Sunday, November 27, 2005

கல்யாணமாம் கல்யாணம் -2

இத படிச்சிட்டு வாங்க - பாகம்-1

கல்யாண நாளும் வந்தது. கல்யாண நாளுக்கு முந்தின நாளே ஊர் களை கட்ட ஆரம்பித்து விட்டது. மாப்பிள்ளை வீட்டில் பந்தல் போட்டவுடனேயே, எங்களை போன்ற வாண்டுகள் வெளையாட்டு இடத்தை அங்கே மாற்றி கொண்டோம். "ஏல! ஸ்பீக்கர் செட் வந்துட்டுடா' கத்திக்கொண்டே செந்தில் ஒடி வந்தான். அதற்க்காக தானே காலையில் இருந்தே காத்து கொண்டிருந்தோம். எதற்க்கு என்று கேட்கறிங்களா? எல்லாம் அந்த பொட்டி சாவிக்காக தான். அப்போல்லாம் LP ரெக்காட்டு, பெரிசா வால்வு வச்ச ஆம்ளிபயர் தான். ஒரு பெரிய பொட்டில எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு செட்டு கார அண்ணன் வருவாவ. சில நேரம் சாப்பிட போகும் போது அந்த பொட்டி சாவி நம்ம கைல கெடைக்கும். நம்ம இஷ்டத்துக்கு பாட்டு போடலாம்லா. அதுக்கு தான், அண்ணனுக்கு எல்லா சேவையும் செஞ்சிக்கிட்டு இருப்போம்.

கொய்யா மரத்துல ஏறி குழாய் ஸ்பீக்கர் கட்டுறது, ஊர்ல ட்யூப் லைட் போட குழி தோணறது, இப்படி சகல வேலையும் செஞ்சி கொடுப்போம். அப்போத்தான நம்ம கைக்கு சாவி வரும். சாப்பிட போவும் போது எந்த எந்த ரெக்கார்டு எந்த நம்பர்ல ஓட்டணும்னு வெவரம் எல்லாம் சொல்லிருவாவ. அப்புறம் என்னா...விவித்பாரதியே நம்ம கைல கெடைச்ச மாதிரி தான். அப்போல்லாம் ரேடியோவ விட்டா பாட்டு கேக்க வேற நாதி கெடையாது. சிலோன் ரேடியோல தான் பாட்டு. எங்க ஊர்லருந்து திருச்சி ரேடியாவ புடிச்சா, ரெயில் சத்தம் தான் கேட்கும்..அப்போ அப்போ பாட்டு எட்டி பாக்கும். இல்லன்னா, பக்கத்து ஊர்ல ஏதாவது விசேசம்னா, காத்து நம்ம ஊருக்கு நேரே காத்து அடிச்சா, பாட்டு நல்லா கேக்கும். எதிர்காத்து அடிச்சிச்சுன்னா, பாட்டையும் சேர்த்து தள்ளிக்கிட்டு போய்டும். அப்படி பாட்டு கேக்கறது கூட ஒரு சொகம் தான்.

இந்த மாதிரி சமயம் மட்டுமே தேர்ந்து எடுத்து பாட்டு போடலாம். அப்புறம் என்ன! நேயர் விருப்பம் தான். பாரதிராஜா 'என் இனிய கிராமத்து மக்களே" அப்படின்னு ஆரம்பித்து "முதல் மரியாதை"ல இருந்து ஒவ்வொரு பாட்டா போட்டுக்கிட்டு இருப்பாரு. ஓட்ட ரெக்கார்டு மாட்டிக்கிட்டா தட்டிவிடறது, ஸ்பீடு மாத்தி பாட்டு போடறது இப்படியே நல்லா பொழுது போவும். "ஏல! அந்த விதி கதை வசனம் இருந்தா போடுல" அப்படின்னு அத்தை கேட்டா, " அந்த ரெக்கார்டு போட்டு போட்டு தேஞ்சி போச்சாம்" சொல்லி தப்பித்துக்கொள்வோம் ( யப்பா! அந்த ரெக்கார்டு ஒரு காலத்துல எப்படி ஓடிச்சி தெரியுமா)

சாயங்காலம் ஆனவுடன் ஊர் ஜனங்கள் ஒவ்வொன்னா வர ஆரம்பித்தது. பந்தக்கால் நட்டறது, தாய்மாமன் சடங்கு எல்லாம் அன்று தான். தாய்மாமன் என்று இருந்தால், அங்கே பகை இருக்க வேண்டும் என்பது கிராமத்தில் எழுதப்படாத விதி. அப்போ தான ஊர்ல மத்த பயலுவலுக்கு இவங்க சண்டைய பாத்து பொழுது போவும். அப்புறம் ஊர் பெரிசுங்க எல்லாம் போய் "ஏ! உன் தங்கச்சி பையன் தானப்பா! நீ வராம இருந்த எப்படி..வாடே" அப்படின்னு தள்ளிக்கிட்டு வரும். அப்புறம் ஆலந்தலை (ஆல்+அத்தி+இலை) மாப்பிளைக்கு சுத்தி போடுற கதை ஒன்னு நடக்கும். நாங்களும் வரிசையில் பெரிய ஆள் மாதிரி நின்றுக்கிட்டோம். துரை மாமா "ஏல! இது சொக்காரனுங்க மட்டும் தான் செய்யணும். பொடிசுங்க அந்தால போங்கல" என்று எங்களை பத்தி விட, எங்க செட் குமாரு " போங்க சித்தப்பா! ஓந்தான் அடிக்கிறதுல இருந்து பன மரத்துல ஏறி பயினி திருடறது வர நாங்களும் மாப்ளையும் ப்ரண்டு. தெரியுமா! நீங்க போங்க சித்தப்பா" அப்படின்னு மாப்ளைக்கு எங்க ஜன்ம பந்ததை சொல்லி வைத்தான்.

அப்புறம் பந்தி ஆரம்பிச்சதும் தான் எங்க வேலையே ஆரம்பிக்கும். அவன் அவன் சைசுக்கு தகுந்த மாதிரி கொளம்பு வாளி, கூட்டு வாளி, தண்ணி ஊத்துறது போற்ற பதவிகளை பிடித்துக்கொண்டேம். அந்த பாயச வாளில மட்டும் ஒரு கண்ணு இரூக்கும். ஆனா அது நம்ம கைக்கு கெடைக்காது. சமையல்காரர் கஸ்டடில தான், அவர் தான் பரிமாறுவார். இல்லன்னா, நாங்க கொண்டாடிருவோம்லா. இப்படி பரிமாறுவதுல இருக்கற சொகமே தனி தான். நம்ம சொந்த பந்தங்கள பாத்து, வேணுமா, வேணுமான்னு கேட்டு பரிமாறுகிறதே சொகம் தான். கூட்டத்துல 'ஏ! இது நம்ம ராஜி மொவனா" அப்படி விசாரிப்புகள் வேறு நடக்கும். எந்த கல்யாண வீடு என்றாலும் ஒரு போதும் பந்திக்கு முந்துகிற வழக்கம் கெடையாது. எவன் எந்த வாளியை புடிக்கலாம்னு தான் போட்டி இருக்கும். எல்லாம் முடிஞ்சப்புறம் மொத்தமா உக்காந்து வாளியை வரிசையா வச்சி இஷ்டத்துக்கு அள்ளி கட்டினோம்னா, ரெண்டு நாளைக்கு இரை எடுக்க வேண்டியது இல்லை பாருங்க :-)

எல்லாம் முடிஞ்சப்புறம் பெரிசுங்க, இளசுங்க எல்லாம் சீட்டாட ஆரம்பிச்சிட்டங்க. ஊர்ல இருந்து ரொம்ப நாள் பாக்காத மாமன், மச்சினன் எல்லாம் வந்திருக்கும் அல்லவா. விடியும் வரை சீட்டாட்டம் தான்.

( தொடரும் - மன்னிக்கனும். வேலை அதிகமாகி விட்டதால் :-) )

4 comments:

துளசி கோபால் said...

//தாய்மாமன் என்று இருந்தால், அங்கே பகை இருக்க வேண்டும் என்பது கிராமத்தில் எழுதப்படாத விதி. //

அடுத்துப் போகப்போற கல்யாணதுலே இந்த 'அலம்பலை' மறக்காமச் செஞ்சுரணும்:-)))

சிங். செயகுமார். said...

பழைய ஞாபகங்கள் !
கிளறுல் புதிய எழுத்துக்கள்1
பல முறை வசனம் கேட்டும் இன்னும் படம் பாக்க குடுத்து வைக்கல! எல்லாம் விதி!
வீடியோ படம் எடுக்கும் போது முன்னாடி முன்னாடி ஓடி போயி நின்னீங்களே அத ஏன் மறந்தீங்க தலிவா!

குமரன் (Kumaran) said...

சிவா. இந்த வாளி புடிக்கிற வேலை எனக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த வயசுல கூட பரிமாற சான்ஸ் கிடைச்சா குனிய முடியாம குனிஞ்சு பரிமாற ஆரம்பிச்சிருவேன். :-)

விதி வசனத்தை மட்டும் இதுவரைக்கும் ஒரு 50 தடவையாவது இந்த கல்யாணத்துல வைக்கிற மைக்செட்டுல கேட்டாச்சு.

சிவா said...

துளசி அக்கா! வாங்க. ஊருக்கு போய் நல்லா அலம்புங்க. சுத்தி சமாதான படுத்த பெரிசுங்க இருக்கான்னு உறுதி பண்ணிக்கிடுங்க :-)

செயக்குமார்! எல்லா பதிவுமே படிச்சிடுறீங்க. நன்றி. வீடியோ வந்தது கொஞ்ச நாள் கழித்து தான். அப்போவெல்லாம் போட்டோவே அளந்து அளந்து தான் புடிப்பாங்க :-). வீடியோ வந்தப்புறம் நீங்க சொன்ன வேலையையும் செய்திருக்கிறோம் :-)

குமரன்! வாளி தூக்குற வேலை புடிக்குமா!. எந்த வாளி புடிக்கும்?.