Wednesday, February 08, 2006

* நட்சத்திரம்* - எனக்குப் பிடித்தப் பாடல்கள்

ஒரு வாரத்துக்கு முன்னாடி நம்ம குமரன் நட்சத்திர வாரத்தில் 'எனக்கு பிடித்த பாடல்கள்' என்று ஒரு பதிவு போட்டிருந்தார்.ஆசையா போய் பார்த்தா, ஏமாத்திப்புட்டாரு. நெறைய பேரு போய் பார்த்துட்டு 'அட போங்க குமரன். ஆசையா ரெண்டு பாட்டு கேக்கலாம்னு வந்தா இப்படி ஏமாத்திப்புட்டியலே' அப்படின்னு சொல்லிட்டு திரும்பி பாக்காம ஓடி போய்ட்டாங்க. அதுல ஒருத்தர் நீங்க என்றால், அப்படியே இந்த பக்கம் வாங்க. நாம பாட்டு கேக்கலாம். என்ன சொல்லுதிய..

(நேத்து வெவரம் தெரியாம இதை கீதம் ப்ளாக்ல நட்சத்திரப் பதிவு என்று போட்டுட்டேன். காசி சார் தான் ஒரு ப்ளாக்ல தான் நட்சத்திரம் பதிவு எழுதணும்னு சொன்னார். அதனால இதை மறுபதிவு செய்கிறேன். ஏற்கனவே படித்தவர்கள், திட்டாதிங்கடே :-))

எஸ்.பி.பி தனி ஆவர்த்தனம் ஆரம்பித்ததில் இருந்து, நம்ம ப்ளாக் ரேட்டிங்ல ஏறிப் போச்சி :-)) . எனக்கு ராஜா மேல இருக்குற கிறுக்கு மாதிரி, நம்ம அகரமுதல சுந்தருக்கு எஸ்.பி.பி மேல கிறுக்கு போல (தப்பா எடுத்துக்காதிய மக்கா!). நாம மொத்தமா ஒரு எஸ்.பி.பி-க்குன்னு ஒரு குரூப் ப்ளாக் ஆரம்பிக்கலாமான்னு கேட்டார். ரெண்டு ப்ளாக்க வச்சி மேய்க்கறதுக்குள்ள உசுரு போயிடுது. வீட்டுல அடிக்கடி பூரிக்கட்டை எல்லாம் பறக்குது. இதுல இன்னொன்னா. நீங்களே ஆரம்பிங்க. நான் கூட்டாளியா வேணும்னா இருந்துக்கறேன்னு சொல்லிட்டேன். அவருக்கு ரொம்ப சந்தோசம். எஸ்.பி.பி...எஸ்.பி.பி- என்று ஒரே புலம்பல் :-). ஒரு வழியா இன்னைக்கு ப்ளாக்க ஆரம்பிச்சாச்சி.

நண்பர்களே! இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னன்னா! நமக்கு எல்லாம் இன்னொரு இசை இணையம் ரெடி ஆகி விட்டது. (ஒம்ம தொல்ல விட்டுதுன்னு சொல்றியலா :-)). எஸ்.பி.பி பாடல்களுக்கென உருவாகி இருக்கும் அந்த ப்ளாக் 'மை எஸ்.பி.பி'. ஒங்க எல்லாத்துக்கும் ஒரு வேண்டுகோள். 'மை எஸ்.பி.பி' ஒரு குரூப் ப்ளாக். உங்க அனைவரிடமும் இருந்து பதிவுகள் வரவேற்கப் படுகின்றன. உங்களுக்கு எஸ்.பி.பி புடிக்கும் தானே, 'மை எஸ்.பி.பி'- (MySPB) ல இடுக்கைகள் இட விரும்பினால், சுந்தருக்கு ஒரு மெயில் அனுப்புங்க (pepsundar@hotmail.com) . இல்லன்னா இங்கே பின்னோட்டத்துல சொல்லுங்க.

அதனால் இனி எஸ்.பி.பி கீதம் ப்ளாக்ல தனி ஆவர்த்தனம் பண்ண மாட்டார். வேணும்னா இந்த ஒரு வாரம் போட்டுங்கோங்க. அப்புறம் போட்டா, சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று சுந்தர் சொல்லிட்டார் (சும்மா தான்) :-). அதானால இன்னைக்கு புடிச்ச பாட்ட, எனக்கு புடிச்ச எஸ்பி.பி யோட 90ஸ்-க்கு அப்புறம் பாடல்கள் வந்த சில கேட்கலாம். இசை!!! ராஜா தான். வேற யாரு.

இதை சிறப்பு 'எஸ்.பி.பி தனி ஆவர்த்தனம்' என்று வைத்துக்கொள்ளுங்கள் (நட்சத்திர வாரம் அல்லவா). சரி தொடங்கலாமா. ஒரு ஐந்து பாட்டு எடுத்துக்கலாம் என்ன. ரொம்ப இசை வித்தை எல்லாம் இல்லாத, பாடல்களாக எடுத்திருக்கிறேன். சும்மா தலையாட்டிக்கிட்டே கேட்கிற மாதிரி ராகம், மயக்கும் எஸ்.பி.பி குரல். இது போதாதா.

முதல் பாட்டு. எஸ்.பி.பி கதாநாயகனாக நடித்த 'பாட்டுப் பாடவா' படத்தில் இருந்து 'சின்ன கண்மணிக்குள்ளே வந்த'. இந்த படமே இசை காவியம் தாங்க. ஒரு பெண் இயக்குனர் இயக்கிய படம். எஸ்.பி.பி உலகமே தெரியாமல் ஒரு மனநிலை குறைந்தவர்கள் காப்பகத்தில் இருப்பார். பின் பெரிய பாடகராக வளர்வார். எஸ்.பி.பி-யின் உடம்பு சைசு தாங்க இந்த படத்த ரொம்பவே சொதப்பிட்டு. அந்த உடம்பை வச்சிக்கிட்டு அவரு சின்ன குழந்தை மாதிரி பண்ணியது ஏனோ மனதில் ஒட்டவில்லை. சரி! இப்போ பாட்டுக்கு வருகிறேன். எஸ்.பி.பி முதன் முதலில் மேடையில் பாடுவதாக வரும் பாட்டு இது. ராஜாவின் மெலோடிக்கென வரும் வழக்கமான தபேலா மெட்டு. பல்லவியில் அப்படியே கூட பேசுவது போல வரும் புல்லாங்குழல் இசை, கூடுதல் மயக்கம் தரும். எஸ்.பி.பி பாடும் போது நம்மை அறியாமல் கண்ணை மூடிக்கொண்டு கேட்க தூண்டும் உருக்கம். கேட்டுப் பாருங்க..





இப்போ ஒரு கலக்கல் பாட்டு. தபேலாவில் இப்படி ஒரு மெட்டா?. அடிச்சி பட்டைய கெளப்பிருப்பாரு ராஜா. 'ராசா மகன்' படத்தில் இருந்து 'வைகாசி வெள்ளிக் கிழம தானே'. உங்கள் கைகள் இந்த பாட்டுக்கு தாளம் போடுவது நிச்சயம். இளம் கதாநாயகர்களில் ராஜா நிறைய நல்ல பாடல்கள் கொடுத்தது பிரசாந்துக்கு தான். அது இயற்கையாக அப்படி அமைந்து விட்டது என்று நினைக்கிறேன். செம்பருத்தியில் இருந்து தொடங்கியது, ராசா மகன், செந்தமிழ் செல்வன், எங்க தம்பி, கண்மணி, ஆணழகன் என்று நிறைய படங்கள். தெலுங்கில் பிரசாந்த்-திவ்யபாரதி நடித்த ஒரு படம் டப் ஆகி ((டப்பா ஆகி இல்லைங்க) தமிழில் 'இளம் நெஞ்சே வா' (பேரு மறந்து போச்சு) என்று வந்தது. அதிலும் பாட்டு கலக்கலா இருக்கும். எலலாமே அத்தனை இனிமையான பாடல்கள் ( நிறைய படங்கள் டப்பாவாகி போய்விட்டது). சரி பாட்ட கேக்கலாம்.





அடுத்ததாகவும் ஒரு பிரசாந்த் பாட்டு. எம்.எஸ்.வி-யும் ராஜாவும் இனைந்து இசை அமைத்தால் சூப்பர் ஹிட்டு என்று ஒரு இலக்கணம் உண்டு. மெல்ல திறந்தது கதவுல ஆரம்பிச்சி வச்சாங்க ( அதுக்கு முன்னாடி சேர்ந்து இசை அமைத்திருக்கலாம் என்று மனசு சொல்லுது. விவரம் தெரியலை). வரிசையா ஹிட். நம்ம வழ வழ வாசு 'செந்தமிழ் பாட்டு' என்று ஒரு படம் பண்ணினார். அதுவும் சூப்பர் ஹிட் (நேரம்யா). அப்புறம் நம்ம ஆளுங்களுக்குத் தான் கதைய விட, செண்டிமெண்ட்-ல தான நம்பிக்கை அதிகம். 'செந்தமிழ் பாட்டு' ஓடின உடன், உடனே 'செந்தமிழ் செல்வன்' என்று ஒரு படம். அதே ராஜா-எம்.எஸ்.வி காம்பினேஷன். 'பேரு வச்சியே..அதுக்கு சோறு வச்சியா' அப்படின்னு நம்ம விவேக் கேக்கிற மாதிரி, பேரு வச்சதோட விட்டுட்டாங்க. படம் ஊத்திக்கிச்சி. சொல்லப் போனா, செந்தமிழ் பாட்ட விட செந்தமிழ் செல்வனில் பாட்டு ரொம்ப அருமையா இருக்கும். நமக்குத் தான் 'படம் ஹிட்டா தான..பாட்ட ஹிட்டாக்கி பழக்கம்' அதனால இந்த படத்துல ராஜா-எம்.எஸ்.வி காம்பினேசம் அவ்வளவா எடுபடலை.ம்ம்ம்ம்

சரி..சரி..பாட்டுக்கு வருகிறேன். 'செந்தமிழ் செல்வன்' படத்தில் இருந்து 'குயிலே..இளமாங்குயிலே'. எஸ்.பி.பி பாடலை தொடங்கும் போதே ஜிவ்வுன்னு மனசுக்குள்ள ஒரு சோகம் ஏறும். அருமையான வரிகள். பாலு பாடும் விதம் அதற்கு மேலும் அழகு சேர்க்கும். மனநிலை தவறி போன தன் தாயை (சுஜாதா) குணப் படுத்துவதற்காக பிரசாந்த் ஒரு கிராமத்துக்கு கூட்டி வருவார். தன் தாய் குணமடைய ஏங்கும் ஒரு மகனின் ஏக்கத்தை அப்படியே கொண்டு வரும் பாட்டு. கேட்டுப் பாருங்கள்.





சிறப்பு பதிவு என்று சொல்லியாச்சி. மூனோட நிறுத்தினா எப்படி. இன்னும் ரெண்டு கேட்கலாம். என்ன சொல்லுதிய..

'என்றும் அன்புடன்' ராஜாவின் கலக்கலான இசையில் வந்த முரளி படம். நல்ல கதை அம்சத்துடன் வந்த ஒரு படம். அருமையான பாடல்கள் ( துள்ளித் திரிந்ததொரு காலம், மஞ்சள் வெயில் நேரமே, நிலவு வந்தது) நிறைந்த படம். சில பாடல்கள் ரொம்ப கவித்துவமாக இருக்கும். பாடல் வரிகளை அமுக்காத எளிமையான இசை. கவிதை கேளுங்கள்.





இறுதியாக, பார்த்திபனை வச்சி வாசு 'காக்கை சிறகினிலே' அப்படின்னு ஒரு படம் பண்ணினார். படம் கெடப்புல கெடந்து ஒரு ரெண்டு மூனு வருசம் கழிச்சி வந்திச்சி. நம்ம மீடீயாக்களுக்கு தான் ராஜான்னா எரியுமே. உடனே சொல்லிட்டாங்க 'பாட்டு எல்லாம் ரெண்டு மூனு வருசத்துக்கு முன்னாடி வந்த மாதிரி பழைய பாட்டு மாதிரி இருக்கு' அப்படின்னு. மூனு வருசத்துக்கு முன்னாடி போட்டா, அப்படித்தானே இருக்கும். பாட்டு நல்லா இருக்கான்னு பார்க்க மாட்டாங்க. 5 பாட்டும் முத்துக்கள்ங்க. படம் கூட ஓ.கே ரகமா இருந்திருக்கும். ஆனா, ஒரு வில்லன் போட்டாரு பாருங்க. நம்ம சும்மா டார்ச்சர் பண்ணிடுவாருங்க. இப்படி ஒரு படத்துக்கு அப்படி ஒரு வில்லன் தேவையா. வாசுவுக்கே வெளிச்சம். படம் வழக்கம் போல (லேட்டாச்சின்னாலே ஊத்திக்கும்) ஊத்திக்கிச்சி.

அத விடுங்க. பாட்டுக்கு வருகிறேன். 'கோலக் கிளியே..கோலக் கிளியே'. பார்த்திபன் ப்ரித்தீ விஜகுமாரை ஒரு கூடைல வச்சி தலைல சுமந்து கொண்டே பாடிக்கொண்டே செல்வார். 'பட்டு முகத்த வானத்துல பதிச்சா நட்சத்திரங்கள் பட்டிமன்றம் நடத்தும். எட்டி நில்லு வெண்நிலவே தூரம் தூரம்' என்று வரிகள் ரொம்ப அழகா இருக்கும். 'ஆடிடும் துளசிப் பூவே' என்று தொடங்கும் இடத்துல எஸ்.பி.பி ஜிவ்வுன்னு ஒரு பிச் ஏத்தி பாடுவார். ரொம்ப அழகா இருக்கும். ப்ரீத்தி விஜயகுமார் சரணத்தில் தலையை ஆட்டிக்கொண்டே பாடலை ரசிப்பார். அந்த இடத்தில் இசை நம்மையும் தலையை ஆட்ட வைக்கும் நிச்சயம். சரி பாட்ட போடும்யான்னு சொல்றீங்களா..இதோ..




22 comments:

சிவா said...

முத்துகுமரன் சொல்லியது:

மக்கா சாச்சிட்டிய்யா. சாச்சிட்டிய....
அட்டகாசமான பாட்டு எல்லாமே. இரவு கேட்டுவிட்டு இன்னொருமுறை பின்னூட்டம் போடுகிறேன்.

தாணு சொல்லியது:

சிவா,
அதெப்படி தெக்கத்திக்காரங்களுக்கு ரசனை கூட ஒரேமாதிரி இருக்கு. மைஎஸ்பிபி-லே என்னையும் சேர்த்துக்கோங்க. அவரைப் பத்தி எழுதணும்னா நாள் பத்தாதே.
அது ஏங்க, ஊத்திக்கிட்ட படப் பாடல்களாவே சொல்லியிருக்கீங்க?
பாலு- ராஜா காம்பினேஷன் காலம் கடந்து நிற்கக்கூடியது. என்ன மாதிரி எழுதலாம்னு ஏதேனும் வரைமுறை வைச்சிருக்கீங்களா , இல்லாட்டி பிடிச்ச பாடல்கள் பற்றி மட்டும் விமர்சனமா? விபரமா சொல்லுங்களேன்.

மஞ்சூர் ராசா said...

சிவா,
பாட்டெல்லாத்தையும் கேட்டுட்டு உங்ககிட்டே வர்றேன்.
என்ன சிவா இன்னும் பல அழகானப் பாடல்கள் இருக்கே, அதுவும் வருமில்லெ

நம்ம பேரு மஞ்சூர் ராசா (மன்சூர் அல்ல)
சுந்தர்ன்னு நெறைய பேர் இருக்கறதாலே (உங்க சுந்தரையும் சேத்துத்தான்)

சிவா said...

குமரன்! //** மக்கா சாச்சிட்டிய்யா. சாச்சிட்டிய **// :-)) எல்லோரும் பாட்டு என்றாலே இதய கோயிலும், உதய கீதமும் தான்னு நெனைக்கிறாங்க குமரன். அதனாலையே இந்த மாதிரி நல்ல பாட்டுங்க எல்லாம் அப்படியே அமுங்கி போச்சு :-(

சிவா said...

/** அதெப்படி தெக்கத்திக்காரங்களுக்கு ரசனை கூட ஒரேமாதிரி இருக்கு **// அட நீங்களுமா :-)

//**மைஎஸ்பிபி-லே என்னையும் சேர்த்துக்கோங்க **// உங்களை சேர்த்த மாதிரி தான். சுந்தரிடம் சொல்லி Invitation அனுப்ப சொல்கிறேன். மாதம் ஒன்றாவது ஏதாவது எஸ்.பி.பி பாடல் பற்றி பதியணும். சரி தானே.

//** அது ஏங்க, ஊத்திக்கிட்ட படப் பாடல்களாவே சொல்லியிருக்கீங்க? **// படம் ஊத்திக்கிட்டா என்னங்க. பாட்டு அருமை அல்லவா. ஹிட் பாட்டத்தான் டி.வி-ல தெனமும் பார்க்கிறோமே. நாம மறந்து போன பாட்ட சொல்லலாம்னு தான் எடுத்து போட்டேன். பாட்டு புடிச்சிருந்ததா?

//** என்ன மாதிரி எழுதலாம்னு ஏதேனும் வரைமுறை வைச்சிருக்கீங்களா , இல்லாட்டி பிடிச்ச பாடல்கள் பற்றி மட்டும் விமர்சனமா? **// ஒன்னும் வரை முறை எல்லாம் கிடையாது. எந்த எஸ்.பி.பி பாடல்களாகவும் இருக்கலாம். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை அப்படியே எழுதி பதியலாம். இசை ஞானம் எல்லாம் வேண்டியதில்லை (என்னை மாதிரி :-)) நானெல்லாம் பாட்ட பத்தி எழுதும் போது, நீங்க ஏன் யோசிக்கிறீங்க. உங்க மெயில் ஐடி கொடுங்க தாணு (உங்க இனையத்தில் இல்லை என்றால்).

சிவா said...

மஞ்சூர் ராசா!

//** என்ன சிவா இன்னும் பல அழகானப் பாடல்கள் இருக்கே, அதுவும் வருமில்லெ **// நம்ம கீதம் ப்ளாக்ல நெறைய பாட்டு இருக்கு. என்னோட ப்ரொபைல பாருங்க.

குமரன் (Kumaran) said...

புது வலைப்பூ தொடங்கியதற்கு உங்களுக்கும் சுந்தருக்கும் வாழ்த்துக்கள் சிவா.

அப்புறம் முதல் பின்னூட்டம் போட்டது முத்துக் குமரன். நான் இல்லை. நான்னு நீங்க நெனைக்கலையே. உங்க பதில் பின்னூட்டத்துல குமரன் குமரன்னு சொல்லியிருக்கீங்க. அதான் கேட்டேன். குமரனா இவ்வளவு நல்லா இந்த பாட்டுப் பதிவுக்கு பின்னூட்டம் போட்டிருக்கார்னு நீங்க நினைச்சுடக் கூடாதுல்ல. அதனாலச் சொல்லிட்டேன். :-)

Sundar Padmanaban said...

தாணு,

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. மின்னஞ்சல் அனுப்புகிறேன். பாலுவின் பாடலை ரசித்து அனுபவித்ததை உங்கள் நடையில் எழுதுங்கள்.

இந்த வலைப்பதிவின் நோக்கம், பாடல் வங்கியை உருவாக்குவதல்ல. அதற்கு நிறைய இணையதளங்கள் இருக்கின்றன. இது ரசித்ததைப் பதிய மட்டுமே - ரசிகராக.

////** அது ஏங்க, ஊத்திக்கிட்ட படப் பாடல்களாவே சொல்லியிருக்கீங்க? **//

அது சரி. என்ன அருமையான இசையும் பாடல்களும் இருந்தும் படம் ஊத்தும்போது எவ்வளவு வலிச்சிருக்கும் அவங்களுக்கு? இதய கோவில், உதய கீதம் விடுங்க. அதைவிட அருமையான பாடல்கள் நிரம்பிய படங்கள் நிறைய ஊற்றிக்கொண்டிருக்கின்றன. பெரிய உதாரணம் : காதல் ஓவியம். அநியாயமாய் போன உழைப்பு. அதனாலென்ன. நமக்கு ஒளி வேண்டாம். ஒலி மட்டும் போதும்.

சில முத்தான பாடல்களை - கேட்டால் மட்டும் போதும். தப்பித்தவறி அது படமாக்கப்பட்ட விதத்தைப் பார்த்தால் பார்க்கும் நமக்கே நாக்கைப் பிடுங்கிக்கொள்ளலாம் போலத் தோன்றும். பாடியவருக்கும், இசையமைத்தவருக்கும் எப்படி இருக்கும். உதாரணம் கேட்காதீங்க. ரத்தம் கொதிக்குது!

மதுமிதா said...

சிவா
நட்சத்திரமாமே
பாட்டோடு ஜொலிக்கிறீங்களா
எஸ்பிபி பாட்டுக்கு ஒரு ஓ
எனக்கும் ஒரு விருப்பப்பாடல் போடுங்க

Anonymous said...

சிவா எனக்கு கடைசி பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு. மற்ற எல்லா பாட்டும் கேட்டிருந்தாலும் கடைசி பாட்டு அளவுக்கு இல்லை ஆமாம்.

அது என்னமோ தெரியலை என்ன நேரமோ தெரியலை எழுது எழுதுன்னு கையெல்லாம் சத்தம் போடுது.. (:P) என்ன ஆகுமோ..

சுந்தருக்கு,

அப்படியே என்னையும் விளையாட்டில சேர்த்துக்கங்க சுந்தர் :)

அன்புடன்
கீதா

Sundar Padmanaban said...

//அப்படியே என்னையும் விளையாட்டில சேர்த்துக்கங்க//

மடல் அம்ச்சாச்சு. ஜோதில ஐக்கியமாகுங்க! நன்றி.

சிவா said...

குமரன்! ஆமாம் முத்துகுமரன்னு சொல்றதுக்கு பதிலா குமரன்னு சொல்லிட்டேன் :-))

சுந்தர்! 'பூ பூத்தது' (மும்பை எக்ஸ்பிரஸ்) மாதிரி ஒரு பாட்டை படத்தில கொடுமையா எடுத்திருப்பார் கமல். ஐயகோ..கமலே இப்படியான்னு நான் சுவத்துல முட்டிக்கிட்டேன் :-))

சிவா said...

மதுமிதா அக்கா ! பட்டம் எல்லாம் கொடுத்துட்டு, இப்படி தம்பியோட நட்சத்திர வாரத்துல காணாம போய்ட்டீங்களே :-))

பாட்டு சொல்லுங்க. போட்டுறதேன் :-)

சிவா said...

கீதா! கடைசி பாட்டு மட்டும் தான் புடிச்சிருக்கா. என்னமோ போங்க...அதாவது புடிச்சுதே :-)))

எஸ்.பி.பி ப்ளாக்ல கலக்க ஆரம்பிச்சிட்டீங்க போல..நடத்துங்க..நடத்துங்க..ஏதோ ராஜா பாட்டா போடறேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்டீங்க..அத அப்படியே கெடப்புல போட்டுட்டீங்களே :-(

முத்துகுமரன் said...

சிவா,

எனக்கு ஒரு ரசனை உண்டு. பெரும்பாலும் ஊத்தி கொண்ட படங்களின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் நான் மிகவும் ரசித்த மூன்று பாடல்கள் இந்த பதிவில். அதுதான் மக்கா சாச்சுபுட்டீங்களே என்று சொல்லியிருந்தேன்.

பாட்டுபாடவா, வண்ண வண்ண பூக்கள், என்றூம் அன்புடன் - பாட்டு பாடவாவும் என்றூம் அன்புடனும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான குரலமைப்பில் இருக்கும். இரண்டும் இரண்டு வித தவிப்புகளின் வெளிப்பாடு. ஒன்று தாய்ப்பாசம் இன்னொன்று மண வாழ்க்கையின் தவிப்பு. குரல் உயர்த்தாமல் வரும் பாடல்கள் மெதுவாக மனதை தைக்கும் அமைப்பை பெற்றிருக்கும். கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் தானாக விழியோரம் நீர் முட்டி நிற்கும். பல பாடல்க்களில் அதை நான் உணர்ந்திருக்கிறேன். மொட்டையைப் பத்தி பேசி பேசி என் மாமா பையனிடம் எத்தனையோ முழு இரவுகளை கழித்திருக்கிறேன்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அது போன்றதொரு உணர்வை உங்களிடம் உணர்கிறேன்.

வாழ்த்துக்கள்.

நாம் கண்டிப்பாக காதல் ஓவியம் படத்தை பற்றி ஒரு பதிவில் பேசுவோம். அவ்வளவு இருக்கிறது அந்த படத்தில். யாரைச் சொல்லுவது மொட்டையையா! வைரமுத்துவையா! பாலுவையா! ஜானகியையா!

விரைவில் ஏற்பாடு செய்யுங்கள்:-)))

நன்றி

சிவா said...

முத்துகுமரன்!

நீங்க அப்படியே என்ன மாதிரியே இருக்கீங்க தலைவா. என்னிடம் 90 க்கு அப்புறம் வந்த இப்படி பட்ட பாடல்கள் நிறைய இருக்கிறது. என்னை பொருத்தவரை வெறும் ஜானியையும், இதயக்கோவிலையும் மட்டுமே ராஜாவின் சாதனை பாடல்களாக சொல்லிக்கொண்டிருப்பது முட்டாள் தனம் :-)). மக்களின் ரசனை மாறி இப்படி எத்தனையோ பாடல்கள் காணாமல் போயிருக்கின்றன. நாம கொடுத்து வச்சது அவ்வளவு தாம்யா :-))

உங்களுக்கு பேச உங்க மாமா பையன் இருக்கிறான். என் துரதிஷ்ட்டம், எனக்கு அப்படி ஒருவர் கூட கிடைக்க வில்லை. இருக்கும் நண்பர்களில் சிலர் பாடலே கேட்பதில்லை (என்னைய்ய வாழ்க்கை :-)). அதான் இப்படி ப்ளாக்ல எழுதி சந்தோசப் பட்டுக்கறேன். உங்களை மாதிரி ஆளுங்களை பார்ப்பதில் ரொம்ப சந்தோசம்.

காதல் ஓவியம் அடுத்த பதிவிலேயே (நட்சத்திர வாரம் முடியட்டும்) போட்டுடறேன். ரொம்ப நாளா கேட்டுக்கிட்டே இருக்கிய. எனக்கு தெரிஞ்சத எழுதறேன். நீங்க கலக்குங்க. என்ன நாஞ்சொல்றது :-))

முத்துகுமரன் said...

//இதயக்கோவிலையும் மட்டுமே ராஜாவின் சாதனை பாடல்களாக சொல்லிக்கொண்டிருப்பது முட்டாள் தனம் :-)).//

அந்த முட்டாள்களில் அடியேன் முன்வரிசையில் இருப்பவன். ஆனால் மட்டுமே என்பது எனக்கு பொருந்தாது. இதயக்கோயிலுக்கு நான் அடிமை:-))))))

சிவா said...

முத்துகுமரன்! உங்களுக்கு 'மட்டுமே' என்று இல்லை என்று இந்த பதிவை 'சாச்சுப்புட்டியலே' என்று சொன்னதில் இருந்தே தெரிகிறது
:-)).

நான் ராஜாவின் இசையில் 95% படங்களை ஒரே மாதிரி தான் ரசிக்கிறேன்

Anonymous said...

//கீதா! கடைசி பாட்டு மட்டும் தான் புடிச்சிருக்கா. என்னமோ போங்க...அதாவது புடிச்சுதே :-)))//

அப்படி இல்லை சிவா.. வைகாசி வெள்ளிக்கிழமை.. பாட்டெல்லாம் கூட நல்லா இருக்கு.. எனக்கு கடைசி பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு சொன்னேன்..அவ்வளவுதான்..

ராஜா பாட்டுதேனே.. போடுவேன் :)

பொறுத்தருள்க

அன்புடன்
கீதா

சிவா said...

சீக்கிரம் ராஜா பாட்ட ஆரம்பிங்க...நேத்து மலேசியா பாட்டு போட்டுருந்தீங்க..கேட்டுட்டு சொல்லறேன். :-)

கோவை ரவீ said...

சிவாண்ணே என்னை நினவிருக்கிறதா? நானும் உங்ககூட கலந்துகிட்டேன். உங்க எல்லோரும் காலாய்ச்சியதை தாமதம்மாத்தான் பார்த்தேன். அப்படியே நேரமிருந்தால் என்னோட பதிவுகளையும் மை எஸ்.பி.பில கேளுங்க.. தானு, கீதா எல்லொருக்கும் வணக்கம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிவா!
வந்துடீங்களா???
பாட்டோடு!! ராஜா பாட்டோடு
யோகன் பாரிஸ்

சிவா said...

யோகன் ! ஐயோ! திரும்பி எல்லாம் வரலைங்க :-)). சில புதிய நண்பர்கள் என்னோட பழைய பதிவுகளை படிச்சி சொல்லி இருந்தாங்க. அது அப்படியே தமிழ்மணம் வழியா வந்திட்டு போல. எனக்கும் திரும்பி வர ஆசை தான். சீக்கிரம் முயற்சிக்கிறேன்.

இவ்வளவு நாள் ஆனாலும் இன்னும் என்னை நினைவு வச்சிருக்கீங்களே. ரொம்ப சந்தோசமா இருக்கு. ரொம்ப நன்றி யோகன்.

அன்புடன்,
சிவா