதிவ போட்டுறேன் (காசி சார்! சும்மா ஜாலியா தான். தப்பா எடுத்துக்காதிய :-).

என்ன பெரிசா சொல்ல போறேன். ஏதாவது எழுதி அடுத்த நாலு பேர இழுத்து போடணுமே..ம்ம்ம்..சரி ஆரம்பிச்சுடறேன்..

இதுவரை வாழ்ந்த நாலு இடங்கள்.

1. கந்தசாமிபுரம் - எங்க ஊரு பேரு தாங்க.
2. விழுப்புரம் - ரெண்டாப்பு ரெண்டு மாசம் அங்கே படிச்சேன். ஊரு ஒத்துக்கலைன்னு கிராமத்துக்கே ஓடிட்டோம்.
3. சென்னை - படிச்சது, வேலை பார்த்தது
4. அமெரிக்கா - தற்காலிகமாக. கம்பெனி அனுப்பி இருக்கு.

புடிச்ச நாலு படம்

1. ஆண் பாவம்
2. காதலிக்க நேரமில்லை
3. மணல் கயிறு
4. மைக்கேல் மதன காமராஜன்

புடிச்ச நாலு சினிமா ஆளுங்க.

1. இளையராஜா
2. இளையராஜா
3. இளையராஜா
4. இளையராஜா

பார்த்த நாலு வேலைகள்:

1. பல்பொடி கம்பெனி
2. சைக்கிள் கடை (பதிவு சீக்கிரம் வருது)
3. டி.வி ஷோரும்
4. இப்போ சாப்ட்வேர்

போதும்னு நெனைக்கிறேன். இப்போ நாலு பேர எங்கே போய் தேடுவேன். எல்லோரும் சங்கிலில இருக்காங்கலே..யாரு பதிவுக்கு போனாலும் அங்கே 'நாலு'ன்னு ஒரு பதிவு இருக்குதே..என்ன செய்ய..சரி இவங்களை இழுத்து விடலாம்

1. மோகன் தாஸ்
2. பாரதி
3. சத்தியா
4. அல்லி மகன்

Sunday, February 19, 2006

எசக்கி

ஆறாம் வகுப்பு. ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்கும் எங்கள் பள்ளியில் சேர்ந்த எல்லோரும் புதிய முகங்கள். புதிய நட்புகள். இசக்கி முத்துவை பார்த்த போது எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று அவனை கேட்டேன். என் கூட அஞ்சாப்புல படிச்ச சின்னத்துரை தம்பி என்று சொன்னான். ஏற்கனவே என்னோட கூட்டாளியான சின்னத்துரை தம்பி என்பதாலோ எசக்கி எனக்கு முதலிலேயே பழக்கமாகி விட்டான்.

தொடக்கத்தில் இருந்தே எசக்கிக்கு ஏனோ படிப்பு அவ்வளவாக வரவில்லை. வகுப்பில் எல்லாத்துக்கும் அடி வாக்குறது அவனா தான் இருக்கும். 'மக்கு. மக்கு. படிச்சிட்டு வர சொன்னா சும்மா வந்து நிக்குது பாரு' என்று அத்தனை ஆசிரியர்களிடமும் அடி வாங்கிக்கிட்டே இருப்பான். காலையில் முதல் வேலையாக வகுப்பு ஆசிரியர் யாரெல்லாம் ராப்பாட சீட்டு வாங்கி வரலைன்னு வெளியே வரச் சொல்வார். எசக்கி முத ஆளா போய் நிற்பான். எனக்கு மறந்துட்டா அப்பா வேல பாக்குற கடை பக்கத்துல தான். ஓடி போய் வாங்கி வந்துருவேன். படிச்சேனோ..படிக்கலையோ..அப்பா நான் சொல்கிற நேரம் எல்லாம் போட்டு 'என் மகன் நேற்று 7:00 மணியில் இருந்து 9:00 மணி வரை பாடம் படித்தான்' என்று எழுதி கொடுத்துருவாங்க. 'ஏல! ராப்பாட சீட்டு வாங்கிட்டு வரதுல என்ன' கேட்டா ' இல்லல! மறந்து போய்டுது'இதெல்லாம் ஒரு அடியா என்பது போல பதில் சொல்வான்.

வகுப்பு ஆசிரியருக்கு நான் ஒரு செல்லப் பிள்ளை மாதிரி. 'ஒங்க ஊரு தேரி தண்னி தேங்கா தண்ணி மாதிரி இருக்குமாம்ல. அப்படியா?. சாருக்கு தினமும் ஒரு கேன் கொண்டு வந்திரு' அப்படிம்பார். அந்த வருடம் முழுவதும் ஒரு பெரிய கேன்ல சாருக்கு தண்ணி கொண்டு போவேன். எல்லாம் ஒரு பாசம் தான். அப்புறம் அடிக்கிறதுக்கு கம்பு சப்ளையும் நான் தான். 'லே! நாளைக்கு ரெண்டு கம்பு வெட்டிட்டு வால' என்று ஆசிரியரிடம் இருந்து ஆர்டர் வரும். அருவாள தூக்கிக்கிட்டு நல்ல வாடாச்சி மரமா தேடிக்கிட்டு அலைவேன். எசக்கி அடி வாங்குறான் என்றால், கம்பு உடைவது நிச்சயம். 'எரும மாடால நீ! எதுக்கு இப்படி அடி வாங்கி சாகுற. படிச்சிட்டு வர சொன்னா வர வேண்டிய தானே' அவன் சின்ன அடிக்கு எல்லாம் அமைதியா நிற்பதை பார்த்து கடுப்பாகி பின்னி எடுத்து விடுவார். கம்பு நார் நாராக போய் விடும். அப்புறம் நான் தான் அருவாள தூக்கிக்கிட்டு அலையனும்.

ஏனோ எசக்கிக்கு படிப்பு என்பது வராத ஒன்றாகவே இருந்தது. வராத ஒன்றுக்காக அவன் மெனக்கெடவும் இல்லை.

எசக்கியோடு சேர்ந்து நானும் அடி வாங்குவது ஒரே ஒரு வகுப்பில் தான். அது அறிவியல் பாடம். 'லே! என்ன ரெண்டு டவுசரா! ' என்னை பார்த்து நக்கலாக சிரிப்பான் எசக்கி. 'ஒன்ன மாதிரி எரும மாடா இருந்தா பரவாயில்லை. நான் ஆடிக்கு ஒரு தடவை அம்மாவாசைக்கு ஒரு தடவை அடி வாங்கிறவன். நம்மால தாங்க முடியாதுல' நான் திருப்பி அவனை நக்கலடிப்பேன். நான் அரசாங்கம் இனாமாக கொடுத்த டவுசரை போட்டு வந்தாலே அவனுக்கு தெரிந்து விடும், இன்னைக்கு அறிவியல் சார் கேள்வி கேக்குறாங்கன்னு. அந்த டவுசரை மற்ற நாளில் போட முடியாது. முட்டி வரை கிட்டத்தட்ட ஒரு பாவாடை மாதிரி தான் இருக்கும். துணி சும்மா சாக்கு துணி மாதிரி இருக்கும். அறிவியல் ஆசிரியர் கேள்வி கேட்டால் மொத்த வகுப்புக்கும் அடி கிடைக்கும். அதில் நானும் விதிவிலக்கு அல்ல. அவர் வகுப்பிற்கே அரைகுறை போதையில் வருவது மாதிரி தான் வருவார். எவனையும் வாயை தொறந்து பதில் சொல்ல விடமாட்டார். ஒரே கேள்வி தான். வரிசையா எந்திரிச்சி மரியாதையா முட்டங்காளில் போய் நின்னுக்குவோம்.

அப்புறம் வரிசையா அடி விழும். பின்னாடி டவுசரில் விழும் அடிக்கு பயந்து தான் ரெண்டு டவுசர் ஏற்பாடு. அடி விழும் போது சும்மானாட்டுக்கும் 'ஐயோ! சார்! சார்!' என்று கத்துவேன். அடி உறைக்கலன்னு எரும மாடு மாதிரி நின்னோம்னா, முதுகுல பளீர்னு ஒன்னு விழும். அப்புறம் ஒக்காரவும் முடியாம, நிக்கவும் முடியாம நெளிஞ்சிக்கிட்டு இருக்கணும். அதுக்கு தான் அந்த நடிப்பு. எசக்கி அது பாட்டுக்கு அடி வாங்கிட்டு வருவான். ஒரு உணர்ச்சியே இல்லாம. தினமும் அடி வாங்குபவனுக்கு அது ஒன்றுமில்லை தான்.

வகுப்பில் நன்றாக படிக்கும் ஐந்து மாணவர்களை எடுத்து ஆளுக்கு 10 பேரை நேந்து விட்டாங்க. வகுப்புல ஒரு அட்டைல தலைவர் மாதிரி நம்ம பேரும், கீழே நமக்கு நேந்து விட்ட 10 பேரோட பேரும் எழுதி போட்டிருக்கும். என்னோட நேரம் எனக்கு கீழே எசக்கி. மாலையில் ஆறு மணி வரை எல்லோரும் இருந்து என்னிடம் ஒப்பித்துவிட்டு போக வேண்டும். பள்ளி முடிந்ததும் ஓட ஆரபித்தான் எசக்கி. 'அவன புடிச்சி தூக்கிட்டு வாங்கல' கோபத்தில் ஆசிரியர். நாங்க ஒரு நாலு பேர் இருக்குற ரெண்டு கேட்டுக்கும் ஓடினோம். எங்கையாவது எசக்கியை மடக்கி நாலு பேரும் சேர்ந்து தூக்கி வந்து ஆசிரியரிடம் கொடுப்போம். அப்புறம் என்ன அடுத்த கம்புக்கு ஆர்டர் தான். 'சார்! சார்! விட்டுருங்க சார். இனி ஓட மாட்டேன்' வாங்கிய அடி தாங்க முடியாமல் எசக்கி அழுவான். பாவமாக இருக்கும். ஆனால் அதையே தினமும் பண்ணுவான். ஒரு மனதாக என்னிடம் வந்து உக்கார்ந்தான். ஒரு கேள்வி ஒப்பிக்க அன்று முழுவதும் போராடிக்கொண்டிருந்தான். பக்கத்து சர்ச் மணியையே பார்த்துக் கொண்டிருப்பான், எப்போடா மணி 6 ஆறு ஆகும்னு. 'லே! சீக்கிரம் ஒப்பில. இன்னிக்கு செவ்வாக்கெழமல ! நா சந்தைக்கு போணும்ல' நான் அவனிடம் கெஞ்சிக்கொண்டிருப்பேன். வழக்கம் போல அடுத்த நாள் ஒப்பிக்காதவர்கள் பட்டியலில் அடி வாங்க அவனும் இருப்பான்.

பள்ளிக்கூடத்திற்கு கல்வி ஆய்வாளர் வந்த போது எல்லா ஆசிரியர்களும் சுறுசுறுப்பாக அலைந்து கொண்டிருந்தார்கள். காலையில் இருந்தே எங்களுக்கு எப்படி பதில் சொல்வது என்று பயிற்சி போய் கொண்டிருந்தது. ஆய்வாளர் முந்தைய வகுப்பிற்கு வந்த சத்தம் கேட்டவுடனேயே, ஆசிரியர் 'எசக்கி! நீ எங்கையாவது போய்ட்டு ஒரு அர மணி நேரம் கழிச்சி வால' என்று அவனை மட்டும் வெளியே போக சொன்ன போது, ஆசிரியரின் பயம் தெரிந்தது. இதை எதிர் பார்க்காத எசக்கி, தான் மற்ற மாணவர்கள் முன்னால் ரொம்பவே நிராகரிக்கப்பட்டதை உணர்ந்த போது கலங்கி போனான்.

அப்படியே ஒரு வருடம் ஓடி விட்டது. கோடை விடுமுறை முடிந்து எல்லோரும் இப்போது ஏழாம் வகுப்பில். மறுபடியும் எங்கள் வகுப்பு கலைத்து விடப் பட்டது. மற்ற வகுப்பில் இருந்து சில புதிய நண்பர்கள். நான் எசக்கியை தேடினேன். என் வகுப்பில் இல்லை. 'அப்பாடி! இனி தொல்லை இல்லை. சந்தைக்கு நிம்மதியா போலாம்' என்று நினைத்துக் கொண்டேன். பக்கத்து வகுப்பு நண்பர்களிடம் விசார்த்து பார்த்ததில் அங்கேயும் அவன் இல்லை. 'அவன் பெயிலாயிருப்பான்டா..அவனாவது பாஸ் ஆறதாவது. போய் ஆறாப்புல பாரு' நண்பர்கள் கிண்டல் அடித்தார்கள்.

முதல் வகுப்பு தொடங்கியது. வகுப்பு ஆசிரியர் ஒரு அதிர்ச்சி செய்தியோடு வந்திருந்தார் 'மாணவர்களே! நம் பள்ளி மாணவன் இசக்கி, போன மாதம் வயலில் விளையாண்டு கொண்டிருந்த போது பாம்பு கடித்து இறந்து விட்டான். எல்லோரும் ஒரு நிமிடம் எழுந்து இசக்கிக்கு அஞ்சலி செலுத்துவோம்'. எல்லொரும் எழுந்து நின்றோம். நான் உடைந்து போய் விட்டேன். கண்ணை முடிய போது, எசக்கி ஓடியது, அவனை நாங்க எல்லோரும் விரட்டி பிடித்து தூக்கி வந்து அடி வாங்கி கொடுத்தது. அவன் அடி தாங்க முடியாமல் தினமும் அழுதது. ஒவ்வொன்றாக என் கண் முன்னே வந்தது. செத்து போறதுக்கு தான் அவ்வளவு அடி வாங்கினியால. என்னால் தாங்க முடியவில்லை. மனசுக்குள்ளேயே அழுத படியே இசக்கியிடம் கேட்டேன் 'என்ன மன்னிச்சுடுல! எசக்கி'.

( ஆறாம் வகுப்பில் மறைந்த என் நண்பனின் நினைவாக)

Sunday, February 12, 2006

*நட்சத்திரம்* - இன்றே கடைசி

அமாங்க! அந்தா இந்தான்னு ஒரு வாரம் ஓடிடிச்சி. இன்னைக்கு தான் நம்மோட கடைசி ஷோ. இந்த ஒரு வாரம் தமிழ்மணம் தியேட்டரில் சிறப்பு காட்சி திரையிட எனக்கு வாய்ப்பு கொடுத்த காசி சாருக்கும், மதி கந்தசாமி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

மறக்க முடியாத ஒரு வாரம். இதை என்னுடைய வலைப்பூ வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத வாரமாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் ரொம்ப நன்றிங்க. நெசமாவே, நான் இந்த அளவு ஆதரவை எதிர்ப்பார்க்கவில்லை..எத்தனை புதிய நண்பர்கள்..எத்தனை பாராட்டுக்கள்..நன்றி..நன்றி..நன்றி..

பொங்கல் பதிவு போட்டு சரக்கு காலியாகி போய் இருக்கும் போது பார்த்து மதி அவர்கள் 'நட்சத்திரம் ஆக விருப்பமா' என்று கேட்ட போது, ரொம்பவே பயமாக இருந்தது. நம் மானம் போய்டக் கூடாதேன்னு கொஞ்சம் யோசித்தேன். ஒத்துக்கொண்ட நாளில் இருந்தே ஒரே யோசனை...என்ன எழுத..என்ன எழுத..என்று..பல்லு வெளக்கும் போது...சாப்பிடும் போது..இப்படி சதா அதே நெனப்பு தான். அப்போ அப்போ தோனுவதை எழுதி வைத்துக்கொண்டேன். ஒரு வழியாக மொத்தம் ஐந்து பதிவுகளுடன் தயாரானேன்.

நான் அவ்வளவாக மற்றவர்கள் வலைப்பதிவுகளுக்கு சென்றதில்லை. நேரம் இருப்பதில்லை என்பது ஒன்றே காரணம். என் 3 வயது மகளுடன் விளையாடவே நேரம் போய்விடும். எல்லோரும் தூங்கியதும் விடியற்காலை கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் ஏதாவது எழுதுவது உண்டு. நெலம இப்படி இருக்க, இப்படி அறிமுகம் இல்லாத எனக்கு வரவேற்பு கிடைக்குமா என்று அச்சம் இருந்தது. இங்கே வலைப்பதிவை படிப்பதில் 95% நண்பர்கள் வலைப்பதிவர்களே. இங்கே வரும் 1000 வலைப்பதிவையும் படிக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. நமக்கென ஒரு நட்பு வட்டம், நம் ரசனைக்கேற்ற படி உருவாகிவிடுகிறது. என்னை மாதிரி நினைவலைகளில் காலம் தள்ளும் கும்பல், நக்கல்/நையாண்டி என்று ஒரு கும்பல், கருத்து/குடுமி சண்டைக்கு என்று ஒரு கும்பல் என்று நமக்கு ஒரு வட்டம் உருவாவது உண்மையே. இதை எல்லாம் மீறி என்னை கண்டு கொள்வார்களா என்று நினைத்த எனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்து விட்டீர்கள். நன்றி நண்பர்களே..

மொத்தம் ஐந்து பதிவுகளுடன் நட்சத்திர வாரத்தை தொடங்கினேன். 'இன்று முதல்' என்று ஆரம்பத்திற்கு 23 நண்பர்கள் வாழ்த்து சொன்னார்கள். ஆனால் என்னுடைய 'ஏங்குதே மனம்' 32 நண்பர்களை தேடிக் கொடுத்தது. ஒரு காதல் கதை சொல்ல முயற்சியின் விளைவே 'மலரே..குறிஞ்சி மலரே'. இதன் இறுதி பாகத்தை நண்பர் நடாவிடம் காட்டிய போது, சுத்தமாக திருப்தி இல்லை என்று சொல்லி விட்டார். அப்புறம் உட்கார்ந்து நிறைய திருத்தினேன். 'யோய்! காதலர்களை சேர மட்டும் விட்டுடாதீங்க என்ன. நல்லா இருங்கைய்யா' என்று திட்டினார். 'அதெல்லாம் சேர்த்து வைக்க முடியாது. முடிவை மாற்ற ஐடியா இல்லை' என்று கூறிவிட்டேன் :-). சில பதிவுகளை நான் பதிவதற்கு முன்னமே படித்து அதன் நிறை குறைகளை கூறிய நண்பர்கள் நடாவுக்கும், குமரனுக்கும் என்னோட நன்றி. அந்த கதையின் முடிவு எல்லோருக்கும் பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமா இருந்தது. நிறைய பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வந்து உங்க கருத்துக்களை சொன்னீங்க. அவங்களுக்கு என் மனசுக்குள்ளேயே ஒரு பெரிய நன்றி.

மதி அவர்கள் என்னிடம் என்ன மாதிரியான பதிவை எதிர்பார்ப்பார்கள் என்றும், இந்த வாய்ப்பை எதற்கு கொடுத்தார்கள் என்று எனக்கு தெரியும். ஒரு பதிவிலாவது அவர்களே 'இதை தான் எதிர்பார்த்தேன்னு சொல்ல வைக்கணும்னு நெனைச்சேன். அது 'ஏங்குதே மனம்' பதிவின் மூலம் கிடைத்தது.ரொம்ப சந்தோசமா இருந்தது. நான் இந்த பதிவிற்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க வில்லை. மீண்டும் நன்றி நண்பர்களே.

அடுத்து கருப்பனை தான் பதியலாம் என்று இருந்தேன். அப்புறம் ஒரே செண்டிமெண்ட் பதிவாகவே போய்விடும் என்று தான் கிராமத்து மணத்தை எடுத்து விட்டேன்.

ஐந்தாவது (கடைசி) பதிவாக, ஒரே கிராமமா எழுதறோமே, கொஞ்சம் சாதாரணமாகவும் எழுத முயற்சிக்கலாமேன்னு வந்த ஆசையின் விளைவே 'வர..வர..நாடு நல்லால்லே'. நண்பர் கைப்புள்ள (மோகன்ராஜ்) சொன்ன மாதிரி, ஒரு கிராமத்து கதை எடுத்து விட்டிருந்தா நல்லா இருந்திருக்கும். இருந்தாலும் ஒரு முயற்சி தானே. அதில் நான் ஒரு நகைச்சுவை/நையாண்டி நடையில் தான் முயற்சி பண்ணினேன். சில நண்பர்களுகு புரிந்தது. என் மனைவியே வாசித்து பாத்துட்டு திரு திருன்னு முழிக்கிறா. சரி டோட்டல் ப்ளாப்னு நெனைச்சிக்கிட்டேன் :-). அதில் நான் சொல்ல நினைத்த விசயம், ஒரு தனி மனிதனாக நம்மால் முடிந்த அளவு நல்ல விஷயங்களை முயற்சிக்கிறோமா என்று தான். கடைசில எல்லோரும் லஞ்சத்தை புடிச்சிக்கிட்டாங்க. எனக்கே பயம் வந்துட்டு..நாமே ஒரு குடுமி புடி சண்டையை, அதுவும் நட்சத்திர வாரத்தில் ஆரம்பித்து வைக்கிறோமோன்னு..புள்ளையார் புடிக்க கொரங்கா மாறிடுச்சு..அதனால தான் அவசர அவசரமா ஒரு பதிவை 'பள்ளிக்கூடம் போகலாமான்னு' எழுதி போட்டேன் (திருப்தி இல்லாமலேயே), ஒரு விவாத விடயத்துடன் என் நட்சத்திர வாரத்தை முடித்து கொள்ள மனம் இல்லாமல்.அதுக்கும் நண்பர்கள் கொடுத்த பின்னூட்டத்தை இன்னிக்கு காலைலேயே பாத்துட்டு, சந்தோசமா இந்த கடைசி பதிவை எழுதுகிறேன்.

மொத்ததில் நான் எழுதிய ஐந்து பதிவுகளும் எனக்கு ரொம்ப திருப்திங்க. திருப்தி எப்போ வரும்னா, வரும் பின்னொட்டங்களின் எண்ணிக்கையில் அல்ல. அதில் நண்பர்கள் எழுத்துக்களில். எனக்கு எவருமே 'நல்ல பதிவு' 'அருமை' என்று மொட்டையாக சொல்லவில்லை. ஒவ்வொரு பதிவிலும், ஒவ்வொருவரும் மனதில் இருந்து கொட்டி விட்டு போயிருந்தீர்கள். என் பதிவை விட, நீங்கள் இட்ட பின்னோட்டங்கள் ரொம்ப சுவாரசியமானவை. நன்றி நண்பர்களே.

உண்மைய சொல்லனும்னா, இதுக்கே ஓஞ்சி போய்ட்டேன். மண்டையிலே சத்தியமா சரக்கு கெடையாதுங்க. இந்த 5 பதிவுக்கே நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். குடும்ப நேரங்கள் ரொம்பவே அடி வாங்கின. என்ன பண்ணுறது நட்சத்திர வாரமாச்சே. காலியா போன சரக்கு சட்டில இருந்து கொஞ்சம் இருந்ததையும் நல்லா சொரண்டி போட்டாச்சி. இப்போ நல்லா விம் பார் போட்டு கழுவி சட்டிய கவுத்தியாச்சி. என்னுடைய புராணம் வழக்கம் போல வாரம் ஒன்றாவது தொடர முயற்சி செய்கிறேன்.

ஒவ்வொரு வாரமும் ஒருவரை தேர்ந்தெடுத்து ஒரு பெரிய வாய்ப்பை கொடுக்கும் காசி சாருக்கும், மதி கந்தசாமி அவர்களுக்கும் மனசார என் நன்றியை மீண்டும் சொல்லிக்கிறேன்.
எனக்கு அடுத்தததா நட்சத்திரமாக ஆரம்பிக்க காத்திருக்கும் நண்பர்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.

இந்த ரெண்டு மூனு வாரமாகவே பரிச்சைக்கு படிக்கும் மக்கு மாணவன் போல தான் என் நிலைமை. கஷ்டப்பட்டு படிச்சி பரிட்சை எழுதிட்டேன். பாஸா! பெயிலா- என்று நீங்க தான் சொல்லணும். பாஸோ..பெயிலோ...ஆனா பரிட்சை முடிஞ்சதும் பெரிய ஒரு லீவு விடுவாங்களே... :-)

ஹையா...எனக்கு லீவு விட்டுட்டாங்களே...வரேன் :-)

--------------------------------------------------

மொத்தமாக 60 நண்பர்கள் வந்து என்னுடைய வாரப்பதிவுகளை படித்து என்னை ஊக்கப்படுத்திச் சென்றுள்ளீர்கள். எல்லோருக்கும் என்னோட சிறப்பு நன்றிகள் :

தேசிகன், எல்.ஏ. வாசுதேவன், மதி கந்தசாமி, சிங் செயகுமார், பாரதி, தருமி சார், ஜோசப் சார், குமரன், பரஞ்சோதி, கைப்புள்ள (மோகன்ராஜ்), ராகவன், ஜோ, சதீஷ், ரஜினி ராம்கி, தாணு, செல்வன், இலவசகொத்தனார்,முத்துகுமரன், சிங்.செயகுமார்(எல்லா பதிவுக்கும் கவிதை கொடுத்ததுக்கு சிறப்பு நன்றி தம்பி), முத்து (தமிழினி), ஐயா ஞானவெட்டியான், மஞ்சூர் ராசா, இராமநாதன், சுந்தர், என்னார், இளவஞ்சி, இளந்திரையன், நடா, நிலவு நண்பன், கார்த்திக் ஜெயந்த், சந்தோஷ், கீதா, கிறுக்கன், டி.ராஜ், விவசாயி, சத்தியா, ஒலியினிலே, உஷா அக்கா, சாம், ராமச்சந்திரன் உஷா, எல்.எல்.தாஸ், மணியன், அபிராமம், தெக்கிக்காட்டான், நாமக்கல் சிபி, நிலா,மதுமிதா அக்கா, செல்வராஜ், பார்த்தா, தங்கமணி, அல்வாசிட்டி விஜய், வி.எஸ்.ரவி, கோபி, அல்லி மகன், காஞ்சனா, கீதா சாம்பசிவம், கார்த்திக், குணா, சிவகுமார்,வெளிகண்ட நாதர், யுகன் மற்றும் அனானி நண்பர்கள். யாராவது விட்டு போயிருந்தா, மன்னிச்சிடுங்க.

மற்றும் படித்து பின்னோட்டம் போட நேரம் இல்லாமல், வசதி இல்லாமல், பின்னோட்டம் எப்படி போடுவது என்று விவரம் தெரியாமல் சென்ற எல்லா நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

எல்லாத்துக்கும் மேலே இந்த வாரம் முழுவதும் ப்ளாக்கர் என்னை தொந்தரவு செய்யாமல் பாத்துக்கிட்ட கடவுளுக்கு ரொம்ப நன்றி.

Saturday, February 11, 2006

*நட்சத்திரம்* - பள்ளிக்கூடம் போகலாமா

சில என் பள்ளிக்கூட நினைவலைகள் உங்களுடன்.

அப்போல்லாம் 6 வயசுல தாங்க பள்ளிக்கூடம். அதுவும் 'நா போமாட்டேன்..போமாட்டேன்' அப்படின்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அப்பா ரெண்டு அடிய போட்டு பள்ளிக்கூடத்துல போய் விடுவாங்க. அங்கே போனா, எனக்கு ஏகப்பட்ட கிராக்கி. டீச்சர் வேற எங்கம்மா கூட அஞ்சாப்பு ஒன்னா படிச்சாங்கலாம். அவங்க B கிளாஸ் டீச்சர் கூட சண்டை. நாந்தான் ராசாவ எடுப்பேன்னு. ஒரு வழியா எங்கம்மா ப்ரண்டு பூமணி டீச்சர் போட்டியில ஜெயிச்சி என்ன 1 ஆ வகுப்புல தூக்கி போட்டாங்க. வீட்டுல நாம கடக் குட்டியா இருந்தோம்னு வச்சுக்கோங்க, நம்ம அண்ணன், அக்கா எல்லாம் பள்ளிக்கூடத்துல நமக்கு நல்ல பேர வாங்கி வச்சிருப்பாங்க. போய் சேந்தவுடனே 'ஓ! அவனோட தம்பியா..நல்ல புள்ளையாச்சே' அப்படின்னு நமக்கும் சேர்த்து ஒரு நற்சான்றிதழ் கொடுப்பாங்க. அப்புறம் நாம வெளியேறுவதற்குள்ள அண்ணன், அக்கா சேர்த்து வச்ச பேர மொத்தமா நாஸ்தி பண்ணிடுவோம். அது வேற கத.

ஒன்னப்புல சிலேட்டு எல்லாம் கெடையாது. ஒரு பிடி மண்ண எடுத்து அதுல 'அ..ஆ' எல்லாம் போடுவோம். மூனாப்புல தான் ABCD எல்லாம். அதுவும் பள்ளிக்கூடத்துக்கே ஒரே டீச்சர் தான் இங்கிலீசு சொல்லி கொடுப்பாங்க. அப்புறம் தான் சிலேட்டு. அதுக்கு மாக்குச்சி, கல்லுகுச்சி, பம்பாய் குச்சின்னு எழுத எத்தனை வகை குச்சி. அதையும் சில பயபுள்ளைங்க தின்னே தீத்திருங்க. 'டீச்சர்! பையன பாத்துக்கோங்க. குச்சி ரொம்ப திங்கறான்'னு மணிகண்டன் அம்மா அடிக்கடி சொல்லிட்டு போவாங்க. அவன் பேரே குச்சி தின்னி.

மதியம் ஆச்சின்னா, நானும் மத்த பயலுவ எல்லாம் சத்துணவு அக்காவுக்கு உதவி பண்ணி கொடுத்துக்கிட்டு இருப்போம். கிணத்துல தண்ணி எறச்சி ஊத்துறது, உப்பு புளி வாங்கியாறது அப்படின்னு செஞ்சிக்கிட்டு கெடப்போம். நமக்கு சோறு போடுற அக்கா இல்லையா.

எனக்கு ரொம்ப நல்லா நியாபகம் இருக்கிறது என்னோட அஞ்சாப்பு தான் (செல்லையா தெரியுமுல்லா). இன்னொரு நண்பன் கிருஷ்ணன். அவன் தான் டீச்சருக்கு செல்லப் பிள்ளை. 'போடா. போய் தலைகிழா நில்லு' அப்படின்னு டீச்சர் சொன்னா இவனும் போய் ஒரு முக்குல போய் குட்டிகரணம் அடிச்சிக்கிட்டு நிற்பான். வகுப்புல முதல் மாணவன். அப்போல்லாம் கிட்ட தட்ட ஒரு 10 பேரு முதல் ரேங்க் தான். அதுல இந்த பொட்ட புள்ளைங்க இருக்கே அது ஒரு 8 இருக்கும். நானும் கிருஷ்ணனும் மற்ற ரெண்டு பேரும்.

ஒரு தடவை எங்க வகுப்புக்கு தண்ணி மண் பானை வாங்க சந்தைக்கு போய் ஒரு பானை வாங்கி வந்தோம். வரும் போது வெயிலில் கால் சூடு தாங்க முடியாம, பானையை போட்டு உடைத்து விட்டோம். சந்தையில் இருந்து பள்ளிக்கூடம் வரை ஓன்னு அழுதுகிட்டே வந்தோம். டீச்சர் அடிப்பாங்களோன்னு தான். இப்படி நிறைய (அஞ்சாம் கிளாசுக்கே ஒரு தனி பதிவு போடலாம். பிறகு)

அப்புறம் நான் அந்த பள்ளிக்கூடத்துல நிம்மதியா படிக்கிறது புடிக்காம, என்னை இங்கிலீசு மீடியத்துல போடலாம்னு எங்க அண்ணன் ஹெட்மாஸ்டர் கூட சண்டை போட்டு டீ.சி வாங்கி ஒரு பள்ளிக்கூடத்துல சேர்த்தாங்க. இங்கிலீசு மீடியம்னா A கிளாஸாம்ல. என் நண்பன் கிருஷ்ணனும் அதே வகுப்பில். 'ஏல! நீயும் இங்கே தான் இருக்கியா மக்கா' அப்படின்னு ஒரே சந்தோசம். வகுப்புல மொத்தம் 80 பேரு. வாத்தியார் வந்து Atmosphere அப்படின்னாலே எனக்கு தலை கிர்ருன்னு சுத்தும். இவ்ளோ பெரிய வார்த்தையா இருக்கேன்னு. C for Cat ..D for Dog.. அந்த ரேஞ்சில தான் அப்போ நம்ம இங்கிலீசு இருந்திச்சி. அப்புறம் தான் விசயமே தெரிஞ்சது இந்த 80 பேருக்கும் ஒரு நுழைவு தேர்வு இருக்கு, அதுல தேறலைன்னா அடிச்சி வெறட்டிருவாங்கன்னு. ஏதோ வல்கேனோ (Volcano) அப்படின்னு ஒன்ன கொடுத்து தமிழ்ல எழுத சொன்னாவ. என்னாடா இது வல்கேனோ...நம்ம கல்கோனா முட்டாய் மாதிரி ஒரு முட்டாயோன்னு நெனைச்சி மொழிபெயர்த்தலில் சும்மா பூந்து வெளையாடிட்டேன் (கல்கோனா முட்டாய் தெரியுமா..சீடை மாதிரி இருக்கும்..காலைல வாயில போட்டா..மதியம் வரைக்கும் கரையாது..சுமா கல்லு மாதிரி கெடக்கும்). அப்புறம் தான் தெரியும் வல்கேனோன்னா எரி மலையாம்ல.

அடுத்த நாள் என்னோட பைய எடுத்துக்கிட்டு 'அன்னா இருக்குல்லா..வரிசையா கிளாஸு..
அதுல ஏதாவது ஒன்னுல போய் ஒக்காந்துக்கோன்னு வெரட்டி உட்டுட்டாங்க. நானும் குத்து மதிப்பா D வகுப்பு முன்னாடி போய் பரிதபமா போய் நின்னேன்.. ஆசிரியர் 'என்னப்பு! என்ன வேணும்' அப்படின்னு கேட்டாரு...'ஒன்னுமில்லைய்யா! அந்த கடைசில ஒரு வகுப்பு இருக்குல்லா..அங்கே இருந்து வெரட்டி விட்டுட்டாங்க' அப்படின்னு சொன்னேன். உள்ளே இருக்குற பயலுவ எல்லாம் என்னைய ஒரு மாதிரி பாத்தானுவ. அப்புறம் என்னைய உள்ளே கூட்டிக்கிட்டாரு...அதோட முடிஞ்சது நம்மோட ஆங்கில கனவு..எனக்கு ஒரே ஒரு கவலை...கிருஷ்ணன் பாசாகி அங்கேயே தங்கிட்டான்...'இனி ஒரே வகுப்புல வரவே முடியாதாம்ல' ரொம்ப சோகமா பேசிக்கிட்டோம்.

இங்கிலீசு மீடியம் பசங்க எல்லாம் ஒரு ரேஞ்சில இருக்குறானுவ..நமக்கு பார்த்தாலே ஏதோ இங்கிலீசு கார தொரைய பாக்குறப்புல இருக்கு..அப்புறம் கிருஷ்ணன் கூட அவ்வளவா ஒட்டுதல் இல்லாமலே போச்சி. ஆறாப்புல நான் தான் ஒன்னாம் ரேங்க். நல்லா படிக்கிற அஞ்சு பேர எடுத்து ஆளுக்கு ஒரு 10 மாணவர்களை மேய்க்க கொடுத்திருப்பார்கள். வகுப்பு முடிஞ்சதும் 10 பயலுவலுக்கிட்டயும் ஒப்பிக்க சொல்லி, ஒப்பிக்காதவனை போட்டுக்கொடுப்பது தான் எனக்கு கொடுக்கப் பட்ட வேலை.

மதியம் ஆச்சினா, நானும் முருகனும் தட்டை தூக்கிக்கிட்டு சத்துணவு சாப்பிட கெளம்பி விடுவோம். சத்துணவா அது...செத்த உணவு...உப்பும் இருக்காது..உறைப்பும் இருக்காது..சில சமயம் புழு கூட கிடக்கும்..நானும் முருகனும் ஆளுக்கு அஞ்சு பைசா போட்டு கடைக்கு போய் பச்ச மொளகா வாங்கி வச்சிருப்போம். சும்மா நறுக்குன்னு கடிச்சிக்கிட்டு சாப்பிட்டோம்னு வச்சிக்கோங்க..தேவாமிர்தம்.

இப்படியே வாழ்க்கை 10 வரைக்கும் போச்சி. எங்க பத்தாப்புக்கு ஒரு ஆசிரியர் புதிதாக வந்திருந்தார். பள்ளிக்கூடத்துக்கே அவர் புதிது. எங்கள் வகுப்பு ஆசிரியர். ரொம்ப நல்ல மனுசங்க. சொந்த காசுல பேப்பர், பேனா எல்லாம் வாங்கி எங்களுக்கு கொடுப்பார். ரொம்ப அன்பா இருப்பார். நான் பள்ளிக்கூடத்துக்கு லீவே போடலைன்னு எனக்கு ஒரு பாக்கெட் கடலை மிட்டாய் எல்லாம் பரிசா கொடுத்தார். எல்லோரும் பரிச்சை எழுதிட்டு பொது தேர்வு மதிப்பெண் எல்லாம் வந்தது. சொல்லலாம்னு கிளம்புனா அவரு செத்து போய்ட்டாருன்னு வகுப்பு மக்கா வந்து சொன்னான். எல்லோரும் அவரு வீட்டுக்கு போய் அழுதுட்டு வந்தோம். எங்களுக்காக ரொம்ப உழைத்த ஆசிரியர். மனசே கேக்கலை.

நம்ம ஆசை எங்கே விட்டது. மறுபடியும் வீட்டுல 11ஆம் வகுப்பிற்கு இங்கிலீசு மீடியம் கேட்டாங்க வீட்டுல. உடனே கொடுத்திட்டாங்க. எனக்கு ஒரே சந்தோசம், கிருஷ்ணன் கூட சேர்ந்து படிக்கலாம்லா. வகுப்பில் போய் தேடினேன். அவனை காணோம். விசாரித்து பார்த்ததில், படிக்க வசதி இல்லாமல் வீட்டில் படிப்பை நிப்பாட்டி விட்டார்களாம். ஏண்டா போய் சேர்ந்தோம் என்று ஆகி விட்டது. என்னை மாதிரியே ஒரு 5 பசங்க, தமிழ் மீடியத்துல இருந்து சேந்திருந்தானுங்க. முதல் பரிட்சைல தமிழ், ஆங்கிலம், கணிதம் தவிர எல்லாம் காலி. விலங்கியலில் மட்டும் பாஸாக ஒரு மார்க் தேவை பட்டது. சரி விழுற அடியில ஒன்னு கொறையுமேன்னு ஆசிரியரிடம் போய் 'சார்! ஒரு மார்க் போடுங்க சார்' அப்படின்னு கேட்டேன். 'தாவரவியலில் எத்தனைல' அப்படின்னார் ' அதுவும் ஊத்திக்கிச்சி சார்' அப்படின்னேன். 'லே! மொத்தமா ரெண்டையும் சேர்த்து தாம்ல பார்ப்போம். கூட்டி கழிச்சி பாத்தா, நீ எப்படியும் பெயிலு தாம்ல. ஓடி போல' அப்படின்னு ஒரு மார்க் போட மறுத்திட்டார். அப்போல்லாம் பண்ணிரண்டாம் வகுப்பிலும் டவுசர் போட்டுக்கிட்டு தான் போவோம். 10 படிக்கும் வரைக்கும் படாத அடிக்கு அன்னைக்கு மொத்தமா வாங்கினேன். என் கூட வந்த மத்த 5 பயலுவலுக்கும் அதே கதி..அடுத்த நாள் பார்த்த மத்த பயலுவ எல்லாம் மூன்றாம் வகுப்பில் போய் மண்வெட்டிய புடிச்சிக்கிட்டு இருக்கானுவ...என்னலன்னு கேட்டா 'மக்கா! நமக்கு அது ஒத்து வராதுல..நமக்கு மண்வெட்டி தாம்ல சரி..மனுசன் அந்த அடிய வருசம் முழுக்க வாங்க முடியுமால' அப்படிங்கறானுங்க.

அப்புறம் கிருஷ்ணன் பாலி டெக்னிக் படித்து விட்டு, அப்புறம் தங்க நகை செய்யும் தொழில் படித்து விட்டு, இப்போ பேங்கில் வேலை செய்கிறான். போன வருடம் கல்யாணம் ஆனது. கல்யாண கார்டு கொடுக்க வீடு தேடி வந்தான். இப்பவும் போனில் பேசுவோன். என்னோட ஒன்னாம் கிளாஸ் நண்பன் இல்லையா. இன்றும் ரெண்டு பேரும் மேலே சொன்ன கதை எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருப்போம்.

( இன்னும் நிறைய சொல்லலாம்..சரி நம்ம வாரம் முடிய போதுல்லா..லீவுல போறதுக்கு முன்னாடி..ஒரு சின்ன நினைவலைகள்...அவ்வளவே)..

*நட்சத்திரம்* - வர வர நாடே நல்லால்ல..

இன்று சனிக்கிழமை. பெயருக்கு தான் விடுமுறை. காலையில் இருந்தே ஒவ்வொரு வேலையாக வந்து தொலைகிறது. தொலைபேசி நாலு நாளா வேலை செய்யவில்லை. எழுதி வைத்தும் பார்க்க யாரும் வரவில்லை. ஊருக்கு போக டிக்கட் புக் பண்ணணும். இப்படி நிறைய வேலை. 'இதுக்கு பேசாம ஆபீஸ்லயே இருக்கலாம்' எண்ணிக்கொண்டே வண்டியை கிளப்பினால், வண்டி ரிசர்வ்ல கெடக்குது. இதுக்கு வேற 2 கி.மீ போகணும். இங்கேயே போடலாம்னா எல்லாம் கலப்பட பெட்ரோல். எங்க எங்க கலப்படம் பண்ணறாங்க பாருங்க. இப்படி நம்ம காச கொள்ள அடிச்சி என்ன பொழப்போ. எரிச்சலோரு கிளம்புகிறேன்.

ஒரு வழியாக பெட்ரோல் போட்டுட்டு மவுண்ட் ஸ்டேசன் போய் சேர்ந்தேன். ஏற்கனவே ஒரு பெரிய வரிசை நின்று கொண்டிருந்தது. இப்போதைக்கு முடியாது போல இருக்கே. எங்கே பார்த்தாலும் கூட்டம். இந்த மக்கள் தொகை தாங்க நம்ம நாட்டுல ஒரே பிரச்சினை. எங்க போனாலும் மணிக்கணக்கா நிக்க வேண்டிய இருக்கு. நிற்பதை தவிர வேறு வழி இல்லை. வரிசையில் போய் நின்றேன். ஏதொ ஒரு எருமை பருப்பு மாதிரி வரிசைல நிக்காம முன்னாடி போனது.என்னா திமிரு பாருங்க. 'யோய்! இங்கே நிக்கறவன் எல்லாம் கேணப்பசங்க மாதிரி தெரியுதா. லைன்ல வாவே' கத்தினேன். என்னை முறைத்துக்கொண்டே பின்னால் போய் நின்றான். ஒரு வேளை இந்த ஏரியா ரௌடியா இருக்குமோ. இந்த வாய் சும்மாவும் இருக்க மாட்டேங்குது. என்னை நானே நொந்து கொண்டேன். ரிசர்வ் பண்ணிட்டு வரும்போது மறுபடியும் முறைத்தான். எட்டிப் பாக்காம வண்டிய கிளப்பிட்டு வந்துட்டேன்.

அடுத்து நேரே எக்ஸ்சேஞ்ச் ஆபீஸ். நான் போய் சேர்ந்தவுடனே முருகன் என்னை கண்டு கொண்டான். 'என்ன சார்! இந்த பக்கம்'. 'ஏம்பா! வீட்ல டெலிபோன் நாலு நாளா வேல செய்யல. எழுதி வச்சும் யாரும் வர காணோம். எதுக்கு இப்படி படுத்தறீங்க' நான். 'இல்ல சார்! எல்லாரும் லீவுல இருக்காங்க. அதான் சார் மெதுவா நடக்குது. எழுதி வச்சவங்களுக்கு வரிசையா பார்க்கிறோம். இருங்க உங்களுக்கு எப்போன்னு பாத்து சொல்றேன்' உள்ளே போய் விட்டான் முருகன்.

'வரிசைப்படி உங்களுக்கு இன்னும் ரெண்டு நாள்ல வந்துரும் சார்!'. 'என்னப்பா இது இன்னும் ரெண்டு நாளா. அது வரைக்கும் தாங்காது'. காசு வெட்டினாத் தான் வேலை நடக்கும் போல. அவன் மூஞ்சிலேயே காசுக்கு அடி போடுகிறான் என்று எழுதி ஒட்டி இருந்தது. ஒரு 50 ஐ தள்ளினேன். 'சரி சார். இன்னைக்கு சாயங்காலமே பண்ணிடலாம் சார்' முருகன் வரும்படி பார்த்த சந்தோசத்தில் வழிந்தான்.

வீட்டுல ரொம்ப போர் அடிக்குது. சரி புது படம் பார்க்கலாம்னு அப்படியே வண்டிய மவுண்ட் ரோட் சரவணன் கடைக்கு விட்டேன். 'என்னப்பா ஆதி சி.டி வந்துட்டா'. 'இன்னும் வரலை சார். படம் வந்து ரெண்டு நாள் தான ஆகுது. நாளைக்கு வந்துடும். பரமசிவம் இருக்கு கொண்டு போறீங்களா'. சரின்னு 20 ரூபா கொடுத்துட்டு பரமசிவத்தை கொண்டு வந்தேன். ஏதோ கஞ்சாவ கொடுக்கற மாதிரி மறைச்சி கொடுக்கறான். இப்போ ரொம்ப கெடுபுடியாம்ல. வாங்கிட்டு கிளம்பும் போது, சுத்தி போக மாச்சப்பட்டு வண்டிய குறுக்கு வழில விட்டேன். நம்ம நேரம். வழில வசூல்ராஜா...அதாங்க சென்னை டிராபிக் போலிஸ். நிறுத்தி ஏதோ மிருகத்தை கூப்பிடுவதை மாதிரி கூப்பிட்டார். 'இது ஒன் வே! தெரியுமா'. 'தெரியும் சார். நீங்க இருப்பீங்கன்னு தான் தெரியாது' என்றா சொல்ல முடியும். 'நா இந்த ஏரியாவுக்கு புதுசு சார். தெரியாம வந்துட்டேன்' முடிந்த அளவு பவ்யமா பதில் சொன்னேன். இன்னைக்கு மொய் 50 ஆ 100 ஆன்னு தெரியலை. பர்ஸ்ல 50 இருந்தா தப்பிச்சேன். 'சரி லைசன்ஸ்-அ கொடு' புடுங்கி வைத்துக் கொண்டு டிராபிக்கை கவனிக்க போய்ட்டார்.

நாமா ஏதாவது அமௌண்ட் முடிவு பண்ணி நீட்டணும். அதுவரை நம்மள எட்டிப் பார்க்க மாட்டார். 'எப்படி வசதி. வண்டிய கோர்டுக்கு கொண்டு போனா அலையணும். பார்த்து கொடுத்துட்டு போ' என்னை பார்க்காமலே பேசுகிறார். பேரம் நடக்கிறது. தெரிந்த கெட்ட வார்த்தையை எல்லாம் சொல்லி மனதுக்குள் அவருக்கு அர்ச்சனை பண்ணி விட்டு ஒரு ஐம்பதை நீட்டினேன். சந்தோசமாக வாங்கிக் கொண்டார். 'சே! என்ன பொழப்பு இது. எங்கு பார்த்தாலும் லஞ்சம்' திட்டிக்கொண்டே வண்டியை நகர்த்தினேன்.

சைதாப்பேட்டை வரும் போதே மழை பிடித்து விட்டது. ஐந்து நிமிடம் தான் மழை பெய்தது. அதற்குள் எங்கும் ஒரே தண்ணிக்காடு. பூமிக்குள்ள தண்ணி எறங்குவதே இல்லை. என்ன ஊரோ. இதுல முன்னாடி போறவனுங்க வேற அடிக்கிற சேத்துல சட்டை எல்லாம் நாஸ்தியாயிடுது. வீட்டுக்கு போற முன்னாடி வர்ற வழில அண்ணாச்சி கடைல வண்டிய நிறுத்தி பால் பாக்கெட் ஒன்னு கேட்டேன். கடை பையன் எடுத்து கொடுத்தான். 'ஒரு கவர்ல போட்டு கொடுப்பா'. 'ஏன் சார்! ஒரு பாலுக்கு கூட கவரா' புலம்பிக்கொண்டே ஒரு பாலிதீன் கவரை எடுத்துக் கொடுத்தான். இதுக்கெல்லாம் கூடைய தூக்கிக்கிட்டா அலைய முடியும். கெடைக்கிற 10 பைசாவுல 5 பைசா போச்சேன்னு எரிச்சல் அவனுக்கு.

நேரே வீட்டுக்கு கிளம்பினேன். வழியெங்கிலும் ஒரே சகதி. வண்டி குடை சாயாமல், ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். காலையிலேயே கிளம்பி விட்டதால், பேப்பர் பார்க்க கூட நேரம் இல்லை. இன்றைய பேப்பரை எடுத்துக் கொண்டு சோபாவில் சாய்ந்தேன். திறந்தவுடன் கொட்டை எழுத்தில் 'பாராளுமன்றத்தில் கேள்வி கேட்க எம்.பிக்கள் லஞ்சம்'. "சே! என்னடா நாடுடா இது. எங்க பார்த்தாலும் லஞ்சம். எங்க பார்த்தலும் ஏமாத்து. ஒரே ஊழல்' புலம்பிக் கொண்டே பரமசிவத்தை சி.டி ப்ளேயருக்குள் தள்ளினேன். ரசிக கண்மணிங்க எல்லாம் தல திரைல வந்ததும் பூ போடுவது வரை தெரிகிறது. மெதுவாக திரையை போகஸ் பண்ணுகிறார்கள். இதுவும் கேமரா பிரிண்ட் தான் போல. இதையும் நல்ல பிரிண்டுன்னு சொல்லி ஏமாத்தறானுங்க பாருங்க. மறுபடியும் புலம்புகிறேன். பரமசிவம் என்னை படுத்த ஆரம்பிக்கிறார்.

Friday, February 10, 2006

*நட்சத்திரம்* - கருப்பன்

லட்சுமி காலையில் இருந்தே கத்திக்கொண்டு இருந்தது. 'டேய்! அத வெளியே விட்டுடாதடா. புடிச்சி கெட்டிப்போடுடா' அடுப்பாங்கரையில் இருந்து அம்மா குரல் கொடுத்தார்கள். லட்சுமி. எங்க வீட்டிற்கு வந்த முதல் ஆடு. அதற்கு லட்சுமின்னு பேர் வைத்தது அக்கா தான். லட்சுமி ஈன்றேடுக்க போகும் குட்டிகளுக்கு நானும் அக்காவும் சேர்ந்து பெயர்கள் தேர்வு செய்தோம். ரெண்டு பெயர் போதும் என்று நினைத்திருந்த எங்களுக்கு லட்சுமி நாலு குட்டி போட்ட போது, ஒரே ஆச்சரியம். ஒவ்வொரு குட்டியாக அம்மா துணியால் சுத்தம் செய்து, கத்தியால் அதன் கால் குளம்புகளை வெட்டி லட்சுமியிடம் கொடுக்க, லட்சுமி பாசமழை பொழிந்து கொண்டுருந்தது. என்னடா இது மூனுமே பொட்ட குட்டியா போச்சி, ஒரு கெடா குட்டி இல்லாம போச்சேன்னு அம்மா புலம்பிக்கிட்டு இருந்தபோது பிறந்த நாலாவது குட்டி தான் சூர்யா. மத்த மூன்று பேரும் ப்ரியா, வித்யா, நித்யா.

ஒரே நாளில் எங்கள் வீடு களை கட்டிப் போனது. நாலும் பாலுக்கு அடித்துக்கொள்ளும். சூரி எப்படியும் அடித்து பிடித்து வயிற்றை நிறைத்து விடுவான். லட்சுமி மேய்ந்து விட்டு தூரத்தில் வரும் போதே இவன் மட்டும் ஓடி போய் கெஞ்சி கூத்தாடியாவது மடியை காலி பண்ணிவிடுவான். 'டேய்! உன் ஆட்ட கெட்டி போடுடா. மத்த குட்டி எல்லாம் பாவம்' அம்மா அவன் மீது அடிக்கடி குற்றப்பத்திரிகை வாசிப்பார்கள். அவனது சுறுசுறுப்பும், குறும்பும் பிடித்து போக, சூரி மற்ற மூவரை விட ரொம்ப பிடித்து போய்விட்டான். சூரி என்று கூப்பிட்டால் எங்கிருந்தாலும் ஓடி வருவான். கொஞ்ச நாளில் அவன் கருப்பு நிறத்தை வச்சே அவனை கூப்பிட ஆரம்பித்து 'கருப்பன்' என்றே ஆகி போய் விட்டான்.

என் கூட கட்டிலில் படுத்து தூங்கும் அளவுக்கு எனக்கு ரொம்ப நெருங்கியவனாகி போனான் கருப்பன். எங்கு சென்றாலும் என் கூட வந்து விடுவான். 'அத மேய விடுடா. அத கூட்டிக்கிட்டே அலையறியே' அம்மா அடிக்கடி என்னைத் திட்டிக்கொண்டிருப்பார்கள். நான் விளையாட போனால், அவனும் கூட வந்து ஒரு ஓரத்தில் மேய்ந்து கொண்டிருப்பான். நான் திரும்பி வரும் போது கூட வருவான். அவனது ஒரே கெட்டப் பழக்கம், சின்ன புள்ளைங்கள தூரத்தில் கண்டாலே ஓடி போய் முட்டி தள்ளி விடுவான். 'யக்கா! ஒங்க ஆடு நம்ம பார்வதி புள்ளைய நேத்து முட்டிட்டு. அத கெட்டி போடுங்க' அப்படின்னு தினமும் ஒரு புகார் வீட்டுக்கு வரும். ஒரு நாயை பார்ப்பது போல எல்லா குழந்தைகளும் 'கருப்பன் வர்றான்'ன்னு ஓடுங்க. தமாசா தான் இருக்கும். மொட்ட கொம்பன் அவன். கீழே தள்ளி விடுவதோடு சரி. இல்லன்னா ஊர் பஞ்சாயத்துல நம்மல இழுத்து விட்டிருப்பான்.

நான் தோளில் ஒரு துண்டை போட்டுக்கொண்டு கையில் ஒரு சொரண்டி கம்பையும் எடுத்து விட்டால், ரொம்ப குஷியாகி விடுவான். நான் அவனை மேய்க்க கூட்டிச் செல்லப் போகிறேன் என்று அவனுக்கு தெரியும். எல்லாரும் நான் நடக்க ஆரம்பித்தால் ஒழுங்காக என் பின்னாடி வருவார்கள். இவன் மட்டும் எனக்கு முன்னாடி எனக்கு வழி காட்டி செல்வான். லட்சுமியும் மற்ற குட்டிகளும் ஒழுங்காக மேய்ந்து கொண்டிருந்தால், இவனுக்கு மட்டும் நான் தனியாக ஏதாவது பறித்து போட வேண்டும். 'கெடுத்து குட்டிச்சுவராக்கி வச்சிருக்க. மேய கறி வலிக்குது பாரு அதுக்கு' அம்மாவின் அடுத்த புகார். பள்ளிக்கூடத்தில் இருந்து வரும் போதே வழியில் கிடக்கும் ஒடங்காவை இவனுக்காக பொறுக்கி வருவேன். அவனுக்கு மட்டும் தனி கவனிப்பு தான்.

பட்டாசுன்னா அவனுக்கு ரொம்ப பயம். தீபாவளி அன்னைக்கு பட்டாசு சத்தத்துக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே கெடப்பான். நான் சாப்பிட உட்கார்ந்தால் வந்து நின்று தட்டையே பார்த்துக் கொண்டிருப்பான். சாம்பார் ஊத்தி ஒரு உருண்டை கொடுத்தால் சந்தோசமாக சாப்பிடுவான். 'ஆட்டுக்கெல்லாம் சோறு ஊட்டிக்கிட்டு இருக்கான் பாரு' அம்மா திட்டுவார்கள். சட்டில புண்ணாக்கு தண்ணி வைத்தால், முதல் வேலையாக மூச்சை பிடித்துக் கொண்டு கழுத்து வரை தண்ணிக்குள் முங்கி கீழே கிடக்கும் புண்ணாக்கை தேடுவான். மூச்சு முட்டியதும் தலையை வெளியே எடுத்து மூச்சு வாங்கிவிட்டு மறுபடி முங்கி தேட ஆரம்பிப்பான். மொத்த புண்ணாக்கும் அவனுக்குத் தான். தலையை வெளியே எடுக்கும் போது மொத்த தலையும் வெள்ளையாக புண்ணாக்கு படிந்து போய் கோமாளி மாதிரி இருப்பான். அவனை பார்த்து நான் சிரித்துக் கொண்டிருப்பேன்.

ஒரு நாள், 'ஏல! ராஜா. ஒங்க ஆடு கெணத்துல வுழுந்துட்டுல' அப்படின்னு பக்கத்து வீட்டு ஆச்சி சொன்ன போது, தலைதெறிக்க ஓடினேன். ஊர்ல எல்லோரும் தெக்க இருக்கிற கெணத்த சுத்தி எட்டி பாத்துக்கிட்டு இருந்தாங்க. தண்ணி இல்லாத பாழுங்கிணறு. துள்ளி குதித்து விளையாடும் போது அந்த மொட்டை கிணத்தில் தவறி விழுந்திருக்கிறான். 'ஐயோ கருப்பா' என்று கத்திக்கொண்டே ஓடி போய் பார்த்தேன். கருப்பன் ஒரு 80 அடி ஆழத்தில் நின்று கத்திக்கொண்டு நின்றான். ஊர்ல எல்லோரும் ஒரு கயிறுல ஒரு கூடையை கட்டி இறக்கினார்கள். கிணத்தில் இறங்கி அவனை கூடைல போட்டு கட்டி விட்டார்கள். ஒரு சின்ன காயம் கூட இல்லாம அப்படியே வந்தான் கருப்பன். அப்போது தான் எனக்கு மூச்சே வந்தது. அவ்வளவு ஆழத்தில் விழுந்து ஒரு காயம் கூட இல்லாம வந்து விட்டானே என்று எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம்.

இப்படி கருப்பன் எனது உயிர் நண்பனாகி போனான். விளையாட நண்பர்கள் இல்லாத போது, இவனிடம் விளையாடிக் கொண்டிருப்பேன். கை முட்டியை வைத்து முட்டுவது போல பாவ்லா காட்டினால், இவன் முன் கால் இரண்டையும் தூக்கிக் கொண்டு முட்டுவான். நான் எங்காவது ஒளிந்து கொண்டால், ஒவ்வொரு இடமாக தேடுவான். என்னவெல்லாம் கற்றுக் கொடுக்க முடியுமோ எல்லாம் கற்றுக் கொடுத்தேன். இரண்டு காலால் நடப்பது, சுவர் மேல் நடப்பது, வேலி தாண்டுவது என்று வித்தைகள் நிறைய செய்வான். அவன் செய்யும் சேட்டைகளை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

நாட்களும் ஓடியது. கருப்பனும் வளர்ந்து கொண்டே வந்தான். 'யக்கா! உங்க வீட்டு கெடா நல்லா வளந்திருக்கே. வெல பேசிறலாமா' அம்மாவிடம் மாமா கருப்பணுக்கு நாள் குறித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கருப்பனுக்கும் ஒன்றும் புரிய வாய்ப்பில்லை. நாளும் வந்தது. கசாப்பு கடைக்காரன் எங்கள் வீட்டில். 'கருப்பன எதுக்கும்மா கொடுக்கணும். நம்ம கிட்டயே அவன் இருக்கட்டும்.அவன கொடுக்க வேண்டாம்' அவனை இழக்க முடியாமல் அம்மாவிடம் நான் கெஞ்சிக் கொண்டிருந்தேன். 'இதுக்கு மேல அத வளக்குறதுல பிரயோஜனம் கெடையாதுடா. நீ சின்ன பையன். ஒனக்கு ஒன்னும் தெரியாது. சும்மா இருடா' அம்மா என்னை அடக்கி வைத்து விட்டார்கள். நான் சின்னப் பையன் தான். என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை, லட்சுமியோடு சேர்ந்து நானும் அழுவதை தவிர. நடக்க மாட்டேன் என்று அடம்பிடித்த கருப்பனை , கசாப்பு கடைக்காரன் அடித்து இழுத்துக்கொண்டே போனான். கத்திக்கொண்டே சென்றான் கருப்பன்...என்னிடம் திரும்பி வருவோம் என்று நினைப்புடன்....

Wednesday, February 08, 2006

*நட்சத்திரம்* - கிராமத்து மணம்- 3 (தேன் கூடு)

மூனு நாளா ஒரே உருக்கமா எழுதறேனா :-),கொஞ்சம் ஜாலியா ஏதாவது எழுதலாம்னு இந்த பதிவு. நம்ம ஊர் புராணம் தான். நம்ம பொழப்பே அப்படி தானே ஓடுது. எங்கள் குருகுலம் பற்றி நிறைய இந்த இரண்டு பதிவிலும் சொல்லியிருக்கேன், இன்று இன்னும் சில.

மணம் - 1 ; மணம் - 2

குளம், ஏரி எதுவும் இல்லாத கிராமம் எங்க கிராமம். நீச்சல் தெரியலன்னா மனுசனாகவே மதிக்க மாட்டானுவ. அப்புறம் நீச்சல் கத்துக்கறது எல்லாமே கெணத்துல தான். கற்றுக் கொடுப்பது...அதே தான்...பீட்டர் அண்ணன். அப்போ வீட்டுக்கு வீடெல்லாம் போர் கெடையாது. தடுக்கி விழுந்தா கெணத்துல தான் விழணும். அப்படி அடிக்கு ஒரு கெணறு இருக்கும். அதுல பாதி மொட்ட கெணறா இருக்கும். குடிகார பயலுவ ரோட்டுக்கும் கெணத்துக்கும் வித்தியாசம் தெரியாம, கெணத்தில விழுந்து தெளிஞ்சி எழுந்து வந்த கத நெறைய நடந்திருக்கு. விழுந்தா ஏறி வர, படி இருக்கும். கெணத்துல தண்ணி இருக்குமான்னு கேக்காதீங்க. அது ஒங்க நேரத்த பொருத்தது.

மழை காலத்துல கெணத்துல தண்ணி கைல எட்டுற அளவுக்கு மேல வந்துடும். மேல இருந்து வெறும் அஞ்சு அடில தண்ணி கெடக்கும். கிணற்றில் ஊற்று எல்லாம் அருவி மாதிரி கொட்டும். அது தான் நாங்கள் நீச்சல் கற்றுக்கொள்ளும் காலம். இடுப்புல ஒரு சின்ன கயித்த கட்டி தண்ணில தள்ளி விட்டுடுவான். எமன் கைல இருக்குற பாசக்கயிறு மாதிரி தான். இப்போ நம்ம உயிரு அண்ணன் கைல. கயிற விட்டான்னா, நேரே சொர்க்கம் தான். நம்ம புள்ளைங்க சோபாவுல இருந்து விழுந்தாலே நமக்கு 'ஐயோ'ன்னு ஆகுது. 100 அடி தண்ணில நீச்சல் தெரியாம நம்மை அனுப்ப அம்மா-அப்பாவுக்கு மனசு வந்திருக்கே. அதுல இருந்தே தெரிஞ்சிக்கலாம், பீட்டர் அண்ணன் திறமையை. கப்புன்னு ரெண்டு மடக்கு தண்ணிய குடிச்சிட்டு தரைய நோக்கி பயணம் புறப்பட்டோம்னா, பீட்டர் அண்ணன் பாய்ந்து வத்து தூக்கிடுவான்.கயிறு எல்லாம் ரெண்டு நாள் தான். மூனாவது நாள், நீச்சல் அடித்துக்கொண்டிருப்போம்.

ஊர்ல இருக்கிற தோட்டத்தில் எல்லாமே பெரிய பெரிய கெணறுங்க. நீச்சல் குளம் பெரிசு இருக்கும். அங்கே அடிக்கடி குளிக்க போவோம். ஒரு நாள் போய் கெணத்தில குதிக்கலாம்னு போய் எட்டிப்பாத்தா, கெணத்துல தண்ணி இல்ல. நேத்து தான மேல வரைக்கும் தண்ணி கெடந்துச்சி. ஒரே நாளில் தோட்டத்திற்கு பாய்த்து காலி பண்ணிவிட்டார் தோட்டக்காரர். வெறும் 15 அடி தான் தண்ணி கெடந்தது. குதிச்சிருந்தா அவ்ளோதான்.

அந்நேரம் பார்த்து தூரத்தில் என்னோட கூட்டாளி செந்தில் வந்து கொண்டிருந்தான். நேத்து நான் பாத்து வச்சிருந்த தக்காளி செடிய புடிங்கிட்டு போய்ட்டான். அவனை பார்த்ததும் நான் பீட்டர் அண்ணனிடம் 'யண்ணே! செந்திலு நா பாத்து வச்சிருந்த செடிய புடிங்கிட்டு போய்ட்டான்'னு புகார் சொல்லிக்கொண்டிருந்தேன். 'அப்படியால பண்ணுனா அவன்.' ஏதாவது அவன பண்ணனும்னு ஒரு திட்டம் போட்டோம். அவன கிணத்துக்குள்ள தள்ளி விடுறதுன்னு..

நாங்க எல்லோரும் மட மடன்னு தொட்டில கெடக்குற தண்ணிய தலைல ஊத்திக்கிட்டு கெணத்து பக்கத்துல போய் நின்னுக்கிட்டோம். செந்தில் வந்தவுடன் 'ஏல! நான் வரதுக்கு முந்தியே குளிக்க ஆரம்பிச்சிட்டீங்களா. நானும் வரேன்ல' அப்படின்னு சொல்லி சட்டையை கழட்டி வச்சிட்டு ஓடி வந்து கெணத்த பார்க்காமலேயே கெணத்தில் குதித்தான். கொஞ்ச நேரம் கழித்து தொபுக்கடீர்னு ஒரு சத்தம். நாங்க எல்லாம் ஓடிப்போய் எட்டி பார்த்தோம். பையன் ஒழுங்கா குதித்ததினால் தப்பிச்சான். மேல ஏறி வந்து எங்களுக்கு செம திட்டு. அதுல இருந்து கெணத்த எட்டி பாக்காம குதிக்க மாட்டான்.

-----------------------------------------------

ஊர்ல எங்க பாத்தாலும் ஒரே ஒடங்காடு தாங்க (முள் மரம்). குருவி கூடு, தேன் கூடு என்று நிறைய பார்க்கலாம். புட்டான் பிடிக்க அலையும் போது, சில நேரம் தேன் கூடு ஏதாவது கண்ணுல மாட்டிக்கும். அப்புறம் என்ன, தேன் கூட்ட பாத்த கரடி மாதிரி தேனுக்கு சுத்தி சுத்தி வருவோம். நாம பாத்து வச்சத வேற எவனாவது தின்னுட்டு போய்ட கூடாதேன்னு, அதை மறைக்க ஏதாவது அள்ளி போட்டு மறைச்சிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைல இறங்குவோம்.

எப்படி தேன் கூட்டில் கை வைக்கிறது. தேனீ கிட்ட கொட்டு பட்டுருக்கியலா. சும்மா சின்னதா எறும்பு கடிச்ச மாதிரி தான் இருக்கும். சும்மா வீங்கி வலி பிண்ணிடும். அது கூட பரவாயில்லை. சுண்ணாம்பு எதையாவது தடவி சரி பண்ணிக்கலாம். ஆனா, நம்ம மானம்னு ஒன்னு இருக்கே. மூஞ்சில வெளையாட்டு போய்ட்டுன்னு வச்சிக்குங்க, அப்புறம் வெளிய தல காட்ட முடியாது. ஊரே சிரிக்கும். ஒரு முக்காட போட்டுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கனும்.

அதானால நானும் என்னோட கூட்டாளி செந்திலும் சேர்ந்து ரொம்ப ஜாக்கிரதையா தான் தேன் கூட்டுல கை வைப்போம். மொதல்ல இன்னைக்கு அம்மாவாசையான்னு பாத்துக்குவோம். அம்மாவாசை அன்னைக்கு தேனை எல்லாம் குடிச்சிடுமாமே..ஒங்களுக்கு தெரியுமா?. அப்புறம் அம்மாவாசை இல்லன்னா, தேன் கூட்டுக்கு நாள் குறிச்சிடுவோம். அன்று செந்தில் ஒரு கண்டுபிடிப்போடு வந்தான். 'ஏல! எங்க ஆச்சி சொன்னாங்க. ஈச்சிக்கு வெங்காய வாசம் புடிக்காதாம்ல. நாம வெங்காயத்த சவச்சி ஊதுனா தேனீச்சி எல்லாம் ஓடிடும். நாம நிம்மதியா தேன் எடுக்கலாம்'. நீங்க Warner Bros 'Lonely Tunes' cartoon பாத்திருக்கீங்களா..அதுல எறும்பு எல்லாம் பொருள் எடுத்து செல்லும் போது 'Hold Onion' அப்படின்னு சொல்லிட்டு ஆனியனை விட்டுட்டு போய்டும். நானும் ஒரு வேளை பூச்சிக்கெல்லாம் வெங்காயம்னா அலர்ஜின்னு நெனைச்சி ஒரு அஞ்சி சின்ன வெங்காயத்த எடுத்துக்கிட்டு தேன் எடுக்க கெளம்பினோம்.

நான் ஒரு 3 வெங்காயத்த வாயில போட்டு சவச்சிக்கிட்டே தேன் கூட்டு பக்கம் போனோன். கொஞ்சம் பயமா தான் இருந்தது. செந்தில் பாதுகாப்பா தள்ளி நின்னுக்கிட்டான். சரி கடவுளை வேண்டிக்கிட்டு 'ப்ப்பூ' அப்படின்னு ஊதி பாத்தேன். தேனீ ஒன்னும் அசையற மாதிரி தெரியலை. 'லே! இன்னும் பக்கத்துல போய் ஊதுல. நீ ஊதுறது கூட்டுல படவே மாட்டேங்குது' அப்படின்னு செந்தில் தூரத்துல இருந்து கத்தினான். நானும் கொஞ்ச கொஞ்சமா நெருங்கு கூட்டு பக்கத்துல வந்துட்டேன். நான் 'ப்ப்ப்பூ' என்று ஊதும் போது பாத்து, ஒரு கடிபடாத வெங்காயம் வாயில இருந்து ஸ்லிப் ஆகி நேரே கூட்டை போய் தட்டிட்டு. அவ்வளவு தான். எவனோ கல்ல வுட்டு தான் எறிஞ்சிட்டான்னு நெனைச்சி தேனீ எல்லாம் பாய்ந்து வந்து என் மூச்சில கோலம் போட்டுடுச்சிங்க. ரெண்டு நாளா வெளிய தல காட்ட முடியல.

அப்புறம் அஹிம்சா முறையை எல்லாம் விட்டுப்புட்டு கடுப்புல கல்ல விட்டு எறிஞ்சே கூட்ட காலி பண்ணிடறது. இல்லன்னா புகைய காட்டி எல்லா தேனீயையும் காலி பண்ணிட்டு தேன் திம்போம். சில நேரம் புகை காட்டுறோம் என்று காட்டையே கொளுத்தி விட்டிருக்கோம். ஆனா அத்தனை தேனீச்சையும் கொன்னுட்டு தேனை தின்னுட்டு வந்தது ரொம்ப கவலையா போச்சி. அடுத்த கூட்டுக்கு இன்னொரு ஐடியா வந்தது.

கொஞ்சம் பாலிதீன் கவரை எடுத்துக் கிட்டோம். இப்போ கண்ணுக்கு தெரியற மாதிரி ரெண்டு ஓட்ட போட்டுக்கிட்டு தலைல ஒன்ன கட்டிக்கிட்டோம். கை ரெண்டுக்கும் பாலிதீன் கவர சுத்திட்டு, வீட்டுல ஒரு போர்வைய சுத்திக்கிட்டு வேட்டைக்கு கிளம்பினோம். ரொம்ப தைரியமாவே தேன் கூட்டு பக்கத்துல போய் நின்னு கைய வச்சே கலச்சி வுட்டோம். சுத்தி தேனீச்சி 'ங்ஙே' அப்படின்னு ஆயுது. ஆனா கொட்ட முடியாதுல்லா. கூட்டில இருக்கிற தேனை மட்டும் காலி பண்ணிட்டு வந்துட்டோம்.

அப்புறம் தான் இன்னொரு ஐடியா வந்தது. ஐடியா கொடுத்தது செந்தில் தான் 'ஏல! ராணி தேனீய புடிச்சிட்டு வந்தா, எல்லா தேனீயும் பின்னாடியே வந்திருமாம்ல. அப்புறம் ராணிய வீட்டுல கெட்டி போட்டுட்டா, எல்லாம் அங்கேயே கூடு கட்டுமாம்ல. நமக்கும் இப்படி தேன் திங்க காடு காடா அலைய வேண்டியது இல்லை'. ராணிய புடிக்கிறதுன்னு, ஒரு நாள் ரொம்ப பொறுமையா (கவசத்தோட தான்) கூட்டு பக்கத்துல ஒக்காந்து பெரிசா இருக்கிற ஒரு தேனீய புடிச்சி ஒரு டப்பால போட்டு கொண்டு வந்துட்டோம். எல்லா தேனீயும் பின்னாடியே பறந்து வரும்னு பார்த்தா ஒன்னையும் காணோம். பீட்டர் அண்ணன் தான் வந்து திட்டினான் 'ஏல! ராணி தேனீய புடிச்சி வச்சிட்டு என்னல பண்றீங்க, அதுக்கு தேன் எடுக்க நீங்களால போக போறிங்க. தொறந்து விடுங்கல'. மனசே இல்லாம தொறந்து விட்டோம்.

அவனே எல்லா வித்தையையும் கத்து கொடுத்தான். சொன்னா நம்ப மாட்டீங்க. நாங்க எல்லோருமே கவசமே இல்லாம தேன் கூட்டுக்கிட்ட போய் கைய வச்சே தேனீய எல்லாம் தள்ளி விட்டுட்டு தேன் எடுக்க ஆரம்பிச்சோம். அமைதியா ஆடாம செஞ்சா ஒரு கொட்டு கூட வாங்காம தேன் எடுக்கலாம். இன்னும் ஒரு படி மேலே போய், அருவாள கொண்டு போய் கொம்போட வெட்டி கைல கூட்டை (தேனீ கலையாமலேயே) தூக்கிட்டு வருவோம். வந்து வீட்டு பின்னாடி ஒரு நல்ல மரமா பாத்து கூட்டோட ஏறி ஒரு கொம்புல கட்டி வச்சிடுவோம். தேன் வேணும்னு தோனிச்சின்னா, ஒரு தட்டையும் கத்தியையும் எடுத்துக்கிட்டு மரத்துல ஏறி தேனை மட்டும் எடுத்து வருவோம். அப்படி வீட்டுக்கு ரெண்டு மூனுன்னு தேன் கூடு கட்டி வச்சிருப்போம். இப்போ அந்த தைரியம் வருமான்னு கேட்டா...இல்லை..சத்தியமா இல்லை.

* நட்சத்திரம்* - எனக்குப் பிடித்தப் பாடல்கள்

ஒரு வாரத்துக்கு முன்னாடி நம்ம குமரன் நட்சத்திர வாரத்தில் 'எனக்கு பிடித்த பாடல்கள்' என்று ஒரு பதிவு போட்டிருந்தார்.ஆசையா போய் பார்த்தா, ஏமாத்திப்புட்டாரு. நெறைய பேரு போய் பார்த்துட்டு 'அட போங்க குமரன். ஆசையா ரெண்டு பாட்டு கேக்கலாம்னு வந்தா இப்படி ஏமாத்திப்புட்டியலே' அப்படின்னு சொல்லிட்டு திரும்பி பாக்காம ஓடி போய்ட்டாங்க. அதுல ஒருத்தர் நீங்க என்றால், அப்படியே இந்த பக்கம் வாங்க. நாம பாட்டு கேக்கலாம். என்ன சொல்லுதிய..

(நேத்து வெவரம் தெரியாம இதை கீதம் ப்ளாக்ல நட்சத்திரப் பதிவு என்று போட்டுட்டேன். காசி சார் தான் ஒரு ப்ளாக்ல தான் நட்சத்திரம் பதிவு எழுதணும்னு சொன்னார். அதனால இதை மறுபதிவு செய்கிறேன். ஏற்கனவே படித்தவர்கள், திட்டாதிங்கடே :-))

எஸ்.பி.பி தனி ஆவர்த்தனம் ஆரம்பித்ததில் இருந்து, நம்ம ப்ளாக் ரேட்டிங்ல ஏறிப் போச்சி :-)) . எனக்கு ராஜா மேல இருக்குற கிறுக்கு மாதிரி, நம்ம அகரமுதல சுந்தருக்கு எஸ்.பி.பி மேல கிறுக்கு போல (தப்பா எடுத்துக்காதிய மக்கா!). நாம மொத்தமா ஒரு எஸ்.பி.பி-க்குன்னு ஒரு குரூப் ப்ளாக் ஆரம்பிக்கலாமான்னு கேட்டார். ரெண்டு ப்ளாக்க வச்சி மேய்க்கறதுக்குள்ள உசுரு போயிடுது. வீட்டுல அடிக்கடி பூரிக்கட்டை எல்லாம் பறக்குது. இதுல இன்னொன்னா. நீங்களே ஆரம்பிங்க. நான் கூட்டாளியா வேணும்னா இருந்துக்கறேன்னு சொல்லிட்டேன். அவருக்கு ரொம்ப சந்தோசம். எஸ்.பி.பி...எஸ்.பி.பி- என்று ஒரே புலம்பல் :-). ஒரு வழியா இன்னைக்கு ப்ளாக்க ஆரம்பிச்சாச்சி.

நண்பர்களே! இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னன்னா! நமக்கு எல்லாம் இன்னொரு இசை இணையம் ரெடி ஆகி விட்டது. (ஒம்ம தொல்ல விட்டுதுன்னு சொல்றியலா :-)). எஸ்.பி.பி பாடல்களுக்கென உருவாகி இருக்கும் அந்த ப்ளாக் 'மை எஸ்.பி.பி'. ஒங்க எல்லாத்துக்கும் ஒரு வேண்டுகோள். 'மை எஸ்.பி.பி' ஒரு குரூப் ப்ளாக். உங்க அனைவரிடமும் இருந்து பதிவுகள் வரவேற்கப் படுகின்றன. உங்களுக்கு எஸ்.பி.பி புடிக்கும் தானே, 'மை எஸ்.பி.பி'- (MySPB) ல இடுக்கைகள் இட விரும்பினால், சுந்தருக்கு ஒரு மெயில் அனுப்புங்க (pepsundar@hotmail.com) . இல்லன்னா இங்கே பின்னோட்டத்துல சொல்லுங்க.

அதனால் இனி எஸ்.பி.பி கீதம் ப்ளாக்ல தனி ஆவர்த்தனம் பண்ண மாட்டார். வேணும்னா இந்த ஒரு வாரம் போட்டுங்கோங்க. அப்புறம் போட்டா, சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று சுந்தர் சொல்லிட்டார் (சும்மா தான்) :-). அதானால இன்னைக்கு புடிச்ச பாட்ட, எனக்கு புடிச்ச எஸ்பி.பி யோட 90ஸ்-க்கு அப்புறம் பாடல்கள் வந்த சில கேட்கலாம். இசை!!! ராஜா தான். வேற யாரு.

இதை சிறப்பு 'எஸ்.பி.பி தனி ஆவர்த்தனம்' என்று வைத்துக்கொள்ளுங்கள் (நட்சத்திர வாரம் அல்லவா). சரி தொடங்கலாமா. ஒரு ஐந்து பாட்டு எடுத்துக்கலாம் என்ன. ரொம்ப இசை வித்தை எல்லாம் இல்லாத, பாடல்களாக எடுத்திருக்கிறேன். சும்மா தலையாட்டிக்கிட்டே கேட்கிற மாதிரி ராகம், மயக்கும் எஸ்.பி.பி குரல். இது போதாதா.

முதல் பாட்டு. எஸ்.பி.பி கதாநாயகனாக நடித்த 'பாட்டுப் பாடவா' படத்தில் இருந்து 'சின்ன கண்மணிக்குள்ளே வந்த'. இந்த படமே இசை காவியம் தாங்க. ஒரு பெண் இயக்குனர் இயக்கிய படம். எஸ்.பி.பி உலகமே தெரியாமல் ஒரு மனநிலை குறைந்தவர்கள் காப்பகத்தில் இருப்பார். பின் பெரிய பாடகராக வளர்வார். எஸ்.பி.பி-யின் உடம்பு சைசு தாங்க இந்த படத்த ரொம்பவே சொதப்பிட்டு. அந்த உடம்பை வச்சிக்கிட்டு அவரு சின்ன குழந்தை மாதிரி பண்ணியது ஏனோ மனதில் ஒட்டவில்லை. சரி! இப்போ பாட்டுக்கு வருகிறேன். எஸ்.பி.பி முதன் முதலில் மேடையில் பாடுவதாக வரும் பாட்டு இது. ராஜாவின் மெலோடிக்கென வரும் வழக்கமான தபேலா மெட்டு. பல்லவியில் அப்படியே கூட பேசுவது போல வரும் புல்லாங்குழல் இசை, கூடுதல் மயக்கம் தரும். எஸ்.பி.பி பாடும் போது நம்மை அறியாமல் கண்ணை மூடிக்கொண்டு கேட்க தூண்டும் உருக்கம். கேட்டுப் பாருங்க..





இப்போ ஒரு கலக்கல் பாட்டு. தபேலாவில் இப்படி ஒரு மெட்டா?. அடிச்சி பட்டைய கெளப்பிருப்பாரு ராஜா. 'ராசா மகன்' படத்தில் இருந்து 'வைகாசி வெள்ளிக் கிழம தானே'. உங்கள் கைகள் இந்த பாட்டுக்கு தாளம் போடுவது நிச்சயம். இளம் கதாநாயகர்களில் ராஜா நிறைய நல்ல பாடல்கள் கொடுத்தது பிரசாந்துக்கு தான். அது இயற்கையாக அப்படி அமைந்து விட்டது என்று நினைக்கிறேன். செம்பருத்தியில் இருந்து தொடங்கியது, ராசா மகன், செந்தமிழ் செல்வன், எங்க தம்பி, கண்மணி, ஆணழகன் என்று நிறைய படங்கள். தெலுங்கில் பிரசாந்த்-திவ்யபாரதி நடித்த ஒரு படம் டப் ஆகி ((டப்பா ஆகி இல்லைங்க) தமிழில் 'இளம் நெஞ்சே வா' (பேரு மறந்து போச்சு) என்று வந்தது. அதிலும் பாட்டு கலக்கலா இருக்கும். எலலாமே அத்தனை இனிமையான பாடல்கள் ( நிறைய படங்கள் டப்பாவாகி போய்விட்டது). சரி பாட்ட கேக்கலாம்.





அடுத்ததாகவும் ஒரு பிரசாந்த் பாட்டு. எம்.எஸ்.வி-யும் ராஜாவும் இனைந்து இசை அமைத்தால் சூப்பர் ஹிட்டு என்று ஒரு இலக்கணம் உண்டு. மெல்ல திறந்தது கதவுல ஆரம்பிச்சி வச்சாங்க ( அதுக்கு முன்னாடி சேர்ந்து இசை அமைத்திருக்கலாம் என்று மனசு சொல்லுது. விவரம் தெரியலை). வரிசையா ஹிட். நம்ம வழ வழ வாசு 'செந்தமிழ் பாட்டு' என்று ஒரு படம் பண்ணினார். அதுவும் சூப்பர் ஹிட் (நேரம்யா). அப்புறம் நம்ம ஆளுங்களுக்குத் தான் கதைய விட, செண்டிமெண்ட்-ல தான நம்பிக்கை அதிகம். 'செந்தமிழ் பாட்டு' ஓடின உடன், உடனே 'செந்தமிழ் செல்வன்' என்று ஒரு படம். அதே ராஜா-எம்.எஸ்.வி காம்பினேஷன். 'பேரு வச்சியே..அதுக்கு சோறு வச்சியா' அப்படின்னு நம்ம விவேக் கேக்கிற மாதிரி, பேரு வச்சதோட விட்டுட்டாங்க. படம் ஊத்திக்கிச்சி. சொல்லப் போனா, செந்தமிழ் பாட்ட விட செந்தமிழ் செல்வனில் பாட்டு ரொம்ப அருமையா இருக்கும். நமக்குத் தான் 'படம் ஹிட்டா தான..பாட்ட ஹிட்டாக்கி பழக்கம்' அதனால இந்த படத்துல ராஜா-எம்.எஸ்.வி காம்பினேசம் அவ்வளவா எடுபடலை.ம்ம்ம்ம்

சரி..சரி..பாட்டுக்கு வருகிறேன். 'செந்தமிழ் செல்வன்' படத்தில் இருந்து 'குயிலே..இளமாங்குயிலே'. எஸ்.பி.பி பாடலை தொடங்கும் போதே ஜிவ்வுன்னு மனசுக்குள்ள ஒரு சோகம் ஏறும். அருமையான வரிகள். பாலு பாடும் விதம் அதற்கு மேலும் அழகு சேர்க்கும். மனநிலை தவறி போன தன் தாயை (சுஜாதா) குணப் படுத்துவதற்காக பிரசாந்த் ஒரு கிராமத்துக்கு கூட்டி வருவார். தன் தாய் குணமடைய ஏங்கும் ஒரு மகனின் ஏக்கத்தை அப்படியே கொண்டு வரும் பாட்டு. கேட்டுப் பாருங்கள்.





சிறப்பு பதிவு என்று சொல்லியாச்சி. மூனோட நிறுத்தினா எப்படி. இன்னும் ரெண்டு கேட்கலாம். என்ன சொல்லுதிய..

'என்றும் அன்புடன்' ராஜாவின் கலக்கலான இசையில் வந்த முரளி படம். நல்ல கதை அம்சத்துடன் வந்த ஒரு படம். அருமையான பாடல்கள் ( துள்ளித் திரிந்ததொரு காலம், மஞ்சள் வெயில் நேரமே, நிலவு வந்தது) நிறைந்த படம். சில பாடல்கள் ரொம்ப கவித்துவமாக இருக்கும். பாடல் வரிகளை அமுக்காத எளிமையான இசை. கவிதை கேளுங்கள்.





இறுதியாக, பார்த்திபனை வச்சி வாசு 'காக்கை சிறகினிலே' அப்படின்னு ஒரு படம் பண்ணினார். படம் கெடப்புல கெடந்து ஒரு ரெண்டு மூனு வருசம் கழிச்சி வந்திச்சி. நம்ம மீடீயாக்களுக்கு தான் ராஜான்னா எரியுமே. உடனே சொல்லிட்டாங்க 'பாட்டு எல்லாம் ரெண்டு மூனு வருசத்துக்கு முன்னாடி வந்த மாதிரி பழைய பாட்டு மாதிரி இருக்கு' அப்படின்னு. மூனு வருசத்துக்கு முன்னாடி போட்டா, அப்படித்தானே இருக்கும். பாட்டு நல்லா இருக்கான்னு பார்க்க மாட்டாங்க. 5 பாட்டும் முத்துக்கள்ங்க. படம் கூட ஓ.கே ரகமா இருந்திருக்கும். ஆனா, ஒரு வில்லன் போட்டாரு பாருங்க. நம்ம சும்மா டார்ச்சர் பண்ணிடுவாருங்க. இப்படி ஒரு படத்துக்கு அப்படி ஒரு வில்லன் தேவையா. வாசுவுக்கே வெளிச்சம். படம் வழக்கம் போல (லேட்டாச்சின்னாலே ஊத்திக்கும்) ஊத்திக்கிச்சி.

அத விடுங்க. பாட்டுக்கு வருகிறேன். 'கோலக் கிளியே..கோலக் கிளியே'. பார்த்திபன் ப்ரித்தீ விஜகுமாரை ஒரு கூடைல வச்சி தலைல சுமந்து கொண்டே பாடிக்கொண்டே செல்வார். 'பட்டு முகத்த வானத்துல பதிச்சா நட்சத்திரங்கள் பட்டிமன்றம் நடத்தும். எட்டி நில்லு வெண்நிலவே தூரம் தூரம்' என்று வரிகள் ரொம்ப அழகா இருக்கும். 'ஆடிடும் துளசிப் பூவே' என்று தொடங்கும் இடத்துல எஸ்.பி.பி ஜிவ்வுன்னு ஒரு பிச் ஏத்தி பாடுவார். ரொம்ப அழகா இருக்கும். ப்ரீத்தி விஜயகுமார் சரணத்தில் தலையை ஆட்டிக்கொண்டே பாடலை ரசிப்பார். அந்த இடத்தில் இசை நம்மையும் தலையை ஆட்ட வைக்கும் நிச்சயம். சரி பாட்ட போடும்யான்னு சொல்றீங்களா..இதோ..




*நட்சத்திரம்* - ஏங்குதே மனம்....இந்த நாளிலே..

எல்லா கிராமத்தை போலவே என் கிராமமும் ஒரு சுறுசுறுப்பான கிராமம். மொத்த கிராமமும் 5 மணிக்கே எழுந்து விடும். அம்மா எழுந்து முற்றம் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருப்பார்கள். அப்பா வீட்டு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்த்துக் கொண்டிருப்பார்கள். சேவல் கூவுகிறதோ இல்லையோ எங்கள் ஊர் மில் 6 மணி சங்கு சரியாக அடிக்கும். 'ஏல ராஜா! சங்கு அடிச்சப்புறமும் தூங்கறான் பாரு. எழுந்திரு' அம்மா என்னை எழுப்பிக் கொண்டிருப்பார்கள். ஊரில் முக்கால்வாசி பேர் வீட்டில் கடிகாரம் இருக்காது. எங்க ஊர் நூற்பாலை சங்கு தான் கடிகாரம். அதை கேட்டு, பேசத்தெரிந்த எந்த குழந்தையும் சரியாக நேரம் சொல்லும்.

ஊரில் பாதி பேருக்கு வேலை கொடுத்து வந்தது அந்த நூற்பாலை. அப்பா ஒரு சைக்கிள் கடையில் கணக்கு எழுதும் வேலை பார்த்து வந்தார்கள். கணக்காப்பிள்ளை வீடு என்றால் எல்லோருக்கும் தெரியும். ஆறு, ஏரி என்று நீர்வளம் எதுவும் கிடையாது.நிலத்தடி நீர் தான் ஆதாரம். ஊரை சுற்றி தென்னை தோப்புக்கள், புளிய மரங்கள். தூரத்தில் இருந்து பார்த்தால் பச்சை பசேல் என்று இருக்கும். ஊரில் நுழைந்தவுடன் வரவேற்கும் மாரி அம்மன் கோவில். அதை தாண்டி சுப்ரமண்ய சாமி கோவில். அதை ஒட்டி கத்தோலிக்க தேவாலயம். இப்படி 40 வீட்டிற்கு 3 கோவில்கள்.

ஆண்கள் வேலைக்கு சென்றாலும், வீட்டிற்கு வீடு ஏதாவது வேலை நடந்து கொண்டிருக்கும். பொதுவாக பனை சார்ந்த தொழில்கள்.கிராமத்தை ஒட்டி தேரி (பனங்காடு) என்பதால், காலையிலேயே பெண்கள் ஒரு அருவாளையும், தூக்குசட்டியில் கொஞ்சம் கஞ்சியையும் எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள். அந்த கஞ்சிக்கும், வெங்காயத்துக்கும் ஆசைப்பட்டு நானும் அம்மா கூட நிறைய தடவை போயிருக்கிறேன். ஒரு 6 கி.மீ காட்டுக்குள் நடந்து போவோம். எங்கும் பரவி கிடக்கும் செம்மண். நிழலுக்கு ஒதுங்க கூட பனையை விட்டால் வேறு மரங்கள் கிடையாது. மழை பெய்து விட்டால் அவ்வளவு தான். ஒரு பனை ஓலையை தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருப்போம். மதியம் சாப்பிட கொண்டு போன கஞ்சியும் கடித்து கொள்ள வெங்காயமும் தேவாமிர்தம். முடித்துவிட்டு கிளம்பும் போது தான் ஏண்டா போனோம் என்று இருக்கும். கொண்டு போன துண்டை சுற்றி தலையில் வைத்து ஒரு கட்டு ஓலையை தூக்கிவிட்டு விடுவார்கள். அந்த சுமையுடன் 6 கி.மீ நடக்க வேண்டுமே. ஊர் கண்ணில் தெரிந்து விட்டால் அப்படி ஒரு சந்தோசம். அப்போ அப்போ வழியில் கண்ட காளான்கள், விழுந்து கிடக்கும் பனம்பழம், முளைத்த பனங்கொட்டை என்று அள்ளி வருவதுண்டு. வந்து சேர்ந்ததும் காளானை சுட்டு தின்போம். அம்மா பனம்பழம் சுட்டு அருவாளால் கொத்தி சின்ன சின்னதாக கொடுப்பார்கள். அந்த வாசனைக்கே சுத்தி இருக்கிற அத்தை, சித்தி எல்லோரும் வந்துவிடுவார்கள். எல்லோரும் சுற்றி இருந்து பேசிக்கொண்டே தின்று கொண்டிருப்போம்.

இதை போல சில வீடுகளில் தென்னை ஓலையை வைத்து கீற்று முனைவார்கள். எப்படியோ தினமும் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும். எவருக்கும் பெரிய ஆசைகள், கனவுகள் கிடையாது. சந்தோசம். அது மட்டுமே நிறைந்த கிராமம் அது. சண்டைகளும் உண்டு. அருவாள் வரையும் போகும். ஆனால் வெட்டியது எல்லாம் கிடையாது. சும்மா 'ஏய்! வெட்டிருவேனாக்கும்' என்பதோடு சரி. அதுவும் பெரியவர்களை தாண்டி வராது. அந்த சண்டையும் பொதுவாக சின்ன பசங்க எங்களால் முடிவுக்கு வரும். 'வா! ராஜா! உள்ள வா! எதுக்கு வெளியயே நின்னுக்கிட்டு இருக்க. மருகப்புள்ளைக்கு என்னோட சேர்த்து சாப்பாடு போடுடீ' என்று நேற்று அருவாளை தூக்கிய மாமா வீட்டுக்குள் கூப்புடும் போது, தயங்கி தயங்கி போனதுண்டு. சாப்பிட்டு விட்டு வந்து பயந்துகொண்டே 'அம்மா! மாமா வீட்டுல உள்ள கூப்பிட்டாங்க. சாப்பிட்டுட்டு வந்தேன்' என்று கூறியதுண்டு. 'அவன மாதிரி எவனுமே பாசமா இருக்க மாட்டானுங்கடா' அம்மா மாமாவுக்கு நற்சான்றிதழ் கொடுப்பார்கள். ரெண்டாவது நாள் மாமா எங்க வீட்டுல சாப்பிட்டுக்கிட்டு இருப்பார். இப்படி நகமும் சதையுமாக பின்னி பிணைந்த உறவுகள்.

ஊரில் ஒருவருக்கு சுகமில்லை என்றால், ஊர் மொத்தமும் போய் விசாரிக்கும். ஒருவர் வீட்டில் மாடு கன்று ஈன்றதென்லால், ஊரில் எல்லார் வீட்டிற்கும் சீம்பால் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். சின்ன விசேஷம் என்றாலே திருவிழா கோலம் தான். திருமணம் ஆகட்டும், கோவில் திருவிழா ஆகட்டும். அத்தனையும் வாழ்க்கையின் அர்த்தம் சொல்லும். வில்லுப்பாட்டு, பாவை கூத்து என்று விடிய விடிய உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்போம். பக்கத்து ஊரில் திரைப்படம் போடுறாங்க என்று பாய் தலையனை சகிதமாக கிளம்பிய காலங்கள் அவை.

ஒவ்வொரு வீட்டிலும் இருந்து அரிசி, பருப்பு, எண்ணை என்று கொண்டு வந்து மொத்தமாக புளியமரத்தடியில் அம்மா, சித்தி, அத்தை என்று எல்லோரும் சேர்ந்து கூட்டாஞ்சோறு சமைப்பார்கள். எல்லோரும் மொத்தமாக மரத்தடியில் அமர்ந்து உண்போம். பௌர்ணமி இரவு சின்னப் பசங்க நாங்க எல்லோரும் சாப்பாட்டு தட்டை தூக்கிக்கொண்டு தெருவில் மொத்தமாக நிலா வெளிச்சத்தில் அமர்ந்து உண்போம். அது தான் நிலாச்சோறு. இன்று நிலவை பார்த்தே நாளாச்சு.

மின்சாரம் முக்கால்வாசி வீட்டில் கிடையாது. நான் மின்சார விளக்கில் முதன் முதல் படித்தது எனது கல்லூரி இறுதி ஆண்டில் தான். மண்ணெண்ணையில் எரியும் திரி போட்ட பழைய இங்க் பாட்டில் தான் எங்கள் விளக்கு. சமயத்தில் தெரு விளக்கில் அமர்ந்து படித்ததுண்டு. மூளையை மழுங்கடிக்க, நேரத்தை வீணடிக்க தொலைக்காட்சி எவர் வீட்டிலும் கிடையாது. மாலை ஆகிவிட்டால், பெண்கள் அனைவரும் வீட்டிற்கு வெளியே அமர்ந்து கதைத்து கொண்டிருப்பார்கள். நாங்கள் அந்த இருட்டிலும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருப்போம். வெறும் காடு தான். இருட்டுக்கும் பயம் கிடையாது. பாம்புக்கும் பயம் கிடையாது. முள்ளிற்க்கும் பயம் கிடையாது. காலில் குத்திவிட்டால் புடுங்கி போட்டுட்டு ஓடிக்கிட்டே இருப்போம். அப்படியும் ஏதாவது வெட்டிவிட்டால், கொஞ்சம் மஞ்சளும் உப்பும் வச்சி ஒரு கட்டு. ரெண்டாவது நாள் காயம் இருந்த இடம் தெரியாது.

சில ஆண்கள் குடித்து வருவதுண்டு. ஊருக்குள் வரும்போதே வசனம் பட்டையை கிளப்பும். எல்லாம் ஊருக்கும் வரும் போது தான். பெண்கள் யாராவது சத்தம் போட்டால், கை எடுத்து கும்பிட்டு விட்டு 'யக்கா! மன்னிச்சிருங்கக்கா' அப்படின்னு சத்தம் இல்லாமல் போய்விடுவார்கள். ஒருவருக்கொருவர் மரியாதை அப்படி வைத்திருப்பார்கள்.

மழைக்காலத்தில் எங்கு பார்த்தாலும் புதிதாய் முளைத்த செடிகள். விதவித புட்டான்கள்(தட்டான்), சிவப்பு பட்டு பூச்சிகள் என்று கிராமம் புதுக்கோலம் பூணும். மழையில் காடுகளில் முளைத்த செடியில் தக்காளி, செண்டு, கத்தரி என்று பிடுங்கி வீட்டில் நட காடு காடாய் அழைந்து கொண்டிருப்போம். வீட்டிலேயே சின்ன தோட்டம். காலையிலே எழுந்தவுடன் தக்காளி மொட்டு விட்டதா, செண்டு பூத்ததா, சுரை ஒழுங்காய் படர்கிறதா என்று பார்பதிலே தான் எவ்வளவு சந்தோசம். சுடக்கு தக்காளி, புட்டு முருங்கை என்று காடு எங்கிலும் வித விதமான பழங்கள். தேடி தேடி தின்பதில் தான் என்ன ஒரு சுகம்.


நூற்பாலையை மூடிய போது, என் கிராமம் கொஞ்சம் கலைந்து போனது. பிழைப்புக்கு வழியில்லாமல் சில குடும்பங்கள் இடம் பெயர்ந்து போனது. சில வருடம் வானம் பொய்த்து போனதில், தென்னை மரங்களும், தோட்டங்களும் தாக்கு பிடிக்க முடியாமல் மடிந்து போயின. ஊரே வெறிச்சோடி போனது. சிறுவர்கள் நாங்கள் தலை எடுத்த போது, ஒவ்வொரு வீட்டின் பொருளாதார நிலை கூடி போனது. ஒருவருக்கொருவர் எதிர்ப்பார்ப்புகள், உதவிகள் தேவைப் படாமல் போனது. வீட்டுக்கு வீடு ஆழ்குழாய் கிணறுகள். நாங்கள் நீந்தி விளையாண்ட கிணறுகள் குப்பை தொட்டிகளாய் போயின. எங்கும் பாலித்தின் கவர் வந்து பனை தொழிலை அழித்துப் போனது. பனை ஓலையில் மிட்டாய் வாங்கினால் டீசண்ட் இல்லை என்று டி.வி கற்று கொடுத்தது. ஒரு கிரிக்கெட் மட்டையிலும், பந்திலும் மொத்த விளையாட்டும் அடங்கி போனது. கோலிக்காய், பம்பரம், மரம் ஏறி குரங்கு, கில்லி காணாமல் போயின. கேபில் டி.வி சனியனால், பக்கத்து வீட்டு அரட்டைகள் தேவையற்றதாய் போனது. வில்லுப்பாட்டும் பாவை கூத்தும் போரடித்து போயின. வீட்டுக்குள்ளேயே முடங்கி போனது வாழ்க்கை.

இன்று என் கிராமம் தன் அடையாளங்களில் முக்கால்வாசியை இழந்து போனது. இன்றும் அங்கே அங்கே முளைத்த தக்காளி செடிகளும், படர்ந்து கிடக்கும் புட்டு முருங்கையும் அப்படியே இருக்கிறது. பறிப்பதற்கு தான் எவருக்கும் மனம் இல்லை.

Tuesday, February 07, 2006

*நட்சத்திரம்* - மலரே...குறிஞ்சி மலரே (இறுதி பாகம்)

இதை படிச்சிட்டு வாங்க

கடிதம் வந்ததில் இருந்து மலரை எப்போ பார்ப்போம் என்று இருந்தது. எல்லா சந்தோசமும் திங்கள் கிழமை வரை தான். இந்த கடிதம் எல்லாமே பசங்க செட்டப் தான் என்று தெரிந்த போது ரொம்பவே நொந்து போனேன். அதற்கு மூலக்காரணமே பாலா தான் என்று அறிந்த போது ரொம்பவே என்னை வைத்து விளையாடிட்டானுங்க என்று தெரிந்தது. 'டேய்! சந்தனம். ஜோசப் தான்டா அப்படி ஒரு வெளாட்டு பண்ணலாம்னு சொன்னான். லெட்டர் எழுதியது அவன் தான்டா. சாரிடா'. 'டேய் அவ எப்படிடா லெட்டர் போடுவா. அதுவும் ஊரே பார்க்கிற மாதிரி எந்த பொண்ணாவது போஸ்ட் கார்டுல எழுதுமாடா. அறிவு கெட்டவனே' பாலா செய்வதையும் செய்துவிட்டு என்னை திட்டினான். 'ஆமான்டா எனக்கு அறிவு கெட்டு தான் போச்சு' வேறெதுவும் சொல்ல தோன்றவில்லை.

மலர் வழக்கம் போல என்னிடம் பேசுவாள். இயற்பியல் செய்முறை வகுப்புகள் எங்கள் நட்புக்கு ரொம்பவே உதவியது. மலர் பக்கத்திலேயே உள்ள எக்ஸ்பரிமென்ட் வந்து விட்டால், அன்று அவ்வளவு தான். நான் ஏதாவது வேண்டுமென்றே சொதப்புவதும், மலர் என்னை செல்லமாக திட்டிக்கொண்டே உதவி செய்வதும், மறக்க முடியாத நாட்கள் அவை. பசங்களை சொல்லவும் வேண்டுமா?. 'டேய்! சந்தனம். அது எப்படிடா மலர் பக்கத்துல வந்துட்டா நீ அப்படி சொதப்புற. ம்..நடத்து நடத்து'. இப்படி எங்கள் நட்பு வேறுன்ற ஆரம்பித்தது. நான் வகுப்பு போகாவிட்டால் எழுதி கொடுப்பது, பரிட்சைக்கு முக்கிய வினாக்கள் சேகரித்து கொடுப்பது என்று மலருக்கு நான் ரொம்பவே நட்பாகி போனேன்.

'இன்னும் எதுக்குடா சொல்லாம இருக்குற. நேர்ல சொல்ல முடியலன்னா, ஒரு லெட்டராவது கொடுடா. லெட்டர் எழுதனும்னா நம்ம ஜோசப் கிட்ட வேணும்னா ஐடியா கேளுடா' பாலா அடிக்கடி என்னை கேட்க ஆரம்பித்தான். ஒரு நாள் கடிதம் எழுதியே விட்டேன். நானும் பாலாவும் செமஸ்டர் பரிட்சையை பாதியில் கட் அடித்துவிட்டு மலருக்காக காத்திருந்தோம். 'டேய்! அவ வெளியே வரும் போது நான் பேச்சு கொடுத்து நிறுத்தறேன். அப்புறம் உன் கைல தான் இருக்கு' பாலா திட்டம் வகுத்தான். மலரும் பரிட்சை முடித்துவிட்டு வெளியே வந்தாள். 'என்ன மலர்! எக்ஸாம் எல்லாம் எப்படி?' பாலா ஆரம்பித்தான். நான் அவன் பின்னாடி பைக்கில் பையில் லெட்டரோடு. 'ஈஸியா இருந்தது பாலா. உனக்கு எப்படி. சந்தனம் உனக்கு எப்படி. தேறுமா' சிரித்தாள். 'நாங்க ரெண்டு பேரும் சென்டம் அடிச்சிருவோம்னு பாதில வரும் போதே மோகன் சார் சொல்லிட்டார்' பாலா பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தான். அதுவரை தைரியாமாக இருந்த எனக்கு லெட்டரில் கை வைத்ததும் எல்லா தைரியமும் ஓடி விட்டது. சுற்றி எல்லோரும் என்னையே பார்ப்பது போல இருந்தது. 'டேய் குடுடா..குடுடா' மலரிடம் பேசிக்கொண்டே கை முட்டியால் என்னை இடித்தான் பாலா. 'சரி பாலா! சந்தனம் நான் வரேன். பஸ்ஸுக்கு நேரம் ஆச்சு' மலர் போய் விட்டாள்.

'போடா! எதுக்குடா குடுக்கலை. உன்ன நம்பி வம்பா ஒரு அரியர்ஸ் வேற வாங்கியாச்சு' திட்டினான் பாலா. 'இல்லடா! பாலா. ஒரு வேள மலருக்கு என்ன புடிக்காம போய் என்கிட்ட பேசாம போய்ட்டா, என்னால தாங்க முடியாதுடா. இன்னும் ஒரு வருடம் இருக்கு. என்னால அந்த இழப்பை தாங்க முடியாதுடா' மலர் என்னுள் எவ்வளவு படர்ந்து விட்டாள் என்று எனக்கே இப்போது புரிந்தது.

இறுதி ஆண்டும் வந்தது. மலரின் அண்ணன் கல்யாணம் என்று எங்கள் வகுப்புக்கு விடுமுறை. எல்லோரும் மலரின் வீட்டிற்கு முதன் முதலாக சென்றோம். அன்பான குடும்பம். மலர் எல்லோரையும் விழுந்து விழுந்து கவனித்து கொண்டாள். அவளது இரு தங்கைகளையும் ரொம்பவே விரட்டி வேலை வாங்கி கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் நான் தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தேன். அவள் வீட்டில் எல்லோரும் அவள் மேல் காட்டிய பாசம், அவள் அந்த வீட்டின் தேவதை என்று அழகாக காட்டியது. என்னை மட்டும் அழைத்துப்போய் அவள் அம்மா அப்பாவிடம் சிறப்பு அறிமுகம் செய்த போது, நான் மலருக்கு ஏதோ ஒரு பந்தத்தில் நெருங்கியவனாகிய போனது நன்றாகவே தெரிந்தது. அந்த பந்தம் நட்பா, காதலா?. முடிவு செய்ய முடியாமல் தவித்தேன்.

கடைசி செமஸ்டரும் வந்து சேர்ந்தது. எல்லோரும் சேர்ந்து கொடைக்கானல் சுற்றுலா போகலாம் என்று முடிவானது . மூன்று நாள் கொடைக்கானலில். இன்று நினைத்தாலும் இனிக்கும் நாட்கள். நானும் மலரும் மூன்று நாளும் சேர்ந்தே சுற்றினோம். பேச நினைத்ததை எல்லாம் மொத்தமாக மூன்று நாளில் பேசி தீர்த்தேன். என் காதல் மட்டும் மனசுக்குள்ளேயே தங்கி போனது. இரண்டு பேரும் சேர்ந்தே சுற்றிய போது, மனோ சாரே கேட்டார், 'என்னப்பா சந்தனம். என்ன மேட்டரு' 'ஒன்னும் இல்ல சார்' சிரித்து மழுப்பினேன்.

கல்லூரி இறுதி நாட்களும் வந்து சேர்ந்தது. எல்லோர் கைகளிலும் வண்ண வண்ண ஆட்டோகிராப் புத்தகங்கள். இந்த மூன்று வருடத்தில் கிடைத்த சந்தோசங்களும், நட்புகளும் இன்னும் சில நாட்களில் பறி போகப் போகும் கவலை எல்லோர் முகத்திலும். என் மனதில் இருப்பதை சொல்ல இன்னும் சில நாட்களே இருந்தது. இனி சொல்லி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்ல முடிவு செய்தேன். மலர் என்னுடைய ஆட்டோகிராப்பை எழுதி திருப்பி கொடுக்கும் போது சொல்லியே விட்டேன். 'இல்ல சந்தனம். நீ எனக்கு எப்பவுமே ப்ரண்ட் தான். என்னோட பெஸ்ட் ப்ரண்ட். நான் அந்த எண்ணத்தோட எப்பவுமே உன்னிடம் பழகவில்லை' மூன்றே வார்த்தையில் முடித்து விட்டாள். அவள் கொடுத்த ஆட்டோகிராப்பை திறந்து பார்த்தேன் 'உன்னுடைய பால் போன்ற தூய்மையான நட்பை என்றும் மறவாத - மலர்' என்றிருந்தது..

அதன் பிறகு மலரை தொடர்பு கொள்ள மனது கேட்கவில்லை. பிறகு வேலை தேடுவதிலேயே வருடங்கள் ஓடி விட்டது.

'சார்! காபி! காபி' குரல் கேட்டு எழுந்தேன். வண்டி மணியாச்சியை நெருங்கி கொண்டிருந்தது. இன்னும் விடியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் நெல்லை வந்து விடும். மேலே இருந்து இறங்கி பெட்டியை எடுத்து இறங்க தயாரானேன். மலரை எட்டிப் பார்த்தேன். இன்னும் தூங்கி கொண்டிருந்தாள். இத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் என்னிடம் தான் அதே உரிமை, அதே பேச்சு. நான் வாழ்க்கையில் இழந்தது கொஞ்சம் பெரிதாகவே பட்டது. மலரிடம் சொல்லாமல் செல்ல மனசு வரவில்லை. தொட்டு எழுப்பவும் உரிமை இல்லாமல் நின்று கொண்டிருந்தேன். 'மலர்' கூப்பிட்டுப் பார்த்தேன். எந்திரிப்பது மாதிரி தெரியவில்லை. இவ்வளவு நாள் கழித்து பார்த்துவிட்டு சொல்லாமல் போவது ஏனோ மனசை பிழிவது மாதிரி இருந்தது. நெல்லையும் வந்து விட்டது. 'தம்பி! எறங்குப்பா' பின்னாடி நிற்பவர்கள் அவசரப் பட்டார்கள். மலர் என் வாழ்வில் இருந்து மொத்தமாக போய்விட்டதை உணர்ந்த போது, சட்டென்று வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு இறங்கி நடக்க ஆரம்பிக்கிறேன். ரயில் என்னை விட்டு போய் கொண்டிருக்கிறது, என் மலரோடு.

(முற்றும்)

Monday, February 06, 2006

*நட்சத்திரம்* - மலரே...குறிஞ்சி மலரே !

ஒரு வழியாக அலுவலகத்தில் விடுப்பு வாங்கி விட்டேன். பொங்கலுக்கு ஊருக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். இந்த நெரிசல் நகரத்தில் இருந்து கிராமத்துக்கு போவது தான் என்ன ஒரு சந்தோசம். ஒரு வழியாக ஆட்டோக்காரனிடம் ரேட் பேசி தாம்பரம் இரயில் நிலையம் வந்து சேர்ந்தேன். பொங்கல் என்பதால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வந்ததும் ஏறி லக்கேஜுக்கு ஒரு இடத்தை கண்டுபுடித்து தள்ளிவிட்டு என் இருக்கையில் அமந்த்தேன். எதிரில் வயதான தம்பதிகள். என்னை பார்த்ததும் லேசாக புன்னகைத்தார்கள். 'தம்பி ஒங்களுக்கு லோயர் பெர்த்தா. கொஞ்சம் அப்பர்ல படுத்துக்க முடியுமா' அந்த பெரியவர் கேட்டார். 'சரிங்க. படுக்கும் போது சொல்லுங்க'. இன்னும் ஒரு சீட் காலியாகவே இருந்தது. 'பையனுக்கு லீவு கெடைக்கல. ரெண்டு நாள் கழிச்சி தான் வரேன்னு சொன்னான். அதான் மருமகள கூட்டிக்கிட்டு பொங்கலுக்கு ஊருக்கு கெளம்பறோம்' என்றார். பொதுவாக ஒரே ஊர்காரர்களை ஒரே இடத்தில் பார்த்தால் இந்த மாதிரி விசாரிப்புகள் எப்போதும் இருக்கும். 'மருமக ஏதோ அவ ப்ரண்ட் பக்கத்து பொட்டில பார்த்தாளாம். அதான் பேசிட்டு வர்றேன்னு போய்ருக்கா'. ரொம்ப உரிமையாக பேசிக்கொண்டு வந்தார்.

கொஞ்ச நேரம் கழித்து மருமகள் வந்தாள். அவள் மலர். என் கல்லூரி தோழி. கல்லூரி முடிந்தவுடன் மறைந்து போன, மறந்து போன எத்தனையோ நட்புகள். யாரையாவது மறுபடி பார்க்க மாட்டோமா என்று நான் அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் மலரையே பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. அவளுக்கும் ஆச்சர்யம். 'சந்தனம்! எப்படி இருக்கீங்க' முகத்தில் ஆச்சர்யம் கலந்த சந்தோசம். பக்கத்திலேயே அவளது மாமனார்-மாமியார். 'நீங்க' என்று ஆரம்பிப்பதா, 'நீ' என்று ஆரம்பிப்பதா என்ற சின்ன தடுமாற்றத்துடன் 'நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க' நான். என்னிடம் இன்னும் அதே புன்னகை. அதே விசாரிப்புகள். கல்லூரியில் என் நெருங்கிய தோழி அல்லவா. கிட்டத்தட்ட 5 வருடம் கழித்து இருவரும் பார்க்கிறோம். என்னைப் பற்றி விசாரித்துக் கொண்டே வந்தாள். 'எங்கே இருக்குறீங்க ! என்ன வேலை! எப்போ வேலை கெடைச்சது! கல்யாணம் ஆயிடுச்சா' என்று விசாரிப்புகள் நீண்டு கொண்டே போனது.

சில வருடங்களில் வாழ்க்கை தான் எப்படி மாறிவிட்டது. என் நினைவுகள் கொசுவத்தி சுருளாய் பின்னோக்கி சுழன்றன.

பன்னிரண்டாம் வகுப்பில் மதிப்பெண்ணில் சாதிக்க முடியாமல் கடைசியில் எனக்கு கிடைத்தது எங்க ஊர் கல்லூரியில் இயற்பியல் துறை தான். பசங்க பள்ளிக்கூடத்தில் படித்து விட்டு கல்லூரியில் ஒரே தாவணியா பார்த்த போது அசந்து தான் போனோம். மற்ற துறை மாணவர்கள் பொறாமை படும் அளவுக்கு எங்கள் வகுப்பில் நிறைய பெண்கள். பசங்களில் நிறைய பேர் ஏற்க்கனவே பாய்ஸ் ஸ்கூலில் வருடக் கணக்கில் ஒன்னா குப்பை கொட்டியவர்கள் தான். சுத்தி இருக்கும் அத்தனை ஊருக்கும் அது ஒன்று தான் கல்லூரி.

எல்லோருக்குமே பொண்ணுங்க கிட்ட முதல்ல பேச சின்ன தயக்கம். அப்புறம் பாலா தான் தொடங்கி வைத்தான். 'ஏல! நாம எல்லாம் ஒரே வகுப்புடா. எல்லோரும் நம்ம ப்ரண்ட்ஸ்டா. மூனு வருசம் ஒண்ணா தான் படிக்க போறோம். பட்டிக்காட்டன் முட்டாய் கடைய பாத்த மாதிரி முழிக்காதீங்கடா. பேசுங்கடா' எங்கள் பேச்சு வார்த்தையை ஆரம்பித்து வைத்தான். அப்படி நான் முதலில் பேசியது மலர்விழியிடம் தான். செய்முறை வகுப்பில் நான் வயரை மாற்றிக் கொடுத்து முழித்துக் கொண்டிருந்த போது 'சந்தனம்' என்று ஒரு குரல். குரல் வந்த திசையை எட்டிப்பார்த்தேன். மலர் நின்று கொண்டிருந்தாள். 'நீ தப்பா கொடுத்திருக்க. அதான் வேலை செய்யலை' அவளே எல்லாம் சரி செய்து கொடுத்த போது, ஏதோ ஒரு நெருக்கத்தை உணர்ந்தேன். மனசுக்குள் சில பட்டாம்பூச்சிகள் பறக்கத் தான் செய்தது.

அப்புறம் வகுப்பு முடிந்தவுடன் கிணத்தில் போட்ட கல்லு மாதிரி பின் தங்கி மலர் கிளம்பும்போது எதேச்சையாக கிளம்புவது போல கிளம்பி மலரிடம் பேசிக்கொண்டே வர ஆரம்பித்தேன். நான் அடித்து பிடித்து கடைசி பெஞ்சில் இடம் பிடித்த போது 'டேய் சந்தனம்! உன் ஒயரத்துக்கு பின் பெஞ்ச் எதுக்குடா. தூங்கணும்னா முன் பெஞ்சில ஒங்காந்தே தூங்குடா. மனோ சார் ஒன்னும் சொல்ல மாட்டாங்க' பாலா இடம் கொடுக்காமல் அடம்பிடித்தான். நான் பின் பெஞ்சிக்கு ரொம்பவே முரண்டு புடிக்க, மோப்பம் புடிச்சிட்டான். 'டேய் சந்தானம்! கத இப்படி போகுதா. நடத்து நடத்து'. இது போதாதா அத்தனை பசங்களுக்கும் சேர்ந்து அவனுங்களே வகுப்பில் ஒரு காதல் கதை ரெடி. அதுல ஹீரோவா என்னை போட்ட போது 'டேய்! ஒன்ன ஏத்தி வுடுறானுங்கடா. ஒனக்கு ஒத்து வராத வேலடா இது' அப்படின்னு உள்மனசு சொன்னது. ஆனால் அதை கேட்கும் நிலமையில் நான் இல்லை. 'டேய் பாலா! அவளுக்கு என்ன புடிக்குமாடா'ன்னு நானே உளறியபோது என்னை அறியாமல் நான் ஒத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

அதில் இருந்து பசங்க ஒவ்வொரு விசயமா சேகரித்து கொடுக்க ஆரம்பித்தார்கள். மலரோட அப்பா என்ன பண்ணுறார். கூட பொறந்தவங்க எத்த பேரு. இப்படி பல விவரங்கள். 'எல்லாம் சரிடா! மலருக்கு என்ன புடிக்குமா'. கேட்டுட்டா போச்சி. ஆசிரியர் இல்லாத நேரம் பார்த்து பாலா 'எப்பா! நம்ம சந்தனம் மலர லவ் பண்ணராம்பா. என்ன சொல்றீங்க' அப்படின்னு எல்லோருக்கும் கேட்கிற மாதிரி கத்த நான் ஆடி போனேன். சரி மொத்தமா சமாதி கட்டிட்டான். கொஞ்ச நஞ்சம் பேசுறதுக்கும் மூடு விழா நடத்திட்டான் என்று தான் நினைத்தேன். மலரை லேசாக எட்டி பார்த்தேன். கொதித்துக்கொண்டிருப்பாள் என்று நினைத்தால் குளிர்நிலவாய் ஒரு புன்னகையுடன் அமர்ந்திருந்தாள். 'உன் ஆள பாருடா. இந்நேரத்துக்கு பண்ணி இருக்கிற வேலைக்கு, நான் பிரின்சிபால் முன்னாடி கை கட்டி நின்னுக்கிட்டு இருக்கனும். அவ சிரிக்கிறாடா. போய் தைரியா சொல்லுடா'. 'என் ஆள்' இந்த இரண்டு வார்த்தையில் தான் எவ்வளவு போதை. பாலா எனக்கு உதவி செய்வதாகவே பட்டது.

அன்று சனிக்கிழமை. வீட்டிற்கு என் பெயருக்கு ஒரு போஸ்ட் கார்ட். உருகி உருகி காதலில் நனைந்து போய் இருந்தது. இறுதியில் 'சந்தனம்! இது 15 பைசா கார்டு கிடையாது. என்னோட வாழ்க்கை. உன் முடிவுக்காக காத்திருக்கும்' அப்படின்னு ஒரு பூ படம் மட்டும் போட்டிருந்தது. கையெழுத்து எதுவும் இல்லை. என்னால் நம்பவே முடியலை. நம்ப சொல்லி காதல் பித்து பிடித்த மனசு சொன்னது. அன்று முழுவதும் சாப்பாடே இறங்க வில்லை . அடுத்த நாள் பாலா வீட்டுக்கு போய் காட்டினேன். 'டேய். சந்தேகமே இல்லை. பூ படம் போட்டிருக்குல்லா. மலர் தான்டா. கலக்கிட்டாடா சந்தனம்'. உலகமே என் காலடிக்குள் கிடப்பது போல் ஒரு சந்தோசம்.

(இறுதி பாகம் அடுத்த பதிவில்..கதையின் நீளம் கருதி மட்டுமே)

Sunday, February 05, 2006

*நட்சத்திரம்* - இன்று முதல்...

வணக்கம் நண்பர்களே! நல்லாருக்கியலா! ஒங்க நேரம் இந்த வார நட்சத்திரம் அடியேன் தான் :-). முப்பது பதிவே இன்னும் தாண்டலை. அதுக்குள்ள மதி அவர்களிடம் இருந்து நம்ம குமரனுக்கு ஒரு மடல் 'சிவா மெயில் ஐடி கொடுங்க' என்று. அதை குமரன் எனக்கு அனுப்பிய போது என்னால் நம்ப முடியவில்லை (எல்லோரும் இதையே தான சொல்றாங்கன்னு சொல்றீங்களா..உண்மை அது தானே). அப்புறம் மதி என்னிடம் நட்சத்திரம் ஆக இருக்கறீங்களான்னு கேட்ட போது, மறுக்க முடியல. வாரம் ஒரு பதிவு, அதிகமா போனா 10 பின்னோட்டம் என்று ப்ளாக் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருந்தது. தினமும் பதியணும்னு சொல்றாங்க, முடியுமா. சரி முயற்சி செய்து பார்க்கலாம் என்று ஆரம்பிக்கிறேன். கிடைத்த வாய்ப்பு அரிய வாய்ப்பு அல்லவா.

எனக்கு இந்த வாய்ப்பு அளித்த மதி கந்தசாமி அவர்களுக்கும், காசி சாருக்கும் முதலில் என்னோட நன்றிய தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நிறைய எழுதியிருக்கிறேன் என்றெல்லாம் பொய் சொல்லலைங்க. பத்தாப்பு படிக்கும் வரை தான் முழுசா நாலு வார்த்தை தமிழில் எழுதியது. அப்புறம் அம்மா அப்பா ஆசை படறாங்கன்னு இங்கிலீசு மீடியத்துல தூக்கி போட்டாங்க. அத்தோட தமிழும் போச்சி. ஆங்கிலமும் போச்சி. ப்ளாக் என்பது தெரியும் முன்னமே அல்வா சிட்டி விஜய்யின் இனையம் அறிமுகம் ஆனது. அடடே நல்லா இருக்கே. மக்கள் எல்லாம் படிச்சி பாக்கறாங்களேன்னு தேடி பார்த்ததில் கிடைத்தது தான் ப்ளாக்கர். இளையராஜாவின் திருவாசகத்திற்கு குமரன் பொருள் எழுதி கொடுத்த போது, மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஆரம்பித்தது தான் சிவாபுராணம். அப்புறம் நம்ம ஓணான் அடித்த கதை, ஊர் கதை எல்லாம் எழுத ஆரம்பித்தேன். இப்போ இங்கே வந்து நிக்குது. சரி குமரனையும் உள்ளே இழுத்து போடலாம்னு நான் தான் அவரையும் ப்ளாக் ஆரம்பிக்க வச்சி அவரு தூக்கத்தை கெடுத்தேன். இப்போ 10, 15 ப்ளாக் வச்சிக்கிட்டு மனுசன் எப்படித்தான் மேய்க்கறாரோ.

இளையராஜா மேல் எனக்கு ரொம்ப பைத்தியம். நாள் முழுக்க, வாழ்க்கை முழுக்க அவர் பாடலை கேட்டுக்கொண்டே இருப்பேன். அவர் பற்றி மற்றவர்களுடன் பேச அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்க வில்லை. அதனால் ஆரம்பித்தது தான் கீதம் சங்கீதம். எனக்கு இசை ஞானம் எல்லாம் கெடையாதுங்க. மனசு ரசிக்கிறதை அப்படியே எழுதுகிறேன். நிறைய நண்பர்கள் படித்துவிட்டு நல்லாயிருக்கு என்று சொல்லும் போது ரொம்ப சந்தோசமா இருக்கும். நினைவுகளை பதிய சிவபுராணம், ராஜாவை பற்றி பேச கீதம் என்று இனைய வாழ்க்கை உங்கள் ஆதரவால் திருப்தியா போய்ட்டு இருக்கு.

என்னை பற்றி சொல்லணும்னா, பேரு சிவா தாங்க (புனை பெயர்..பூனை பெயர் எல்லாம் கெடையாது) சொந்த ஊர் நெல்லை (அல்வா...அல்வா) அருகில் ஒரு கிராமம் (நான் சென்னைல வாய தொறந்தாலே 'இன்னாப்பா! சொந்த ஊரு திருநவேலி அண்டயா' அப்படி கேட்டுடுவாவ). கல்லூரி வரை ஊரிலேயே படிப்பு. முதன் முதலாக சென்னைக்கு வந்தது பொறியியல் படிக்க. அப்படியே ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலை. இப்போ தற்காலிகமாக அமெரிக்காவில்.

வேறு என்னத்த சொல்ல. என்னால முடிஞ்ச அளவு சுவாரஸ்யமா கொண்டு போக முயற்சிக்கிறேன். வாழ்த்துவீங்க கண்டிப்பா :-). அப்படியே உங்கள் ஆதரவையும் தொடர்ந்து கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் என் வாரத்தை தொடங்குகிறேன்.

சென்ற வார நட்சத்திரம் தாணு வாரத்தில், ப்ளாக்கர் ரொம்பவே படுத்திட்டு போல. என்னோட வாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லாம இருக்க சாமிய வேண்டிக்கிட்டு ஆரம்பிக்கிறேன்.

அன்புடன்,
சிவா